23 மே 2025

அம்மை யகர அறிவு



      

      அம்மையகரம்.

     தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.

     ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.

     ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் கிடையாது.

     ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

     ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில் இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.

     காவலர்கள் அடிக்கடி அம்மையகரத்திற்குச் செல்ல வேண்டிய நிலை.

     ஆற்றின் இக்கரையில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்துதான் செல்ல வேண்டி இருந்தது.

     ஆற்றில் நீர் ஓடும் காலங்களில், சொல்லவே வேண்டாம்.

     எனவே காவலர்கள், அரசிடம் முறையிட்டுத்தான் இந்தப் பாலத்தைக் கட்டியதாக, இவ்வூர் மக்கள் இன்றும் பேசுகிறார்கள்.

     காவலர்கள் எதற்கு, அடிக்கடி அம்மையகரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

     அம்மையகரத்தில் வசிக்கும் ஒருவரைக் கைது செய்யத்தான்.

     எதற்காக ஒருவரை அடிக்கடி கைது செய்ய வேண்டும்?

     அவர் என்ன குற்றளாளியா?

---

     இவர் தமிழ் இலக்கியங்களை ஆழக் கற்றவர்.

     பல ஆய்வுக் கட்டுரைகளை, எவ்வித சமரசமும் இன்றி எழுதியவர்.

     தொல்காப்பியத்தில் தோய்ந்தவர்.

     தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வங்களாகிய, வடிவங்களாகிய கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும், சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பெற்ற, சகம்பரி, பகயாகம், ஆளர்குறி ஆகிய மூன்றும் வெவ்வேறல்ல ஒன்றுதான் என்பவர்.

     சிந்துவெளி நாகரிகம் என்பதே, தமிழ் வழிப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான் என அறுதியிட்டுக் கூறுபவர்.

     பெண்கள் அணியும் தாலியை, தாலிக் கொடி என்றும் அழைக்கும் வழக்கம், இன்றும் தமிழகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டும் இவர், இது கொடி நிலையோடு தொடர்புடையது என்ற கருத்தினையும் உடையவர்.

---

     திருவையாறு என்றாலே, அனைவர் நினைவிற்கும் வருவது தியாகராசர் ஆராதனைதான்.

     அற்புதமானத் தமிழிசை இருக்க, தெலுங்குக் கீர்த்தனைகளுக்காக விழா நடப்பதைக் கண்ட இவரும், இவரது நண்பர்களும், தியாகராசர் ஆராதனை விழா நடைபெறும், அதே நாளில், திருவையாற்றுத் தெற்கு வீதியில், தமிழிசை விழாவினையும் நடத்த முடிவு செய்தனர்.

     இன்றல்ல, நேற்றல்ல, 55 ஆண்டுகளுக்கும் முன்.

     குடந்தை ப.சுந்தரேசனாரை அழைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தனர்.

     குடந்தை ப.சுந்தரேசனாரும் விழாவிற்கு வர ஒப்புதல் அளித்துவிட்டார்.

     ஆனால், அன்றைய அரசு, சில காரணங்களைக் கூறி, தெற்குவீதியில் விழாவினை நடத்த அனுமதி மறுத்துவிட்டது.

     இதை அறிந்த குடந்தை ப.சுந்தரேசனார், விழா நடைபெறாது என்று முடிவு செய்து, திருமழப்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று விட்டார்.

     ஆனால் இவரும், இவரது நண்பர்களும், தமிழிசை விழாவை நடத்தியே தீருவது என்ற முடிவில் இருந்தனர்.

     தெற்கு வீதியில்தானே நடத்தக் கூடாது, புஷ்பமண்டபத்தில் நடத்துவோம் என முடிவு செய்து களத்தில் இறங்கினர்.

     சுந்தசேரனாரோ திருமழப்பாடி சென்றுவிட்டார்.

     திருமழப்பாடிக்குச் சென்று அவரை அழைத்து வருவது என்று முடிவு செய்து புறப்பட்டனர்.

     திருவையாற்றில் இருந்து  திருமழப்பாடிக்குச் செல்வதானால், இடையில் குறுக்கிடும் கொள்ளிடத்தைக் கடந்தாக வேண்டும்.

     அக்காலத்தில் கொள்ளிடத்திற்குப் பாலமும் கிடையாது.

     கொள்ளிடம் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்தது.

     அசரவில்லை.

     இவரும், இவரது நண்பர் சக்கரபாணியும், திருவையாற்றில் இருந்து, வைத்தியநாதன் பேட்டை சென்று, கொள்ளிடக் கரைக்குப் போய், ஆற்றிலே இறங்கி நடந்து, ஆற்றைக் கடந்து திருமழபாடி சென்றனர்.

     குடந்தை ப.சுந்தரேசனாரைச் சந்தித்தனர்.

     தமிழிசை விழா உண்டு என்றனர்.

     அவரும் திருமழபாடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வாருங்கள் போவோம் என்றார்.

     மூவரும் கொள்ளிடக் கரைக்கு வந்தபொழுது இரவு மணி ஒன்பது.

     குடந்தை ப.சுந்தரேசனாரோ ஆள் கொஞ்சம் குள்ளம்.

     இரண்டு தோளிலும் பைகள்.

    சென்ற இருவரும், இரண்டு பைகளையும் பெற்று, ஆளுக்கொரு பையைத் தலையில் வைத்துக் கொண்டு, இருவரின் தோள்களையும் பிடிக்கச் சொல்லி, சுந்தரேசனாரையும் தூக்கிச் சுமந்தபடி, கொள்ளிடத்தைக் கடந்தனர்.

     கரையில் இருந்து, மிதிவண்டியில் உட்கார வைத்து அழைத்துக் கொண்டு திருவையாறு திரும்பினர்.

     நடு இரவில் தமிழிசை விழா அரங்கேறியது.

     அன்று தொடங்கிய தமிழிசை விழா, ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

---

     இவர் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல, மார்க்சிய சித்தாந்த நூல்களையும் முழுமையாய் கற்றவர்.

     சரியான புரிதலுடன் பேசக்கூடியவர், எழுதக்கூடியவர்.

     சாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமானால், நிலவுடமைச் சமுதாயம் தகர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை  உடையவர்.

     கலப்புத் திருமுணம் செய்தவர்களும், ஏதேனும் ஒரு சாதிக்குள்ளே இருக்க வேண்டிய நிலையினை மாற்றத் துடிப்பவர்.

     மனிதர்கள் மீது மட்டுமல்ல, விலங்குகளின் மீதும் அதே அன்பைப் பொழிபவர்.

     தன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாடுகளிடம் இருந்து பால் கறக்கும் பொழுது, மாட்டின் கன்றிற்கென ஒரு காம்பை ஒதுக்கி வைக்கும் குணம் உடையவர்.

     இப்படிப்பட்டவரைத் தேடியா, காவலர்கள் வந்து கொண்டே இருந்தனவர்.

     அதுவும் கைது செய்வதற்காக?

     ஆம் இவரைத் தேடித்தான் வந்தனர்.

     காரணம்,

     இவர் முன்னின்று நடத்தியப் போராட்டங்கள்.

---

     திருவையாற்றை அடுத்த சிறுறூர் காருகுடி.

     தாழ்த்தப்பட்டவர்களின் குடும்பங்களில் யாராவது இறந்து போனால், சுடுகாட்டிற்கு அவர்களின் உடலை, தெருக்களின் வழி எடுத்துச் செல்ல இயலாத நிலை.

     வயல் வரப்புகளில் சேற்றில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் சுடுகாட்டிற்குச் செல்ல வேண்டிய சூழல்.

     இந்நிலையை மாற்ற விரும்பினார்.

     காத்திருந்தார்.

     ஒரு வயதான அம்மா இறந்தார்.

     காருகுடிக்குச் சென்றார்.

     மழை பெய்து கொண்டிருந்தது.

     நாம் வயல்வழியாக அம்மாவின் உடலை எடுத்துச் செல்லப் போவதில்லை. சாலை வழியாகத்தான் கொண்டு போகிறோம். இன்றோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிய வேண்டும்.

     நீங்களும் வரி கட்டுகிறீர்கள், அவர்களுக்கு உள்ள எல்லா உரிமையும் உங்களுக்கும் இருக்கிறது. நீங்கள் தயாராக இருங்கள் வந்துவிடுகிறேன்.

     நேராகக் காவல் நிலையம் செல்கிறார்.

     செய்தியைக் கூறி, பாதுகாப்புக் கேட்கிறார்.

     நாங்க பாதுகாப்புக் கொடுக்க முடியாது. வழக்கமா எந்த வழியில உடல எடுத்துட்டுப் போவீங்களோ, அந்த வழியாகவே உடலை எடுத்துட்டுப் போங்க.

     அவங்களும் மனுசங்கதான், அந்த ரோடு போட்டதுல, அந்த மக்களோடு வரிப் பணமும் இருக்கு. ரோடு எல்லோருக்கும் சொந்தமானதுதான். மேல் சாதிக்காரர்களுக்கு இருக்கிற உரிமை, அவங்களுக்கும் இருக்கு. உங்க வேலை பாதுகாப்புக் கொடுக்கிறதுதான்., நீங்க எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கனும்.

     நீங்க எனக்கு எதையும் சொல்லித்தர வேண்டாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்காதீர்கள்.

     இவர் அமைதியாக எழுந்து, நான் உருவாக்கல, நீங்கதான் உருவாக்குறீங்க, பாதுகாப்பு கொடுக்கிறது உங்க கடமை.

     காவலரோ கோபத்துடன், நான் சூட்டிங் ஆர்டர் வாங்கிக்கிறேன், நீங்க என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை  செய்து கொள்ளுங்கள்.

     இவரோ, நாங்க தெரு வழியாத்தான் எடுத்துக்கிட்டுப் போவாம். நீங்க என்ன செய்னுமோ செஞ்சிக்கோங்க

     துக்க வீட்டிற்குத் திரும்பினார்.

     உடலை எடுத்துச் செல்ல எல்லோரும் தயாராக இருந்தார்கள்.

     எல்லோரும் எதுக்கும் தயாரா இருங்க. ஒவ்வொருத்தரும் கையில ஏதாச்சும் ஒரு கட்டையோ, ஆயுதமோ எடுத்துக்குங்கள். நான் முன்னாலே போரேன், எல்லோரும் பின்னால வாங்க.

     இவர் முன்னே நடக்கிறார்.

     பின்னால், உடலைச் சுமந்து கொண்டு, ஊர்வலமாய் செல்கிறார்கள்.

     சாலையின் இருபுறமும் காவலர்கள் நிற்கிறார்கள்.

     தெருவில் நுழைந்தால், துப்பாக்கிச்சூடு நடத்தத் தயாராய் நிற்கிறார்கள்.

     இவரோ, காவல் ஆய்லாளரிடம் செல்கிறார்.

     சார், நாங்க வாணவெடி எல்லாத்தையும் இரெண்டா பிளந்து, அதுல பிளேடுகளை வச்சிக் கட்டியிருக்கிறோம். வாண வெடியைப் பற்றவைத்தால் போதும், அது சீறிப்பாய்ந்து, ஒங்க மேலேயும் மற்ற காவலர்கள் மேலேயும் பட்டா என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.

     காவல்துறை ஆய்வாளர் அதிர்ந்துபோகிறார்.

     நீங்க சீக்கிரம் உடலை எடுத்துக்கிட்டுப் போங்க, நாங்க பாதுகாப்புக் கொடுக்கிறோம்.

     அன்றுடன் காருகுடி சுடுகாட்டுப் பிரச்சினை முடிவிற்கு வந்தது.

---

     இவர் படித்தவர், பண்பாளர்.

     காருகுடி சுடுகாட்டுப் போராட்டம், இரயில் மறியல் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், புதுவை அரவிந்தர் பாழி எதிர்ப்புப் போராட்டம், விவசாயம் சார்ந்த போராட்டங்கள் என எண்ணற்றப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர், பங்கேற்றவர்.

     இதனாலேயே கைது, கைது என காவலர்கள் இவரைத் தேடி வருவது வாடிக்கையாகிப் போனது.

     காவலர்களால் அம்மையகரத்துக்கப் பாலம் கிடைத்தது.

     இவர் போராட்ட குணம் மிக்கவர் மட்டுமல்ல, எதற்காகவும், எவரைக் கண்டும் அஞ்சாத உள்ளத்தினர்.

     இவரது போராட்ட குணம், இவருக்குப் பல எதிரிகளைத் தேடித் தந்தது.

     இவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என பலர், பலமுறை முயன்று தோற்றிருக்கின்றனர்.

     ஒருமுறை, திருவையாற்றில், ஒரு முக்கியப் பிரமுகர், இவர் தலையைச் சீவ வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

     அதனை அறிந்த இவர், தனது மிதிவண்டியின், கைப் பிடிக்கு அருகில், ஒரு அரிவாளைச் சொருகி எடுத்துக் கொண்டு, பேசியவரது வீட்டிற்கே சென்று விட்டார்.

     அவரது வீட்டில் மிதிவண்டியை மோதி நிறுத்திவிட்டு, அரிவாளை, அவர் முன்னே வீசி எறிந்தார்.

     என்னமோ என் தலையை எடுத்திடுவேன்று சொன்னியாமே, இதோ நேராக வந்திருக்கிறேன், நீ எடுக்கிறியா? இல்ல நான் எடுக்கட்டுமா?

      முக்கியப் பிரமுகர் உடல் முழுவதும் வியர்த்து வெலவெலத்துப் போனார்.

---

     பல ஆண்டுகளுக்கு முன் இவரது சிறுநீரகம் செயலிழந்து போனது.

     டயாலிசிஸ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஆங்கில மருத்துவர்கள் கைவிரித்தனர்.

     இவரோ பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

     இவரே ஒரு சிறந்த ஓமியோபதி மருத்துவர்.

     எனவே ஓமியோபதி மருத்துவத்தைத் தொடங்கினார்.

     இருப்பினும், இவருக்குள் ஒரு எண்ணம் எழுந்தது.

     பிழைக்காவிட்டால் என்ன செய்வது?

     யோசித்தார்.

     நண்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார்.

     அனைவரையும் அழைத்தார்.

     தடபுடலாய் விருந்து வைத்துப் பேசிப் பேசி மகிழ்ந்தார்.

     இனி கவலையில்லை.

     முற்றாய் ஓமியோபதி மருத்துவத்தில் மூழ்கினார்.

     சிறுநீரகம் முன்னிலும் வலுவாய் செயல்படத் தொடங்கியது.

     இவரோ முன்னிலும் வேகமாய், பொதுப் பணியில் கரைந்தார்.

---

சமூகத்திற்காக, எந்த சூழலிலும், துளியும் சமரசம் செய்து கொள்ளாமல், போராட்டத்தையே, வாழ்க்கையாகக் கொண்டவர்.

இவர்தான்,

தனித் தமிழ் அறிஞர், எழுத்தாளர்

புரட்சியாளர், ஓமியோபதி மருத்துவர்

என பன்முக ஆற்றலாளர்

முத்துவிழா கண்டிருக்கும்




தோழர் அறிவுறுவோன்.

இன்னும் ஒரு நூறாண்டு வாழ வாழ்த்துவோம்.

 

அம்மை யகர அறிவு உருவிற்கு

பள்ளி யகர நாட்டார் வாழ்த்து.

அறிவுறுவோன் என்னும் அறிவுடை யொருவன்

அடக்கம் என்பது அவன்பண்பு ஆயினும்

அடங்குதல், வெறுவுதல், துஞ்சுதல், சோருதல்

கெஞ்சுதல் என்னும் கீழ்மைப் பண்புகள்

அஞ்சி அவன்தன் அடிநிழல் தீண்டா.

ஐயா றதனில் அருந்தமிழ்ப் பயிற்றியும்

தொல்காப் பியமெனும் தூய்தமிழ்ப் பனுவலை

பல்கால் பயின்று பழகிய புலமையின்

சங்க நூல்களின் தடம் பிறழாது

பாவாணர் போன்ற பன்மொழிப் புலமையர்

தம்மிடம் பெற்றத் தனித்தமிழ்ப் பற்றால்

எழுத்தில், பேச்சில், எடுத்துரை யாடலில்

தமிழையேத் தானாய் தானேத் தமிழாய்

வாழும் தோழர் வளமுற வாழ்கவே.

                                தகைசால் புலவர் இரா.கலியபெருமாள்.