15 மே 2025

ஒலியும், ஒளியும்

 


     ஒலி, ஒளி.

     ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.

     ஒலி நாதம்.

     ஒளி விந்து.

     இதுதான் தத்துவம்.

     இறை சக்தி என்பதே நாதமும் விந்துவும்தான்.

     உயிரினங்களின் தோற்றத்திற்கு ஒளியும், ஒலியும்தான் காரணம், ஆனால் தோன்றும் உயிரினம் ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது மரபணு.

     அனைத்து உயிரினங்களிலும் ஆணா அல்லது பெண்ணா என்பதை மரபணுதான் தீர்மானிக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.

     விதிவிலக்குகள் உண்டு.

     ஆண் பெண் சேர்க்கையின்றியே குஞ்சு பொறிக்கும் விலங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.

     ஆமை, முதலை.

     ஆமை, முதலை போன்றவை கடற்கரைக்கு வந்து, மணலை ஆழமாய் நோண்டி, முட்டையிட்டு, மணலை மூடிவைத்துவிட்டுப் போய்விடும்.

     இங்கு, முட்டையில் இருந்து வெளிவரக்கூடிய குஞ்சுகள் ஆணா அல்லது பெண்ணா என்பதை மரபணு தீர்மானிப்பது இல்லை.

     கடற்கரையின் வெப்பநிலைதான் தீர்மானிக்கிறது.

     31 டிகிரி செண்டிகிரேடுக்குமேல் வெப்பநிலை இருக்குமானால், அனைத்து குஞ்சுகளுமே, பெண் குஞ்சுகளாகவே பிறக்கும்.

     27.7 டிகிரி செண்டிகிரேடுக்கு கீழ் வெப்பநிலை இருக்குமானால், அனைத்து குஞ்சுகளுமே ஆண் குஞ்சுகளாகவே பிறக்கும்.

     இரண்டிற்கும் இடைப்பட்ட வெப்பநிலை எனில், இப்படியும், அப்படியும் இருக்கும்.

     ஆணாகவும் இருக்கலாம்.

     பெண்ணாகவும் இருக்கலாம்.

---

     கடலில் கோமாளி மீன்கள் என்ற ஒரு இனம் இருக்கிறது.

     கூட்டம் கூட்டமாக வாழும்.

     இக்கோமாளி மீன்களுக்குப் பிறக்கும் அனைத்து மீன் குஞ்சுகளும் ஆண் குஞ்சுகளாகத்தான் பிறக்கும்.

     வளர்ச்சியடைந்தபின், அனைத்து ஆண் மீன்களும், பெண் மீன்களாக மாறிவிடும்.

     ஆற்றல் அதிகரிக்கும் பொழுது பெண்ணாக மாறும்.

---

     பாலைவனத்தில் ஒரு பல்லி இனம் இருக்கிறது.

     இப்பல்லி இனத்தில் ஆண் என்பதே கிடையாது.

     அனைத்தும் பெண்கள்தான்.

     பல்லிகள் வளர்ந்ததும், தானாகக் கருவுறும், முட்டையிடும்.

     காரணம் இயற்கை.

     இயற்கையின் அறிவும் ஆற்றலும், மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டது.

---

     இயற்கையின் அறிவையும், ஆற்றலையும், நம் முன்னோர், அருளாளர்கள், சித்தர்கள், தங்கள் அகத்தாய்வின் மூலம் அறிய, உணர பெருமுயற்சி மேற்கொண்டனர்.

     புரிந்தும் கொண்டனர்.

     புரிந்து கொண்டதை, அறிந்து கொண்டதை, எழுத்தாக்கி எழுதியும் வைத்தனர்.

     மனிதத் தோற்றம் பற்றி திருமூலர், தனது திருமந்திரத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

பெண்ணொடு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை

பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது

     ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை.

     ஒளி என்பதும் ஆற்றலின் ஒரு வகை.

     நாதமும், விந்துவும் ஓரே ஆற்றலின் இருவகை.

     ஒலி ஒரு பெண்.

     ஒளியும் ஒரு பெண்.

     இதுதான் பெண்ணைப் பெண் புணரும் பேதைமை.

     இது இன்று நாம் அறிந்திருக்கும் பொருளை உரைக்கும் சொல் அல்ல.

     பேதைமை அல்ல.

     இதுதான் இயற்கையின் தோற்றுவாய்.

     ஒலியும், ஒளியும் சேர்ந்ததால்தான் உயிரினமே தோற்றம் பெற்றது.

விண்கொடி யாகி விளங்கி வருதலால்

பெண்கொடி யாக நடந்தது உலகே

     முதலில் விண்ணில்தான் ஓங்கார ஒலி கேட்டது.

     இந்த ஒலியை, தங்கள் அகத்தாய்வின் மூலம் அறிந்தனர், உணர்ந்தனர் நம் சித்தர் பெருமக்கள்.

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

எனப் போற்றுவார் மணிவாசகப் பெருமான்.

     வெட்ட வெளியில் நாதம் ஒன்றுதான் உலகு என்றார்.

வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

     வெட்ட வெளியில் இருக்கக்கூடிய ஓங்காரம், பிரணவம், நமக்குள்ளும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஓவாத சத்தத்தில்  ஒலியே போற்றி

என்பார் திருநாவுக்கரசுப் பெருமான்.

     ஓவாத சத்தம் என்றால், நாவினால் எழுப்பப்படாத சத்தம்.

     அசைவின்றி எழுந்த சத்தம்.

     இந்த அண்டம் முழுவதும், வெட்ட வெளி முழுவதும் நிரம்பித் ததும்புகின்றன அணுத் துகள்கள்.

     அணுக்களில் எலெக்ட்ரான்கள் இருக்கின்றன.

     எலெக்ட்ரான்களின் அசைவினால் ஏற்படும் ஒலிதான், ஓங்கார ஒலி.

     பிரபஞ்ச ஒலி.

     இவ்வொலி இயற்கையில் அனைத்துப்  பரிமாணங்களிலும் ஒலித்து வருகிறது.

     நம் பூமியிலும் ஒலிக்கிறது.

    பூமியிலும் கேட்கலாம்.

     ஆனால் இவ்வொலியினைக் கேட்கக்கூடிய சக்திதான் நம் காதுகளுக்கு இல்லை.

     நம் காதுகளின் கேட்கும் திறன் 20 அதிர்வெண்களில் இருந்து 20.000 அதிர்வெண்கள் வரைதான்.

     இந்த எல்லைக்குள் ஒலிக்கும் ஒலியைத்தான் நம் காதுகளால் கேட்க முடியும்.

     20 அதிர்வெண்களுக்கும் கீழே ஒலிக்கும் ஒலியை நம்மால் கேட்க இயலாது.

     ஜெர்மன் விஞ்ஞானி ஒருவர், பிரபஞ்சத்தின் அதிர்வெண் 7.83 எனக் கண்டுபிடித்துள்ளார்.

     நம்மமால் கேட்க இயலாத, விண்ணில் தோன்றும் இந்த ஓங்கார நாதமே, அனைத்துப் படைப்பிற்கும் மூலமாக விளங்குகிறது.

ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சரஅசரம்

ஓங்காத அதீதத்து உயிர்மூன்றும் உற்றன

ஓங்கார் சீவ பரசிவ ரூபமே

என்பார் திருமூலர்.

     ஐம்பூதங்களும் ஒருவாகக் காரணம் ஓங்காரம்.

     அணுக்களின் அசைவே ஓங்காரம்.

     எனவே அணு இல்லாத ஒன்று கிடையவே கிடையாது.

     பிரபஞ்சம் முழுக்க நிரம்பி வழிவது அணு மற்றும் ஆற்றலே ஆகும்.

     பிரபஞ்சம் முழுவதும் நிரம்பித் ததும்பும் இந்த ஓங்காரமே, அனைத்து உயிரினங்களையும் படைக்கிறது.

     உயிரணு தோற்றத்திற்காக இரண்டு மாபெரும் சக்திகள் வந்தன.

     பிரணவம்.

     ஜோதி.

     பிரணவம் என்ற ஓங்கார ஒலியில் இருந்து தோன்றியது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்.

     ஜோதியில் இருந்து இரண்டு ஒளிகள் தோன்றின.

     அண்ட ஒளி.

     பிண்ட ஒளி.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே

என்பார் ஔவையார்.

     அண்டத்தில் உள்ள நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்தும் பிண்டத்திலும் உள்ளது.

     தசை, எலும்பு, நரம்பு இவையெல்லாம் நிலம்.

     உடலில் 67 சதவிகிதம் நீர். இரத்தத்தில் 55 சதவிகிதம் நீர்.

     உயிரோட்டமாய் ஓடுவது காற்று.

     உடலில் உள்ள 50 டிரில்லியன் செல்களின், ஒவ்வொரு செல்லுக்குள்ளும், ஆண் எனில் நூற்றிற்கும் மேலும், பெண் எனில் 900 க்கும் மேலும் அதிகமாக உள்ள அணுக்களின் ஒவ்வொரு செல்லுக்கு உள்ளும் ஆக்ஸிஜன் நுழைந்து, நாம் உண்ணும் உணவின் மாவுச் சத்தை, எரியூட்டி, ஆற்றலாய் மாற்றிக் கொடுக்கிறது.

     இது நெருப்பு.

     ஆகாயம் என்பது தோற்றமும், அந்தமும் இல்லாத ஒரு வெளி.

     இது வாய் மற்றும் ஆசன வாய்.

     இங்கு தொடங்கும் எனும் தோற்றமும் கிடையாது.

     பின்னாடி முடிவும் கிடையாது.

     எனவே அண்டத்திலுள்ள சக்திகள் அனைத்தும் பிண்டத்திலும்.

     இயற்கை இப்படித்தான் நம்மைப் படைத்துள்ளது.

     இயற்கை பெண்ணைப் படைத்தது.

     பெண்ணுள் ஆண் இருந்தான்.

     பெண் வழியாகவே பிறந்தது உலகு.

     இதை,

ஆதாரம், ஆதேயம்

என்பார் திருமூலர்.

     ஆதாரம் என்பது இடம்.

     ஆதேயம் என்பது பொருள்.

     ஆதாரம் என்பது தாங்குவது.

     ஆதேயம் என்பது தாங்கப்படுவது.

     ஆதாரம் பெண்.

     ஆதேயம் ஆண்.

     தாங்குபவர் பெண்.

     தாங்கப்படுபவர் ஆண்.

---

     பாலூட்டிகளைப் பொறுத்தவரை, பிறக்க இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது மரபணு.

      ஆணிடமிருந்து 23 குரோமசோம்கள்.

      பெண்ணிடமிருந்து 23 குரோமசோம்கள்.

     46 குரோமசோம்கள் இணையும்.

     ஆணிடமிருந்து ஒரு எக்ஸ் மரபணு.

     பெண்ணிடமிருந்து ஒரு எக்ஸ் மரபணு.

     பிறக்கப்போவது பெண்.

     பெண்ணிடமிருந்து ஒரு எக்ஸ்.

     ஆணிடமிருந்து ஒரு ஒய்.

     பிறக்கப்போவது  ஆண்.

     இது அறிவியல்.

     ஆனால் நம் முன்னோர், நாம் திட்டமிட்டு செயல்பட்டால், நூறு சதவிகிதம் ஆண் குழந்தையையோ, நூறு சதவிகிதம் பெண் குழந்தையையோ, நாம் விரும்பும் குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்கிறார்கள்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலியாம் கொண்டகால் ஒக்கிலே

என்கிறார் திருமூலர்.

     ஆண் பெண் இன்பத்தின்போது, ஆணின் மூச்சுக் காற்று வலதுபுற நாசியான, சூரியக்கலையின் வழியே சென்றால் ஆண் குழந்தை.

     இடப்புற நாசியான, சந்திர கலையின் வழியே சென்றால் பெண் குழந்தை.

     இன்பத்தின்போது பெண்ணின் மூச்சுக் காற்றை எதிர்த்துக்கொண்டு மலக்காற்று வந்தால் இரட்டைக் குழந்தை.

     ஆணின் மூச்சுக் காற்று இரு நாசிகளின் வழியாகவும் ஒன்றாகச் சென்றால் குழந்தை அலி.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்

மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

     ஆண், பெண் சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் அதிகமாக இருந்தால், குழந்தை மந்த புத்தி உடையதாகவும், நீர் அதிகமாக இருந்தால், குழந்தை வாய் பேச இயலாமலும், மலக் கழிவும் சிறுநீரும் சம அளவு இருந்தால் குருடாகவும் பிறக்கும்.

     இதையெல்லாம் அறிவியல் இன்றுவரை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

---

     பெண்ணைப் படைக்கும் பொழுதே, தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே 46 எக்ஸ் எக்ஸ் என்ற மரபணுவானது, கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு அளவற்ற ஆற்றலைக் கொடுக்கிறது.

     இலட்சக்கணக்கான கருமுட்டைகளை உருவாக்கக் கூடிய அளவிற்கு ஆற்றலை, கருவில் இருக்கக் கூடிய பெண் குழந்தைக்கு இயற்கை வாரி, வாரி வழங்குகிறது.

     ஆனால், அந்தப் பெண் குழந்தை, பிறந்து வளர்ந்து 13, 14 வயதில் தொடங்கி 50, 52 வயது வரை, வளர்ச்சி அடைந்த குழந்தையாகவோ, சிதையக் கூடியதாகவோ வரக்கூடிய கரு முட்டைகள் 550 க்குள்தான் இருக்கும்.

     ஆனால் இயற்கை கொடுத்த ஆற்றலோ இலட்சக்கணக்கில்.

     அளப்பறிய ஆற்றலை பெண்களுக்கு இயற்கை கொடுத்துள்ளது.

தக்க தசமதி தாயொடு தான்படும்

     துக்க சகரத் துயரிடைப் பிழைத்தும்

என்பார் மாணிக்க வாசகப் பெருமான்.

     குழந்தைப் பிறப்பு என்பது ஒரு துயரக் கடல்.

     அதை சகிப்பதற்கு இவ்வளவு ஆற்றலைக் கொடுத்திருக்கிறது இயற்கை.

     இயற்கை மேலும் ஒரு உபாயமும் செய்து கொடுத்திருக்கிறது.

     குழந்தையாய் இருக்கும் பொழுது, நமக்க 270 எலும்புகள்.

     வளர்ச்சியடைந்தபின் நமக்கு 206 எலும்புகள்தான்.

     அதிகமாய் இருந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துவிடும்.

     பிரசவத்தின்போது, நெகிழ்வுத் தன்மை ஏற்படத்தான் இந்த ஏற்பாடு.

     இதுமட்டுமல்ல, இயற்கை பெண்களுக்கு, மற்றொரு மாபெரும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்கியுள்ளது.

     ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரத்தல்.

     இது எத்தகைய வலியையும் தாங்கும் சக்தியை பெண்களுக்குக் கொடுக்கிறது.

     இயற்கையானது பெண்மையை ஓர் உயர்ந்த நிலையில் படைத்துள்ளது.

     அற்புதமான ஆற்றலால் கட்டமைக்கப்பெற்ற உடல்தான் பெண்ணின் உடல்.

     நாதமும் விந்துவும் சேர்ந்து இருட்டறையில்தான் வாழ முடியும்.

     இருட்டறை, பெண்களின் கருப்பை.

     உயிரணுவை உள்ள அனுப்புவதுடன், ஆணின் பங்கு முடிந்து விடுகிறது.

     அந்த உயிரணுவிற்கு உணவளிப்பது, பெண்ணின் இரத்தம்.

     இடமளிப்பது தாயின் பணிக்குடம்.

     குழந்தை பிறந்தபின், தொற்று ஏற்படாமல் காப்பது, தாய்ப்பால்.

     தாய்ப் பாலுக்கு நிகரான உணவு இவ்வுலகில் இல்லை.

---

தாயை ஆகி வளர்த்தனை

---

தாயாய் முலையைத் தருவாளே

     தாராது ஒழிந்தால் சவலையாய்

நாயேன் கழிந்து போவேனே

---

அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே

---

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

இதெல்லாம் திருவாசகம் உரைக்கும் உண்மைகள்.

ஈன்றார் முன் எந்தக் கடவுளும் இல்லை

என்பார் ஔவையார்.

மண்ணில் யாவும் தெய்வம் என்றால்

மனையாளும் தெய்வமன்றோ

என்பார் பாரதியார்.

எத்தன்மை குற்றம் இயற்றினும்

தாய் பொறுக்கும்

என்பார் தாயுமானவ சுவாமிகள்

தாயாய், எனக்குத் தந்தையுமாய்

என்பார் வள்ளல் பெருமான்.

இவ்வாறு எல்லாரும் தாய்மையைத்தான் போற்றினர்.

தாய்மை என்பது உறவல்ல

உணர்வு.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     திருக்குறளுக்க ஒன்றரை அடி தேவைப்பட்டது.

     இவரோ. இரண்டே வார்த்தைகளில் அற்புதம் நிகழ்த்தினார்.

     ஆத்திச்சூடி, கொன்னைவேந்தன், நல்வழி, மூதுரை என நெறிசார்ந்த வாழ்க்கை முறைக்கு, அறிவுக் கருவூலங்களை வழங்கினார்.

ஔவையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     ஒரு பாடலின் முடிவு,அடுத்த பாடலின் தொடக்கமாய் அமைய வேண்டும். இரண்டாவது பாடலின் முடிவு, மூன்றாவது பாடலின் தொடக்கமாய் வர வேண்டும்.

     இவ்வாறு பாடல்கள் தொடர்ந்து செல்லும்போது, கடைசிப் பாடலின் முடிவு, முதல் பாடலின் தொடக்கமாக அமைய வேண்டும்.

     இதுதான் அந்தாதி.

     இவர் அற்புதத் திருவந்தாதி பாடிவயவர்.

     முதல் பாடல் கட்டளைக் கலித்துறை.

     இரண்டாவது பாடல் வெண்பா.

     மூன்றாவது பாடல் கட்டளைக் கலித்துறை.

     நான்காவது பாடல் வெண்பா.

     கட்டளைக் கலித்துறை, வெண்பா, கட்டளைக் கலித்துறை, வெண்பா என, இரண்டு மணிகளை மாற்றி மாற்றிக் கோர்த்து மாலை கட்டுவது போல, இரண்டு இலக்கய மரபுகளை மாற்றி மாற்றிக் கோர்த்து பாமாலை அமைக்கம் ஒரு அற்புத முறைதான் இரட்டை மணிமாலை.

     இவர் திருஇரட்டை மணிமாலை பாடியவர்.

     இல்லறத்தில் வாழ்ந்தவர்.

     உடம்பின் தசையை உகுத்து,

     எலும்பின் எடையைக் குறைத்து,

     உடலினை எடையில்லா பஞ்சுபோல் மாற்றி, அதிவிரையாய் செல்லக்கூடிய அற்றல் வாய்ந்த உடம்மைப் பெற்றவர்.

காரைக்கால் அம்மையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     ஆன்மிக நிலையங்கள், பஜனை மடங்களாக இருக்கக்கூடாது, அறிவு நிலையங்களாக வளர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர்.

     மகான் இராமகிருட்டினருக்குப் பிறகு, அவரது சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் தாயாய் விளங்கியவர்.

     ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்காக தங்குமிடம், உணவு, கல்வி வழங்க இராமகிருட்டின மடத்தை ஏற்படுத்தியவர்.

அன்னை சாரதா அம்மையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     இவரோ, ஆதரவற்றப் பெண்கள் தங்க, உணவு உண்ண, கல்வி கற்க, சாரதா மடத்தை ஏற்படுத்தியவர்.

     அன்னை சாரதா அம்மையாரை அவர்தம் இறுதிநாட்களில், கவனித்துக் கொண்டவர்

சரளா அம்மையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     இவர் பிரான்சில் பிறந்தவர்.

     சிறுவயது முதலே தியானத்தில் நாட்டம் உடையவர்.

     12 வயதிலேயே, பல ஞானிகளைக் கனவில் கண்டவர்.

     ஒரு ஞானி மட்டும் திரும்பத் திரும்ப கனவில் வர, கணவரையும் அழைத்துக் கொண்டு அந்ஞானியைக் காணப் பாண்டிச்சேரிக்கு வந்தவர்.

     அரவிந்தரைக் கண்டு, ஒரு வார்த்தைகூடப் பேசாமல், பார்வையாலேயே, அவரது அருளாசியைப் பெற்றவர்.

     அரவிந்தரின் மறைவிற்குப் பின், பக்தர்களுக்கு அருளை வழங்கியவர்.

     தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் பூக்களைக் கொடுத்தவர்.

     பூக்களுக்கு வண்ணம் போல், உங்களுக்கு எண்ணங்கள். பூக்கள் போல் நீங்கள் உள்ளம் மகிழ்ந்திருங்கள், எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நிறைவான வாழ்க்கை வாழலாம் என்றவர்.

பாண்டிச்சேரி அம்மா.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     கர்நாடகாவில் பிறந்தவர்.

     காடு, மலை என அலைந்தவர்.

     எண்ணற்ற சீடர்களைப் பெற்றவர்.

     உடம்பே கோட்டை என்றவர்.

     ஆடை உடுத்தால், பிரபஞ்சமே தனக்கு ஆடை என்றவர்.

அக்கா மகா தேவியார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     உலகத்தில் நீ மனிதனாக இருக்கலாம், ஆனால் யாரோ ஒரு மனிதனுக்கு, நீதான் உலகம் என்றவர்.

     இல்லறத்தில் இருந்தும் முழுமையாக ஞானம் பெற முடியும் என உணர்த்தியவர்.

     காட்டில் போய் கடுந்தவம் செய்ய வேண்டியதில்லை. வீட்டிலேயே உறவினர், நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் செய்யக் கூடிய நற்செயலே, தவம்தான் என்றவர்.

அனுசுயா அம்மையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     இவர் வெளிநாட்டுப் பெண்.

     இந்தியாவின் ஆன்மிகத்தான் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர்.

     மனித நேயம், அன்பு, நேர்மை, உண்மையை பரப்பியவர்.

     மக்களோடு மக்களாக இந்தியா முழுவதும் பயணித்தவர்.

     நீண்ட துயிலில் இருந்த இந்தியர்களைத் தட்டி எழுப்பி, சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என மகாத்மா ந்தியால் போற்றப் பெற்றவர்.

     இந்தியாவே விழித்து எழு எனத் தொடர் கட்டுரைகளை எழுதி, விழிப்புணர்வு ஊட்டியவர்.

அன்னி பெசண்ட்  அம்மையார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     லெக்ராஞ்சியன் புள்ளி.

     சூரியனுக்கும் விண் கலத்திற்கும் இடையே உள்ள ஈர்ப்பாற்றலும், விண் கலத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பாற்றலும் சரியாக, சமமாக அமையும் இடத்திற்குப் பெயர் லெக்ராஞ்சியன் புள்ளி.

     இப்புள்ளியைத் துல்லியமாய் கணக்கிட்டுக் கண்டறிந்து, அப்புள்ளியில், சூரியனை ஆராயப் புறப்பட்ட ஆதித்யா விண்கலத்தை நிலை நிறுத்திய, திட்ட இயக்குநர்.

நிகர் சாஜி.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

     இந்தியாவின் முதல் பெண் உதவியாளர் டி கேம்ப் ஆக நியமிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்.

மனிஷா பதி.

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 11.5.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை.

அன்னையர் தினத்தன்று

தாய்மையின் பெருமையினைப் பறைசாற்றும் பெருமைமிகுப் பொழிவு.

இயற்பியலைக் கற்று, முதுகலை இயற்பியல் ஆசிரியராய், தலைமை ஆசிரியராய் பல்லாண்டுகள் பணியாற்றி,  பணி நிறைவு செய்த பின், சித்தர்களைப் படித்துப் படித்து, சித்தர்களின் சிந்தனையில் தோய்ந்து, தோய்ந்து, தன் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும், முழுமையாய் சித்தர்களையே நாளும் நினைத்து நினைத்து, மெல்ல மெல்ல சித்தராகவே மாறிக்கொண்டிருக்கும், என் ஆசிரியர்,

தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளி, மேனாள் தலைமையாசிரியர்


திரு கா.பாண்டியன் அவர்கள்,

பெண்ணின் பெருந்தக்க யாவுள

என்னும் பெண்மை போற்றும் தலைப்பிலானப் பொழிவினை,

இரண்டு வயதில் தன் கணவரை இழந்த போதும், தளராது, அயராது, தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் அன்னைக்கு நன்றி கூறி, ஆர்ப்பாட்டமில்லாத அருவியாய் கொட்டித் தீர்த்தபோது, ஏடக அரங்கே அமைதியிலும், வியப்பிலும் உறைந்துதான் போனது.

அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி பணி நிறைவு செய்திட்ட


கவிஞர் ரெ.பிச்சைமாணிக்கம் அவர்களின்

தலைமையில்

நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

தஞ்சை நகர மனவளக்கலை மன்றப் பேராசிரியர்


அருள்நிதி ஜெ.சங்கர் அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி கரந்தை அ.வெற்றிச்செல்வி அவர்கள்

நன்றி கூற

பொழிவு இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பசுபதிகோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிப்

பட்டதாரி ஆசிரியர்,


திருமதி சு.ஹேமலதா அவர்கள்

விழா நிகழ்வுகளை சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.

 

நஞ்சையும் புஞ்சையும்

கொஞ்சி விளையாடும்

நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே,

விண்ணை விஞ்சும்

புகழில் திளைக்கும்,

என் அன்னைத் தமிழை,

அழகாய் தன்தோளில் ஏற்றி

அகிலமெல்லாம் மணம் பரப்பும்,

தினம் தினம் தன் சொல்லால்

சொல்லின் சுவையால்

உண்மையின் உணர்வாய்

உலகிற்கு உரக்கச் சொல்பவர்,

பெற்றவளுக்கும்

உடன் பிறந்தவளுக்கும்

நன்றியாற்றும் இத்தருணத்தில்

பூமி பிறந்த நேரத்திலேயே

தானும் பிறப்பெடுத்து

கொஞ்சம்  கொஞ்சமாய் வளர்ந்து,

இன்று அன்னையாய்

அகில மாந்தருக்கெல்லாம்

அன்னையாய் திகழும்

செந்தமிழை,

செழுந்தமிழாக நாளும் நாளும்

வளர்த்தெடுக்கும் தமிழ்

அன்னைக்கு

இன்று மட்டுமல்ல

ஒவ்வொரு தினமுமே

அன்னையர் தினமாக கொண்டாடி

பிறரையும் கொண்டாட வைக்கும்

நம் ஏடக நிறுவுநர்


முனைவர் மணி.மாறன் அய்யா

வாழ்க வாழ்க

பல்லாயிரமாண்டு

-          திருமதி சு.ஹேமலதா