ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.
கூறியவர் சாதாணர மனிதரல்ல.
பெரும் எழுத்தாளர்.
தமிழகமே உச்சி மீது சுமந்து கொண்டாடிய எழுத்தாளர்.
அவரைப் பொறுத்தவரை, தனது எண்ணம் சரிதான் என்று
எண்ணினார்.
ஆனால், எழுத்தாளரின் இம்முடிவு, சுதந்திரப் போராட்ட
வீரர் ஒருவரின் உள்ளத்தில் பெருந்துயரை ஏற்படுத்தியது.
பாரதியை
முழுமையாய்ப் படிக்காமல், உணராமல், அறியாமல், இப்படிப் பேசுகிறாரே என கவலையில்
ஆழ்ந்தார்.
கவலையில் ஆழ்ந்தவர், யோசித்து ஒரு முடிவெடுத்தார்.
அடுத்த நாளே, அந்த எழுத்தாளரைத் தேடிச் சென்றார்.
தன்னிடம் இருந்த பாரதியின் கவிதைகள், கட்டுரைகள்,
கருத்துரைகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து, படிக்கச் சொன்னார்.
பல நாட்கள்
கடந்த நிலையில், தான் கொடுத்ததை எல்லாம் படித்தாரா என்பதை அறிந்து கொள்ள, மீண்டும்
அவரை நாடிச் சென்றார்.
விரிவாகப் பாரதியின் எழுத்துக்களைப் பற்றிப்
பேசினார்.
விவாதித்தார்.
விளக்கங்களைக் கொடுத்தார்.
பாரதியின் எழுத்துக்களை, கருத்துக்களை, மேல்
தட்டு மக்கள் மட்டுமல்ல, மெத்தப் படித்தவர்கள் மட்டுமல்ல, விளிம்பு நிலை மனிதர்களும்
அறிந்து, உணர்ந்து, எழுச்சி கொள்ளும்படியான, பாரதியின் எளிமையான, ஆனால் வலிமை வாய்ந்தக் கவிதைகளைப் பற்றி, அலசி ஆராய்ந்து பேசினார்.
பாரதியின் எழுத்துக்களைப் படிக்கப் படிக்க, சுதந்திரப்
போராட்ட வீரரின் பேச்சுக்களைக் கேட்கக் கேட்க, எழுத்தாளரின் மனதில், ஒரு புது எழுச்சி,
ஒரு புதுப் புரிதல், ஒரு புதிய பார்வை பிறந்தது.
பாரதியை முழுமையாய் உணர்ந்தார்.
பாரதியின் பெருமையை, இதுநாள் வரை உணராமல், அறியாமல்
இருந்ததற்காகப் பெரிதும் வருந்தினார்.
பாரதியைப் பற்றி, இதுநாள் வரை, தான் பேசியதை
எல்லாம் நினைத்துப் பார்த்தார்.
உள்ளத்தில் ஓர் இனம் புரியா உணர்வு எழுந்தது.
என்ன செய்வது என்று யோசித்தார்.
பிராயசித்தம் செய்ய விரும்பினார்.
பாரதியைக் குறைத்து மதிப்பிட்டதற்காகத், தகுந்த
பிராயசித்தம் செய்வது என்று முடிவு செய்தார்,
எட்டய
புரத்தில்,
பாரதிக்கு மணி மண்டபம் எழுப்புவது.
பாரதி விழா நடத்துவது.
பாரதிக்கு
ஒரு மணி மண்டபம் கட்டி, பாரதி விழா நடத்த இருக்கின்றேன். பாரதி பற்றிய புரிதலை என்னுள்
ஏற்படுத்திய நீங்கள்தான், முதல் நிதி கொடுக்க வேண்டும் என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மகிழ்ந்து போனார்.
ரூ.25 நிதி கொடுத்தார்.
தாங்கள்
கொடுத்த 25 ரூபாய், இருபத்து ஐந்தாயிரத்திற்குச் சமம் என்றார்.
தன் விருப்பத்தை, உலகு அறிய எழுதினார்.
நன்கொடைகள் குவிந்தன.
பாரதி மணிமண்டபம் எழுந்தது.
1947 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13 ஆம் நாள்
பாரதி மணிமண்டபத் திறப்பு விழா மற்றும் பாரதி விழா சீரோடும் சிறப்போடும் அரங்கேறியது.
மகாகவியை குறைத்து மதிப்பிட்டதற்குப் பிராயசித்தமாக,
மணிமண்டபம் எழுப்பிய, அந்த எழுத்தாளர் யார் தெரியுமா?
கல்கி அவர்களின் மனதை மாற்றிய, அந்த சுதந்திரப்
போராட்ட வீரர் யார் தெரியுமா?
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்
தாக்கத்தால், சென்னை, திருவல்லிக்கேணி, இந்து பள்ளியில் மாணவராய் படித்துக் கொண்டிருந்தபோதே,
தன் படிப்பைத் துறந்தவர்.
சுதந்திர வேள்வியில் கலந்து பலமுறை சிறை சென்றவர்.
மிகச் சிறந்த பேச்சாளர்.
அக்காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் பேசுகிறார்
என்றால், ஆங்கில அரசின் காவல் துறையினைச் சார்ந்தவர்கள், பொது மக்களோடு, பொது மக்களாகக்
கலந்து, யார்? யார்? என்ன என்னப் பேசுகிறார்கள்? என்று குறிப்பெடுத்து, ஆங்கிலேய அரசுக்கு
அறிக்கையாய் அளிப்பார்கள்.
அப்படித்தான் இவர் கூட்டத்திற்கும், காவலர்கள்
வந்தனர்.
ஒரு முறை இவர் மேடையில் ஆவேசமாகப் பேசுவதைக்
கேட்ட, ஒரு 80 வயது முதியவர், மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், கையில், தடியை எடுத்தவாறு
எழுந்தார்.
இத்தனைக்
கொடுமைக்கும் காரணமான, அந்த வெள்ளைக்காரன் இருக்கும் இடத்தைக் காட்டு, இந்தத் தடியாலேயே,
அவனை மண்டையில் அடித்துச் சாகடிக்கிறேன் எனத் தன்னையும் அறியாமல் முழங்கினார்.
அரசுக்கு அறிக்கை சென்றது.
விளைவு.
இவர், ஒரு வருடம் சிறையில் தங்க வேண்டியதாகிவிட்டது.
தண்டி, வேதாரண்யம் போலவே சென்னையிலும் நடைபெற்ற
உப்பு சத்தியாகிரகப் பேராட்டத்தில் கலந்து கொண்டு, அதற்காக ஓராண்டு சிறையில் குடியிருந்தவர்.
செக்கிழுத்தச்
செம்மல் வ.உ.சி., அவர்களைப் போலவே, சென்னை மத்திய சிறையில், இவரும் செக்கிழுத்தார்.
செக்கிழுத்தாலும் வ.உ.சி., அவர்களைப் போலவே,
சோர்ந்து போகாதவர்.
தனி நபர் சத்தியாகிரகம், மது ஒழிப்பு, தீண்டாமை
எதிர்ப்பு, ஆலய நுழைவு எனப் பலப்பல போராட்டங்களில் முன்னனியில் இருந்து போராடியவர்.
போராட்டவாதி.
சிறந்தப் பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக நூலாக
எழுதி வெளியிட்டவரும் இவர்தான்.
1930 களில், பாரதியாருடன் பழகியவர்கள் பலர் இருந்தனர்,
அவர்களை எல்லாம் நேரில் சந்தித்தும், பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்களைப் பலமுறை
நேரில் சந்தித்துப் பேசியும், கேட்டும் தெரிந்து கொண்ட நிகழ்வுகளைத் தொகுத்து நூலாக
எழுதி வெளியிட்டவர் இவர்.
பாரதியாரின் துணைவியார் தந்த படங்கள், அவர்தம்
நண்பர்கள் தந்த செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட , முதல் வாழ்க்கை வரலாற்று
நூல் என்ற பெருமையைப் பெற்றது இவரது நூல்.
திருமணமே செய்து கொள்ளாமல், நாட்டிற்காக உழைப்பதையே,
தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் இவர்.
இவர்தான்
---
எண்பத்து எட்டு ஆண்டுகளுக்கும் முன், 1936 ஆம்
ஆண்டு அச்சேறிய, இந்த நூல், அககை முதிர்வால், உதிர் நிலைக்கு ஆளாகி, பொடிப் பொடியாகும்
நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, இந்நூலை மீண்டும் பதிப்பித்திருக்கிறார்,
ஒரு பாரதி ஆய்வாளர்.
எழுத்தாளர்,
சிறுகதையாளர், நாடச ஆசிரியர்,
ஆய்வாளர்,
சொற்பொழிவாளர்
மக்கள் சிந்தனைப் பேரவையின்
பாரதி விருதாளர்
கவிச்சக்கரவர்த்தி
சுப்ரமண்ய
பாரதி சரிதம்,
ஆக்கூர்
அனந்தாச்சாரி,
பதிப்பாசிரியர்
கிருங்கை
சேதுபதி,
நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ்,
விலை
ரூ.120