பொன்னும் துகிரும்
முத்தும் மன்னிய
மாமலை பயந்த
காமரு மணியும்
இடைப்படச் சேய
ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம்
அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றி
யாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர்
ஆப
சாலார் சாலார்
பாலர் ஆகுபவே
இப்பாடல் கண்ணகனார்
என்னும் பெரும் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலாகும்.
பொன்னும், பவளமும், முத்தும், நிலைத்த பெரு
மலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில்
இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும்போது, தம்முள்
ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர்.
இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்த மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும், ஒருவரை
ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால், ஒருவரை ஒருவர் அறிந்து,
உணர்ந்து, நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த
உன்னத நிகழ்வு பற்றி, பள்ளி நாட்களில் படித்துப் பரவசப்பட்டு மெய்
சிலிர்த்திருக்கின்றோம்.
நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நினைத்துப்
பாருங்கள்.
ஆம். நினைத்துப் பார்த்தால் நாமும்
இப்படித்தான். ஒருவரை ஒருவர் பாராமலும், பாராமல் மட்டுமல்ல, சில வேலைகளில்
சகோதரரா, சகோதரியா என்று கூட அறியாமலும், இப்புவிப் பந்தில், மூலைக்கு ஒருவராய்
சிதறிக் கிடந்த போதிலும், எழுத்து என்னும் நட்புச் சங்கிலியால் ஒன்றாக
பிணைக்கப் பட்டிருக்கிறோம். இந்த உன்னத உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது
உறுதி.
மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர்
பிசிராந்தையாரும் வாழும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே இல்லை என்பது
வரலாற்று உண்மை.
ஆனால் நாம் அவ்வாறில்லை. வலைப் பூ வழி,
வாசித்த, நேசித்த உறவை, நேரில் காண அவ்வப்பொழுது வாய்ப்புகள் கிடைத்துக்
கொண்டுதான் இருக்கிறது.
எழுத்தின் வழி அறிந்தோரை, அகத்தின் வழி மனக்
கண்ணால் கண்டு பழகியவரை, நேரில் கண்டு உரையாட இயலுமாயின், ஏற்படும்
மகிழ்விற்குத்தான் எல்லை ஏது?
அவ்வாறு ஓர் இனிய வாய்ப்பு எனக்குக்
கிட்டியது நண்பர்களே. பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல், கடந்த
ஜுலை 21 ஆம் தேதி மாலை, கணினி முன் அமர்ந்து, வலைப் பூவைத் திறந்தேன்.
மனோ சாமிநாதன்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
தஞ்சை வருவதால் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாயுள்ளேன். தங்கள் தொலைபேசி எண்ணை என் ஈமெயில் விலாசத்திற்குத் தெரியப்படுத்தவும். ஊருக்கு வந்ததும் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
அடுத்த நொடியே, மின்னஞ்சல் அனுப்பினேன். தங்களைச்
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,
அடுத்த நாள் காலை, கணினியில், பதில்
மின்னஞ்சல் தயாராய் காத்திருந்தது.
அன்புள்ள
சகோதரர் அவர்களுக்கு,
தங்களின் உடனடி பதில் மிகவும் மகிழ்வைத்
தந்தது. உங்களின் விலாசம், தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு விட்டேன். இந்த
தடவை லாப்டாப் ஊருக்கு எடுத்து வரவில்லை என்பதால் தங்களை நான் வந்த பின், தொலைபேசி
மூலமாக தொடர்பு கொள்கிறேன்.
இன்று இரவு தஞ்சை கிளம்புகிறேன். நாளை வந்த
பின் உறவினங்கள் எல்லோரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அதனால இரண்டு
நாட்களில் உங்களுக்கு போன் செய்கிறேன்.
எங்கள் இல்லம், உங்கள் இல்லம் இருக்கும் அதே
சாலையில், நடராஜபுரம் தெற்கில் ஐந்தாவது குறுக்குத் தெருவில் 62ம் எண்ணில் உள்ளது.
தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் என்
அன்பினைத் தெரியப் படுத்துங்கள்.
அன்பு சகோதரி,
மனோ
சாமிநாதன்
சில நாட்கள் கடந்த நிலையில், 25 ஆம் தேதி
வியாழக் கிழமை காலை, பதினோரு மணியளவில் என் அலைபேசி ஒலித்தது. மறு முனையில்
சகோதரியார். அப்பொழுது நான் தஞ்சையில் இல்லை. சென்னை அப்போலோ மருத்துவ மனையில்
இருந்தேன்.
பதினைந்து நாட்களுக்கும் மேலாக எனது
மனைவிக்குத் தலைவலி. விடவேயில்லை. தஞ்சையில் உள்ள கண் மருத்துவரைப் பார்த்தோம்.
குறையொன்றுமில்லை எனக் கூறிவிட்டார். மூளை நரம்பியல் மருத்துவரைப் பார்த்தோம்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தோம்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மைகிரேன்
பிரச்சினைதான்
எனக் கூறி மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பத்து நாட்கள் கடந்த பிறகும்
முன்னேற்றமில்லை. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தோம். பத்து நாட்கள்
மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை என்றவுடன், இதற்குமேல்
தஞ்சையில் மருத்துவம் கிடையாது. உடனே அப்போலா மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மூளை
நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. பன்னீர் அவர்களைப் பாருங்கள் என்றார்.
அன்று இரவே, சென்னையில் இருக்கும் நண்பர்
அனந்த ராமன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
1995 ஆம் ஆண்டு தஞ்சையில், ஒரு அச்சகத்தில்
முதன் முறையாக திரு அனந்த ராமன் அவர்களைச் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு.
வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தூணாய் இருந்து, என்னைத் தாங்கிப்
பிடித்து துயர் துடைக்கும் உத்தம நண்பர். நான்காண்டுகளுக்கு முன், வேதனை மிக்க
வேலையில், எனது மகளின் மருத்துவத்திற்காகச் சென்னை சென்ற பொழுது, சென்னையில் கால்
பதித்த நொடி முதல், என் மகளுக்கு குறையொன்றுமில்லை என்ற மகிழ்வானச் செய்தியினைக்
கேட்டு, நெகிழ்ச்சியுடன், தஞ்சைத் திரும்ப, தொடர் வண்டியில் ஏறிய நிமிடம் வரை,
ஐந்து நாட்களும், தனது பணிகள் அத்தனையினையும் ஒதுக்கி வைத்து விட்டு, அச்சகத்தின்
பக்கமே செல்லாமல், ஒவ்வொரு நொடியினையும், ஒவ்வொரு நிமிடத்தினையும் எங்களுக்காகவேச்
செலவிட்ட நல் நட்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
சென்னையில் உறவினர்கள் பலர் இருந்த
போதிலும், நண்பரின் வீட்டில் தங்கினால், சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே ஓர்
உணர்வு. எனவே இப்பொழுதும் அவரையே தொடர்பு கொண்டேன்.
மறுநாள் காலை முதல் வேலையாக அப்போலோ மருத்துவ
மனைக்குச் சென்று, அடுத்த நாள் (25.7.13) வியாழக் கிழமை மருத்துவரைப் பார்க்க முன்
பதிவு செய்து விட்டு, என்னை அழைத்தார். இன்று மதியமே புறப்பட்டு, சென்னைக்கு
வந்து விடுங்கள். நாளை காலை மருத்துவரைச் சந்திக்கலாம் என்றார்.
அன்று மதியமே வாடகைக் கார் மூலம் சென்னை
புறப்பட்டு, இரவு சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நண்பர் அனந்தராமனின் இல்லம்
அடைந்தேன்.
மறுநாள் காலை அப்போலோ மருத்துவ மனையில்
இருந்த போதுதான், சகோதரியார் அலைபேசியில் அழைத்தார். விவரம் கூறினேன். கவலைப்
படாதீர்கள், இன்றைய மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை,
உங்கள் மனைவி விரையில் குணமடைவார் கவலை வேண்டாம் என்று கூறினார்.
அன்று மாலையே திரும்பவும் அலைபேசியில்
அழைத்தார். மருத்துவரைப் பார்த்துவிட்டீர்களா? மருத்துவர் என்ன கூறினார்,
என அக்கறையுடன் விசாரித்தார்.
மருத்துவரைப் பார்த்துவிட்டோம்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலையில் இரத்தக் குழாயில அடைப்பு எதுவும் கிடையாது. மாத்திரைகளைத்
தொடர்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும் என்று கூறினார் எனத்
தெரிவித்தேன்.
காலையில் பேசியதற்கும், இப்பொழுது
பேசுவதற்கும், உங்களின் குரலிலேயே ஒரு தெளிவு தெரிகிறது கவலைப் படாதீர்கள் என
மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் நான் ஆகஸ்ட் 15 வரை தஞ்சையில்தான்
இருப்பேன். எனவே விரையில் உங்களின் இல்லத்திற்கு வருகிறேன் என்றார்.
3.8.2012 சனிக் கிழமை நண்பகல் 12
மணியளவில், தனது பள்ளிக் காலத் தோழி ஒருவருடன், எனது இல்லத்திற்கு வருகை தந்தார்,
சகோதரியார் முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்கள்.
உலக வாழ்க்கையி
னுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல
நூல்வகை கற்கவும்
இலகு சீருடை
நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத
லார்நங்கள் பாரத
தேச மோங்க வுழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலொர்
பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள்
விரைவி லொழிப்பாராம்
என்று, தான்
காண நினைத்த புதுமைப் பெண் பற்றிப் பாடுவான் பாரதி. முத்துச் சிதறல் மனோ
சாமிநாதன் அவர்களும், ஓர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் தோன்றினார்.
தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து,
இல்லத்தரசியாய் முப்பதாண்டுகள் பாலைவன நாட்டில் வாழ்ந்து வருபவர். வெளிநாடு சென்ற
போதிலும் வீட்டிலோர் பொந்தில் முடங்கி விடாமல், வாழ்வியல் அனுபவத்தில் கண்டெடுத்த,
எத்தனையோ முத்துக்களில் நல் முத்துக்களாய் தேடி எடுத்து, முத்துக் குவியலாய்,
முத்துச் சிதறலாய் இணையம் வழி பகிர்ந்து வருபவர்.
ஓவியம், இலக்கியம், விளையாட்டு, இசை,
கவிதை, தையற் கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி
வருபவர்.
சார்ஜா. அராபிய பாலைவன நாட்டில் வாழும்
தமிழர்களின் உணவுத் தாகத்தை தணிக்கும் சபையர் ஹோட்டல் உணவு விடுதியின் உரிமையாளர்.
இவரது கணவர் சுவைமிகு உணவுகளை உணவு விடுதியில் மட்டுமே வழங்குவார். ஆனால், ஒவ்வொரு
வீட்டின் சமையலறையிலும் நுழைந்து, இலட்சக் கணக்கானத் தமிழர்களின், மனத்தினையும்,
வயிற்றினையும் சுகமாக நிரப்பி வருவது, இவரது
கைமனம்
என்னும் வலைப்
பூவாகும்.
Mano’s
Delicious kitchen
தாயின் கை
பக்குவத்துடன், உணவு வகைகளை வாரி இறைக்கும் இவரது ஆங்கில வலைப் பூ இது.
இதுமட்டுமல்ல, கடந்த எட்டு வருடங்களில்,
பத்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, சமையல் குறிப்புகளுக்கானத்
தனித் தளம் ஒன்றும் இவருக்குண்டு,
புரூட் ரைஸ், பொங்கல் குழம்பு, மலபார் ப்ரான்
கறி, பீர்க்கங்காய் துகையல், செட்டியாட்டு சிக்கன் கிரேவி, வறுவல், முட்டை பணியார
குழம்பு, மைசூர் ரசம், விவிகா, செமோலியா அல்வா, மீன் கட்லெட், அக்கார வடைசல்,
தென்கை பால் என நீ.......ண்......டு கொண்டே செல்கிறது இவரது சமையல்
குறிப்புகள். மலைப்புதான் மிஞ்சுகிறது. நாம் உண்ணும் உணவில் இத்தகை வகைகள்
இருக்கிறதா? பல உணவு வகைகளின் பெயரைக் கூட இதுவரை கேள்விப் பட்டதில்லையே? என
வியக்கத் தூண்டும் வலைப் பூ, இவரது வலைப் பூ.
முப்பது நிமிடங்களுக்கும் மேல் எங்களது
சந்திப்பு நீண்டது. இவரது தாத்தா சோம சுந்தரம் பிள்ளை அவரகள் ஒரு பெரும்
தமிழறிஞர் என்பதை அறிந்தேன். கரந்தையோடு தொடர்புடையவர். உமாமகேசுவரனாரின்
சமகாலத்தவர் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தொல்காப்பியம் குறித்து,
இவரது தாத்தா நூல் ஒன்று எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன்.
எனது மனைவியிடம் அன்போடு பல நிமிடங்கள்
பேசினார். தன் வாழ்வில், தான் சந்தித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு,
பலவாறு ஆறுதல் கூறினார்.
மகிழ்ச்சி நிரம்பிய சந்திப்பாக இச்சந்திப்பு
அமைந்தது. எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது, தமிழுக்கும்
எழுத்திற்கும்தான் எத்தனை சக்தி.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பார் கனியன்
பூங்குன்றனார். இன்று இவ்வரிகள் உண்மையாகி விட்டதே. பேரூந்தில் ஏறாமல், தொடர்
வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு
நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப்
பெருக்கிக் கொள்ள முடிகிறதே.
வலைப்
பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்குமனம் நினைப்பது பதிவாக வருகிறது.. உங்களை நான் சந்தித்ததும், உங்கள் அன்பான வரவேற்பும் இப்போதும் என் நெஞ்சில் நிறைவாய் இருக்கிறது. உண்மைதான். வலைப்பூவினால் உலகளாவிய நட்புகள் பெருகுகின்றன. என் பதிவில் எழுதி உள்ளேன். வாழ்த்துக்கள்.
அன்பின் ஜெயக்குமார் - பதிவு நன்று - பதிவுலகில் வலம் வரும் பதிவர்களை நேரில் காணாமலையே அவர்களின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு - அவர்களின் இரசிகர் ஆகி விடுகிறோம். நேரில் காண வாய்ப்புக் கிடைக்கும் போது மிக்க மகிழ்ச்சியுடன் அதற்கான முன்னேற்பாட்டுகளைச் செய்கிறோம். சந்தித்த உடன் கண்டு, பேசி, பலப் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டு, குடும்பத்திபரைப் பற்றிப் பேசி - இன்னும் என்ன என்ன நினைத்தோமோ - அனைத்தையும் நிறைவேற்றி உண்டு மகிழ்ந்து நகரைச் சுற்றிப் பார்த்து - பிரியா விடை பெறுகிறோம். இவ்வாய்ய்பு எப்பொழுதாவது தான் கிடைக்கிறது. நல்லதொரு பதிவு - அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் தேடிப் பிடித்து எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஇந்தப்பதிவினை வெகு அழகாக வடிவமைத்துக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குநானும் சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களை [ 20.02.2011 ] நேரில் சந்தித்துப்பேசும் பாக்யம் பெற்றுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html
>>>>>
ஓவியம், இலக்கியம், விளையாட்டு, இசை, கவிதை, தையற் கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி வருபவர்.//
பதிலளிநீக்குவாழ்வியல் அனுபவத்தில் கண்டெடுத்த, எத்தனையோ முத்துக்களில் நல் முத்துக்களாய் தேடி எடுத்து, முத்துக் குவியலாய், முத்துச் சிதறலாய் இணையம் வழி பகிர்ந்து வருபவர்.//
மனோ சாமிநாதன் அவர்களைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை.
பல திறைமைகள் கொண்ட அன்பான பெண்மணி.
படிக்கப் படிக்க உள்ளம் களித்தது
பதிலளிநீக்குபதிவுலக நட்பின் ஆழமும் இறுக்கமும்
புரியச் செய்த பதிவு அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு சார்!மனம் குளிர்ந்தது!
பதிலளிநீக்குசகோதரி மனோ சுவாமிநாதன் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
பதிலளிநீக்குநான் பதிவுகள் வெளியிட ஆரம்பித்த ஆண்டு 2011. அதற்கு முன்பே எனக்கு இவர்களுடன் பழக்கம் உண்டு. அவர்களின் பதிவுகள் சிலவற்றிற்கு 2010ம் ஆண்டில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள ஞாபகம் உள்ளது. மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் அடிக்கடி பேசியதுண்டு.
சென்ற வாரம்கூட தஞ்சைக்கு வந்திருப்பதாகச் சொல்லி கைபேசியில் பேசினார்கள்.
அஷ்டாவதானி போல ஒரே நேரத்தில், பல விஷயங்களை நினைவில் நிறுத்தி, அழகாகத் திட்டமிட்டு, செயலாற்றக்கூடிய திறமை உள்ளவர்கள்.
>>>>>
நான் இதுவரை நிறைய தொடர்பதிவுகள் எழுதியுள்ளேன்.
பதிலளிநீக்குசகோதரி மனோ சுவாமிநாதன் அவர்களின் வேண்டுகோளுக்காக நான் இதுவரை எழுதிய தொடர் பதிவுகள் மூன்று
1] உணவே வா! உயிரே போ!!
[சமையல் பற்றிய நகைச்சுவை]
முத்துச்சிதறல் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
2] ”முன்னுரை என்னும் முகத்திரை”
’முத்துச்சிதறல்’ திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html
3] ”மழலைகள் உலகம் மகத்தானது”
அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html
>>>>>
அன்பின் ஜெயக்க்குமார் - சென்னையில் செப்டம்பர் முதல் தேதி நடக்கும் பதிவர் சந்திப்பிற்குச் சென்று வாருங்கள். பதிவர்கள பலரைச் சந்திக்கலாம்.
பதிலளிநீக்குhttp://www.madhumathi.com/2013/07/2013.html - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் இதுவரை இரண்டு முறைகள் வலைச்சர ஆசிரியராக இருந்துள்ளார்கள்.
பதிலளிநீக்குமுதல் முறையில், முதல்நாள் முதல் அறிமுகமாக என்னை அடையாளம் காட்டி சிறப்பித்திருந்தார்கள்.
[அதுவும் எனக்கு சம்பந்தமே இல்லாத சமையல் பற்றிய பதிவு அது. ;))))) அப்போது எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். சமைக்கத்தெரியாது.]
http://blogintamil.blogspot.com/2011/08/blog-post_30.html
அடுத்தமுறை
வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!!
என்ற தலைப்பில் என்னை முதல் வைரமாக அடையாளம் காட்டிச் சிறப்பித்து எழுதியிருந்தார்கள்.
http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_19.html
>>>>>
சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களின் தினித்திறமைகள், நற்குணங்கள், பண்புடன் பழகுதல், கனிவான பேச்சுக்கள் என எவ்வளவோ விஷயங்களைப் பற்றி நாம் புகழ்ந்து சொல்லலாம்.
பதிலளிநீக்குஎழுத்து மட்டுமல்லாமல் ஓவியம், கைவைத்தியம் இலக்கியம், விளையாட்டு, இசை, கவிதை, தையற்கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி வருபவர் தான்.
தெரிந்த ஒருவரைப்பற்றி, தாங்கள் புகழ்ந்து எழுதியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
VGK
சகோதரி மனோ சாமிநாதன் அவர்களது எழுத்துக்களைப் படிக்கும்போதே அவர் ஒரு சிறந்த பண்பாளர் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களைச் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி! மேலும் அவரது தாத்தாவும் ஒரு தமிழறிஞர் என்பதை அறியும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி! ஒரு இனிய பதிவினைத் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஉங்களது சந்திப்பால் ஒரு புதிய நண்பர் அறிமுகமாகியுள்ளார். நன்றி.
பதிலளிநீக்குநலம் நாடும் நட்பு
பதிலளிநீக்குபதிவுலகம்மூலம் அறிமுகமாகி பின்னர் நேரில் சந்திக்கும் அனுபவம் மிகவும் சுகமானதாகும் ! சிகாகோவில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் நாகபுரி வந்து என்னை சந்தித்தார் ! என் மகனும் அவன் மனைவியும் வந்திருந்தனர் ! என் மறுமகளுக்கு உறவினர் என்பது அப்போதுதான் புலப்பட்டது ! தென்காசி செல்லும் வழியில் பதிவர் ஸ்ரீவில்லி புத்தூர் ரத்தினவேல் அவர்களை சென்று பார்த்தேன் ! என்ன அன்பு ! என்ன பரவசம் ! Modernity at times brings ecstacy !---காஸ்யபன்.
பதிலளிநீக்கு//பேரூந்தில் ஏறாமல், தொடர் வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதே.
பதிலளிநீக்குவலைப் பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.//
ஒரு இனிய பதிவினைத் தந்தமைக்கு நன்றி!
அன்புடையீர்!.. தங்கள் மனைவி பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!...
பதிலளிநீக்குவலைப்பூ சிறந்த நலம் நாடும்நண்பர்களையும் நமக்கு பூக்க செய்கிறது! திருமதி மனோ சாமிநாதன் அவர்களை சந்தித்தமை குறித்து அழகான பதிவு! அருமை! தங்கள் துணைவியாரின் தலைவலி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குபேரூந்தில் ஏறாமல், தொடர் வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதே.
பதிலளிநீக்குவலைப் பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
மன நிறைவான இனிய சந்திப்புகள்.. வாழ்த்துகள்..!
பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்....
பதிலளிநீக்குநானும் வலையுலகம் மூலம் கிடைத்த நட்புகளைச் சந்திக்கும் போது கிடைத்த உணர்வினை இங்கேயும் புரிந்து கொண்டேன்.....
நல்ல பகிர்வு...
மிக மகிழ்வாக உள்ளது தங்கள் பதிவை வாசிக்க, பதிவர்களைச் சந்தித்தவை பற்றி. மிåக நன்றாக விரித்து எழுதியுள்ளீர்கள்.நன்றி.
பதிலளிநீக்குமனோவுடன் நானும் தொடர்புடையவள். நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
நான் டென்மார்க்கில் உள்ளென். ம்..ம்... என்று பெருமூச்சு விடுவதைத் தவிர என்ன செய்ய முடியும். தங்கள் குடும்பத்தார் நலன் பெருகட்டும்.
அனைவருக்கும் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மனோ சாமிநாதன் அவர்களுடனான சந்திப்பை அழகான பதிவாக்கி இருக்கிறீர்கள். தங்களின் பதிவுகள் தமிழின் சிறப்பை உறரக்கின்றன.தங்களோ தமிழரின் விருந்தோம்பலுக்கு உதாரணமாக விளங்குகிறீர்கள். நல்லோர் நட்பால் இன்னும் நன்மைகள் பல விளையட்டும்.
பதிலளிநீக்குமனித உறவு மாண்பு மிக்கது. அதை வளர்ப்போர் மிக உயர்ந்தோர்!
பதிலளிநீக்குஅதனால் குமாரும் உயர்ந்தவர். நன்று உங்கள் முயற்சி குமார் வாழ்க!
ப.திருநாவுக்கரசு
வலையுலகில் எழுத்து வழியாகச் சந்தித்தவர்களை, அதுவும் வேறு நாட்டில் இருக்கும் ஒருவரை நேரில் சந்திக்கக் கிடைப்பது மிகவும் அபூர்வம். அனுபவப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கு!
பதிலளிநீக்குநம் சந்திப்பைப்பற்றி, தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடனும் தங்கள் இல்லத்தரசியுடனும் உரையாடிய சில நிமிடங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தியதும் தங்களின் விருந்தோம்பல் என்னை அசத்தியதும் தங்கள் மனைவி/என் சகோதரி கை வண்ணத்தில் அருந்திய பாயசம் போல இன்றும் நினைவில் இனிக்கிறது!
உண்மை தான்! வலையுலகம் நமக்கு நிறைய, மறக்க இயலாத உறவுகளைத் தந்து கொண்டேயிருக்கிறது! என்றுமே இந்த இனிய உறவுகள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்!
வழக்கம்போல சகோதரர் வை.கோபாலகிருஷ்ணனுடனும் இந்த முறை சகோதரர் தமிழ் இளங்கோவிடம் உரையாடியது மனதுக்கு இதமளிக்கிறது!
படித்து மிக மகிழ்ந்தேன். வலைப்பூக்களின் வழி அறிமுகமானவர்களை நேரில் சந்தித்து உரையாடும் அனுபவம் எத்தனை மகிழ்வும் பயனும் கொண்டது!
பதிலளிநீக்குதங்கள் துணைவி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் அவர்களுடனான சநதிப்பு நிகழ்வு இனிதானது.
தங்கள் துணைவியார் உடல் நலமடைந்தமைக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து செயல்படுங்கள். எப்போதும் இறைவன் உங்கள் பக்கம்.
வாழ்த்துக்களுடன்.
மனதிற்கு இனிமையான சந்திப்புகள்..
பதிலளிநீக்கு//பேரூந்தில் ஏறாமல், தொடர் வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதே.
பதிலளிநீக்குவலைப் பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.//
இந்த வலையுலகில் உலா வரத் தொடங்கியதும் நமது நண்பர் வட்டம் பெருகியுள்ளது என்பது உண்மைதான் நண்பரே. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
திருமதி மனோ.சாமினாதன் அவர்கள் முதன் முதல் என்னை செப்டம்பர் 2 ஆம் நாள் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
மிக மிக மகிழ்ச்சி. திருமதி மனோ சாமி நாதன் அவர்கள் பதிவு நிறைய படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போது பதிவுகள் எழுதுவது குறைந்ததால், நிறைய இழந்ததை உணர்கிறேன் - really I missed a lot.
முகநூல் நிறைய நேரத்தை எடுத்துக் கொள்கிறது; பலன் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
இந்த அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர் திரு ஜெயக்குமார்..அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 23 & 24 செப்டம்பரில் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சி என எனக்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. கலந்து கொண்டால் நிச்சய்ம் உங்களை சந்திக்கிறோம். உங்களுடன் தொடர்பு கொள்கிறோம்.
இந்த அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி நண்பர்களே - திரு ஜெயக்குமார்.. = திருமதி மனோ சாமி நாதன்
பொருத்தமான உவமை பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு.
பதிலளிநீக்குஷார்ஜா செல்ல வாய்ப்பு கிடைக்கும் பொழுது மனோ அவர்களைச் சந்திக்க முயல்கிறேன்.
This week very nice .true friendship never failed .thank you sir.
பதிலளிநீக்குஉண்மை நட்பு என்பது காந்தம் போன்று கவரக் கூடியது. என்றோ ஒருநாள் சந்தித்தே தீரும் ஊக்கத்தை கொடுக்கும். உங்கள் மனைவியின் சுகம் எப்படி?
பதிலளிநீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
பதிலளிநீக்குமனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பை எனது தமிழாசிரியர் கேன்யுட் ரோட்ரிகோஸ் உணர்வு பொங்கச் சொன்னது மனதில் வந்து செல்கிறது...
பதிலளிநீக்குஇப் பதிவை வாசித்த பிறகு..
இனிய சந்திப்பை பகிர்ந்துகொண்டீர்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குத. ம: ஏழு
பதிலளிநீக்கு