31 அக்டோபர் 2013

கடலில் கரைந்தவர்




நடுத்தர உயரம், கருத்த உடல்
கம்பீரத் தோற்றம், பரந்த நெற்றி
உறுதியை உரைக்கும் கண்கள்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பு
படர்ந்த மீசை, நரையைக் கருமயிர்
திரைபோல் மூடிய பருவம்

     நண்பர்களே, தமிழரைத் தட்டி எழுப்பியக் குரலுக்குச் சொந்தக்காரரை, நாடாண்ட குரலுக்குச் சொந்தக்காரரை, சட்டசபையில் அறிவையும் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும் பட்டவர்த்தனமாய் விளக்கிய குரலுக்குச் சொந்தக்காரரை உங்களுக்கு அறிமுகப் படுத்த  விரும்புகின்றேன்.

     நண்பர்களே நம்மில் பலர் இவரை அறிந்திருக்கலாம், அறிந்து மறந்திருக்கலாம், இன்றைய இளம் தலைமுறையினர் இவரை அறியாதிருக்கலாம். மறந்தவருக்கு நினைவூட்டுவதிலும், அறியாதவருக்குத் தெரியப்படுத்துவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்கிறது.
     
பலவகையில்  தமிழர்க்கு  நன்மை  செய்த
     பண்பாளன்  முன்னாள்தென்  னிந்தி  யாவின்
நலவுரிமைச்  சங்கத்தில்  பங்கு  ஏற்று
     நல்லதொரு  தளபதியாய்  விளங்கி  வந்தோன்
இலையாகக்  கொழுந்தாகப்  பெரியாரி  ன்முன்,
     இந்நாட்டில்  பலமனிதர்  இருந்தபோது
மலராகப்  பெரியாரே  போற்று  கின்ற
     மலையாக  இருந்தவர்நம்  பன்னீர்  செல்வம்

என உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தளபதியாகவும்,

தொல்லை  நீக்கிட  எழுந்த
தூயரில்  பன்னீர் செல்வன்
இல்லையேல்  படைத் தலைவன்
இல்லையெம்  தமிழ் வேந்துக்கே

எனப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் படைத் தலைவனாகவும் போற்றப் பெற்ற, இராவ் பகதூர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களை அறிமுகப்படுத்தவும், நினைவூட்டவும் விரும்புகின்றேன் நண்பர்களே. வாருங்கள் பண்பாளர் பன்னீர் செல்வத்தை அறிவோம். வாருங்கள்.

     நண்பர்களே, பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனை தேரூர்ந்த மனுநீதிச் சோழன் ஆண்ட ஊரான திருவாரூருக்கு அருகிலுள்ள, செல்வ புரத்தில், 1888 ஆம் ஆண்டு பிறந்தவர் நம் பன்னிர் செல்வம்.
தமிழவேள் பி.டி.ராஜன்
     தஞ்சையிலும், திருச்சியிலும் கல்வி கற்ற பன்னீர் செல்வம், சட்டம் பயில இலண்டன் சென்றார். பின்னாளில் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கிய தமிழவேள் பி.டி.இராசன் அவர்களும், அப்பொழுது இலண்டனில் மாணவராய் சட்டம் பயின்று வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

     சட்டக் கல்வியை முடித்தவுடன் தஞ்சையில் வழக்கறிஞராய் பணியாற்றத் தொடங்கினார். வழக்கறிஞர் பணியோடு பொது வாழ்விலும் ஈடுபட்டார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் விளங்கிய தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரும், பன்னீர் செல்வமும் இணைபிரியா நண்பர்களாயினர். தஞ்சை மக்கள் இவர்களை, இரட்டையர் என்றே அழைக்கத் தொடங்கினர்.

     தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நீதிக் கட்சியின் தூண்கள் என அழைக்கப் பட்டவர்கள் மூவர். முதலாமவர் ஏ.டி.பன்னீர் செல்வம், இரண்டாமவர் உமாமகேசுவரனார், மூன்றாமவர் ஐ.குமாரசாமி பிள்ளை. மூவருமே வழக்கறிஞர்கள்.

     ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் 1918 இல் தஞ்சை நகராட்சி மன்றத் தலைவரானார். தொடர்ந்து 1922 முதல் இரண்டாண்டுகள், தஞ்சை மாவட்டக் கல்விக் குழுத் தலைவரானார்.

      1924 ஆம் ஆண்டு முதல் 1930 வரையிலான ஆறாண்டுகள் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் இவர். உமாமகேசுவரனாரோ வட்டக் கழகத் தலைவர். இக்கால கட்டத்தில் தஞ்சை மாவட்டமானது, கல்வித் துறை வளர்ச்சியில் தலை நிமிர்ந்து நின்றது.

     நண்பர்களே, உமாமகேசுவரனார் பன்னீர் செல்வம் இருவரின் முயற்சியால், தஞ்சையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 40 இல் இருந்து 170 ஆக உயர்ந்தது. தஞ்சையில் சோம்பேறிகளின் கூடாரமாக விளங்கிய, அன்ன சத்திரங்கள் அனைத்தையும், ஏழை மாணவர்களின் இலவச உணவு விடுதிகளாக மாற்றினர். அதிலும் குறிப்பாக ஒரத்தநாடு, ராசா மடம் என்னும் இரு ஊர்களில் இருந்த சத்திரங்கள், மாணவர்கள் தங்கி, பயிலும் மாணவர் விடுதிகளாக உருமாற்றம் பெற்றன.

     நண்பர்களே, இந்த ராசாமடம் விடுதியில் இலவசமாய் தங்கி, இலவசமாய் உண்டு, கல்வி பயின்ற மாணவர் ஒருவர்தான், பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்தார். ஆம் நண்பர்களே, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தங்கி கல்வி பயின்ற விடுதிதான் ராசாமடம் மாணவர் விடுதி.

              இவர் மட்டுமல்ல, பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், கவிஞர் சுரதா, கவிஞர் அ.மறைமலையான் முதலானோரும் இளமையில் இங்கே உண்டு, கற்றுத் தேறியவர்கள்தான்.

     அதுமட்டுமல்ல நண்பர்களே, திருவையாற்று வடமொழிக் கல்லூரியில் தமிழும் நுழைந்து, அரசர் கல்லூரியாக புதிய பரிமாணம் பெற்றதும் இவர்களாளேதான்.

     இவர்களது காலத்தில் தஞ்சையில், முக்கியக் கட்டிடங்கள் இரண்டு எழுப்பப் பெற்றன. ஒன்று மாவட்டக் கழக அலுவலகக் கட்டிடம். இரண்டாவது வட்டக் கழக அலுவலகக் கட்டிடம்.


    
  நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பனகல் அரசர் ஆற்றிய பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், மாவட்டக் கழகக் கட்டிடத்திற்கு பனகல் கட்டிடம் என்று பெயர் சூட்டினார் பன்னீர் செல்வம். இன்றும் இக்கட்டிடம் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.


      வட்டக் கழகக் கட்டிடமோ, உமாமகேசுவரனார் மறைவிற்குப் பின், அவர் பெயராலேயே உமாமகேசுவரனார் கட்டிடம் என்றே, இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

     நண்பர்களே, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்றம் சென்றார் பன்னீர் செல்வம். தந்தைப் பெரியாரின் அன்பிற்கு உரியவரானார். பெரியார் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபின், பெரியாருக்கு அடுத்த தலைவராக, அதாவது நீதிக் கட்சியின் துணைத் தலைவராக பன்னீர் செல்வம் உயர்ந்தார். செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் பெரியார் எதையும் செய்ததில்லை.
 
ராஜா சர் முத்தையா செட்டியார், ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார்
      பன்னீர் செல்வம் மட்டுமல்ல உமாமகேசுவரனாரும் தந்தைப் பெரியாரின் அன்பிற்கும், முழு நம்பிக்கைக்கும் உரியவராய்த் திகழ்ந்தார். நண்பர்களே, இதில் வியப்பிற்கு உரிய செய்தி ஒன்றுள்ளது. ஆம் பெரியார் நாத்திகவாதியாய் விளங்கிய போதிலும், பெரியாரின் முழு நம்பிக்கையினைப் பெற்ற இவர்கள் இருவருமே ஆத்திக வாதிகள்.

     நண்பர்களே, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்படுத்தப் பட்ட சைமன் கமிஷன், தனது அறிக்கையினை 1930 இல் தாக்கல் செய்ததையும், இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகள் பற்றியும் நாம் அறிவோம். முதல் வட்ட மேசை மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொள்ளவில்லை, ஆனால் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். நண்பர்களே, இந்த இரு மாநாடுகளிலும், இந்திய கிறித்தவர்களின் சார்பாக, கலந்து கொண்ட பெருமைக்கு உரியவர்தான் சர் ஏ.டி. பன்னீர் செல்வம்.
 
முதல் வரிசையில் வலமிருந்து நான்காவதாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருப்பர் ஏ.டி.பன்னீர் செல்வம், அடுத்ததாக அமர்ந்திருப்பவர் அம்பேத்கார்
     1934 ஆம் ஆண்டு ஜுன் மாதம், சென்னை மாகாண அரசின் உள்துறை அமைச்சராக சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நியமிக்கப் பட்டார்.

     நண்பர்களே நேர்மையின் இலக்கணம் செல்வம். இவர் உள் துறை அமைச்சராய் விளங்கிய காலத்தில், இவரது சொந்த மருமகன் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பதவியினைப் பெற முயன்றபோதும், செல்வம் அதற்கு இணங்கினாரில்லை. அத்தகைய நேர்மையாளர்.
 
தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா.
மாலையுடன் அமர்ந்திருப்பர் பன்னீர்.நிற்பவர்களில் முதல் வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்பவர் உமாமகேசுவரனார்
      1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவரானார். காங்கிரஸ் வந்ததும், கட்டாய இந்தியும் வந்தது. தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது.

     நண்பர்களே, கட்டாய இந்தியை எதிர்த்து, முதல் தீர்மானத்தை இயற்றிய அமைப்பு எது தெரியுமா? ஆம்  நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கம்தான்.

     இராஜாஜி அவர்கள் கட்டாய இந்தி குறித்த, தன் எண்ணத்தினை வெளிப்படுத்திய 16வது நாளே, 28.8.1937 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், உமாமகேசுவரனாரால், முதல் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கமும் களத்தில் இறங்கியது.

      தந்தைப் பெரியார் இந்தி எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றினார். பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். தஞ்சையிலே பேராட்டத்தில் இறங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், உமாமகேசுவரனார், ஐ.குமாரசாமி பிள்ளை  போன்றோர் தஞ்சை சிறையில் அடைக்கப் பட்டனர்.
 
அன்றைய ஜெயில், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளி
     நண்பர்களே, இந்தியை எதிர்த்து பன்னீரும், உமாமகேசரும் சிறையிருந்த இடம், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாய் செயலாற்றி வருகின்றது.

     இந்நிலையில், ஆளுநரைக் கண்டு மக்களின் மன நிலையை உணர்த்த தூதுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. அக்குழுவில் தந்தைப் பெரியார், நாவலர் பாரதியார் மற்றும் த.வே.உமாமகேசுவரனார் மூவரும் இடம் பெற்றனர். மூவரும் ஆளுநரையும் சந்தித்தனர்.

      நண்பர்களே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, ஒரு நாள் எட்டய புரத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமை நாவலர் பாரதியார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட முத்தமிழ்க் காவலர் முழங்கிக் கொண்டிருந்தபோது, மேடையில்  இருந்தவர்களை நோக்கி சரமாரியாய் கற்கள் வீசப்பட்டன.
 
        காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டம் நிறுத்தபட்டும், கல் மாரிப் பொழிவது மட்டும் நிற்கவில்லை. பாரதியாரையும், முத்தமிழ்க் காவலரையும் பெரும்பாடு பட்டுக் காத்த காவல் துறையினர், கல் எறிந்த 32 பேரைக் கைது செய்து வழக்கும் பதிந்தனர். ஆனால் அரசோ, அவ் வழக்கைத் தள்ளுபடி செய்து, கலகக்காரர்களை விடுதலை செய்தது.


        நண்பர்களே, செய்தியறிந்த பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் பொங்கி எழுந்தார். முதல்வர் இராஜாஜியுடன் நேருக்கு நேர் விவாதத்தில் இறங்கினார்.

செல்வம் – இப்படி வழக்கினை ரத்து செய்து விடுவித்தால், சமுக  
           விரோதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக ஆகிவிடாதா?
இராஜாஜி – பொதுக் கூட்டங்களில் பேசுகிறவர்கள், மக்களை 
           பதற்றமடையச் செய்யாத வகையிலும், மாற்றாரைப் 
           பழித்துரைக்காத முறையிலும் பேசுதல் வேண்டும்
செல்வம் – சோமசுந்தர பாரதியாரைப் போலவும், கி.ஆ.பெ.விசுவநாதத்தைப் 
           போன்றும் உயர்தரமும் ஆற்றலும் பண்பாடும் கொண்ட
           பேச்சாளர்களை, நான் இதுவரையில் சட்ட மன்றில் கூடக்
           கண்டதில்லை. அன்றியும் அரசே தன் விருப்பப்படி
           குற்றவாளிகளின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தால்,   
           இது எங்கே கொண்டுபோய் விடுமோ? எதில் சென்று
           முடியுமோ?
அமைச்சர் – குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனக் கண்டதாலேயே 
             அவற்றை அரசு ரத்து செய்தது.
செல்வம் -  ஒவ்வொரு குற்றச்சாட்டினையும் அரசே ஆராய்ந்து பார்த்து,
            எந்தக் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது, எது அடிப்படை
            உள்ளது எனத் தீர்ப்பு வழங்க முற்பட்ட்டால், பின் நீதி
            மன்றங்கள் எதற்கு? வழக்குரைஞர்கள்தாம் எதற்கு?

இராஜாஜி சார்பில் பதில் வரவில்லை.

செல்வம் -  காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு சட்டம், எதிரானவர்கட்கு ஒரு சட்டம்
            என்றால், இந்நாட்டில் அராஜக ஆட்சி நடப்பதாகவே அர்த்தம்.

இதற்கும் பதில் கூறவில்லை. இப்படிச் செல்வம் சினம் கொப்பளிக்க ஆவேசமுடன் சாடியபோது, அவையே கப்சிப். முதல்வரோ, அமைச்சரோ மூச்சே விடவில்லை. உண்மையான தருக்கவாதிகளுக்கு எப்படிப் பதில் தர முடியும். பின்பொருமுறை, சட்டமன்றத்தில் முதல்வர் இந்தி எதிர்ப்பு பற்றிப் பேசும்போது,

இராஜாஜி –  பாரதியாரும், பெரியாரும்தானே இந்தியை எதிர்க்கிறார்கள்?
செல்வம் –  அப்படியானால், நீங்கள் ஒருவர்தானே இந்தியை
            ஆதரிக்கிறீர்கள்

     நீதிக் கட்சியின் தொடர் போராட்டத்தால் இந்தி பின்வாங்கியது. இந்தியை வெளியேற்றிய மகிழ்ச்சியில், சற்று இளைப்பாறுவதற்குள், இரண்டாம் உலகப் போர் முன் வந்த நின்றது.

     இரண்டாம் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவை ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவின் சார்பில், இந்த அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சருக்கு உதவியாக, ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

     நண்பர்களே, 10.1.1940 அன்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், இந்த ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஏ.டி.பன்னீர் செல்வம்

      இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெறவிருந்த போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 26.2.1940 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு, பம்பாய் சென்றார்.

     பம்பாயில் தமிழவேள் உமாமகேசுவரனாரின் உறவினர், மின் ஆற்றல் பொறியாளர் தியாகராச பிள்ளை என்பாரின் வீட்டில் தங்கினார்.

     மறுநாள் பம்பாயில் இருந்து புறப்பட்டு, விமானம் மூலம் கராச்சி சென்றார். கராச்சியில் இருந்தவாறு, தந்தைப் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதுதான் தான் எழுதும் கடைசிக் கடிதம் என்பதை செல்வம் அப்போது உணரவில்லை.

                                                விமான நிலையம்,
                                                கராச்சி,
                                                29.2.1940
எனது அன்புள்ள தலைவர் அவர்கட்கு,
      நேற்று மாலை பம்பாயிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் எந்த பிளேனில் போகிறதாயிருந்தேனோ, அந்த பிளேன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. அநேகமாய் இன்று மாலை இங்கு வந்து சேரும். நாளை காலை 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து கிளம்புவேன். ஆகவே வரும் திங்கட்கிழமை லண்டன் போய்ச் சேருவேன் என்று எண்ணுகிறேன்.
                                                இப்படிக்கு,
                                               தங்களன்புள்ள,
                                              பன்னீர் செல்வம்

     1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் அதிகாலை,இராணுவ விமானமாகிய அனிபால், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களையும், மூன்று ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளையும், நான்கு விமானப் பணியாளர்களையும் சுமந்து கெண்டு விண்ணில் ஏறியது. ஆனால் தரை இறங்கவே இல்லை.

      நண்பர்களே, விமானத்தின் சிதறிய பாகங்களைக் கூட கண்டு பிடிக்க இயலவில்லை. ஓமான் தீபகற்பத்தின் அருகில் ஓமார் வளைகுடா பன்னீர் செல்வத்தை வாரி அணைத்துக் கொண்டது. வானூர்தியில் ஏறி மறைந்த மற்றொரு சுபாஷ் சந்திர போஸ், நமது பன்னீர் செல்வம்.

      இராணுவ விமானங்கள் பல, ஓயாது பறந்து, ஓமான் வளைகுடாவையே சல்லடையாய் சலித்துத் தேடின. பயன்தானில்லை.

     தமிழ் மொழி தம் தாய்மொழி என்பதையும், தமிழ் இனம் தம் இனம் என்பதையும், என்றும் மறவாது, தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், செயலிலும், தமிழர்தம் முன்னேற்றத்தையே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்த பன்னீர் செல்வம், தமிழக மக்கள் அனைவரையும் துன்பக் கடலில் மிதக்க விட்டுவிட்டு, தான் மட்டும் ஓமான் கடலில் கரைந்து போனார்.


     என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கைதானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசையல்லவா என்று கருதினேன். பத்து வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த, ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து, சரியாக இருபதாவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை, கதறவில்லை.

     பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகின்றது. தமிழர்களைக் காணும் தோறும் தமிழர் நிலையை எண்ணும்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

     காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுகத் துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும், நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது. இவருக்குப் பதில் யார் என்று மனம் திகைக்கிறது
என்று பதறிய தந்தைப் பெரியாரின் வார்த்தைகளே பன்னீர் என்னும் தமிழ்ச் செல்வத்தின் அருமையை, பெருமையை பறைசாற்றும்.


     பன்னீர் செல்வம் மறைந்த செய்தி கேட்டுப் பதறினார், நெஞ்சம் கலங்கினார் உமாமகேசுவரனார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, கரந்தைப் பன்னீர் செல்வம் தமிழ்க் கல்லூரி எனப் பெயரிட, தீர்மானம் நிறைவேற்றி ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டார். ஆனால், பன்னீர் செல்வத்தைப் போலவே, உமாமகேசுவரனாரிடமும், இயற்கை தன் விளையாட்டை விளையாண்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

     நண்பர்களே, தமிழவேள் உமாமகேசுவரனார் 1938 ஆம் ஆண்டில், கரந்தைப் புலவர் கல்லூரியைத் தோற்றுவித்தார். கல்லூரி ஓராண்டு நடைபெற்ற நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்தார், கல்லூரிக்கு அனுமதியினை வழங்க மறுத்தனர். காரணம் ரூ.25,000 முதற் பொருளாக செலுத்த வேண்டும் என பல்கலைக் கழகம் வற்புறுத்தியது.

      தொடங்கிய நாள் தொட்டு, பொருளாதார நெருக்கடியிலேயே வளர்ந்து வந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடம் ஏது அவ்வளவு பணம். தொடங்கிய முதலாண்டிலேயே கல்லூரி மூடப்பட்டது.

     உள்ளம் தளராத உமாமகேசுவரனார், திருச்சி பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் உதவியுடன், அந்த அறக்கட்டளைச் சொத்துக்களையே முதற் பொருளாய்ச் சமர்ப்பித்து, கல்லூரியை மீட்டெடுக்க முனைந்து வெற்றியும் கண்டார். ஆயினும் பல்கலைக் கழகத்தின் இசைவு ஆணை வரும் முன், வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கவி இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனைக் காண.

      உமாமகேசுவரனாருக்கு ஒரு பேராசை. பல்கலைக் கழகத்தின் இசைவினையே பெற இயலாமல் தத்தளித்த போதும், கல்லூரியினை, சாந்தி நிகேதனத்தைப் போல், ஒர் பல்கலைக் கழகமாய் உயர்த்திப் பார்த்திட வேண்டும் என்ற இடையறா கனவு.

      கனவோடு, இலட்சியத்தோடு பயணித்த உமாமகேசுவரனாரை வழியில் மடக்கிப் பிடித்தது இயற்கை. உடல் நலம் குன்றினார். கங்கைக்கு அருகில் பைசாபாத் என்னும் சிற்றூரில், இயற்கையிடம் தோற்று, நிறைவேறா இலட்சியங்களுடன், சரயு நதிக் கரையில் தீ கொழுந்துகளுக்கு உணவாகிப் போனார்.

      நதிக் கரையில் தீயில் கரைந்து போனதால், கடலில் கரைந்த நண்பரின் பெயரினைச் சூட்ட வேண்டும் என்ற உமாமகேசுவரனாரின் உன்னத எண்ணம், காற்றில் கரைந்தது.

ஆங்கில  நாட்டில்  நல்ல
    இந்திய  அமைச்ச  னுக்குத்
தீங்கிலாத்  துணையாயச்  சென்றான்
    சர்பன்னீர்ச்  செல்வன்  தான்மேல்
ஓங்கிய  விண்வி  மானம்
    உடைந்த்தோ  ஒலிநீர்  வெள்ளம்
தூங்கிய  கடல்  வீழ்த்  தானோ
     துயர்க்  கடல்  வீழ்ந்தோம்  நாங்கள்
-          பாவேந்தர் பாரதிதாசன்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.




69 கருத்துகள்:

  1. தந்தைப் பெரியாரின் வார்த்தைகள் கலங்க வைத்தது... எத்தனை எத்தனை தகவல்கள்...! தங்களின் தேடலுக்கு நன்றிகள் ஐயா...

    இராவ் பகதூர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் சிறப்புகள் மிகவும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா பெரியாரே கலங்கினால் என்றால் பன்னீர் செல்லவம் எத்தகைய மனிதராக இருந்திருக்க வேண்டும். சர் ஏ,டி.பன்னீர் செல்வம் அவர்கள் மட்டும், இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்து, தந்தைப் பெரியாரோடு பணியாற்றியிருப்பரேயானால், தமிழகத்தினை நிலைமையே மாறியிருக்கலாம்.
      நன்றி ஐயா

      நீக்கு
  2. பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும், நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது. இவருக்குப் பதில் யார் என்று மனம் திகைக்கிறது
    என்று பதறிய தந்தைப் பெரியாரின் வார்த்தைகளே பன்னீர் என்னும் தமிழ்ச் செல்வத்தின் அருமையை, பெருமையை பறைசாற்றும்.

    பெருமைமிக்க தமிழ் செல்வத்தின் மகிமையை அருமையாக உணர்த்திய பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  3. அரிய செய்திகளை மிக அருமையாகத் தொகுத்துத்தந்திருக்கிறீர்கள் அய்யா. மிக்க நன்றி. எதற்கும் கலங்காத தந்தை பெரியாரின் கலக்கம் படிப்பவரையும் பற்றும் வண்ணம் உள்ளது. வாழ்வில் பிரியாத நண்பர்கள் இருவரும் காலமான முறையிலும் இணைந்தது மிகப்பெரிய சோகம். இந்த இருவரின் மரணச்செய்தியை நான் இப்போதுதான் தங்கள் கட்டுரையின் வாயிலாக அறிந்து அதிர்ந்தேன். சின்னச்சின்ன விஷயங்களில் சிக்குண்டு கிடக்கும் இளைய தலைமுறை இந்தச் செய்திகளை அறிந்து உயரவேண்டும். தங்களின் உழைப்புக்கும் எழுத்துக்கும் தமிழ் உலகம் நன்றி பாராட்டும் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. இரட்டையராய் போற்றப்பட்ட இருவரின் மரணமுமே துர்மரணம்தான். இருவரது உடலும் தஞ்சை வந்து சேரவில்லை. இறப்பிலும் ஒன்றிணைந்த உள்ளங்கள் அவை.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  4. அருமையான வரலாறுகளைப் பெருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பெருமைமிக்க தமிழ் செல்வத்தின் மகிமையை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல, தேடினாலும் அத்தனை எளிதில் கிடைக்காத அரிய, உயரிய தகவல்களை புதையல் போல தந்திருப்பதற்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  6. பெயரில்லா31 அக்டோபர், 2013

    வணக்கம்
    ஐயா
    அருமையான வரலாற்றுப்பதிவு... படிக்க படிக்க இரசனையாக உள்ளது வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறாய் மாறியவர்கள் இவர்கள். வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி நண்பரே

      நீக்கு
  7. அருமையான வரலாற்று பதிவு
    பாராட்டுக்கள்.

    இருந்தும் இன்றைய தமிழன்
    நிலையையும் எண்ணி பார்க்கவேண்டும்.

    இந்தி போராட்டத்தினால்
    விளைந்த நன்மைகள்.
    பல உயிர்கள் மாண்டன.
    கோடிகணக்கில் தமிழ்நாட்டில்
    பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

    இந்தி தான் தமிழ் நாட்டை ஆளுகிறது.

    அவர்கள் கையில்தான்
    அனைத்து அதிகாரங்களும் உள்ளது.

    அவர்கள் பலவிதமான வரிகள் மூலம்
    தமிழ் நாட்டு மக்களை சுரண்டி
    கொழுத்துக் கொண்டிருகிரார்கள்.

    தமிழ்நாட்டின் எந்த ஆக்கபூர்வமான்
    திட்டத்திற்கும்
    அனுமதி வழங்குவது கிடையாது.

    தமிழ்நாட்டை சுற்றியுள்ள
    அண்டை மாநிலங்களோடு உள்ள
    நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க அல்லது
    நதி நீர் இணைப்பு திட்டதிர்க்கோ ,
    மின் திட்டங்களுக்கோ எந்த
    ஒத்துழைப்பும் தருவது கிடையாது.

    தமிழ் நாட்டில் சில அரசியல் கட்சிகள்
    சுய லாபத்திற்காக அவர்களோடு
    ஒட்டிக்கொண்டு காலத்தை
    ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

    தமிழர்களின் உணர்வுபூர்வமான
    இலங்கை தமிழர் பிரச்சினையில்,
    மீனவர்கள் பிரச்சினையை
    கண்டுகொள்வதே கிடையாது.

    கடந்த காலம்
    தற்போது கடந்தகாலமே

    நிகழ்கால பிரச்சினைகளை
    ராஜதந்திர முறையில் தீர்க்க கூடிய
    தலைவர்களே தமிழ்நாட்டிற்கு
    தற்ப்போதைய தேவை.

    ஏராளமான, உண்ணாவிரதங்கள்,
    போராட்டங்கள், மறியல்கள், கடையடைப்பு,
    பல ஆண்டுகளாக செய்தும் ஒரு பயனும் இல்லை.

    தமிழ்நாட்டில் இந்தி கலாசாரம் புகுந்துவிட்டது.
    திருமணமான் பெண்கள் நெற்றி
    வகிட்டில் குங்குமம், இடுதல்,
    ராக்கி கட்டுதல், சாயம் அடித்துகொள்ளும்
    ஹோலி பண்டிகை,
    மும்பையில் செய்வதுபோல்
    பெரிய அளவில் விநாயகர் சிலைகள்
    செய்து வழிபடுதல், பான்பராக் போடுதல்,
    இன்னும் எத்தனையோ வேண்டத்தகாத
    சமாச்சாரங்கள் தமிழன் வாழ்வில் புகுந்துவிட்டன.

    தமிழ்டமில் என்று மேடையில்
    முழங்குபவர்கள் கூட தங்கள் குழந்தைகளை
    ஆங்கில கல்வி அளிக்கும் பள்ளிக்கே அனுப்புகின்றனர்.
    அவர்களையே இன்று அனைவரும்
    பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

    தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில்
    வேலை இல்லை வெளி மாநிலத்திலும்
    வேலை கிடையாது.

    ஆனால் தமிழ் மொழியே தெரியாத
    வடநாட்டு மக்கள் மற்றும் அண்டை மாநில மக்கள்.
    லட்சக்கணக்கான பேர் தமிழ்நாட்டில்
    தங்கள் பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுகிறார்கள்.

    கீழ்மட்ட தமிழன் குடிக்கு அடிமையாக
    குட்டிசுவராய் எடுப்பார்
    கைப்பிள்ளையாக போய்க்கொண்டிருக்கிறான்.

    உணர்சிகளை தூண்டிவிட்டு
    ஆதாயம் காணும் தலைவர்களால்
    எந்த பயனும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழம் பெருமைகளைப் பேசிப் பேசியே
      அழிந்து கொண்டிருக்கும் இனத் தமிழினம் என்று
      எண்ணுகின்றேன் ஐயா. மலிவான அரசியல் உத்தியாகிவிட்டது தமிழுணர்வு. திரைப்படங்களில் கூட தமிழன் தமிழன் என்று உசுப்பேற்றியே காசு சம்பாதிக்கின்றார்கள்.
      தமிழால் ஆதாயம் காணுகிறார்களே தவிர
      தமிழைப் போற்றுவதாகத்தெரியவில்லை
      வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  8. அரிய செய்தி அய்யா. அசராமல் தொகுத்தமைக்கு முதலில் நன்றிகள். திரு. பன்னீர் செல்வம் அவர்களின் வரலாறு ஒவ்வொரு தமிழனும் மனதில் பொதித்து போற்றத்தக்கது. தந்தை பெரியார் கலங்கியது படிப்பவர்களையும் கலங்க வைத்தது. திரு. கரந்தை உமாமகேச்வரனார் மரணமும் நண்பனை ஒத்து இருந்தது கால வெள்ளத்தில் அழியாத சோகம் தான். இக்கால இளைய தலைமுறைக்கு நல்லதொரு அறிமுகத்தினைத் தந்தமைக்கு நன்றீங்க அய்யா..

    பதிலளிநீக்கு
  9. அரிய தகவல்கள், தெரியாத விவரங்கள் என நிறைய இந்த பதிவில். உங்கள் கடின உழைப்பு தெரிகிறது இதில்

    பதிலளிநீக்கு
  10. நீதிக்கட்சி பற்றிய செய்திகளில் சர் ஏ டி பன்னீர் செல்வம் பற்றி படித்து இருக்கிறேன். உங்கள் கட்டுரையின் மூலம் அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்து கொண்டேன். விமான பயணத்தின்போது விபத்தில் மறைந்தார் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  11. அன்பின் ஜெயக்குமார் - ’’கடலில் கரைந்தவர்’’ அருமையான பதிவு - அரிய, பழைய தகவல்களும் புகைப்படங்களும் நிறைந்த அற்புதமான பதிவு.

    பண்பாளர், இராவ் பகதூர், சரி ஏ டி பன்னீர் செல்வம் அவர்களை நினைவுறுத்தவும் - இக்காலத் தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தவும் எழுதப் பட்ட பதிவு.

    எத்தனை எத்தனை தகவல்கள் - இக்காலச் சந்ததியினர் சற்றும் அறியாத அற்புதத் தகவல்கள் - தேடித்தேடி எடுத்துப் பகிர்ந்தமை நன்று.

    பிறந்த ஊர் , கல்வி பயின்ற இடம், சட்டம் பயின்றது, பி டி இராசனின் நட்பு, உமா மகேசுவரனாரின் நட்பு, நீதிக்கட்சியின் தூண்களில் முதலானவர் - நகராட்சி மன்றத் தலைவர், மாவட்டக் கல்விக் குழுத்தலைவர், மாவட்டக் கழகத் தலைவர், பள்ளிகளின் எண்ணிகையை உயர்த்தியது - அன்னதான சத்திரங்களை மாணவர்களின் இலவச உணவு விடுதியாக மாற்றியது - எத்தனை எத்த்னை தகவல்கள் - தேடிப்பிடித்துப் பகிர்ந்தமை நன்று - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டதொரு பதிவு - வரலாற்றுக்கு குறிப்பான இப்பதிவினை பல தடவை படிக்க வேண்டும்,. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. பதிவு நீண்ட பதிவுதான். வாரம் ஒரு பதிவிடுகிறேன். இரண்டு பதிவுகளாகப் பிரித்தால், படிப்பவர்களுக்கு தொடர்ச்சி விட்டுவிடுமே என்ற காரணத்தினால் ஒரே பதிவாக அமைத்துவிட்டேன். அடுத்தப் வாரம் கூட சற்று நீண்ட பதிவாகத்தான் இருக்கும் ஐயா. பொறுத்தருள வேண்டுகிறேன்.

      நீக்கு
  12. அழகான வரலாறு அண்ணா... பல செய்திகளை அறிந்துகொள்ள உதவியது உங்கள் பதிவு...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. எனக்கு இதுவரை தெரியாத செய்திகள் இவை. தந்தமைக்கு மிக்க நன்றி. பன்னீர்செல்வம் போன்றவர்கள் செய்த தியாகத்தின் பலன் இன்றைய தமிழர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ஆனால் அதை அவர்கள் உணர்கிறார்களா, நன்றியோடிருக்கிறார்களா, அவர்களைபோல் தாமும் தமிழ்த்தொண்டு புரிந்திட முன்வருகிறார்களா என்றால் பதிலில்லையே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) , சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னலம் மறந்து, பொது நலத்திற்காகவே உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம் ஐயா. தொலைக் காட்சி இருக்கும் இந்த அவசர உலகத்தில் அவர்களை நினைப்பதற்கே நேரமில்லை.
      நாமாவது அவர்களைப் போற்றுவோம் ஐயா.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  15. எவ்வளவு தகவல்கள்! இரண்டு உயர்ந்த மனிதர்களைப் பற்றி அறியத் தந்ததற்கு மிக்க நன்றிங்க ஜெயக்குமார்.
    //உமாமகேசுவரனாரின் உன்னத எண்ணம், காற்றில் கரைந்தது.// காற்றில் இருப்பதை உரியவர்கள் உணர்ந்து செயல்படுத்தினால் நன்றாய் இருக்கும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகத்தான் இருக்கும் சகோதரியாரே.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  16. வணக்கம்!

    நல்ல பதிவு, ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கின்றன. அயராத உழைப்பு, சிறந்த ஆய்வு, தொய்வில்லாத தொடர்ச்சியான செய்திகள், செய்திகள் தொடர்பான அரிய புகைப்படங்கள், ஆகவே கட்டுரை மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.
    நன்றி
    வணக்கம்

    தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    (மும்பையில் நவம்பர் 3 ஞாயிறு தீபாவளி)

    - தஞ்சை தாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சைக்குப் பெருமை சேர்த்தத் தலைவர்கள்.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
      இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் ஐயா.

      நீக்கு
  17. ஐயா... உங்களைப் பார்த்து வியக்கின்றேன்!
    எத்தனை தேடல்கள்..
    எங்கள் தமிழ் உங்களைப் போன்றோரால்தான் இன்னமும் பாரில் பட்டொளி வீசிப் பறக்கிறது.
    இப்படி அரிய பல தகவல்களைச் சேர்த்துத் தந்துதவுவதால் பல விடயங்களை நாமும் அறிந்து கொள்கின்றோம்!..

    என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் ஐயா!

    தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    த ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மகிழ்ச்சி நிரம்பிய வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  18. அறியத்தந்த செய்திகள் அனைத்தும்
    அரியவை ஐயா...
    உள்வாங்கிக்கொண்டேன்
    சிறந்த பெருந்தகையைப் பற்றிய செய்தி தனை..
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  19. பல தகவல்களை சேகரித்தது
    மட்டுமன்றி சிறப்பாக தொகுத்தது அருமை,

    ஏ.டி.பன்னீர் செல்வம் போன்று காலவோட்டத்தில் காணாமல் போன தலைவர்கள் ஏராளம். அவர்களை தேடி பிடித்து பதிவாக்கி பலரது மனங்களில் சிம்மாசனம் போட்டு அமரச்செய்த உங்களது உழைப்புக்கு எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய திபாவளி வாழ்துக்களை உரித்தாக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களைப் போல் உழைக்க இயலாவிட்டாலும், அவர்களைப் பற்றி எழுதுவதிலாவது ஒரு இன்பத்தைக் காணலாமே என்ற எண்ணம்தான் நண்பரே.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  20. இது போன்ற பெருமை மிக்க மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதே மகிழ்ச்சி தருகிறது! அருமையான தகவல்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குப் பெருமையே இதுபோன்ற தலைவர்களால்தான் ஐயா
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  21. அருமையானதொரு தொகுப்பு. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியதும் கூட........... நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  22. அய்யா நல்லதோர் அறிமுகம்

    நன்றிகள்

    தகவல்களோடு தந்திருக்கும் படங்களும் ரொம்ப அருமை..
    கடும் உழைப்பு =நேர்த்தியான பதிவு

    ரொம்ப மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  23. கொஞ்சம் ஆய்வு கட்டுரை மாதிரி நடையில் மாற்றி தமிழ் விக்கியில் சேர்க்கலாமே ...
    உங்கள் பயனர் கணக்கை துவங்கினாலே போதுமானது ...
    பங்களிப்புகளை தர ஆரம்பிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் விக்கியில் எழுத அவசியம் முயல்கிறேன் நண்பரே

      நீக்கு
  24. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  26. மக்களின் இன மத மொழி இவற்றைக் காட்டி அதில் குளிர் காய நினைப்பவர்கள் சரியாக அடையாளம் காட்டப் பட வேண்டும். . பல தகவல்கள் கொடுத்த பதிவு பகிர்வுக்கு நன்றி. தீபாவலீ ஆஆஊஆல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதம் மொழி என்பதெல்லாம் இன்று ஓட்டு வங்கி அரசியலாக மாறிவிட்டதை நினைத்தால் இதயம் கனக்கிறது ஐயா.
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  27. பெயரில்லா02 நவம்பர், 2013

    தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.
    (ஆக்கம் பிறகு வாசிப்பேன்.)

    பதிலளிநீக்கு
  28. எனது இனிய நண்பருக்கு,
    மிக மிக அற்புதமான பதிவாக இப்பதிவு அமைந்துள்ளது என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. தங்களின் இந்த தொண்டின் அதிக பட்ச இலக்காக நமது முன்னோர்களை பற்றி இன்றைய இளைய உலகம் அறிந்து கொள்வதாக அமைவதே. இந்த நோக்கம் நிறைவேறும் விதத்தில் நாங்கள் தங்களின் வலைப் பூ பக்கத்தினை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்வதினை கடமையாக மேற்கொள்ள நினைக்கிறேன். நன்றி. தீபாவளி வாழ்த்துகள்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தாங்களும் எழுத வேண்டும் என்பது என்து ஆசை. விரைவில் தொடங்க வேண்டுகிறேன்

      நீக்கு
  29. எனது இனிய நண்பருக்கு,
    மிக மிக அற்புதமான பதிவாக இப்பதிவு அமைந்துள்ளது என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. தங்களின் இந்த தொண்டின் அதிக பட்ச இலக்காக நமது முன்னோர்களை பற்றி இன்றைய இளைய உலகம் அறிந்து கொள்வதாக அமைவதே. இந்த நோக்கம் நிறைவேறும் விதத்தில் நாங்கள் தங்களின் வலைப் பூ பக்கத்தினை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்வதினை கடமையாக மேற்கொள்ள நினைக்கிறேன். நன்றி. தீபாவளி வாழ்த்துகள்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தாங்களும் எழுத வேண்டும் என்பது என்து ஆசை. விரைவில் தொடங்க வேண்டுகிறேன்

      நீக்கு
  30. அய்யா, மிக அருமையான பதிவு என்று சாதாரனமாக சொல்லிவிட முடியாது. இது அதையும் தாண்டிய நுட்பமான பதிவு என்றுதான் சொல்லவேண்டும்.

    அன்றைய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள (தற்போது நாகை மாவட்டம்) குத்தாலம் அரசு மேல் நிலைப் பள்ளியில்தான் நான் +1 , +2 படித்தேன். சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் நினைவாக பள்ளியின் கட்டிடம் 'ப' வடிவில் அமைத்து இருப்பார்கள். அவரது நினைவால்தான் இப்படி கட்டி இருக்கிறார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.


    சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களைப் பற்றிய முழுமையான பகிர்வு இது. கட்டுரைக்கான புகைபடங்களும் பிரமிப்பூட்டுகின்ற்ன.
    வாழ்த்துகள் அய்யா!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றுவதால், சங்கத்தோடு தொடர்வு உடையவர்களைப் பற்றிப் படிப்பதற்காக வாய்ப்பு கிட்டியது எனக்குக் கிடைத்த பெரும்பேறு ஐயா.

      நீக்கு

  31. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  32. தங்களது இந்த பதிவு உங்களின் தேடலின் முடிவையும்,
    படிப்பவர்தேடலின் தொடக்கத்தையும் ஒரு சேர காண முடிகிறது .
    எவ்வளவு சிரத்தையான முயற்சி !!!!!!அருமை சகோதரரே!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  33. ஓர் அரிய மனிதரைப் பற்றிய வாழ்வினைப் படிக்கும்போது மனதிற்கு நிறைவாக இருந்தது. அவரது முடிவை நினைத்தபோது மனம் நெகிழ்ந்துவிட்டது. படிப்பவர் மனதில் ஒரு பாதிப்பை இப்பதிவு ஏற்படுத்தும என்பதில் ஐயமில்லை. அதிகமாகச் செய்திகளைத் திரட்டி இவ்வாறாக ஒரு பெருமகனாரைப் பற்றிக் கூறியமைக்குநன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  34. மிக அருமையான அற்புதமான படைப்பு.ஒரு மாமனிதரை இக்காலத்து இளைஞர்கள் மற்றும் சான்றோற்கள் அறியும் வண்ணம் வழங்கிய இக்கட்டுரை காலத்தால் வெள்ளமுடியாத ஒரு பொக்கிசம்.உங்களின் தேடல் உங்களால் மட்டுமே முடியும்.நன்றி,நன்றி,நன்றி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. தாங்களும் வலை பூ தொடங்க வேண்டும், எழுத வேண்டும் என்பது எனது விருப்பம் நண்பரே

      நீக்கு
  35. உள்ளமும் உடலும் சிலுர்த்துப் போனது படித்து முடித்ததும் உணர்ச்சியில் கண்கள் கலங்கின! அருமையான வரலாற்றுப் பதிவு! தந்த உங்களைப் பாராட்ட சொற்கள் இலைலை!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு