11 மே 2025

கிறுக்கல்கள்

 

ரயிலடியில் நிற்கிறோம்

மகள் ஊர் செல்வதற்கு.


அந்திமவயது ஆற்றிக்கொள்கிற மனது

தள்ளாத உடல் போதாத இருப்பு

முதுமையின் தேடல், பிடிபடா இலக்கு

இன்னும் இன்னுமாய் சேர்ந்து

கொண்ட அனைத்தையும்

கைக்கொண்டு கிளம்பிச் செல்கிறோம்.

     படிக்கப் படிக்க, நண்பர் எனக்காகவே எழுதியிருப்பாரோ என்ற எண்ணம்தான் மனதில் முதலில் எழுந்தது. அந்திம வயதை அடையவில்லையே தவிர, இன்னும் இன்னுமய் சேர்ந்து கொண்ட அனைத்து உடலியல் பிரச்சனைகளும், தேடி வந்து நட்புக்கரம் நீட்டி, இணைபிரியா தோழர்களாய் இணைந்துவிட்டன என்பதுதான் உண்மை.

     மகளோ வெளி மாநிலத்தில், எனவே அவ்வப்போது இணையருடனும், மருந்து மாத்திரைகளுடனும், ரயில் பயணம் செல்வது வாடிக்கையாகி விட்டது.

வேலையற்றவனின் பகலும்

நோயுற்றவனின் இரவும்

மிகவும் நீண்டது என்கிற வரிசையில்

பணி ஓய்வு பெற்றவரின் நாட்களையும்

சேர்த்துக் கொள்ளலாம் போலும்.

------

முப்பதும் முப்பத்தியொன்றுமான

தேதிகளில் கிழிபடுகிற ஓசையில்

ஓடி மறைகிற தினங்கள் யாவும்

விடுமுறை தினங்களாகவே கழிகிற

அவரின் பொழுதுகளை

தக்க வைத்துக் கொள்கிற

பெரும் நிறுவனமாய்

குடும்பமும் குடும்ப உறவுகளும்.

     படித்தவுடன் எனக்கிருந்த கொஞ்சம் சந்தேகமும் விலகிவிட்டது. நண்பர் எனக்காகத்தான், என்னை வைத்துதான் எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது. ஆனாலும் ஓய்வு பெற்ற பெரும்பாலானவர்களின் நிலையும் இதுதான் என்றாலும் எனக்கு முற்றிலுமாய் பொருந்திப் போகிறது.

     ஓய்வு பெற்ற பிறகும், தங்களுக்குப் பிடித்த பணி, மனதிற்கு நெருக்கமானப் பணி ஏதாகிலும் ஒன்றைத் தொடர்ந்து செய்யாவிடில், இரவும், பகலும் மிக நீண்டதாகத்தானே அமையும்.

என்னை நோக்கி வந்த எறும்பு

சம்மணமிட்டு அமர்ந்திருந்த

இடது காலின் மீதேறி

தொடை தொட்டு அமர்ந்து சிரிக்கிறதாய்

ஸ்நேகம் கொண்டு.

      மனிதர்களிடம் மட்டுமல்ல, எறும்புகளின் மீதும், தான் கொண்ட நட்பினை பாசத்தோடு, எறும்புகளின் வரிசையினைப் போல, நேச வார்த்தைகளால் கோர்த்து நண்பர் முன்வைக்கும் அழகே அழகு.

     எறும்பினைப் பற்றி, இதே நூலில் வேறொரு கவிதையினையும் படைத்திருக்கிறார் இவர்.

மேலேறி வந்த எறும்பு

நன்றி சொல்லி கை கொடுத்தும்

கன்னம் கடித்து மென் முத்தம் தந்துமாய்

கீழிறங்கிச் செல்கிறது.

     வியப்பாக இருக்கிறது அல்லவா. என் நண்பர், எத்துணை மென்மையான இதயத்திற்குச் சொந்தக்காரர் என்பது புரிகிறது அல்லவா?

     கதை, கட்டுரை என தனக்கே உரிய தனித்துவமான மொழி நடையில் எழுதி, எழுதி பழக்கப்பட்ட நண்பர், கவிதையினையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று துணிச்சலோடு இறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார்.

      கரிசலும், செவலும், வண்டலுமான முப்பரிமாண நிலங்களைச் சுமந்த பெரியபேராலி மண்ணின் வாசத்தை எழுத்தாக்கிக் கவிதையாக்கி இருக்கிறார்.

     அன்பு, பிரியம், நட்பு, தோழமை, உறவு எல்லாம் கலந்த கலவையாய் வேர் விட்டுக் கிளம்பி எழுந்து மனம் பூத்து வாசனை வீசுகிறது இவரது கவி நூல்.



தெருக்காரனின் கிறுக்கல்கள்.

உண்மையில் இந்நூல் கிறுக்கல்கள் அல்ல

நெஞ்சத்து உணர்வுகளின் பெருங்குவியல்.


நண்பர் விமலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

தெருக்காரனின் கிறுக்கல்கள்,

விமலன்,

புஸ்தகா வெளியீடு,

பெங்களூரு

74 18 55 58 84