19 மே 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம்



     பதினாறாம் நூற்றாண்டு.

     இராமேசுவரம்.

     நான்கு பேர் அந்தப் பல்லக்கினைச் சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

     பல்லக்கிற்கு முன்னும் பின்னும் சில வீரர்கள் காவலுக்குச் செல்கிறார்கள்.

    பல்லக்கில் சிவகாமி நாச்சியார்.


     எதிரே சிலர் பல்லக்கை நோக்கிப் பதைபதைப்புடன் ஓடி வருகிறார்கள்.

     பல்லக்கு நின்றது.

     ஓடி வந்தவர்களுள் ஒருவர், பல்லக்கின் அருகில் சென்று, கைகட்டிப் பணிவுடன்  அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.

     செய்தியினைக் கேட்டு அதிர்ந்த சிவகாமி நாச்சியார், பல்லக்கை கீழே இறக்கச் சொல்லி, பல்லக்கில் இருந்து  வெளியே வருகிறார்.

     கண்கள் கலங்க, ஒரு நிமிடம் யோசித்தவர், வீரர்களை அழைத்துக் கட்டளை இடுகிறார்.

     கட்டளையினைக் கேட்டு வீரர்கள் தயங்குகின்றனர்.

     ஏன் தயங்கி நிற்கிறீர்கள், உடனே நான் சொன்னதைச் செய்யுங்கள் என வலியுறுத்த, அருகில் இருந்த ஊருக்குள் புகுந்த வீரர்கள், விறகுகளைக் கொண்டு வந்து அடுக்குகின்றனர்.

     விறகுகளின் மீது எண்ணெய் ஊற்றி நனைக்கின்றனர்.

    பின் ஒரு சிறு நெருப்பைக் விறகுகளின் மீது உட்கார வைக்க, தீ கொழுந்து விட்டு எழுந்து, எரியத் தொடங்குகிறது.

     சிவகாமி நாச்சியார் மெல்ல நடந்துத் தீயினுள் நுழைகிறார்.

     நாச்சியாரைத் தன் அனைத்துக் கரங்களாலும், ஆசைதீர வாரி அணைத்த தீ, மேலே மேலே எழும்பி வின்னைத் தொடுகிறது.

     சில நிமிடங்களில் நாச்சியார் சாம்பலானார்.

     சிவசாமி நாச்சியார் தீ புகுந்த இடத்திலிருந்து, சிறு தொலையில், வேரொரு பல்லக்கு வந்து கொண்டிருக்கிறது.

     ராஜலட்சுமி நாச்சியார்.

     எதிரே சிலர் ஓடி வருகின்றனர்.

    பல்லக்கு நிற்கிறது

     செய்தியறிந்த இந்த நாச்சியாரும், அதே கட்டளைகளை இடுகிறார்.

     விறகுகள் அடுக்கப்படுகின்றன.

     எண்ணெய் ஊற்றப்படுகிறது.

     தீ வைக்கப்படுகிறது

     ராஜலட்சுமி நாச்சியாரும் தீ புகுகிறார்.

     சாம்பலாகிறார்.

---

     இராமநாதபுரம்.

     விஜயரகுநாத சேதுபதி.

    
     1713 ஆம் ஆண்டு முதல் 1725ஆம் ஆண்டு வரை இவர்தான் இராமநாதபுர மன்னர்,

      மந்திரிகள் சூழ அரசவையில் வீற்றிருக்கிறார்.

     ஒரு முதியவர், வடநாட்டில் இருந்து வந்த ஒரு ஆன்மிகப் பயணி, அரசர் முன் பணிவோடு வணங்கி நிற்கிறார்,

   
  மன்னா, நான் ஒரு துறவி. வட நாட்டில் இருந்து வருகிறேன். காசிக்குச் சென்று புனித நீராடி, இராமேசுவரத் திருத்தலத்தில் நீராடி புனிதம் பெற வேண்டி வந்துள்ளேன்.

     என்னிடம் பொன், பொருள் ஏதுமில்லை.

     நடந்தே பயணப்பட்ட நான், வழியில் இருக்கும் அன்ன சத்திரங்களில் கிடைக்கும் உணவை உண்டே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.

     ஆனால் இங்கு, இராமநாத புரத்தில் இருந்து, இராமேசுவரத்திற்குப் படகினில் செல்ல, நான்கு அணா கட்டணம் கொடுத்தால்தான் அழைத்துச் செல்வேன் என்கிறார்கள்.

     துறவியிடம் ஏது காசு.

     எனவே தங்களின் உதவி நாடி வந்துள்ளேன்.

     துறவி பேசப் பேச, மன்னரின் முகம் மாறுகிறது.

     என்ன மந்திரியாரே, என்ன சொல்கிறார் இவர்? இவர் சொல்வது உண்மையா?

     இராமேசுவரம் செல்ல, இறைவனைத் தரிசிக்க, அரசுப் படகுகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றல்லவா உத்தரவிட்டிருக்கிறேன். இவரோ நான்கு அணா வசூலிக்கப்படுவதாகக் கூறுகிறாரே, இது உண்மையா?

     அரண்மனையே ஒரு கணம் அதிர்ந்து போகிறது.

     ஆமாம் மன்னா. உண்மைதான்., மந்திரி மெல்ல பதில் உரைக்கிறார்.

     என்ன?

     அரசரின் கோபக்குரல் அரண்மனை எங்கும் எதிரொலிக்கிறது.

     இராமேசுவரத்தின் ஆளுநராகத் தங்களால் நியமிக்கப்பட்டிருக்கும், தங்களின் மருமகனார் தண்டபாணித் தேவர் அவர்களின் உத்தரவுப்படியே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை கோயிலின் பராமரிப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

     தங்களின் மருமகனாயிற்றே, தங்களின் அனுமதி பெற்றுத்தான் வசூலிக்கிறார் என்று எண்ணி இருந்துவிட்டோம்.

     அரசரின் கண்கள் சிவக்கின்றன.

     வீரர்களே, உடனே சென்று, தண்டபாணித்தேவரை கைது செய்து அழைத்து வாருங்கள்.

     வீரர்கள் பறக்கின்றனர்.

     தண்டபாணித்தேவர், விஜயரகுநாத சேதுபதியின் அக்காள் மகன்.

     சேதுபதிக்குத் தன் அக்காள் மகன் மீது அளவுகடந்த பாசம்.

     எப்படிப்பட்டப் பாசம் தெரியுமா?

     சிவகாமிநாச்சியார், ராஜலட்சுமி நாச்சியார் என்னும் தன் இரு மகள்களையும், தண்டபாணித்தேவருக்கே  திருமணம் செய்து வைக்கிற அளவிற்குப் பாசம்.

     ஆனால், தவறு என்று வந்துவிட்டபிறகு, மகனாவது, மாப்பிள்ளையாவது.

     அடுத்த சில மணி நேரங்களில், தண்டபாணித் தேவர், மன்னர் முன் நிறுத்தப்படுகிறார்.

     எனது உத்தரவிற்கு மாற்றாக, படகில் பயணிப்பதற்குக் கட்டணம் வசூலித்தது உண்மையா?

     ஆம், உண்மை.

     மன்னிக்க முடியாத குற்றம். தேசத் துரோகமே செய்திருந்தாலும், நாடு கடத்தித் தங்களை மன்னித்திருப்பேன். ஆனால் தாங்கள் சிவத் துரோகம் செய்துவிட்டீர்கள். மன்னிப்பே கிடையாது.

     வீரர்களே, இவரை இழுத்துச் சென்று, சிரச்சேதம் செய்யுங்கள்.

     மாமனாரின் உத்தரவின்பேரில், மருமகனாரின் தலை துண்டிக்கப்பட்டது.

---

     அரசரின் கட்டளையின்படி தங்கள் கணவரைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதை அறிந்த மறு நொடியே, சிவகாமி நாச்சியாருக்கும், ராஜலட்சுமி நாச்சியாருக்கும் புரிந்து விட்டது.

     தங்கள் கணவரின் தலை தப்பாது என்பது தெளிவாய் தெரிந்து விட்டது.

    உடனே இருவரும், பல்லக்கு ஏறி, இராமநாதபுரம் புறப்பட்டனர்.

     உயிரோடு இருக்கும் பொழுதே, தங்களின் கணவர் முகத்தை ஒரு முறையாவது, பார்த்துவிட மாட்டோமா என்னும் ஏக்கத்துடன் புறப்பட்டனர்.

     பாதி வழிவிலேயே செய்தி வந்துவிட்டது.

     கணவர் தண்டிக்கப்பட்டார், சிரம் துண்டிக்கப்பட்டது என்னும் செய்தி வந்துவிட்டது.

     செய்தி அறிந்த அவ்விடத்திலேயே, இருவரும் தீயிடைப் புகுந்து வெந்து மாய்ந்தனர்.

    

அக்காள் சிவகாமி நாச்சியார் அணலிடைப் புகுந்து, தீயில் கரைந்து சாம்பலான இடம் அக்காள் மடம்.

     தங்கச்சி ராஜலட்சுமி நாச்சியார் தீயில் கலந்து, காற்றில் கரைந்துபோன இடம் தங்கச்சி மடம்.

     இராமநாத புரத்தைக் கடந்து, கடல்மேல் பாம்பன் பாலத்தில் பயணித்து, தரையிறங்கி, இராமேசுவரம் செல்லும் வழியில், இன்றும் அக்காள் மடமும், தங்கச்சி மடமும், ஒரு பெருந்துயரின் சாட்சியாய், நீதி வழுவா நெறி முறையின் மாட்சியாய் நிமிர்ந்து நிற்பதைக் காணலாம்.

     அடுத்தமுறை, இராமேசுவரம் செல்லும்பொழுது, அக்காள் மடத்திலும், தங்கச்சி மடத்திலும், மகிழ்வுந்தில் இருந்து சற்றுக் கீழிறங்கி நடந்து பாருங்கள்.

     ஒருவேளை அக்காளும், தங்கச்சியும் விட்ட கடைசி மூச்சுக் காற்றை நீங்களும் சுவாசிக்கலாம்.

     பெருந்தீயில் வெந்து காற்றில் கலந்த இவர்களின் சாம்பல், தங்களுக்குமேல் தவழ்ந்து கொண்டிருக்கலாம்.








அக்காள் மடம் தங்கச்சி மடம்
ஒலிப் பேழை

44 கருத்துகள்:

  1. வேதனை தரும் வரலாற்று நிகழ்வுகளில் ஒரு நிகழ்வு...

    பலமுறை சென்றுள்ளேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வரலாறு அறிந்துக் கொள்ள முடிந்தது, அருமை சார்.

    பதிலளிநீக்கு
  3. மனதை நெகிழ வைக்கும் இந்த உண்மைக்கதை இதுவரை அறியாதது. தங்கச்சி மடம் ஊரைத்தெரியும். ஆனால் அதற்குள் இத்தனை பெரிய சோகக்கதை இருப்பது மனதை கனமாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  4. அறிந்த வரலாறு தங்களால் மீண்டும் அறிந்தேன் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. இந்த வரலாற்று தகவல் முன்பே அறிந்திருந்தாலும் அதை மிக சுருக்கமாக தெளிவாக உங்கள் பதிவின் மூலம் படிப்பது மிக சந்தோஷமாகவும் வருத்தமாகவும் இருந்தது. வருத்ததிற்கு காரணம் இப்படி எல்லாம் ஆட்சி செய்த நம் நாட்டை இப்போது ஆட்சி செய்பவர்களின் ஆட்சி முறைகளை பார்க்கும் போது வருத்தமே மேளோங்கி நிற்கிறது

    பதிலளிநீக்கு
  6. வரலாற்றுப் பதிவு அருமை. முதல் முறையாக நான் அறிந்து கொள்ளும் செய்தியாகும் இது.

    பதிலளிநீக்கு
  7. புதிய செய்தி. அருமையான விவரிப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். அறிந்த செய்தியாக இருந்தாலும் உங்கள் பாணியில் எழுதியது சிறப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, இத்துனைத் துயர் தாங்கிய அக்காள் மடத்திற்கும் தங்கச்சி மடத்திற்கும் துயர் அறியாமலேயே நாம் பயணித்தோம் நண்பரே. அந்த காலக்கட்டத்தில் நியாயம், தர்மம் செழித்திருந்ததால்தான் இன்றும் அவர்களின் நற்செயல்களால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ,(தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது நண்பரே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்துல் கலாம் ஐயா அவர்களின் மறைவு நாளன்று, இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நாம் இராமேசுவரம் சென்ற பொழுது, அக்காள் மடத்தையும், தங்கச்சி மடத்தையும் கடந்துதான் சென்றோம், ஆனால் அப்பொழுது இத் துயர வரலாற்றை அறியாதவர்களாக இருந்துவிட்டோம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது அடுத்த முறை செல்லும் பொழுது,அக்காள் மடத்திலும் தங்கச்சி மடத்திலும், சற்று நடந்து, வரலாற்றை அசைபோட்டு திளைக்க வேண்டும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  10. தெரிந்த வரலாறு. மறுபடி படித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடிய பழக்கம் அக்காலத்தில் இருந்ததன் விளைவுதான் இவ்விரு சகோதரியரின் மரணங்களும். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது' சிலப்பதிகாரம் சொன்ன நெறிமுறைதானே!

    பதிலளிநீக்கு
  12. உருக்கமான விவரிப்பு-அக்கா மடம் தங்கச்சி மடம் காரணம் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. சம்பவத்தைப் படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது..விழிகளில் நீர் வழிகிறது.
    உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைக் கனக்கச் செய்யும் சோக வரலாறுதான் ஐயா
      தங்களின் வருகைக்கு மிகுந்த நன்றி ஐயா

      நீக்கு
  14. சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். என்றும் அழியா வரலாற்றுச்சுவடுகள்.

    பதிலளிநீக்கு
  15. அக்காள் மடம், தங்கச்சி மடம் வரலாறு படித்து இருக்கிறேன். மீண்டும் படித்தேன்.

    சொந்தம் என்றாலும் குற்றம் குற்றமே என்று இருந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  16. இடம் பெருமைக்குரிய இடமாக இருக்கலாம் உடன் கட்டை என்ற மூடப்பழக்கத்தால் விளைந்த விளைவுகள் அல்லவா இது!!!!

    பதிலளிநீக்கு
  17. மூடப் பழக்கங்களின் வேதனை வரலாறு

    பதிலளிநீக்கு
  18. அக்காள் மடம், தங்கச்சி மடத்தினை பற்றி நானும் சமீபத்துல ஒரு பதிவு போட்டிருந்தேன். இதே நிகழ்வுகளை என் பாணியில் சொன்னேன்.
    https://rajiyinkanavugal.blogspot.com/2020/04/blog-post_35.html

    ஆனா இன்னும் இருவேறு சான்றுகள் இருக்குறதா டிடி அண்ணா கருத்துரைத்திருந்தார். அது உங்களுக்காவது தெரியும்ன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவினை இன்றுதான் படித்தேன் சகோதரியாரே
      மகிழ்ந்தேன்
      இன்னும் இரண்டு செய்திகளை வலைச்சித்தரிடம் கேட்கவேண்டும்
      நன்றி சகோதரி

      நீக்கு
  19. அக்காள் மடம், தங்கை மடம்.. மிக அழகிய வரலாற்றுக் கதை, ஆனா பல்லக்கில் செல்லும்போது எப்படிச் சேதி கிடைச்சது? நெட் வசதி, ஃபோன் வசதி இல்லாக் காலத்தில் எனும் டவுட் வருகிறது... புறாத்தூதாக இருக்குமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்டபாணித் தேவரை குதிரையில் எற்றி அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இவர்களோ தாமதமாகச் செய்தி அறிந்து பல்லக்கில் புறப்படுகிறார்கள். எனவே பாதிவழியிலேய செய்தி வந்துவிடுகிறது.
      இவ்வாறுதான் நான் படித்தேன்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  20. அக்காள் மடம் தங்கச்சி மடம் வரலாறு பற்றி அறிந்தோம். ராஜி அவர்களும் பதிவு போட்டிருந்தார்கள். இங்கும் தெரிந்து கொண்டோம்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. எம் உள்ளத்தை நோகடித்த பதிவாயினும்
    வரலாற்றை பதிவு செய்து உள்ளீர்கள்.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு