27 நவம்பர் 2021

அரசு கவிதைகள்

 


நீ …

எங்கள் வியப்புகளின்

குறியீடு.

மாதச் சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?

  

தந்தையைப் பற்றி இவர் எழுத்தில் வடித்திருப்பதைப் படிக்கும் பொழுது, நம் புருவமும், நம்மை அறியாமல், தானே உயர்கிறது.

     மனதில் தந்தையின் நினைவு, சுயமாய் எழுந்து உள்ளத்தை அழுத்துகிறது.

நான் …

இரண்டு கால்களால்

அர்த்தமற்று அலைகிறேன்.

நீயோ …

ஒற்றைக் காலில் நின்று

தவமிருக்கும்

ஓங்கி உயர்ந்த ஞானி.

நீ பூப்பதும் காய்ப்பதும் பின்

பக்குவமாய் கனியச் செய்து

பூமிக்கு வழங்குவதும்.

 

என்னை மன்னித்துவிடு

நான் அவசரப்பட்டு

கல்லெறிந்து விட்டேன்.

 

யார் சொன்னது?

நீ அஃறினை என்றும்

நான் உயர்திணை என்றும்

யார் சொன்னது?

     மழலையாய் பிறந்து, இலக்கின்றி வளர்ந்து, வாழ்ந்த சுவடு தெரியாமல் அழியும் மனிதர்களை, எப்படி உயர்திணை என்று அழைப்பது என்னும் கவிஞரின் கேள்வியில் தெறிக்கும் உண்மை, நம்மைச் சுடுகிறது அல்லவா?

நாளைக்குள்

ஒரு குற்றத்தை சுமத்த

வினாடிகளில்

விபரம் சேகரிக்கிறது.

 

ஒரே ஒரு சொல்

கிடைத்தபோது

ஒத்த சொற்களையும்

ஒட்ட வைத்து

அர்த்தம் புகுத்துகிறது.

 

விடிவதற்குள்

ஒன்று நீ

இல்லை நான் என்று

வெங்குருதி கொதிக்கிறது.

     இயல்பான பேச்சில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும், புதுப் புது அர்த்தம் கொடுத்து, பிரிவினைக்கு வழி வகுக்கும், சிற்றறிவு மனிதர்களின், காழ்ப்புணர்வு எண்ணங்களால், குடும்ப உறவுகள் சிதைந்துபோவதை, வேதனையோடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

     கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்கப் பறக்கும், இக்காலத்தில், அவர்களுக்குள் எழும் பிரிவு வேதனையை எழுத்தில் வடித்து கலங்க வைக்கிறார்.

என் வேலைநாட்கள் போல்

எனக்கு நீ

கடிதம் எழுதிக்கொண்டிரு.

என் விடுமுறைகள் போல்

என்னை மடியில் தூங்கவிடு.

 

நீயும் வேலையில்

நானும் வேலையில்

நம் காதல் நிலையும்

இப்படியொரு

வலையில்.

     இவரும் தன் குடும்பத்திற்குப் பொருளீட்டுவதற்காகத், தன் குடும்பத்தைப் பிரிந்து, அயலகம் பறந்தவர்தான்.

     பிரிவின் வலியை உணர்ந்தவர்தான்.

     அயலகத்தில் செல்வத்தோடு, கெழுதகை நட்புகளையும் சேர்த்தே சம்பாதித்தவர் இவர்.

நாம்

ஏமாறவில்லை.

இலாபமும் அடையவில்லை.

கையைக் கடிக்கும்படி

நமக்குள் வைபவங்கள்

நிகழவில்லை.

 

நம் என்ன உறவினர்களா என்ன?

புறம்பேசி கெடுத்துக் கொள்ள.

     இவர் பதினாறு ஆண்டுகள், சிங்கப்பூரில் பேராசிரியராய் பணியாற்றியவர்.

     பேராசிரியராய் பணியாற்றிய காலத்தில், திங்கள்தோறும், சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழில், கவிதைகளை எழுதிக் குவித்தவர்.

     ஒவ்வொரு கவிதையிலும், இவர் தன் உள்ளத்து உணர்வுகளை இறக்கி வைத்திருக்கிறார்.

     எனக்கு ஓர் ஆசை.

     இவரது கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பெற்று, தனியொரு நூலாய் அச்சு வாகனம் ஏறவேண்டும் என்பது என் ஆசை.

இவர்தான்,


கவிஞர் ப.திருநாவுக்கரசு.