07 நவம்பர் 2013

நெஞ்சில் நின்ற திருமணம்

நாம் பிறந்தது, நாம் வளர்ந்தது தமிழ் நாடு – தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு – தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?

மூவேந்தர் முறைசெய்தது நம் தமிழ்நாடு – தாய்
முலைப் பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு

நாவலரும் காவலரும் ஆண்டதி ந்நாடு – நிமிர்ந்து
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு
-          பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நாம் அனைவரும் மாதந்தோறும், வாரந்தோறும், உறவினர் இல்லத் திருமணம், நண்பர் இல்லத் திருமணம் என, ஆயிரக் கணக்கானத் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தி மகிழ்வுற்றிருப்போம்.

     திருமண மேடையில், மணமக்கள் அமர்ந்திருக்க, திருமண விழா நிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாமெல்லாம் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருப்போம்.

     கெட்டி மேளச் சத்தம் கேட்டவுடன், சுதாரித்துக் கொண்டு, அட்சதையினை, மணமக்களை நோக்கித் தூவுவோம். வாழ்த்துவோம்.

     நண்பர்களே, இதற்குக் காரணம் என்ன? சிந்தித்துப் பார்த்தால், இரண்டு காரணங்கள், உடனே மனதில் பளிச்சிடுகின்றன. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில்தானே, நமக்கு, நமது உறவுகளை, நண்பர்களைக் காண, பேசி மகிழ வாய்ப்பு கிடைக்கிறது. இது முதல் காரணம்.

     நண்பர்களே, மேடையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான விளக்கங்கள், காரண காரியங்கள், நமக்குப் புரியாததும், நமது தாய் மொழியில், திருமணங்கள் நடத்தப் பெறாததுமே இரண்டாவது காரணம் என எண்ணுகின்றேன். சரிதானே நண்பர்களே.

     நண்பர்களே, நமது தாய் மொழியான, தமிழ் மொழியில், முழுவதுமாய் தமிழ் முறையினையேப் பின்பற்றி, ஒரு திருமணம் நடைபெற்றால் எப்படி இருக்கும்?. அத்தகைய ஒரு திருமணத்தைக் காணுகின்ற, கண்டு மகிழ்கின்ற, உணர்ந்து நெகிழ்கின்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நண்பர்களே, யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என நண்பர்களான உங்களுடன், இம் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர, வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது?

     வாருங்கள் நண்பர்களே, வாருங்கள். தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்தைக் காண வாருங்கள், இதோ திருமண அரங்கு, இதோ இருக்கை, அமருங்கள்.

     எனது பெரியம்மாவின் மகள் தமிழ்ச் செல்வி, இவரின் கணவர் புலவர் திருநாவுக்கரசு. இவர் தஞ்சை, வழுத்தூர், சௌகத் இஸ்லாம் மேனிலைப் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு மேல் தமிழாசிரியராய் பணியாற்றி, சிங்கப்பூர் சென்று, அங்கு இருபதாண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றியவர், மிகச் சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர், கவிஞர், ஓவியர், இவை எல்லாவற்றையும் விட, தமிழுணர்வாளர் என்பதில் பெருமை கொள்பவர்.

     இவரது மகன் மற்றும் மகளின் பெயரே, இவரின் தமிழுள்ளத்தைப் பறைசாற்றும். மகன் பாவேந்தன், மகள் அன்னம். பாவேந்தன் மருத்துவர். ஹோமியோபதி மருத்துவர். ஹோமியோபதியில் முதுநிலைப் பட்டம் பயின்றவர்.

     பாவேந்தனுக்கும், செல்வி.சபீதா என்பாருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சபீதா, பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது தந்தை திரு தர்மராசு.

     இவர், தஞ்சை,அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள மாகாளி புரத்தில் வசிப்பவர். பெருநிலக் கிழார். இவர் வயலை மட்டும் ஆழ உழுபவரல்ல, தமிழையும் ஆழமாய் நேசிப்பவர், சுவாசிப்பவர்.

     திரு திருநாவுக்கரசர் அவர்களுக்கு, இத் திருமணத்தினை, தமிழ் முறைப்படி, தக்கவரைக் கொண்டு நடத்திட வேண்டும் என்ற பேரார்வம். பெண் வீட்டாரும் மகிழ்வுடன் சம்மதித்தனர்.

     இத்திருமணத்தினை நடத்தி வைத்திட யாரை அழைப்பது என்று எண்ணியபோது, மனதில் தோன்றிய முதல் பெயருக்கும், உருவத்திற்கும் சொந்தக்காரர் புலவர் இரா. இளங்குமரனார்.

     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகே உள்ள வாழவந்தாள் புரம் கிராமத்தில், ராமு, வாழவந்தாள் தம்பதியினரின் மகனாய் தோன்றியவர். தமிழாசிரியராய் பணியாற்றி, ஓய்வு பெற்று, தமிழ்ப் பணிக்கு என்று தம்மையே முழுமையாய் தத்துக் கொடுத்தவர்.

     திருச்சி, அல்லூரில், திருவள்ளுவர் தவச்சாலையினை நிறுவி, வள்ளுவமாய் வாழ்ந்து வரும், அகவை 83 நிறைவுற்ற இளைஞர். திருக்குறளுக்குக் கோயில் எழுப்பியவர். 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 5000 ற்கும் மேற்பட்ட திருமணங்களை, தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவில் மட்டுமன்றி,  தமிழர்கள் இப்புவிப் பந்தின், எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்கிறார்களோ, அந்தந்த நாடுகளுக்கு எல்லாம் பறந்து சென்று, தமிழ்த் திருமணங்களை நடத்தி, தமிழின் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருபவர்.

    எனவே, தமிழ்க் கடல், உலகப் பெருந் தமிழர், முதுமுனைவர், இரா.இளங்குமரனார் அவர்களைக் கொண்டே, பாவேந்தன் சபீதா திருமணத்தை நடத்துவது என சம்பந்திகள் இருவரும் முடிவு செய்தனர்.

     புலவர் இரா.இளங்குமரனார் அவர்களை நான் நன்கறிவேன். கரந்தைத் தமிழ்ச சங்க விழாக்களுக்காக, பலமுறை அவரை, கரந்தைக்கு அழைத்து வந்திருக்கிறேன். இதன் காரணமாக, பெரியவர் இளங்குமரனார் அவர்களுடன் பலகும் நல் வாய்ப்பினையும் பெற்றவன் நான்.

     இருப்பினும் புலவர் கந்தசாமி அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்,. தமிழுக்கென்றே வாழும் தகைமையாளர். அய்யா இளங்குமரனார் அவர்களுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பவர். எனவே புலவர் கந்தசாமி அய்யா அவர்கள் மூலமாகவே, தமிழ்க் கடல் இளங்குமரனார் அவர்களைத் தொடர்பு கொண்டு, திருமணத்தினை நடத்தி வைத்திட ஒப்புதல் பெற்றோம்.

     பாவேந்தனின் தந்தையார் திரு திருநாவுக்கரசு, சபீதாவின் தந்தையார் திரு தர்மராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு பாலு மற்றும் நான் ஆகிய நால்வரும் இருமுறை அல்லூர் சென்று, உலகப் பெருந்தமிழரைச் சந்தித்தோம்.

     ஜுன் மாதம் 12 திருமண நாள். கும்பகோணம் அசூர் பிரிவுச் சாலையில் உள்ள டி.எஸ்.மகால்.

      காலை மணி 8.45. ஒரு இண்டிகா கார் உள்ளே நுழைகிறது. புலவர் இரா.இளங்குமரனார் வந்துவிட்டார். திருமண நேரம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள். ஆனாலும் மணமக்கள் வீட்டார், தனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது, என்ற உயரிய எண்ணத்தினால், முன்னதாகவே வந்து விட்டார். இவர்தான் இளங்குமரனார்.

     மணமக்களின் விட்டார் வரிசையாக நின்று, கரம் கூப்பி வணங்கி வரவேற்றனர். மலர்ந்த முகத்துடன் வரவேற்பை ஏற்றவாறு, அரங்கினுள் நுழைந்து அமர்கின்றார்.

     உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய திருமண மண்டபம. நிரம்பி வழிந்தது. மண்டபத்திற்கு வெளியிலும், அமைக்கப்  பட்டிருந்த பந்தலில் நூற்றுக் கணக்கானோர் அமர்ந்திருக்க, எங்கள் குடும்பத்தின் மூத்தோர், உறவிற்குப் பெருமை சேர்த்து வரும் திருமிகு ஜி. ரெங்கசாமி மூப்பனார், திருமிகு ஜி.சந்திரசேகர மூப்பனார், திருமிகு எஸ்.சுதாகர் மூப்பனார்,  திருமிகு எஸ். சுரேஷ் மூப்பனார் முதலியோர் வருகை தந்து, முதல் வரிசையில் அமர்கின்றனர்.

     காலை 10.45 மணிக்கு திருமண விழா தொடங்கியது. மேடையில் மண மக்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகே, ஐந்தடி உயரத்தில் திருவள்ளுவர் படம்.

     உறவினர்களே, நண்பர்களே இத் திருமண விழாவினை, உலகப் பெருந் தமிழர், தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் நடத்தி வைப்பார்கள் என்று ஒலிப் பெருக்கியின் முன் நின்று நான் அறிவித்தேன். இளங்குமரனார் அய்யா இருக்கும் மேடையில், ஒலிப் பெருக்கியின் முன் நின்று, தமிழ்க் கடலின் பெயரினை உச்சரிக்கக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி மெய்சிலிர்த்தேன்.


     அடுத்ததாக மணமகன் மருத்துவர் பாவேந்தனின் தந்தையார் வரவேற்வுரை ஆற்றினார். தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் ஒலிப் பெருக்கியின் முன் வருகிறார்.


அன்புடையோரே வணக்கம்.

      வைத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப்  படும்

என்ற குறளினை வள்ளுவர் இல்வாழ்விலே கூறினார். காரணம் என்ன தெரியுமா? மண்ணுலகிலேயே, விண்ணுலக இன்பத்தைக் காணலாம் என்பதால்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

என உரைத்தவர் திருவள்ளுவர்,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?

என அறத்துப் பாலில் வினா எழுப்பி,

பெண்ணே பெருமையுடைத்து

எனப் பொருட் பாலில் விடை கூறி,

பெண்ணிற் பெருந்தக்கது இல்

என இன்பத்துப் பாலில் உறுதியளித்தவரும் திருவள்ளுவரே.

     வாழ்க்கையில் அவனுக்கு அவள் துணையும், அவளுக்கு அவன் துணையும் ஆதல் வேண்டும் என வாழ்க்கைத் துணை நலம் உரைத்தவர் திருவள்ளுவர்.

     இல் வாழ்க்கை இனிய வாழ்க்கை, இல்லாமை என்பது இல்லாத வாழ்க்கை என்பதை நிலைநாட்டுபவள் இல்லாளே, என்றவரும் அவர்தான். எனவே மணமக்கள் இப்பொழுது திருவள்ளுவருக்கு மலர் தூவி வணங்குவார்கள் எனக் கூறினார்.

       மணமக்கள் இருவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து, திருவள்ளுவரின் பாதக் கமலங்களில் மலர் தூவி, இரு கரம் கூப்பி வணங்கினர்.



      அடுத்ததாக மணமக்களின் பெற்றோர் மேடைக்கு அழைக்கப் பெற்றனர். மணமகன் தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். மணமகளும் அவ்வாறே, தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். பெற்றோர் நால்வரும், தமது மக்கள் பெரு வாழ்வு வாழ வாழ்த்தினர்.

     வாழ்க்கை எதுவென்றால், பலரும் பலவகையாகக் கூறுவர், ஆனால் தமிழ்ச் சான்றோர் கூறுவர்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

என்று, இவ்விழா இரு மனங்கள் இணையும் விழா, இரு குடும்பங்கள் இணையும் விழா, இரு உறவுகள் இணையும் விழா, இதோ மேடையில் மணமக்கள் இருவர், மணமகனின் பெற்றோர் இருவர், மணமகளின் பெற்றோர் இருவர் என அறுவர் நின்கின்றனர். இதுதான் ஆறு முகம். ஆறு முகமும் ஒரு முகமாய் இணையும் விழா,

      பெற்றோர் மங்கல நாண் எடுத்துத் தர, இக்குடும்பத்தின் மூத்த உறவினர் பெருந்தகை அய்யா ஜி.ரெங்கசாமி மூப்பனார் அதைப் பெற்று, மணமகனிடம் தர, மணமகன், மணமகளின் கழுத்தில் மங்கல நாண்  சூட்டுவார் என்றார்.

       மணமக்களின் பெற்றோர் மங்கல நாணை வணங்கி, தங்களின் பிள்ளைகள் நிறை வாழ்வு வாழ வாழ்த்தி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பெருந்தகை ஜி. ரெங்கசாமி மூப்பனார் அவர்களிடம் வழங்க, அவரும் வாழ்த்தியபடி மணமகனிடம் வழங்கினார்.

     முழுவம், முரசம் முதலிய மங்கல இசை முழங்க, பாவேந்தன் சபீதாவிற்கு மங்கல நாண் அணிவித்தார். மங்கல நாண் சூட்டி, பாவேந்தன் சபீதாவிற்கு மாலை அணிவிக்க, சபீதா பவேந்தனுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் இருவரும் இடம் மாறி அமர்ந்தனர்







     சென்ற நிமிடம் வரை இவர் வேறு. அவர் வேறு. ஆனால் இந்நிமிடம் முதல் இருவரும்  வேறுவேறல்ல. இருவரும் ஒன்றானவர்கள். வாழ்க்கைத் துணை நலமாய் இணைந்தவர்கள். பாவேந்தன் தனது இடத்தை சபீதாவிற்கும், சபீதா தனது இடத்தைப் பாவேந்தனுக்கும் அளித்தார். இன்று முதல் எனதெல்லாம் உனது, உனதெல்லாம் எனது. எல்லாமே நமது என்பதைக் குறிப்பிடும் வகையில் மணமக்கள் இடம் மாறி அமர்ந்தனர்.

       பின்னர் மணமக்கள் இருவரும் எழுந்து நின்று, சுற்றம் சூழ வருகை தந்து, வாழ்த்த வந்திருந்த உறவினர்களையும், நண்பர்களையும் நோக்கி, இரு கரம் கூப்பி வணங்கினர்.

      கலகல, சலசல, படபட, மடமட என்பவை இரட்டைச் சொற்கள். இரட்டைக் கிளவிகள் எனப்படும். இவற்றைப் படிக்காத பாமரர் கூட தனித் தனியாக பிரித்துக் கூறமாட்டார். ஏனெனில் இச் சொற்கள் பிரித்தால் பொருள் தராது. இணைந்திருந்தால் மட்டுமே இனிமை தரும், பொருள் தரும்.

      கணவனும் மனைவியும் இரட்டைக் கிளவி போல் அமைய வேண்டும், எனவே

இரட்டைக் கிளவி போல் பிரியா வாழ்வினர்

என்றார் பாவேந்தர். அந்தப் பாவேந்தரின் வரிகளாலேயே, இப் பாவேந்தனையும், சபீதாவையும் வாழ்த்துகிறேன்.

     நிலத்திற்கு மேலே பொலிவுடன் தெரிவது மரம். பூவும், இலையும், காயும், கனியும், கிளையும் வெளிப்படத் தெரியும். அவற்றாலா மரம் நிற்கிறது? வளர்கிறது? வளம் தருகிறது? உரமும், ஊட்டமும் நீரும் நிலையும் பெற வாய்ப்பது வேரால் அல்லவா? வேர்ப்பிடி இல்லாமல், நீர்ப்பிடி உண்டா? நிலைப் பிடி உண்டா? அதனால்தான்,
ஆண் மரம், பெண் வேர்

என்றார் பாவேந்தர்.அந்தப் பாவேந்தரின் வார்த்தைகளாலேயே, சபீதாவை வாழ்த்துகிறேன்,
வேராய் விளங்கி, குடும்பத்தைக் காப்பாய்

என வாழ்த்துகிறேன் என இளங்குமரனார் வாழ்த்தினார்.

     பின்னர் அரங்கில் நிறைந்திருந்தோரை நோக்கி,
உறவினர்களே, நண்பர்களே, இதோ உங்கள் முன் மணமக்கள் இருகரம் கூப்பி வணங்கி நிற்கின்றனர். மணமக்களை நாமும் வாழ்த்துவோமாக, என்று கூறி
மணமக்கள் என்று கூற, அரங்கில் இருந்தோர் வாழ்க வாழ்க என முழங்கினர்.

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

வாழ்த்தொலியால் அரங்கம் அதிர்ந்த்து.

     குடும்பத்தின் குத்து விளக்கு மனைவி என்பர். ஒற்றைத் திரி, எத்தனை திரிகளுக்கு ஒளி வழங்குகிறது. ஒளி வழங்கும் திரி, தன் ஒளியில் குறைவு படுகிறதா? இருண்ட வாழ்வை ஒளி வாழ்வு ஆக்குவது பெண்மையே என்பதைக் கண்டது பண்டைத் தமிழகம். அதனால்தான்

மனைக்கு விளக்கம் மடவார்

என்றனர் நமது முன்னோர். இதோ மணமக்கள் இப்பொழுது குடும்ப விளக்கை ஏற்றுவர் என்று கூறிய தமிழ்க் கடல், மணமக்களை குடும்ப விளக்கேற்ற அழைத்தார்.

       மணமக்கள் குடும்ப விளக்கேற்றினர்.

     அடுத்து மணமக்கள் இருவரும், பெற்றோரின் தாழ் பணிந்து வணங்க, பெற்றோர் நால்வரும், உள்ளம் பூரித்து, மனதில் மகிழ்ச்சி பொங்க, அன்றலர்ந்த மலர் போல் மலர்ந்த முகத்துடன், மலர் தூவி, தங்களின் செல்வங்களை வாழ்க, வாழ்க என வாழ்த்தினர்.

     அவைமுழுதும் நிரம்பியிருக்கும் உறவினர்களே, நண்பர்களே, மண மக்களைப் பெற்றோர்கள் மட்டுமே மலர் தூவி வாழ்த்துகிறார்களே, அரங்கில் அமர்ந்திருக்கும் நமக்கு அட்சதை வழங்கவில்லையே என நினைக்கலாம். தாங்கள் அட்சதையைத் தூவி எறிய, தங்களின் முன் அமர்ந்திருப்போர்களின் தலையில் அல்லவா அட்சதை போய் சேருகிறது. இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் நாடி, மணமக்கள் வாழ்த்து பெற வருகிறார்கள். மணமக்களுக்கு முன், மலர் தட்டு ஏந்தியவாறு இருவர் வருவர். மலர் தூவி வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள் என்றார்.

      மணமக்கள் இருவரும், மேடையினின்று இறங்கி, அரங்கு முழுவதும் வலம் வந்தனர். உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் மலர் தூவி வாழ்த்த அரங்கே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

     தமிழர் திருமணம், தமிழ்த் திருமணமாய் அரங்கேறிய காட்சி, அரங்கில் இருந்தவர்களின் மனங்களில் நீங்கா இடத்தினைப் பிடித்து விட்டது. மணவிழாவின் ஒவ்வொரு நிகழ்விற்கும், விளக்கம் கூறி, காரண காரியங்களை எடுத்துரைத்து, தமிழ்க் கடல் இளங்குமரனார் நடத்திக் காட்டிய விதமே, தனியொரு அழகாய் திருமண விழாவிற்கு மெருகூட்டியது,

     எத்துனையோ திருமண விழாக்களுக்குச் சென்றிருந்தாலும், பாவேந்தன் சபீதா திருமணம், தமிழ்த் திருமணமாய், தனித் தமிழ் திருமணமாய், திருவள்ளுவரின் நெறி நின்று நடைபெற்றது, பண்டைத் தமிழரின் பெருமையினை, தமிழரின் உயர்ந்த உன்னத வாழ்வியல் நெறிகளை, இன்றைய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்த்து.

                பிறக்கும்  போதே  பெருமை  யோடு
              பிறந்தவன் தமிழன் – தமிழ்ப்
              பெருங்குடி தன்னிற் பிறந்தவன் தமிழன்

              முதலில் தோன்றிய  மனிதன்  தமிழன்
              முதல்மொழி  தமிழ்மொழி  - ஆதலால்
              புதுவாழ்  வின்வேர்  தமிழர் பண்பாடே

என்று முழங்குவார் பாவேந்தர். அத்தகு பெருமை வாய்ந்த பாவேந்தரின் வரிகளாளேயே நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.

                  மணமகளாரே,  மணமகனாரே
                  இணைந்தின்  புற்றுநன்  மக்களை  ஈன்று
                  பெரும்புகழ்  பெற்றுநீ  டூழி
                  இருநிலத்து  வாழ்க  இனிது.


31 அக்டோபர் 2013

கடலில் கரைந்தவர்




நடுத்தர உயரம், கருத்த உடல்
கம்பீரத் தோற்றம், பரந்த நெற்றி
உறுதியை உரைக்கும் கண்கள்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பு
படர்ந்த மீசை, நரையைக் கருமயிர்
திரைபோல் மூடிய பருவம்

     நண்பர்களே, தமிழரைத் தட்டி எழுப்பியக் குரலுக்குச் சொந்தக்காரரை, நாடாண்ட குரலுக்குச் சொந்தக்காரரை, சட்டசபையில் அறிவையும் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும் பட்டவர்த்தனமாய் விளக்கிய குரலுக்குச் சொந்தக்காரரை உங்களுக்கு அறிமுகப் படுத்த  விரும்புகின்றேன்.

     நண்பர்களே நம்மில் பலர் இவரை அறிந்திருக்கலாம், அறிந்து மறந்திருக்கலாம், இன்றைய இளம் தலைமுறையினர் இவரை அறியாதிருக்கலாம். மறந்தவருக்கு நினைவூட்டுவதிலும், அறியாதவருக்குத் தெரியப்படுத்துவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்கிறது.
     
பலவகையில்  தமிழர்க்கு  நன்மை  செய்த
     பண்பாளன்  முன்னாள்தென்  னிந்தி  யாவின்
நலவுரிமைச்  சங்கத்தில்  பங்கு  ஏற்று
     நல்லதொரு  தளபதியாய்  விளங்கி  வந்தோன்
இலையாகக்  கொழுந்தாகப்  பெரியாரி  ன்முன்,
     இந்நாட்டில்  பலமனிதர்  இருந்தபோது
மலராகப்  பெரியாரே  போற்று  கின்ற
     மலையாக  இருந்தவர்நம்  பன்னீர்  செல்வம்

என உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தளபதியாகவும்,

தொல்லை  நீக்கிட  எழுந்த
தூயரில்  பன்னீர் செல்வன்
இல்லையேல்  படைத் தலைவன்
இல்லையெம்  தமிழ் வேந்துக்கே

எனப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் படைத் தலைவனாகவும் போற்றப் பெற்ற, இராவ் பகதூர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களை அறிமுகப்படுத்தவும், நினைவூட்டவும் விரும்புகின்றேன் நண்பர்களே. வாருங்கள் பண்பாளர் பன்னீர் செல்வத்தை அறிவோம். வாருங்கள்.

     நண்பர்களே, பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனை தேரூர்ந்த மனுநீதிச் சோழன் ஆண்ட ஊரான திருவாரூருக்கு அருகிலுள்ள, செல்வ புரத்தில், 1888 ஆம் ஆண்டு பிறந்தவர் நம் பன்னிர் செல்வம்.
தமிழவேள் பி.டி.ராஜன்
     தஞ்சையிலும், திருச்சியிலும் கல்வி கற்ற பன்னீர் செல்வம், சட்டம் பயில இலண்டன் சென்றார். பின்னாளில் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கிய தமிழவேள் பி.டி.இராசன் அவர்களும், அப்பொழுது இலண்டனில் மாணவராய் சட்டம் பயின்று வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

     சட்டக் கல்வியை முடித்தவுடன் தஞ்சையில் வழக்கறிஞராய் பணியாற்றத் தொடங்கினார். வழக்கறிஞர் பணியோடு பொது வாழ்விலும் ஈடுபட்டார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் விளங்கிய தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரும், பன்னீர் செல்வமும் இணைபிரியா நண்பர்களாயினர். தஞ்சை மக்கள் இவர்களை, இரட்டையர் என்றே அழைக்கத் தொடங்கினர்.

     தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நீதிக் கட்சியின் தூண்கள் என அழைக்கப் பட்டவர்கள் மூவர். முதலாமவர் ஏ.டி.பன்னீர் செல்வம், இரண்டாமவர் உமாமகேசுவரனார், மூன்றாமவர் ஐ.குமாரசாமி பிள்ளை. மூவருமே வழக்கறிஞர்கள்.

     ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் 1918 இல் தஞ்சை நகராட்சி மன்றத் தலைவரானார். தொடர்ந்து 1922 முதல் இரண்டாண்டுகள், தஞ்சை மாவட்டக் கல்விக் குழுத் தலைவரானார்.

      1924 ஆம் ஆண்டு முதல் 1930 வரையிலான ஆறாண்டுகள் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் இவர். உமாமகேசுவரனாரோ வட்டக் கழகத் தலைவர். இக்கால கட்டத்தில் தஞ்சை மாவட்டமானது, கல்வித் துறை வளர்ச்சியில் தலை நிமிர்ந்து நின்றது.

     நண்பர்களே, உமாமகேசுவரனார் பன்னீர் செல்வம் இருவரின் முயற்சியால், தஞ்சையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 40 இல் இருந்து 170 ஆக உயர்ந்தது. தஞ்சையில் சோம்பேறிகளின் கூடாரமாக விளங்கிய, அன்ன சத்திரங்கள் அனைத்தையும், ஏழை மாணவர்களின் இலவச உணவு விடுதிகளாக மாற்றினர். அதிலும் குறிப்பாக ஒரத்தநாடு, ராசா மடம் என்னும் இரு ஊர்களில் இருந்த சத்திரங்கள், மாணவர்கள் தங்கி, பயிலும் மாணவர் விடுதிகளாக உருமாற்றம் பெற்றன.

     நண்பர்களே, இந்த ராசாமடம் விடுதியில் இலவசமாய் தங்கி, இலவசமாய் உண்டு, கல்வி பயின்ற மாணவர் ஒருவர்தான், பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்தார். ஆம் நண்பர்களே, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தங்கி கல்வி பயின்ற விடுதிதான் ராசாமடம் மாணவர் விடுதி.

              இவர் மட்டுமல்ல, பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், கவிஞர் சுரதா, கவிஞர் அ.மறைமலையான் முதலானோரும் இளமையில் இங்கே உண்டு, கற்றுத் தேறியவர்கள்தான்.

     அதுமட்டுமல்ல நண்பர்களே, திருவையாற்று வடமொழிக் கல்லூரியில் தமிழும் நுழைந்து, அரசர் கல்லூரியாக புதிய பரிமாணம் பெற்றதும் இவர்களாளேதான்.

     இவர்களது காலத்தில் தஞ்சையில், முக்கியக் கட்டிடங்கள் இரண்டு எழுப்பப் பெற்றன. ஒன்று மாவட்டக் கழக அலுவலகக் கட்டிடம். இரண்டாவது வட்டக் கழக அலுவலகக் கட்டிடம்.


    
  நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பனகல் அரசர் ஆற்றிய பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், மாவட்டக் கழகக் கட்டிடத்திற்கு பனகல் கட்டிடம் என்று பெயர் சூட்டினார் பன்னீர் செல்வம். இன்றும் இக்கட்டிடம் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.


      வட்டக் கழகக் கட்டிடமோ, உமாமகேசுவரனார் மறைவிற்குப் பின், அவர் பெயராலேயே உமாமகேசுவரனார் கட்டிடம் என்றே, இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

     நண்பர்களே, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்றம் சென்றார் பன்னீர் செல்வம். தந்தைப் பெரியாரின் அன்பிற்கு உரியவரானார். பெரியார் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபின், பெரியாருக்கு அடுத்த தலைவராக, அதாவது நீதிக் கட்சியின் துணைத் தலைவராக பன்னீர் செல்வம் உயர்ந்தார். செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் பெரியார் எதையும் செய்ததில்லை.
 
ராஜா சர் முத்தையா செட்டியார், ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார்
      பன்னீர் செல்வம் மட்டுமல்ல உமாமகேசுவரனாரும் தந்தைப் பெரியாரின் அன்பிற்கும், முழு நம்பிக்கைக்கும் உரியவராய்த் திகழ்ந்தார். நண்பர்களே, இதில் வியப்பிற்கு உரிய செய்தி ஒன்றுள்ளது. ஆம் பெரியார் நாத்திகவாதியாய் விளங்கிய போதிலும், பெரியாரின் முழு நம்பிக்கையினைப் பெற்ற இவர்கள் இருவருமே ஆத்திக வாதிகள்.

     நண்பர்களே, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்படுத்தப் பட்ட சைமன் கமிஷன், தனது அறிக்கையினை 1930 இல் தாக்கல் செய்ததையும், இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகள் பற்றியும் நாம் அறிவோம். முதல் வட்ட மேசை மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொள்ளவில்லை, ஆனால் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். நண்பர்களே, இந்த இரு மாநாடுகளிலும், இந்திய கிறித்தவர்களின் சார்பாக, கலந்து கொண்ட பெருமைக்கு உரியவர்தான் சர் ஏ.டி. பன்னீர் செல்வம்.
 
முதல் வரிசையில் வலமிருந்து நான்காவதாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருப்பர் ஏ.டி.பன்னீர் செல்வம், அடுத்ததாக அமர்ந்திருப்பவர் அம்பேத்கார்
     1934 ஆம் ஆண்டு ஜுன் மாதம், சென்னை மாகாண அரசின் உள்துறை அமைச்சராக சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நியமிக்கப் பட்டார்.

     நண்பர்களே நேர்மையின் இலக்கணம் செல்வம். இவர் உள் துறை அமைச்சராய் விளங்கிய காலத்தில், இவரது சொந்த மருமகன் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பதவியினைப் பெற முயன்றபோதும், செல்வம் அதற்கு இணங்கினாரில்லை. அத்தகைய நேர்மையாளர்.
 
தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா.
மாலையுடன் அமர்ந்திருப்பர் பன்னீர்.நிற்பவர்களில் முதல் வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்பவர் உமாமகேசுவரனார்
      1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவரானார். காங்கிரஸ் வந்ததும், கட்டாய இந்தியும் வந்தது. தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது.

     நண்பர்களே, கட்டாய இந்தியை எதிர்த்து, முதல் தீர்மானத்தை இயற்றிய அமைப்பு எது தெரியுமா? ஆம்  நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கம்தான்.

     இராஜாஜி அவர்கள் கட்டாய இந்தி குறித்த, தன் எண்ணத்தினை வெளிப்படுத்திய 16வது நாளே, 28.8.1937 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், உமாமகேசுவரனாரால், முதல் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கமும் களத்தில் இறங்கியது.

      தந்தைப் பெரியார் இந்தி எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றினார். பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். தஞ்சையிலே பேராட்டத்தில் இறங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், உமாமகேசுவரனார், ஐ.குமாரசாமி பிள்ளை  போன்றோர் தஞ்சை சிறையில் அடைக்கப் பட்டனர்.
 
அன்றைய ஜெயில், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளி
     நண்பர்களே, இந்தியை எதிர்த்து பன்னீரும், உமாமகேசரும் சிறையிருந்த இடம், இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாய் செயலாற்றி வருகின்றது.

     இந்நிலையில், ஆளுநரைக் கண்டு மக்களின் மன நிலையை உணர்த்த தூதுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. அக்குழுவில் தந்தைப் பெரியார், நாவலர் பாரதியார் மற்றும் த.வே.உமாமகேசுவரனார் மூவரும் இடம் பெற்றனர். மூவரும் ஆளுநரையும் சந்தித்தனர்.

      நண்பர்களே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, ஒரு நாள் எட்டய புரத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமை நாவலர் பாரதியார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட முத்தமிழ்க் காவலர் முழங்கிக் கொண்டிருந்தபோது, மேடையில்  இருந்தவர்களை நோக்கி சரமாரியாய் கற்கள் வீசப்பட்டன.
 
        காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டம் நிறுத்தபட்டும், கல் மாரிப் பொழிவது மட்டும் நிற்கவில்லை. பாரதியாரையும், முத்தமிழ்க் காவலரையும் பெரும்பாடு பட்டுக் காத்த காவல் துறையினர், கல் எறிந்த 32 பேரைக் கைது செய்து வழக்கும் பதிந்தனர். ஆனால் அரசோ, அவ் வழக்கைத் தள்ளுபடி செய்து, கலகக்காரர்களை விடுதலை செய்தது.


        நண்பர்களே, செய்தியறிந்த பன்னீர் செல்வம் சட்ட மன்றத்தில் பொங்கி எழுந்தார். முதல்வர் இராஜாஜியுடன் நேருக்கு நேர் விவாதத்தில் இறங்கினார்.

செல்வம் – இப்படி வழக்கினை ரத்து செய்து விடுவித்தால், சமுக  
           விரோதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக ஆகிவிடாதா?
இராஜாஜி – பொதுக் கூட்டங்களில் பேசுகிறவர்கள், மக்களை 
           பதற்றமடையச் செய்யாத வகையிலும், மாற்றாரைப் 
           பழித்துரைக்காத முறையிலும் பேசுதல் வேண்டும்
செல்வம் – சோமசுந்தர பாரதியாரைப் போலவும், கி.ஆ.பெ.விசுவநாதத்தைப் 
           போன்றும் உயர்தரமும் ஆற்றலும் பண்பாடும் கொண்ட
           பேச்சாளர்களை, நான் இதுவரையில் சட்ட மன்றில் கூடக்
           கண்டதில்லை. அன்றியும் அரசே தன் விருப்பப்படி
           குற்றவாளிகளின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தால்,   
           இது எங்கே கொண்டுபோய் விடுமோ? எதில் சென்று
           முடியுமோ?
அமைச்சர் – குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனக் கண்டதாலேயே 
             அவற்றை அரசு ரத்து செய்தது.
செல்வம் -  ஒவ்வொரு குற்றச்சாட்டினையும் அரசே ஆராய்ந்து பார்த்து,
            எந்தக் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது, எது அடிப்படை
            உள்ளது எனத் தீர்ப்பு வழங்க முற்பட்ட்டால், பின் நீதி
            மன்றங்கள் எதற்கு? வழக்குரைஞர்கள்தாம் எதற்கு?

இராஜாஜி சார்பில் பதில் வரவில்லை.

செல்வம் -  காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு சட்டம், எதிரானவர்கட்கு ஒரு சட்டம்
            என்றால், இந்நாட்டில் அராஜக ஆட்சி நடப்பதாகவே அர்த்தம்.

இதற்கும் பதில் கூறவில்லை. இப்படிச் செல்வம் சினம் கொப்பளிக்க ஆவேசமுடன் சாடியபோது, அவையே கப்சிப். முதல்வரோ, அமைச்சரோ மூச்சே விடவில்லை. உண்மையான தருக்கவாதிகளுக்கு எப்படிப் பதில் தர முடியும். பின்பொருமுறை, சட்டமன்றத்தில் முதல்வர் இந்தி எதிர்ப்பு பற்றிப் பேசும்போது,

இராஜாஜி –  பாரதியாரும், பெரியாரும்தானே இந்தியை எதிர்க்கிறார்கள்?
செல்வம் –  அப்படியானால், நீங்கள் ஒருவர்தானே இந்தியை
            ஆதரிக்கிறீர்கள்

     நீதிக் கட்சியின் தொடர் போராட்டத்தால் இந்தி பின்வாங்கியது. இந்தியை வெளியேற்றிய மகிழ்ச்சியில், சற்று இளைப்பாறுவதற்குள், இரண்டாம் உலகப் போர் முன் வந்த நின்றது.

     இரண்டாம் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவை ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவின் சார்பில், இந்த அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சருக்கு உதவியாக, ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

     நண்பர்களே, 10.1.1940 அன்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், இந்த ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஏ.டி.பன்னீர் செல்வம்

      இதனைத் தொடர்ந்து, இலண்டனில் நடைபெறவிருந்த போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 26.2.1940 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு, பம்பாய் சென்றார்.

     பம்பாயில் தமிழவேள் உமாமகேசுவரனாரின் உறவினர், மின் ஆற்றல் பொறியாளர் தியாகராச பிள்ளை என்பாரின் வீட்டில் தங்கினார்.

     மறுநாள் பம்பாயில் இருந்து புறப்பட்டு, விமானம் மூலம் கராச்சி சென்றார். கராச்சியில் இருந்தவாறு, தந்தைப் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதுதான் தான் எழுதும் கடைசிக் கடிதம் என்பதை செல்வம் அப்போது உணரவில்லை.

                                                விமான நிலையம்,
                                                கராச்சி,
                                                29.2.1940
எனது அன்புள்ள தலைவர் அவர்கட்கு,
      நேற்று மாலை பம்பாயிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் எந்த பிளேனில் போகிறதாயிருந்தேனோ, அந்த பிளேன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. அநேகமாய் இன்று மாலை இங்கு வந்து சேரும். நாளை காலை 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து கிளம்புவேன். ஆகவே வரும் திங்கட்கிழமை லண்டன் போய்ச் சேருவேன் என்று எண்ணுகிறேன்.
                                                இப்படிக்கு,
                                               தங்களன்புள்ள,
                                              பன்னீர் செல்வம்

     1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் அதிகாலை,இராணுவ விமானமாகிய அனிபால், சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களையும், மூன்று ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளையும், நான்கு விமானப் பணியாளர்களையும் சுமந்து கெண்டு விண்ணில் ஏறியது. ஆனால் தரை இறங்கவே இல்லை.

      நண்பர்களே, விமானத்தின் சிதறிய பாகங்களைக் கூட கண்டு பிடிக்க இயலவில்லை. ஓமான் தீபகற்பத்தின் அருகில் ஓமார் வளைகுடா பன்னீர் செல்வத்தை வாரி அணைத்துக் கொண்டது. வானூர்தியில் ஏறி மறைந்த மற்றொரு சுபாஷ் சந்திர போஸ், நமது பன்னீர் செல்வம்.

      இராணுவ விமானங்கள் பல, ஓயாது பறந்து, ஓமான் வளைகுடாவையே சல்லடையாய் சலித்துத் தேடின. பயன்தானில்லை.

     தமிழ் மொழி தம் தாய்மொழி என்பதையும், தமிழ் இனம் தம் இனம் என்பதையும், என்றும் மறவாது, தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், செயலிலும், தமிழர்தம் முன்னேற்றத்தையே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்த பன்னீர் செல்வம், தமிழக மக்கள் அனைவரையும் துன்பக் கடலில் மிதக்க விட்டுவிட்டு, தான் மட்டும் ஓமான் கடலில் கரைந்து போனார்.


     என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கைதானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசையல்லவா என்று கருதினேன். பத்து வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த, ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து, சரியாக இருபதாவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை, கதறவில்லை.

     பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகின்றது. தமிழர்களைக் காணும் தோறும் தமிழர் நிலையை எண்ணும்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

     காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுகத் துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும், நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது. இவருக்குப் பதில் யார் என்று மனம் திகைக்கிறது
என்று பதறிய தந்தைப் பெரியாரின் வார்த்தைகளே பன்னீர் என்னும் தமிழ்ச் செல்வத்தின் அருமையை, பெருமையை பறைசாற்றும்.


     பன்னீர் செல்வம் மறைந்த செய்தி கேட்டுப் பதறினார், நெஞ்சம் கலங்கினார் உமாமகேசுவரனார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, கரந்தைப் பன்னீர் செல்வம் தமிழ்க் கல்லூரி எனப் பெயரிட, தீர்மானம் நிறைவேற்றி ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டார். ஆனால், பன்னீர் செல்வத்தைப் போலவே, உமாமகேசுவரனாரிடமும், இயற்கை தன் விளையாட்டை விளையாண்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

     நண்பர்களே, தமிழவேள் உமாமகேசுவரனார் 1938 ஆம் ஆண்டில், கரந்தைப் புலவர் கல்லூரியைத் தோற்றுவித்தார். கல்லூரி ஓராண்டு நடைபெற்ற நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்தார், கல்லூரிக்கு அனுமதியினை வழங்க மறுத்தனர். காரணம் ரூ.25,000 முதற் பொருளாக செலுத்த வேண்டும் என பல்கலைக் கழகம் வற்புறுத்தியது.

      தொடங்கிய நாள் தொட்டு, பொருளாதார நெருக்கடியிலேயே வளர்ந்து வந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடம் ஏது அவ்வளவு பணம். தொடங்கிய முதலாண்டிலேயே கல்லூரி மூடப்பட்டது.

     உள்ளம் தளராத உமாமகேசுவரனார், திருச்சி பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் உதவியுடன், அந்த அறக்கட்டளைச் சொத்துக்களையே முதற் பொருளாய்ச் சமர்ப்பித்து, கல்லூரியை மீட்டெடுக்க முனைந்து வெற்றியும் கண்டார். ஆயினும் பல்கலைக் கழகத்தின் இசைவு ஆணை வரும் முன், வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கவி இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனைக் காண.

      உமாமகேசுவரனாருக்கு ஒரு பேராசை. பல்கலைக் கழகத்தின் இசைவினையே பெற இயலாமல் தத்தளித்த போதும், கல்லூரியினை, சாந்தி நிகேதனத்தைப் போல், ஒர் பல்கலைக் கழகமாய் உயர்த்திப் பார்த்திட வேண்டும் என்ற இடையறா கனவு.

      கனவோடு, இலட்சியத்தோடு பயணித்த உமாமகேசுவரனாரை வழியில் மடக்கிப் பிடித்தது இயற்கை. உடல் நலம் குன்றினார். கங்கைக்கு அருகில் பைசாபாத் என்னும் சிற்றூரில், இயற்கையிடம் தோற்று, நிறைவேறா இலட்சியங்களுடன், சரயு நதிக் கரையில் தீ கொழுந்துகளுக்கு உணவாகிப் போனார்.

      நதிக் கரையில் தீயில் கரைந்து போனதால், கடலில் கரைந்த நண்பரின் பெயரினைச் சூட்ட வேண்டும் என்ற உமாமகேசுவரனாரின் உன்னத எண்ணம், காற்றில் கரைந்தது.

ஆங்கில  நாட்டில்  நல்ல
    இந்திய  அமைச்ச  னுக்குத்
தீங்கிலாத்  துணையாயச்  சென்றான்
    சர்பன்னீர்ச்  செல்வன்  தான்மேல்
ஓங்கிய  விண்வி  மானம்
    உடைந்த்தோ  ஒலிநீர்  வெள்ளம்
தூங்கிய  கடல்  வீழ்த்  தானோ
     துயர்க்  கடல்  வீழ்ந்தோம்  நாங்கள்
-          பாவேந்தர் பாரதிதாசன்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.