26 ஏப்ரல் 2021

கடைசிக் கடிதம்

     நண்பர்களே, வயது 56 ஐ கடந்து விட்டது,

     ஆனாலும் இந்த 56 ஆண்டுகளில் கற்றுக் கொண்டது குறைவுதான்.

     அனுபவமும் சிறிதுதான்.

     பலமுறை பணி ஓய்விற்குப் பிறகான வாழ்க்கையினை எண்ணிப் பார்ப்பேன்.

     காலை முதல் இரவு வரை நேரம் எப்படி நகரும்?.

     இரவில் உறக்கம் வருமா? என மனதிற்குள்ளேயே யோசித்துப் பார்ப்பேன்.

    

சில நேரங்களில், பணி ஓய்விற்குப் பிறகான வாழ்க்கையினை வாழ்ந்து வரும், சில மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் வாழ்வியல் சோதனைகளை, துன்பங்களை உணரும்போது, எதனால் இவர்களுக்கு வாழ்க்கை இவ்வளவு கடினமாய் அமைந்து விட்டது, ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாய் கழிகிறதே, ஏன்? என என்னையே கேட்பேன்.

     வாழும் காலத்தில் வசதியாய் வாழ்ந்தவர்கள்தான்.

     ஆனாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை.

     தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பொருள் அனைத்தையும், தங்கள் பிள்ளைகளுக்காக வாரி வாரி வழங்கியவர்கள் இவர்கள்.

     தங்களின் எதிர்காலத் தேவைக்கு என சிறிதும் சேர்த்து வைக்காமல், செலவிட்டவர்கள் இவர்கள்.

     நமது பிள்ளைகள், நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

     இந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்போது, இறுதிக் காலம் சுமையாகிறது.

     இந்த இறுதிக் காலம் பற்றிய ஒரு சிறுகதையினைப் படித்தேன்.

     இறுதிக் காலம் சுமையாய் மாறாமல் இருப்பதற்கு வழி காட்டும் ஒரு சிறுகதையினைப் படித்தேன்.

     நண்பர்கள் இருவர்.

     ரகுராமனும், சங்கரனும் நண்பர்கள்.

     முப்பது வருட நட்பு.

     ரகுராமனுக்கு ஒரு பழக்கம்.

     தனக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும், தான் எழுத நினைக்கும், கடிதங்களை, சங்கரனை விட்டுத்தான் எழுதச் சொல்வார்.

     அன்றும் அப்படித்தான்.

     சில கடிதங்கள் எழுத வேண்டும் என்று கூறி, சங்கரனை, கோயிலுக்கு அழைத்துப் போனார்.

     கோயிலில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இருவரும் அமர்ந்தனர்.

     சங்கரன் ஒரு ஐந்து கடிதங்கள் எழுதனும். இதுதான் நான் சொல்லி, நீங்கள் எழுதப்போகும் கடைசிக் கடிதங்கள்.

     ஏன் இப்படிப் பேசுறீங்க?

     மனசுக்கு இப்படிப் படுகிறது. சொல்லிட்டேன். விடுங்க, எழுதுங்க.

     முதல் கடிதம் தனது பெரிய பையனுக்கு.

     என் மருமகள் எப்படி இருக்கிறாள்.

     ரொம்ப நல்ல பெண். நீ கொடுத்து வைத்தவன்.

     ஏனோ எனக்கும் அவளுக்கும் தூரம் விழுந்து விட்டது.

     உன்னுடைய தாத்தாவுக்கும், உன் அம்மாவுக்கும் கூட முரண் இருந்திருக்கிறது. கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

     என்னால் முடியவில்லை.

     கால மாற்றம்.

     இளைய மகன் கார்த்திகேயனுக்கு ஒரு கடிதம்.

     வெளி மாநிலங்களிலேயே அதிகம் பணியாற்றுவதால், என் மருமகளோடு பழகும் வாய்ப்பு போய்விட்டது.

     இரு பிள்ளைகளுக்குமே, இரு செய்திகளைப் பொதுவாய் சொல்லுகிறார்.

     அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

     என் காலத்திற்குப் பிறகும், பிறந்த மண்ணின் பாசத்தால், தனியாகத்தான் இருப்பார்.

     பார்த்துக் கொள்ளுங்கள்.

     மாதா மாதம் இருவரும் எனக்கு அனுப்பும் தொகையில் இருந்து, இன்று வரை ஒரு பைசா கூட நான் எடுத்துக் கொள்ளவில்லை. என் பெயரப் பிள்ளைகளின் பெயர்களில், வங்கியில் போட்டிருக்கிறேன்.

     வங்கி பாஸ்புக் உங்களுக்கு வந்து சேரும்.

     தன் மகள் ராஜேசுவரிக்கு ஒரு கடிதம்.

     மாப்பிள்ளை நல்லவர். அதே சமயம் செலவாளி.

     முன்பு போல்தான் இப்போதும், குடிக்கிற எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.

     மாப்பிள்ளையும் அப்படித்தான்.

     உனக்குத்தான் அவரைப் புரிந்து கொள்ள, நீண்ட காலம் பிடித்து விட்டது.

     நீ மேலும் மேலும் உயர்ந்துதான் போவாய்.

     ஏனெனில், முன்பாதி கஷ்டப்பட்டுவிட்டாய். இனி கஷ்டம் இல்லை.

     மாப்பிள்ளையாலும், உன் பிள்ளைகளாலும் இனி உயர்வாய்.

     என் பென்ஷனில் ஒரு பகுதியை, உன் பிள்ளைகளுக்கு என சேமித்து வைத்து இருக்கிறேன். பாஸ்புக் அம்மாவிடம்.

     எந்த நிலையிலும், உன் சகோதரர்களோடு, ஒரு நல்ல உறவு வைத்துக் கொள்.

     நான்காவது கடிதம், நண்பர் சங்கரனுக்கு.

     சங்கரன் எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தார்.

     எழுது சங்கரா, என் விருப்பம்.

     சங்கரன் எழுதுகிறார்.

     முப்பது வருடம் என்னை நீ பகிர்ந்து கொண்டிருக்கிறாய். அடுத்த பிறவி இருக்குமாயின், உனக்கும், எனக்கும், ஒரு தாய், ஒரு மகள் என்கிற பெண்மை உறவு கிட்ட வேண்டும்.

     சங்கரா, நான் இன்னும் இரண்டு நாள் இருக்கலாம். அப்படித்தான் தோணுது.

     எனக்குப் பயம் எதுவும் இல்லை.

     உன்னை விட்டுப் பிரிவதுதான் சிறிது நெருடல்.

     கடைசி கடிதம், என் மனைவிக்கு.

     நானே , என் கைப்பட எழுதுகிறேன்.

     எழுதுகிறார்.

என்னவளே உனக்கு,

     இன்று போகிறேன். நாளை வா.

     பயமும் கவலையும் உதறு.

     நம்முடைய எல்லை அடைபட்டு விட்டது.

     சங்கரனைத் தேற்று.

     உன்னை நேசித்ததையும், உன்னோடு வாழ்ந்ததையும் விவரிக்க முடியாது.

     அது மனசும், மனசும் உணர்வது.

     உனக்குப் புரியும்.

     அதற்குப் பின், மூன்றாம் நாள், காலை 5 மணிக்கு ரகுராமன் இறந்து போனார்.

     இதுதான் கதை, சிறுகதை.

     நமது வாழ்வியல் யதார்த்தத்தை நெற்றிப் பொட்டில் அடித்தவாறு புரிய வைக்கும் கதை.

     இந்தக் கதை, கதையாகவே எனக்குப் படவில்லை.

     கூட்டுக் குடும்பங்கள் வெகு வேகமாய் சிதைவுற்று வரும், இக்காலத்தில், அனைவரும், குறிப்பாக, பணி ஓய்வு பெறும் வயதை நெருங்கி வரும், அன்பர்களுக்கு நல் வழிகாட்டும் கதை.

     எக்காலத்தும், எவரிடத்தும், சொந்த பிள்ளைகளிடம் கூட, கையேந்தி நிற்கும் நிலை வரவே கூடாது.

     கொடுக்கும் இடத்திலேயே எக்காலத்தும் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதக் கதை.

கடைசிக் கடிதம்.

இதுதான் அந்தச் சிறுகதையின் பெயர்.

இச்சிறுகதையினை, ஒரு அற்புதமான நூலில் கண்டெடுத்தேன்.


புரண்டு படுக்கும் வாழ்க்கை

சிறுகதைத் தொகுப்பின் பெயரே,

வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துகிறது அல்லவா.

இக் கதையின் ஆசிரியர்


ஹரணி,

    

40 கருத்துகள்:

  1. அற்புதமான கதை...

    எனக்கும் கதையாகவே தோன்றவில்லை...

    பதிலளிநீக்கு
  2. உண்மை என்றே உணராத தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  3. கைகூப்பி நன்றியுரைப்பதைவிட என் செய்வேன். மனம் மழுக்க இந்த அன்பைப் பொத்திவைப்பேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கதைகள் உள்ளத்து உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன
      நல்வழி காட்டுகின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  4. அன்பு நண்பருக்கு, எதார்த்த நிலையை தங்களின் பதிவும் திரு.ஹரணி அய்யாவின் சிறுகதையும் உரத்து கூறுகின்றன.

    பதிலளிநீக்கு
  5. கதை மிக அருமை.
    //எக்காலத்தும், எவரிடத்தும், சொந்த பிள்ளைகளிடம் கூட, கையேந்தி நிற்கும் நிலை வரவே கூடாது.//

    உண்மை, பணம், அன்பு இரண்டையும்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தாங்கள் கூறியது போன்றே வாழ்வியலின் யதார்த்தங்கள்

    பதிலளிநீக்கு
  8. கடைசி கடிதம் என்று தலைப்பிட்டு உங்களது உணர்வுகளை ஆரம்பத்தில் படித்ததும் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையோ என்று முதலில் பயந்து விட்டேன்.
    போகப்போகத்தான் முழுவதும் புரிந்தது.
    இது கதையல்ல, இன்றைய வாழ்வின் யதார்த்த நிலை. இன்றைய முதியவர்களின் அவல நிலை. நம் தஞ்சைக்கு வெளியே ஒரு முதியோர் இல்லம் உள்ளது. ஒரு முறை உணவளிக்கச் சென்ற போது, அந்த முதியவர்களின் சோகக்கதைகளை கேட்க நேர்ந்த போது நெஞ்சம் வலித்தது. திருமதி. கோமதி சொல்வது போல பணத்துக்காக மட்டுமல்ல, அன்பைக்கூட யாசித்து நிற்கும் நிலை யாருக்கும் வரக்கூடாது.
    என் தந்தை வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் அவர்களின் நண்பர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு, சுவாமிமலை முருகன் கோவிலில் தூக்கு மாட்டிக்கொண்டு முதிய வயதில் இறந்து போனார். என் தந்தை பட்ட வேதனை தங்கள் பதிவைப்படித்தபோது நினைவுக்கு வந்தது.
    கடைசி கடிதங்கள் மனதை நெகிழ வைக்கின்றன. கலங்க வைக்கின்றன. இன்றைய யதார்த்த வாழ்க்கையை தன் அழகிய சிறுகதை மூலம் அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கும் திரு.ஹரணி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வின் யதார்த்தத்தை எழுத்துமூலம், கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வித்தகர் ஹரணி
      நன்றி சகோதரி

      நீக்கு
  9. இது தான் நிதர்சனம். தன் நலனுக்காக இன்னொருவர் கவலைப்படுவார் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும். யாருக்கும் யார் மீதும் அக்கறை இல்லாத உலகத்தை நோக்கி தினமும் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

    கதையின் கடைசி வரியில், "அதற்குப் பின், மூன்றாம் நாள், காலை 5 மணிக்கு சங்கரன் இறந்து போனார்." என்று இருந்தால், வாழ்க்கையின் நிலையாமையை உணர வைத்திருக்கும்! Planned Life என்பது ஒரு myth. கடவுள் அருளிய வாழ்க்கை என்பதே உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.
      யாருக்கும் யார் மீதும் உண்மை அன்பில்லா நிலையினை நோக்கித்தான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது
      நன்றி

      நீக்கு
  10. உணர்வுப்பூர்வமான கதை! பாதி வாசிக்கும்போதே இது கதையா உண்மைச் சம்பவமா என்று மேலே போய் பார்க்கவும் தோன்றியது. பகிர்விற்கு நன்றி அண்ணா.

    ஹரணி ஐயாவிற்கு வணக்கங்கள்.
    வெகுநாள் கழித்து அவர் எழுத்தை வாசிக்கக் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி அண்ணா. ஐயா இப்போதும் வலைத்தளம் எழுதுகிறாரா என்று தெரியவில்லை..நானும் தொடர்ந்து வலைப்பக்கம் வராததால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி
      ஹரணி அவ்வப்போது வலைதளத்தில் எழுதி வருகிறார்

      நீக்கு
  11. அன்பு ஜெயக்குமார்,
    தங்கள் ஓய்வுகாலம் சிறப்பாக இருக்கும்.
    பிறந்ததிலிருந்து பெற்றோரிடம் பட்ட கடனையே
    அடைக்க முடிவதில்லை.
    இன்னும் கடன் படக் கூடாது.
    இறைவன் தன் நிறைவுக்கான வழியைக் காண்பித்துக் கொடுத்து
    நாமும் நிறை வாழ்வு வாழ்க் கற்றுக் கொள்ள வேண்டும்.

    கடைசிக் கடிதம் கதை மனதை உலுக்குகிறது.
    என் தந்தையும் எங்களுக்கு எப்பொழுதோ எழுதிவைத்து விட்டார்.

    இதே போல எங்கள் மூவருக்கும் சொல்லிச் சென்ற அறிவுரைகள்
    இன்னும் நெஞ்சில் நிற்கிறது.
    கற்க வேண்டிய பாடங்களை எழுத்தில் சொல்லி இருக்கும் 'ஹரணி' ஐயாவுக்கும் அதைப் பதிவிட்ட உங்களுக்கும் மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்தித் கும் நன்றி சகோதரி

      நீக்கு
  12. மனத்தைக் கலங்க வைத்த கதை.  என்னென்னவோ உணர்வுகள் தோன்றுகின்றன.  படிக்கும் யாரும் தங்களை பொருத்திப்பார்க்காமல் இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  13. ஐயா வணக்கம். சிறப்பான சிறுகதை. வாழ்த்துகளுடன்.

    பதிலளிநீக்கு
  14. மனம் பாரமாகிறது நண்பரே படித்த பின்.

    பதிலளிநீக்கு
  15. ஒரு தந்தை/கணவன்/நண்பனின் இயல்பான மன ஓட்டத்தை கதை ஆழகாக பிரதிபலிக்கிறது. அருமை சார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  16. மனதை வருடிய பதிவு. எதுவும் சொல்ல தெரியவில்லை. நான் 30 களில் இருக்கிறேன். இது எனக்கு அவசியமான பதிவுதான். உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கதை அருமை என்று சொல்வதை விட யதார்த்தம். மனதில் பல எண்ண அலைகள்.

    வாழ்த்துகள் திரு ஹரணி அவர்களுக்கு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. மனதை மிக ஆழமாகத் தொட்டுச் செல்லும் கதை. என்னென்னவொ எண்ணங்கள் மனதில் தோன்றுகிறது. கடைசிக் கடிதம் மனதை என்னவோ செய்தது என்றால் மிகையல்ல. யதார்த்தம்! இன்று தொலைந்து போன கூட்டுக் குடும்பம் உறவுகள் வாழ்க்கை முறை...

    வாழ்த்துகள் ஹரணி சகோவிற்கும் அதைப் பகிர்ந்த தங்களுக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  19. யதார்த்தம் கலங்க வைக்கிறது .

    பதிலளிநீக்கு
  20. நல்ல கதை!

    ஆனால் ஐயா! கதைக்கு மேல் பதிவின் தொடக்கத்தில் நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் அளவுக்கு மிஞ்சிய தன்னடக்கம். உங்களுக்கா பட்டறிவு (அனுபவம்) குறைவு? நீங்களே இப்படிச் சொல்லிக் கொண்டால் நாங்களெல்லாம் என்ன சொல்வது?

    முதியவர்களின் வாழ்க்கை கடினம்தான். அதுவும் முதுமையில் தனிமை கொடுமை. நீங்கள் பெரியவர் அதனால் சில விதயங்களை நாசூக்காகத் தவிர்த்து விட்டீர்கள். இல்லாவிட்டால் இங்கு பெரிய பட்டிமன்றம் நடந்திருக்கும். :-D

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  21. கற்பனைக் கதை போலத் தெரியவில்லை. சில பாத்திரங்கள் சில சம்பவங்கள் ஆகியவற்றை இணைத்து பெரிய உண்மை கதைபோல எழுதப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்!

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு