13 நவம்பர் 2025

ஔரங்காபாத் – வரலாற்றுச் சுவடுகள்

 


      சிறுவயதில், பள்ளிப் பாடத்தில், அஜந்தா, எல்லோரா பற்றிப் படித்திருக்கிறேன்.

      பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, அமரர் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் தொடரினைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

      என் அப்பா புத்தகப் பிரியர்.

     அவர் கல்கியில் ஒவ்வொரு வாரமும் வெளிவந்த, சிவகாமியின் சபதம் தொடரினைத் தனியே பிரித்து எடுத்து, ஒன்று சேர்த்து

1.      பரஞ்சோதியாத்திரை

2.      காஞ்சிமுற்றுகை

3.      பிட்சுவின்காதல்

4.       சிதைந்தகனவு

என்ற நான்குபாகங்களையும், தனித்தனியே பைண்டு செய்து வைத்திருந்தார்.

சிவகாமியின் சபதம் நூலினைப் படிக்கப் படிக்க, வேறொரு உலகில் நுழைந்த உணர்வு எனக்கு.

     கதையின் மையப் புள்ளியே, என்றும் அழியாத அஜந்தா ஓவியங்களின் வண்ணக்கலவையின் இரகசியத்தை அறிவதுதான்.

     இதுநாள் வரை சிவகாமியின் சபதம் நூலினைப் பலமுறைப் படித்திருக்கிறேன்.

     ஒவ்வொரு முறையும். படிக்கும் பொழுதெல்லாம், அஜந்தாவை, வாழ்வில் ஒரு முறையாவது, நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என்ற பேராசை தோன்றும்.

     1600 கி.மீ., பயணித்து அஜந்தாவைப் பார்ப்பது என்பது, கனவாகவே தொடரும் என்றுதான் எண்ணினேன்.

     ஆனால் அஜந்தாவைப் பார்ப்பதற்கான, அஜந்தா குகைகளைத் தொட்டுத் தொட்டுத், தடவித் தடவி மகிழ்வதற்கான ஒருவாய்ப்பு, எங்கள் அன்பு மகளால், எங்களுக்குக் கிடைத்தது.

     கடந்த 2024 ஆம் ஆண்டு, எங்கள் அன்பு மகளுக்குத் திருமணம்.

     மாப்பிள்ளைஉறவுதான்.

     ஊரும், அருகில் இருக்கும் திருவையாறுதான்.

    ஆனால், மாப்பிள்ளைப் பணியாற்றுவதோ, மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில்.

     ஒரங்காபாத்தைப்பற்றி, இணையத்தில் தேடியபோதுதான், ஔரங்காபாத்திற்கு அருகிலேயே, அஜந்தா, எல்லோரா குகைகள் இரண்டும்இருப்பது தெரிந்தது.

     மனம் மகிழ்ந்து போனது.

     மகளை ஔரங்காபாத்தில் குடியமர்த்தினோம்.

     ஔரங்காபாத்தை சுற்றிச் சுற்றி வந்தோம்.

     என்கனவுநிறைவேறியது.

 

ஔரங்காபாத்

     1610 ஆம் ஆண்டில், சுல்தான் இரண்டாம் முர்த்தசா நிஜாம்ஷா அவர்களின் சபையில், முதல் அமைச்சராக இருந்த மாலிக்ஆம்பர் என்பவர், ஒரு சிற்றூரைத் தலைநகராக உருவாக்கினார்.

இத்தலை நகரின் பெயர் காட்கி.

     இச்சிற்றூர், விரைவில் மக்கள்தொகைப் பெருக்கத்தால், கவர்ச்சிமிகு நகராக உருமாறியது.

1626 ஆம் ஆண்டு ஆம்பர் மாலிக் அவர்கள் இறந்தவுடன், அவரது மகன் பதேகான் என்பவர், முதல் அமைச்சர் பதவிக்கு வருகிறார்.

     பதேகான் முதல் அமைச்சர் பதவி ஏற்றவுடன், காட்கி என்ற பெயரை மாற்றி, பதேநகர் என்றுப் பெயரிடுகிறார்.

      ஏழே ஆண்டுகளில், 1633 ஆம் ஆண்டு இந்த பதேநகர், முதலாயப் பேரரசின் வசம் சென்றது.

     1653 ஆம் ஆண்டு முகலாய இளவரசர் ஔரங்கசீப், தக்காணத்தின் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறார்.

     ஔரங்கசீப் அரசப் பிரதிநிதியாகப் பொறுப் பேற்றவுடன், பதேநகர், ஔரங்காபாத் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

     சற்றேறக்குறைய, 470 ஆண்டுகளாக, ஔரங்காபாத் என அழைக்கப்பட்ட இந்நகரின் பெயரை, 2022 ஆம் ஆண்டு, சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை, மராட்டியப் பேரரசின் இரண்டாவது சக்கரவர்த்தியாகிய சம்பாஜி போன்ஸ்லேயின் பெயரைச்சூட்டி, சம்பாஜி நகர் என மாற்றியுள்ளது.

சம்பாஜிநகர்எனமாற்றினாலும், இன்றும் ஔரங்காபாத் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. தொடர்வண்டி நிலையம் தொடங்கி, பெரும்பாலான பெயர்ப் பலகைகளும் ஔரங்காபாத் என்றே இன்றும் இந்நகரை அடையாளப்படுத்துகின்றன.

 

வாயில்களின்நகரம்

பக்தம்கேட்

டெல்லிகேட்

ரங்கீன்கேட்

ரோஷன்கேட்

பாரபுல்லாகேட்

பைதான்கேட்

மக்காகேட்

காலாகேட்

நௌபத்கேட்

மகாய்கேட்

என ஔரங்காபாத்தில் 52 வாயில்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் பல இன்றும் இருக்கின்றன. எனவே ஔரங்காபாத் வாயில்களின் நகரம் (City of Gates) என்று அழைக்கப்படுகிறது.

 

பைத்தானி புடவைகள்

     ஔரங்காபாத் பருத்தி நெசவு மற்றும் கலைப்பட்டு துணிகளின் முக்கிய உற்பத்தி மையமாகும்.

பைத்தானி புடவைகள் ஔரங்காபாத்தின் தனித்த அடையாளமாக விளங்குகின்றன.

 

மொழி

ஔரங்காபாத்தின் அதிகாரப்பூர்வமான மொழியாக மராத்தி மொழி உள்ளது.

உருது மற்றும் இந்தி மொழிகளும் பேசப்படுகின்றன.

ஆங்கில மொழியின் பயன்பாடு மிகமிகக் குறைவு.

 

 

உணவு

வடபாவ், பாவ்பஜ்ஜி, மோமோஸ், நான்காலியா, தஹ்ரி, ஷீர்மல், பான்பூரி, ஸ்ரீகண்ட், சோயாசாப்.

அப்பளத்தில் சிறிது ஓமப் பொடி தூவித்தருகிறார்கள்.

எதுசாப்பிட்டாலும், சிறு பாத்திரத்தில் ஒருவகை சூப் போன்ற திரவத்தில் ஓமப்பொடி, பொறி போன்றவற்றைத் தூவித்தருகிறார்கள்.

 

மண்

     ஒரங்காபாத்தின் வயல் வெளிகளில் இருக்கும்மண் கருப்பு நிறத்தில் இருக்கின்றது.

     வானம்பார்த்தபூமி.

     பெரும் பெரும், வட்டக் கிணறுகள் இருக்கின்றன.

     பச்சை மிளகாய், வெங்காயம் பருத்தி பயிரிடுகிறார்கள்.

     குடும்பம் குடும்பமாக வயல்களில் வேலைபார்க்கிறார்கள்.

 

உடை

     ஆண்கள் அனைவரும் பேண்ட் சட்டைஅணிகிறார்கள்.

     தோளில் துண்டு, பின் பக்கக் கழுத்து வழியாக முன்புறம், இருமுனைகளும் தொங்கும் படியாக துண்டு அணிகிறார்கள்.

     வயதானவர்கள் மட்டுமே பின் பக்கம் சொருகும்படியான வேட்டி கட்டுகிறார்கள்.

 

அஜந்தா

     ஆண்டு 1819.

     மகாராஷ்டிராமாநிலம்.

     அடர்ந்த காட்டுப் பகுதி.

     விலங்குகள் நிறைந்த காட்டுப் பகுதி.

     வான் நோக்கி உயர்ந்து நிற்கும் மரங்கள்.

     ஜான்ஸ்மித்.

     ஆங்கிலேய அதிகாரி.

     வேட்டையாடுவதற்காக சில பணியாளர்களுடன் காட்டிற்குச் சென்றார்.

     அரிய விலங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றார்.

     காட்டிற்குள் போக முடியவில்லை.

     அவ்வளவு அடர்த்தி, மரங்கள், முட்புதர்கள்.

     தன் குழுவினரின்உதவியுடன், மரங்களின் கிளைகளில் கயிற்றைக் கட்டி, தொங்கியபடி, மெல்ல மெல்ல முன்னேறினார்.

     அப்பொழுதுதான் கவனித்தார்.

     தொலைவில்கருப்பாக, கல் போன்ற ஒன்று உயரமாகத் தெரிந்தது.

     கல்தான் ஆனாலும் கோயில் போல் தெரிந்தது.

     தொடர்ந்து முன்னேறினார்.

     அருகில் சென்று பார்த்தார்.

     ஒரு குகை.

     வேலைப் பாடுகள் அமைந்த குகை.

     வியந்துபோனார்.

     ஹைதராபாத் நிஜாமுக்கு செய்தி அனுப்பினார்.

     நிஜாம் ஒரு பெரும்படையையே அனுப்பினார்.

     காட்டை அழித்து பாதையை உருவாக்கினர்.

     ஒரு குகை மட்டுமல்ல, அடுத்தடுத்து குகைகள்.

      நீண்டமலை முழுவதும் வரிசையாய் குகைகள்.

      கீழே ஒரு ஆறு பாகிரா.

     குகைகளை சுத்தம் செய்தனர்.

     ஒரு பேரதிசயம் வெளி வந்தது.

     இதுநாள்வரை கண்டுபிடிக்கப்பட்ட குகைகளின் எண்ணிக்கை 30.

     இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் எத்தனை குகைகள், வெளி உலகைக் காணக் காத்திருக்கின்றனவோ தெரியாது.

     கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் உருவாக்கப் பெற்ற குகைகள்.

     சாளவாகனர், வாகனகர் என்னும் இரு அரச குடும்பங்களின் செலவில், மேற்பார்வையில் உருவானவை இந்த அஜந்தா குகைகள். இக்குகைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டக் கருவிகள் இரண்டே இரண்டுதான்.

     உளி, சம்மட்டி.

     அஜந்தா குகைகளை அனைத்தும் பௌத்தம் சார்ந்த குகைகள்.

     ஒவ்வொரு குகையின, சுவற்றிலும், மேற்கூரை முழுவதும் ஓவியங்கள்.

     இன்று 80 சதவிகித ஓவியங்கள் இல்லை. மீதம் இருப்பவற்றைக் காக்க மகாராஷ்டிரா அரசு பெருமுயற்சி செய்து வருகின்றது.

     எதனால் இக்குகைகள் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன தெரியுமா?

       இம்மலையை ஒட்டி இருக்கும் சிறு கிராமத்தின் பெயர் ஆஜந்தா.

     எனவே அவ்வூரின் பெயராலேயே, இம்மலைக் குகைகள் அஜந்தா என அழைக்கப் பெறுகின்றன.

     உலக அற்புதம் அஜந்தா.

     இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும், குறிப்பாக சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள்வந்துகொண்டே இருக்கிறார்கள்.

---

     நாம் நமது வாகனங்களில்,  ஒரு குறிப்பிட்ட தொலைவுவரைதான் செல்லலாம்.

அங்கிருந்து அஜந்தா மலைக்கு, சுற்றுலா வளர்ச்சித் துறையின் பேருந்துகளில்தான் சென்றாகவேண்டும்.

     காட்டு வழியி ல்சுமார் 3 கி.மீ. பயணித்து மலையின் அடிவாரம் வரை செல்ல வேண்டும்.

     அஜந்தா மலையின் அடிவாரத்தில் ஓங்கி, அகன்று விரிந்து வளர்ந்து நிற்கிறது போதிமரம். அரசமரம்.

     அஜந்தா குகைகள் மலையின் பாதி உயரத்தில் இருந்து, மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே செல்கின்றன. எனவே படிக்கட்டுகளில் ஏறி, பாதி மலையைக் கடந்த  பிறகுதான் குகைகளைக் காணலாம்.

     படிக்கட்டுகளின் எண்ணிக்கை அதிகம்.

     வயதானவர்களும்,  உடல் நலம் குன்றியவர்களும் படி ஏறுவது சிரமம்.

     சபரிமலையினைப் போல, டோலியில் நம்மை அமரவைத்து, தூக்கிச் செல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

     ஒவ்வொரு குகையும் பெரியது.

     குகைவாயிலின் உயரம் குறைந்தது 12 அடி.

     18 அடி உயர குகைகளும் உண்டு.

     பல குகைகள் மூன்று தளங்களை உடையதாகஇருக்கின்றன.

     கீழ்த்தளத்தில் இருந்து மேலே செல்ல, குகையின் உள்ளேயே, படிக்கட்டுகளைச் செதுக்கி இருக்கிறார்கள்.

     எல்லா குகைகளிலும் நுழைந்த உடன் ஒரு பெரியஹால்.

     நேர் எதிரில் 7 அடி உயரத்தில், கோயிலின் கருவறை போல் ஒரு அறை.

     அந்த அறையில் அமைதியாய் புத்தர்.

     அழகானசிலை.

     அறையின் இருபுறமும் துவார பாலகர்கள்.

     ஹாலின் இரு புறமும் வரிசையாய் தூண்கள்.

     தூண்களைத் தாண்டினால் இருபுறமும் வரிசையாய் சிறு சிறு அறைகள்.

     தூண்கள் இல்லாத குகைகளும் இருக்கின்றன.

     காலத்தால் மிகவும் பழமையான குகைகளில், மூன்றாம் நூற்றாண்டு குகைகளில் புத்தர் சிலை இல்லை.

     காரணம் புத்தரின் கட்டளை.

     என் உருவத்தை வைத்து வழிபடாதீர்கள்.

     எனவே பிற்கால குகைகளில் மட்டும் புத்தர் இருப்பார்.

     பல குகைகளில் புத்தரின் வரலாறு, ஓவியங்களாகத் தீட்டப் பட்டுள்ளது.

     அஜந்தாவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 30.

     இவற்றுள் 5 பௌத்த கோயில்கள்.

     மற்றவை பௌத்த விகாரைகள், அதாவது பௌத்த துறவிகள் தங்கும் இடங்கள்.

     புத்தரின் வரலாறும ட்டுமல்ல, குழந்தை பிறப்பு, வளர்ப்பு, கல்வி புகட்டுதல் முதல் இறப்பு வரையிலான காட்சிகள்ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

 

எல்லோரா

     சரணந்திரி மலையில் அமைக்கப் பெற்ற குகைகள் எல்லோரா குகைகளாகும்.

     மொத்தம் 34  குகைகள்.

     கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை.

     குகைகள் 1 முதல் 12 வரை பௌத்தகுகைகள்.

     குகைகள் 13 முதல் 29 வரை இந்து சமயக்குகைகள்.

      குகைகள் 30 முதல் 34 வரை சமணக்குகைகள்.

     பௌத்தகுகைகளே முதலில் அமைக்கப்பட்டவையாகும்.

     கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை.

     பெரும்பாலான குகைகள் பௌத்த துறவிகளுக்கான மடங்காகும்.

     தங்கும் விடுதிகளாகும்.

   இந்து குகைகள் கி.பி.7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப் பட்டவையாகும்.

     இவற்றுள் முக்கியமானது குகைஎண்.16.

     கைலாசநாதர் கோயில்.

      எல்லோராவிற்குச் செல்லும் பயணிகளை முதன் முதலில் வரவேற்பது இந்த கைலாச நாதர் கோயில்தான்.

      ஒரு நீண்ட சதுர வடிவில் ஒரு மலையினை வெட்டி, பள்ளம் செய்து, இந்தக் குகைக் கோயிலை உருவாக்கி உள்ளனர்.

     107 அடி ஆழம்.

     276 அடி நீளம்.

     184 அடி அகலம்.

     இந்த ஒரு கோயிலுக்கா கமட்டும், 3 இலட்சம் சதுர அடி மலைப் பரப்பைக் குடைந்திருக்கிறார்கள்.

     ஆயிரக்கணக்கான சிற்பிகள், இந்த ஒரு பிரமாண்ட கோயிலைச் செதுக்கி உருவாக்க எடுத்துக் கொண்டகாலம்100 ஆண்டுகள்.

      மலை உச்சியில் செதுக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி இக்கோயிலை உருவாக்கி இருக்கிறார்கள்.

     இரண்டு தளங்களை உடைய கோயில்.

     த்வஸ்தம்ப்கொடிமரம்

     யானை சிலை

     கோயிலைச் சுற்றிலும் இரண்டு அடுக்கு திருச்சுற்று மண்டபம்.

     கைலாசநாத ர்கோயிலுக்கு வலப்புறம் 1 முதல் 15 வரையிலான குகைகள்.

     இடதுபுறம் 17 முதல் 34 வரையிலானகுகைகள்.

     எல்லோராவில் இருப்பவை எல்லாம் புடைப்புச் சிற்பங்களாகும்.

 

ஔரங்காபாத்குகைகள்

     ஔங்காபாத் நகரத்தில் இருந்து 9 கி.மீ., தொலைவில், சயாத்திரி மலையில், ஔரங்காபாத் குகைகள் அமைந்துள்ளன.

     கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.

     மொத்தம் 12 குகைகள்.

     இக் குகைகள் அதன் அமைவிடத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

     1 முதல் 5 வரையிலான குகைகள் மேற்குக் குழுவாகவும்,

     6 முதல் 9 வரையிலான குகைகள் கிழக்குக் குழுவாகவும்,

     10 முதல் 12 வரையிலான குகைகள் வடக்கு குழுவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

     இவற்றுள் குகை எண்கள். 1, 11 மற்றும் 12 ஆகிய மூன்று குகைகளும் முழுமை பெறாத பாழடைந் தகுகைகளாகும்.

 

பஞ்சாக்கி (தண்ணீர்ஆலை)

     முகலாயர் ஆட்சியில், 1624 ஆம் ஆண்டு, சூபி ஞானி பாபாஷா முஷாபர் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், துர்க் தாஸ் கான் என்பவரால் இந்ததண்ணீர் ஆலை உருவாக்கப்பட்டது.

     ஔரங்காபாத்தின் வடக்கில் இருக்கும் ஜெட்வாடா என்னும் மலையின் நீரூற்றில் இருந்து, பூமிக்கு அடியில் புதைக்கப் பெற்ற களிமண் குழாய்கள் முலம், சுமார் 11 கி.மீ பயணம் செய்து, சூபி ஞானி முசாபர் தர்க்காவை வந்தடைகிறது.

     தர்க்காவை வந்தடையும் தண்ணீர், சிபான் என்னும் இறைப்பி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புவி ஈர்ப்பு விசை மற்றும் வளி அமுக்கத்தின் உதவியுடன், 20 அடி உயர சுவற்றின் உச்சிக்குக் கொண்டு செல்லப் பெற்று, நீரூற்றாய் கீழிறங்கி ஒரு பெரும் தொட்டியில் விழுகிறது.

     தொட்டியில் விழும் நீர்,  ஒரு பெரிய குழாயின் வழியாக, பூமி மட்டத்திற்கும் கீழே, இரும்புப் பட்டைகளால் ஆன, மின் விசிறி போன்ற அமைப்பின் பட்டைகளின் மேல் மோதி, அதனை சூழல வைக்கிறது.

     மின் விசிறி போன்ற இவ்வமைப்பின் மையத்தில் உள்ள இரும்புக் கம்பியானது, தானும் சுழன்று, மேல் தளத்தில் இருக்கும் திருவைக் கல்லை சுழலவை க்கிறது.

     இதுதான் அன்றைய தானியங்கி திருவைக்கல்.

 

தௌலதாபாத்கோட்டை

     ஔரங்காபாத்தில் இருந்து 35 கி.மீ., தொலைவில், எல்லோரா செல்லும் வழியில் அமைந்துள்ளது,

     ஆயிரம் வருடம் பழமையானக் கோட்டை.

     1187 ஆம் ஆண்டு, முதல் யாதவ மன்னன் ஐந்தாம் பில்லம் ராஜ் என்பவரால் கட்டப் பெற்ற கோட்டை.

     யாதவா, கில்ஜி, துக்ளக், பாமினி, மொகலாயர்கள், என பல அரசுகளின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பார்த்த கோட்டை.

தேவகிரிகோட்டைஅல்லதுதியோகிரிகோட்டைஎன்றுஅழைக்கப்பட்டது.

1327 ஆம் ஆண்டு துக்ளக் வம்சத்தைச் சார்ந்த, முகமது பின் துக்ளக் அவர்களால் இக் கோட்டை தௌலதாபாத்கோட்டைஎனறும், இப்பகுதியின் பெயரும் தௌலதாபாத் என்றும் மாற்றப் பெற்றது.

     தௌலதாபாத்கோட்டை.

சற்றேறக்குறைய 4 கி.மீ., சுற்றளவுள்ள, இம் மலையின் கீழ்ப்பகுதியான, சரிவுப் பகுதி முழுமையாக வெட்டப்பட்டு, ஒரு வட்ட வடிவ மலையாக மாற்றப்பட்டு, அதன் மேல் கூம்பு வடிவில், மிகுந்த வலிமையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது இந்தக்கோட்டை.

     கோட்டையைச் சுற்றிலும் இரண்டு அகழிகள்.

     ஒரேஒருகுறுகியபாலம்.

     இதுதான் ஒரே வழி.

     மலையின் உச்சிக்குசெல்வதற்கு, நாம் இதுவரை பார்த்த, ஏறிய மலைகளைப் போல, மலையின் வெளிப் பகுதியில் படிக்கட்டுகள் கிடையாது.

மலையினைக்குடைந்து, மலைக் குஉள்ளேயே, மேலே, மேலே, திரும்பித் திரும்பி, வளைந்து, வளைந்து செல்லும் குகைகளின் படிக்கட்டுகளில் ஏறித்தான், மலையின் உச்சிக்குச் சென்றாகவேண்டும்.

      வழி முழுவதும் பகலிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

      Dark Passage

     இருண்டபாதை.

    படிக்கட்டுகளின் பக்கவாட்டில் மறைந்திருந்து தாக்குவதற்கான மறைவிடங்கள்.

     பாதுகாப்பின் உச்சம் இந்த தௌலதாபாத் கோட்டை.

 

 

தக்காணத் தாஜ்மகால்

     ஆக்ராவில், தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்காக, ஷாஜகான் கட்டி எழுப்பிய, இன்றும் உலக அதிசயங்களுள் ஒன்றாய்திகழும், தாஜ்மகாலை நாம் அறிவோம்.

     தாஜ்மகாலை கட்டி எழுப்பிய ஷாஜகானின் மகன்தான் ஔரங்கசீப்.

     இவர்தான் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர்.

     49 ஆண்டுகள், தன் வாழ்வின் இறுதி நாள் வரை ஆட்சி செய்திருக்கிறார்.

     இவரது மனைவி தில்ராஸ் பேகம்.

     இவர்களின் மகன் ஆசம்ஷாவால்.

     இந்த ஆசம் ஷாவால், தன்தாய் இறந்த பொழுது, தன் அன்பு அன்னைக்காக, ஒரு தாஜ்மகாலைக் கட்டியிருக்கிறார்.

     ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலோ, தன் மனைவிக்காக.

     இந்தஆசம் ஷாவால் கட்டிய தாஜ்மகாலோ, தன் அன்னைக்காக.

     1651 ஆம் ஆண்டு தொடங்கி 1661 ஆம் ஆண்டிற்குள், பத்து ஆண்டுகளில், வான் நோக் எழுந்து நிற்கும், இந்த தாஜ்மகாலை உருவாக்கி இருக்கிறார்.

     இந்த தாஜ்மகாலைக் கட்டி எழுப்ப, ஆன செலவு என்ன தெரியுமா?

     ரூ.6,68,203 அணா 7.

     இன்று இந்த தொகையைக் கொண்டு, ஒரு சிறிய அளவிலான வீட்டைக்கூட கட்ட இயலாது.

     கட்டிடக்கலைஞர் அதா உல்லா,

     பொறியாளர் ஹன்ஸ்பத் ராய் இருவரும்தான் வடிவமைப்பாளர்கள்.

     இந்த அதா உல்லா, யார்தெரியுமா?

     ஷாஜகானுக்காக, ஆக்ரா தாஜ்மகாலை வடிவமைத்து எழுப்பிய, உஸ்தாத் அஹ்மத் லஹரி அவர்களின் மகன்.

    

 

குல்தாபாத்

      உன் அன்னைக்காக, ஒரு தாஜ்மகாலையே உருவாக்கிய நீ, எனக்கும் ஒரு பெரும் தாஜ் மகாலை எழுப்ப முற்படுவாய் என்பதை நான் அறிவேன்.

     ஆனால் என் விருப்பம் அதுவல்ல.

     என் நினைவிடம் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும்.

     ஒரு ஏழை, தன் தகப்பனைப் புதைக்கும் இடம் போலவே, என் நினைவிடமும் அமையவேண்டும்.

     தந்தையின் விருப்பம் நிறைவேறியது.

     ஔரங்காபாத், தௌலதாபாத்தில் இருந்து சில கி.மீ., தொலைவில் இருக்கிறது குல்தாபாத்.

     அகலயம் குறுகிய சாலையில், ஒரு மசூதியில், பத்து அடி அகலம், பத்து அடி நீளம்உள்ள குறுகிய இடத்தில், தரையோடு தரையாக, மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது ஔரங்கசீப் கல்லறை.

     இவை மட்டுமல்ல,

     மகேஸ்மால் என்னும் மலையின் உச்சியில், ஒரு கோயில்.

     பாலாஜி கோயில்.

     சிறிய கோயில்தான் எனினும், அச்சு அசலாய், உருவத்திலும், அளவிலும் திருப்பதியில் வீற்றிருக்கும் பாலாஜி.

     சோனேரி மகால்.

     பானி பேகம் கார்டன்.

     ஷீரடி என பல்வேறு வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி, பெருமையுடன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது ஔரங்காபாத்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 9.11.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்

முன்னாள் மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குப உறுப்பினரான


பின்னையூர் ஆர்.கோவிந்தராசு அவர்கள்

தலைமையில்

நடைபெற்றப் பொழிவில்

ஒளிப் படக்காட்சிகளுடனும், காணொலி காட்சிகளுடனும்

ஔரங்காபாத் – வரலாற்றுச் சுவடுகள்

என்னும் தலைப்பில்


நான்,

ஆம், கரந்தை ஜெயக்குமாராகிய நான் உரையாற்றினேன்.

முன்னதாக

நாகப்பட்டினம், நீலதயாட்சி அம்மன் கோயில், செயல் அலுவலர்


திருமதி மா.தனலட்சுமி அவர்கள்

வந்திருந்தோரை வரவேற்க

பொழிவின் நிறைவில்


தஞ்சாவூர், திரு மீ.பெ.சூர்யா அவர்கள்

நன்றி கூறினார்.

ஏடகப் பொறுப்பாளரும், நண்பருமான


திரு சு.சரவணன் அவர்கள்

நிகழ்வுகளை அழகுத் தமிழில், எழிலுற, தெளிவுறத் தொகுத்து வழங்கினார்.

ஏடக அரங்கில்

ஒவ்வொரு திங்களும்

ஓரமாய் அமர்ந்து

என்னையும் மறந்து

வாய் பிளந்து பொழிவுகளைக் கேட்டு

அகம் மகிழ்ந்திருந்த என்னையும்

பொழிவாற்ற வைத்து

மனம் மகிழ்ந்த


ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு

நன்றி, நன்றி