23 ஜனவரி 2022

கூடலூர் வே.இராமசாமி வன்னியர்

 


     செந்தமிழ்ப் புராணங்களை,

     தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை,

     செந்தேன் சிந்திடும் தனிப் பாடல்களை, கேட்போர் உளம் குளிர எடுத்துரைக்கும் பாங்கு.

     சிலப்பதிகாரச் செல்வத்தின், செந்தமிழ்ப் பாடல்களை, தாளத்தோடும், இராகத்தோடும் பாடி, கேட்போரை மதுரைக்கே அழைத்துச் செல்லும் திறமை.

    

மருத்துவத்தில்,

     சோதிடத்தில் இணையில்லாப் புலமை.

     ஊசி வேலை முதல், கருங்கல் வேலை வரை, அனைத்தும் அறிந்து, தெளிந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தும் மேதமை.

     கோடானு கோடி செல்வம், காலடியில் கிடந்த போதும், செல்வச் செழிப்பில் மூழ்காமல், செந்தமிழே உயர் செல்வம் என்பதை உணர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இரண்டறக் கலந்து, தமிழ்த் தொண்டராய் வாழ்வதையே பெருமையாய் போற்றியவர்.

     தேவாரம், திருவாசகத்திற்கு இணையாக, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கியப் பாடலான, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின், நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாள் தொடங்கி, இருபத்து நான்கு ஆண்டுகள், தன் இறுதி மூச்சு உள்ளவரை, சங்க மேடையேறி முழங்கியவர் இவர்.

     தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தந்து, சங்க விழாக்களில் கலந்து கொண்ட, தமிழன்பர்கள், இவரது காந்தக் குரல் கேட்டு மயங்கினர்.

     இதன் விளைவாக, தமிழன்பர்கள் தங்களது பகுதிகளில் நடத்தும் விழாக்களில் எல்லாம், நீராருங் கடலுடுத்தப் பாடலைப் பாடி, விழாக்களைத் தொடங்கினர்.

     தமிழவேள் உமாமகேசுவரனார் தேர்ந்தெடுத்தப் பாடல்,

     கூடலூர் வே.இராமசாமி வன்னியரால் தஞ்சையின் எல்லை கடந்து, தமிழுலகு முழுவதும் பரவியது.

     இதன் விளைவாகவும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுதலாலும், 1970 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், தமிழ்த் தாய் வாழ்த்தாக அரசு ஆணைபெற்று, அரியணை ஏறியது.

     2021 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞரின் முத்தான திருமகன், தமிழ் மகன், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால், மாநிலப் பாடலாய் மேன்மை பெற்றிருக்கிறது.

     தமிழ்த் தாய் வாழ்த்து,

     மாநிலப் பாடல்

     எனப் பெருமைகளைப் பெற்று, அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்கும், இப்பாடலை, நீராருங் கடலுடத்தப் பாடலை, சங்க மேடைகளில் முழங்கிய,

கூடலூர் வே.இராமசாமி வன்னியரை

தற்போது பார்ப்பதற்கு வழியில்லை, அவர் வாழ்ந்த வீட்டையாவது, கண்குளிரக் காண்பதற்கு வாய்ப்பு கிட்டுமா என்று ஏங்கித் தவித்திருந்த எனக்கு, வழி காட்டினார், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்.

     கூடலூரில் சிலகாலம் வாழ்ந்தாலும், தன் வாழ்வின் பெரும் பகுதியை, கூடலூர் வே.இராமசாமி வன்னியர் கழித்தது, மேல மாகாணத்தில்தான் என்றார்.

     இன்றும் அவரது உறவுகள் அங்கே வாழ்கிறார்கள் என்றார்.

     இதுபோதாதா, கடந்த 20.1.2022 வியாழக் கிழமை மாலை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளி உடற் கல்வி ஆசிரியரும், நண்பருமான திரு துரை.நடராசன் அவர்களோடும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களோடும் இணைந்து பறந்தேன்.

     தஞ்சாவூர், மாரியம்மன் கோயிலைக் கடந்து பயணித்த, ஒரு சில நிமிடங்களில் கோயிலூர் எங்களை வரவேற்றது.

     கோயிலூரில் இடப் பக்கம் திரும்பிப் பயணித்தோம்.

     இதோ மேல மாகாணம்.

     ஒரே ஒரு தெரு.

     எழே ஏழு வீடுகள்.

     இதுதான் மேல மாகாணம்.

    


இதுதான், கூடலூர் வே.இராமசாமி வன்னியர் வாழ்ந்த, வாழ்ந்து மறைந்த வீடு.

     பழங்காலத்து வீடு.

     மெல்ல வீட்டினுள் காலடி எடுத்து வைத்தோம்.

     ஆலமரத்து விழுதுகளைப் போல், வீடு முழுவதும் நிரம்பி வழிகின்றன தூண்கள்.

     மெல்ல, நிதானமாய் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, சற்று நேரம், நெஞ்சில் நிறுத்தி, வெளியிட்டேன்.

     இராமசாமி வன்னியரின் மூச்சுக் காற்றை சுவாசித்த ஓர் உணர்வு.

     உடலும், உள்ளமும் ஒருசேர சிலிர்த்தது.

    



கூடலூர் வே.இராமசாமி வன்னியரின் பெயரர், பெருநிலக்கிழார், திரு அ.திருநாவுக்கரசு அவர்கள், எங்களை வரவேற்று, தன் அன்பில் எங்களையெல்லாம் நனைய வைத்தார்.

     கூடலூரில் வே.இராமசாமி வன்னியர் வாழ்ந்த வீடு, இன்றும், அதே நிலையில் அப்படியே உள்ளது என்றார்.

     மனதில் ஒரு பட்டாம் பூச்சி படபடத்தது.

     அடுத்தநாளே, 21.1.2022 வெள்ளிக் கிழமை மாலை, நண்பர் திரு எஸ்.மோகன் அவர்களுடன், கூடலூர் புறப்பட்டேன்.

     கூடலூர் வாழ், அன்பர் திரு காந்தி அவர்கள், எங்களை வரவேற்று, இராமசாமி வன்னியர், முதன் முதலில் வாழ்ந்த, அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய, அவர்தம் இல்லம் நோக்கி அழைத்துச் சென்றார்.

     இதோ இராமசாமி வன்னியர் முதன் முதலில் வாழ்ந்த  வீடு.

     அவரைப் போலவே, நெஞ்சம் நிமிர்த்தி, தலை நிமிர்ந்து நின்றது.

     நாற்புறமும் வயல் வெளிகளால் சூழப்பெற்ற சிறு கிராமம்.

     வயல் காற்று, மாசு ஏதுமின்றி, தூய காற்றாய் முகத்தினை வருடிச் சென்றது.

     காற்றின் ஓசையில், நீராருங் கடலுடுத்தப் பாடலும் பின்னிப் பிணைந்து, ஒலிப்பதைப் போன்ற ஓர் உணர்வு, செவிகளைத் தொட்டுத் தாலாட்டியது.

    






சிறிது நேரம் வீட்டினையே பார்த்துக் கொண்டு நின்றோம்.

     பின்னர் இராமசாமி வன்னியர் வாழ்ந்த இல்லத்திடம் விடைபெற்றுத் திரும்பினோம்.

     காசு, பணம், பொன், பொருள், நிலம் இவையெல்லாம் பெரிதே அல்ல, தமிழே பெரிது, தமிழே இனிது, தமிழே உணர்வு, தமிழே வாழ்வு என வாழ்ந்த திருமகனார்

கூடலூர் வே.இராமசாமி வன்னியரை

வணங்குவோம்

என்றென்றும் நினைவில் நிறுத்திப்

போற்றுவோம்.