அது ஒரு கோயில்.
எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள் நிரம்பி வழியும்
கோயில்.
கோயில் தெய்வமே நாகர்தான்.
நாகநாதர்.
இக்கோயிலுக்குள் ஒரு புஷ்கரணி.
குளம்.
ஒரு பெரும் பாறையில் குடையப்பெற்றக் குளம்.
குளத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள்.
இரவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கோயிலுக்குள்
மத்தளச் சத்தம்.
அது எப்படிச் சத்தம் வரும்?
கோயிலுக்குள் இரவில் யாருமே இருப்பதில்லை.
இரவில் கோயில் பூட்டப்பட்டு இருக்கும் பொழுது,
மத்தளச் சத்தம் எப்படி?
ஊரே வியந்து போனது.
தெய்வத்தின் மகிமை என நெகிழ்ந்து போனது.
ஒரே ஒரு பேராசிரியருக்கு மட்டும் மனதில், ஓர்
ஐயம்.
எப்படி சத்தம் வரும்?
ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம்.
ஒரு நாள் இரவு, கோயில் பூட்டப்படுவதற்குச் சில
நிமிடங்களுக்குமுன், கோயிலுக்குள் சென்றவர், யாரும் அறியாத வண்ணம் மறைந்து கொண்டார்.
கோயில் பணியாளர்கள், இவர் உள்ளே இருப்பதை அறியாமல்,
கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இவர் மட்டும் கோயிலுக்குள் ஆவலுடன் அமர்ந்திருந்தார்.
நிமிடங்கள் வேகமாய் நகர்ந்தன.
நடு இரவில் அந்தச் சத்தம் எழுந்தது.
மத்தளச் சத்தம்.
பேராசிரியர் வியந்து போனார்.
மெல்ல எழுந்து கோயிலை சுற்றிச் சுற்றி வந்தார்.
யாருமில்லை.
ஆனால் மத்தளச் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.
சத்தம் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
குளத்தின் கரைக்கு வந்தார்.
காற்று வெகுவேகமாக வீசிக் கொண்டிருந்தது.
குளத்துத் தண்ணீர் அலையாய் எழுந்து, குளத்தின்
பாறைக் கரையில் மோதிக் கொண்டிருந்தது.
குளக்கரையில் ஓரிடத்தில் ஒரு துளை.
காற்றும் நீரும் மோத மோத, மத்தளம் போன்ற சத்தம்,
அந்தத் துளையில் இருந்து வெளிவருவதைக் கண்டார்.
குளக்கரைத் துளையும், காற்றும், நீரும் செய்த மாயம்.
காரணம் இதுதான்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் கோயிலை எழுப்பியவர்களின்
கலைத் திறமும், நீர் மேலாண்மை அறிவும், அறிவியல் உணர்வும் கண்டு மலைத்தார்.
குளத்தில் முழுமையாய் நீர் நிரம்பி இருந்தால்
அமைதி.
நீர் மட்டம் குறைந்தால் மத்தளச் சத்தம்.
புதுக்கோட்டை,
பேரையூர், நாகநாத சுவாமி திருக்கோயில்.
---
புதுக்கோட்டை.
புதுக்கோட்டையின் வரலாறு, இன்று நேற்றல்ல, இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல சங்ககாலப்
புலவர்கள் பிறந்து, வளர்ந்து தமிழ் வளர்த்த ஊர் என்ற பெருமையினைப் பெற்றது புதுக்கோட்டையாகும்.
கோணாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
சங்க காலப் புலவர்.
புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கின்ற, அறந்தாங்கிக்கு
அருகில் அமைந்திருக்கும், எறிச்சி என்ற
ஊர்தான், மாடலன் மதுரைக் குமரன் பிறந்த
ஊர் என்பார் வரலாற்று ஆய்வாளர் மு.இராகவ ஐயங்கார்.
ஆனாலும் அவரால், கல்வெட்டுச் சான்றினைக் காட்ட
இயலவில்லை.
2013 ஆம் ஆண்டு, புதுக்கோட்டை, இலுப்பூருக்கு
அருகில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டு பிடிக்கப்பட்ட இடம் கோணாடு.
ஆனால் அறந்தாங்கிக் கோணாடு அல்ல.
எறிச்சலூர்
என்பது இலுப்பூருக்கு அருகில் இருந்த ஊர் என்று உரைத்தது இந்தக் கல்வெட்டு.
புதுக்கோட்டையில் இருக்கிறது இந்த எறிச்சலூர்.
மதுரை மாடலன் பிறந்த ஊர்.
---
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்.
சங்க காலப் புலவர் மட்டுமல்ல, மன்னனும் ஆவான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற ஒலிய மங்கலம்தான்,
இவன் பிறந்த ஒல்லையூர் என்று இன்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒல்லையூரான
ஒலியமங்கலம் என்கிறது ஒரு கல்வெட்டு.
புதுக்கோட்டையில் இருக்கிறது ஒல்லையூர்.
---
கடியலூர்
உருந்திரங் கண்ணனார்.
பட்டினப்பாலை இயற்றிய இவர் பிறந்த ஊர் பற்றி, ஓரிருவர் தங்கள் அனுமானத்தின்
அடிப்படையில், ஓரிரு பகுதிகளைக் குறிப்பிடுவர்.
புதுக்கோட்டை, தடி கொண்ட ஐயனார் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, கடியலூரான கடியாப்பட்டி என்று கூறுகிறது.
கடியாப்பட்டி புதுக்கோட்டையில்தான் இருக்கிறது.
இன்று மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்கும்
ஊராக இருக்கிறது.
இன்று கடியாப்பட்டி என்றழைக்கப்படும், கடியலூரில்
பிறந்த, உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப்பலைக்கு 16 நூறாயிரம் பொன் கொடுத்த, கரிகாலப் பெருவளத்தான், ஒரு 16 கால் கண்டபமும்
கட்டிக் கொடுத்தான் என்பது வரலாறு.
பதினொன்றாம் நூற்றாண்டில், சோழநாடு முழுவதையும்
வெற்றி கொண்டு, இடித்துத் தரைமட்டமாக்கிய சுந்தர பாண்டியன், அந்த வெற்றிச் செய்தியை,
திருவளரி கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறான்.
எல்லாவற்றையும் அழித்தேன், பட்டினப்பாலை பாடிய
கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கொடுத்த 16 கால் மண்டபம் நீங்கலாக.
---
ஒக்கூர்
மாசாத்தியார்.
சங்ககாலப் புலவர்.
திருக்கோஷ்டியூருக்கு அருகில் இருக்கும் ஒக்கூர்தான்,
மாசாத்தியார் பிறந்த ஊர் என்று, புறநானூற்றைப் பதிப்பித்தபோது உ.வே.சா., பதிவு செய்தார்.
தமிழக அரசும் உ.வே.சா., அவர்களின் வாக்கினை அப்படியே
ஏற்று, ஆய்வு மேற்கொள்ளாமல், ஒக்கூர் மாசாத்தியாருக்கு, அவ்வூரில் ஒரு நினைவுச் சின்னத்தையும்
எழுப்பியது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
மாசாத்தியார் பிறந்த ஒக்கூர் எங்கிருக்கிறது
தெரியுமா?
புதுக்கோட்டையில்,
அறந்தாக்கி ஆவுடையார் கோயிலுக்கு அருகில் இருக்கிறது, மாசாத்தியார் பிறந்த ஒக்கூர்.
இன்றும் இவ்வூரில், மாசாத்தியம்மன் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
---
கோணாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன்
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
ஒக்கூர் மாசாத்தியார் எனப் பல சங்ககாலப் புலவர்களைத் தோற்றுவித்தப்
பெருமைக்கு உரியது புதுக்கோட்டை.
---
புதுக்கோட்டையில் மனிதர்கள் எப்பொழுது முதல்
வாழ்ந்து வருகிறார்கள்?
சங்க காலத்தில் இருந்தா? என்ற கேள்வியை எழுப்பினால்,
இல்லை, அதற்கு முன்னரே மனிதர்கள், புதுகையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே பதிலாகக்
கிடைக்கிறது.
சங்க காலத்திற்கு முன்பு என்றால்?
கற்காலத்தில்.
கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் புதுகையில் வாழ்ந்திருக்கிறார்கள்.
குருவிகொண்டான்
பட்டியில், பழங்காலக் கல் ஆயுதம் கிடைத்திருக்கிறது.
அம்பலத்து
இருக்கையில் பழைய கற்காலக் கருவி கிடைத்திருக்கிறது.
இவை இரண்டும்தான் சான்று.
கற்காலக் கருவிகள் அதிகம் கிடைக்காவிட்டாலும்,
பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன.
திருமயம் கோட்டையில், எப்பொழுது வேண்டாமானாலும், உருண்டு
கீழே வந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், மலையின் சரிவில், ஓங்கி உயர்ந்து,
உருண்டை வடிவில் நிற்கும் பாறையில், வரையப் பெற்றிருக்கும், ஒரு சிகப்பு நிற ஓவியம்.
நாத்தாமலையின் ஓவியம்.
காஞ்சாத்து மலையின் ஓவியம்.
மலையேறிப்பட்டி மலையின் ஓவியம்.
இதுமட்டுமல்ல, புதுக்கோட்டையில், பெருங் கற்கால
நினைவுச் சின்னங்களானப் புதை குழிகள், முதுமக்கள் தாழிகள், கற்பதுக்கை, கல் வட்டம்
என இவையெல்லாம், சற்றேறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்கின்றன.
நார்த்தா மலையில்,
தொடையூரில்,
தாயினிப் பட்டியில்,
பாலைக் குறிச்சியில்,
தாழிக் காட்டில்
தாழிக் குறிச்சியில்
என
நூறு ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்த நிலப்பரப்பில், திரும்பும் இடமெல்லாம் நிரம்பி
வழிகின்றன.
தொடையூரில் கல்பலகைகளை வட்ட வடிவில் அடுக்கி,
மேலே ஒரு மூடியும் போட்டு மூடியிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் முதுமக்கள் தாழியில், புதை குழிகளில்,
கற் பதுக்கைகளில், எங்குமே முழு எலும்புக் கூடுகள் கிடைத்ததில்லை.
புதுக்கோட்டையில் கிடைத்திருக்கிறது.
புதுக்கோட்டை, பெருமாநாட்டிற்கு அருகில் புல்வயல் பகுதியில் கிடைத்திருக்கிறது.
ஒரு பெரிய தாழி.
தாழியின் உள்ளே, ஒரு எலும்புக் கூடு அல்ல, இரண்டு
எலும்புக் கூடுகள் அதுவும் முழுதாய்.
இரண்டு எலும்புக் கூடுகள், ஒன்றை ஒன்று பார்த்தவாறு,
அமர்ந்த நிலையில்.
இடக் கையைத் தொடை மீது வைத்துக் கொண்டு, வலது
கையில் ஒரு குறுவாளைப் பிடித்தபடி இரண்டு எலும்புக் கூடுகள்.
நிறைய போர் வீரர்களை இவ் இடத்தைச் சுற்றிப் புதைத்துள்ளனர்.
நடுவில் இந்த இருவரை மட்டும், தனிக் கல்லறையில்,
அமர்ந்த நிலையில் அடக்கம் செய்துள்ளனர்.
---
தமிழக வரலாற்றில் எழுத்துக்களின் வளர்ச்சி நிலைகளை
உற்று நோக்கினால், தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் எழுத்துக்களுக்கு முன்னோடி வட்டெழுத்துக்களாகும்.
அதற்கு முன் தமிழி.
அதற்கும் முன் சிந்துவெளி எழுத்துக்கள்.
அதற்கும் முன் தமிழி என்கிற தென்பிராமி எழுத்துக்கள்.
தென் பிராமி எழுத்துக்களைச் சுமந்த கல்வெட்டுக்கள்
இருக்கின்ற இடம், தமிழகத்தில் மூன்றே மூன்றுதான்.
மூன்றும் புதுக்கோட்டையில்தான் இருக்கிறது.
ஒன்று சித்தன்னவாசல் சமணர் படுக்கை.
இரண்டாவது பத்து எழுத்துக்களை உடைய குடுமியான் மலை இசைக் கல்வெட்டு.
மூன்றாவது, புதுக்கோட்டையின், பொற்பனைக் கோட்டையில் இருக்கின்ற ஐந்து கோண
குளத்தில், இருந்த துணி துவைக்கின்றக் கல்லைப் புரட்டிப் போட்டபோது, வெளிப்பட்ட நடுகல்லின் உடல் முழுவதும் தமிழி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்கள்.
இதன் பிறகுதான், இந்தத் தமிழி எழுத்துக்கள்,
சமணர்கள் கொண்டு வந்தது அல்ல, சமணர் வருகைக்கு முன், இங்கே வாழ்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டது,
பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டு நிறுவினார்கள்.
---
புதுக்கோட்டையில் பல குடவரைகள் இருக்கின்றன.
இவற்றுள் பலவற்றைக் குடைந்தது யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.
மனையேறிப்பட்டி.
திருமயம்
பூவாளக்குடி
முதலானக்
குடவரைகள், முத்தரைய மன்னர்களால் குடையப் பெற்றவை, இக்குடவரைகளில் அவர்களது பெயரைப்
பொறித்திருக்கிறார்கள்.
இக்குடவரைகள் தோற்றம் பெறுவதற்கு முன் இயற்கையாய்
அமைந்த குகைகளில், சமணர்கள் தங்கள் படுக்கைகளை அமைத்திருக்கிறார்கள்.
---
கற்றளிகளாய் எழுந்த சிற்பக் கோயில்களின் வளர்ச்சி
நிலைகளை அறிந்து கொள்ள விரும்பினால், அதற்கு உரிய மாவட்டம் புதுக்கோட்டைதான்.
முதலில் ஏனாதி. சிறு கோயில், குழந்தையைப் போல் அழகு.
இரண்டாவது கரியாப்பட்டி. சற்றுப் பெரிய கோயில். கோஷ்டம் உடையது.
மூன்றாவது விசலூர். கோயிலின் முன் நந்தி.
நான்காவது திருப்பூர். வளர்ச்சி பெற்றக் கோயில். சாந்தார விமானத்துடன் கூடிய விஜயாலய
சோழீச்சுவரம்.
---
முருகன்.
நம் ஆதிக் கடவுள்.
இருப்பினும், தமிழகத்தில் முருகனுக்கு என்று
தனியான கோயில் இல்லாத நிலையே, நீண்ட காலம் நீடித்தது.
தமிழகத்து முதல் முருகன் கோயில், உத்தர மங்கலம்,
சதுரவேதி மங்கலத்து முருகன் கோயிலாகும்.
இரண்டாவது முருகன் கோயில், மகாபலிபுரத்துக்கு
அருகில், சாளுவன் குப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயிலாகும்.
மூன்றாவது, புதுக்கோட்டை மாவட்டம், கண்ணனூர்
முருகன் கோயிலாகும்.
இக்கோயிலில் முருகனுக்கு வாகனம் என்ன தெரியுமா?
மயில் அல்ல.
யானை.
புதுக்கோட்டை வெள்ளாற்றிற்குத் தெற்கே இருப்பதாலும்,
பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருப்பதாலும், இக்கோயில் பாண்டிய நாட்டுக் கலை மரபில்
உருவானதாகும்.
தமிழகத்தின் மூன்றாவது முருகன் கோயில் புதுக்கோட்டையில்.
---
பறவைகள்
சரணாலயம்.
இன்று நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், முதன் முதலில் பறவைகளுக்கு சரணாலயம் எழுப்பப்பட்டது
எங்கு தெரியுமா?
புதுக்கோட்டையில்.
ஆம், புதுக்கோட்டையில்தான்.
நூறு வருடங்களுக்கும் முன்.
புதுக்கோட்டை சேந்தை மங்கலத்தில் ஒரு புறா மாடம்.
ஒரே நேரத்தில் ஆயிரம் புறாக்களுக்கும் மேல் தங்குவதற்கு
ஏற்ற வகையில் ஒரு பெரிய கோபுரம்.
ஆங்காங்கே, வரிசை வரிசையாய் துளைகள்.
துளைகளின் உட்புறத்தில், புறாக்கள் தங்குவதற்கான
மாடங்கள்.
இங்கு புறாக்கள் தங்குவதற்கு மட்டுமல்ல, அதன்
உணவிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அக்காலத்தில் ஒரு பெருமகனார், புறாக்களுக்காகவே,
ஏழு ஏக்கர்களுக்கும் மேற்பட்ட வயல்களை வழங்கியுள்ளார்.
இவ்வயல்களில் ஒரு பாதியில், நெல், சோளம், கம்பு
எனப் பயிரிட்டு, வளர்ப்பார்கள்,
ஆனால் அறுவடை செய்ய மாட்டார்கள்.
அப்படியே விட்டுவிடுவார்கள்.
முதல் பாதி விளைந்தவுடன், அடுத்த பாதியில் பயிரிடுவார்கள்.
மாற்றி மாற்றிப் பயிரிட்டு, ஆண்டு முழுவதும்
புறாக்கள் உணவு உண்ண ஏற்பாடு செய்திருக்கிறார் ஒருவர்.
போற்றப்பட வேண்டியவர், அந்தப் பெயர் தெரியாத
புதுகை மாமனிதர்.
---
புதுக்கோட்டை.
ஒரு காலத்தில் இது சமணர்களின் கோட்டை.
45 சமணத் தலங்கள் புதுகையில் இருந்திருக்கின்றன.
இராஜராஜன் புத்த விகாரைக்கு மதிப்பளித்து உதவியதைப்
போல், சமணர்களுக்கும் உதவியிருக்கிறான்.
வெண்ணாவிக்குளம் கெட்டிப் பட்டியே இதற்குச் சான்று.
வெண்ணாவிக்குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சமணக்
கட்டுமானங்களை எழுப்ப உதவி இருக்கிறான் சோழன்.
ஆனால், சமணர்களுக்கு என்று இன்று, தமிழகத்தில்
ஒரே ஒரு குடவரைக் கோயில்தான் இருக்கிறது.
அதுவும் புதுக்கோட்டையில், சித்தன்ன வாசலில்.
---
நீர் மேலாண்மை.
நீர் மேலாண்மை என்று வரும்பொழுது, புதுகையும்
சற்றும் சளைத்தது அல்ல என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது.
நார்த்தாமலையின் மேல் இருக்கும் அணிமத ஏரி.
இந்த ஏரியில், ஒரு நீர்க்குமிழி ஒன்றினை அமைத்திருக்கிறான்
ஒரு மன்னன்.
தமிழதிரயரைனனாயின
மல்லன் விடமன்.
ஏரிக்கும் கீழே குடைந்து, வழி அமைத்து, மலையின்
கீழ் இருக்கும் வயல்களுக்கு நீர் பாயுமாறு செய்திருக்கிறான்.
இந்த நீர் மேலாண்மையினை 770 களிலேயே செய்திருக்கிறான்.
---
புதுக்கோட்டையின் மற்றொரு பெரிய ஏரி.
கவிநாட்டுக் கண்மாய்.
77 இல் மாறன் சடையன் காலத்தில், மூதான்டி பெருங்கன் வேங்கன் என்பான் ஒரு குமிழி
அமைத்திருக்கிறான்.
ராஜராஜனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில், இந்தக்
குளத்தையும், இந்த மடையையும் பாதுகாப்பதற்காக நிலம் கொடுத்ததோடு, திருக்கோகர்ணத்தில்,
கல்வெட்டு ஒன்றினையும் பொறித்து வைத்திருக்கிறான் நம்பிராயன் கூமதித்தனான அரிகுலகால பிரமாதிராயன் என்னும் ஒரு குறுநில மன்னன்.
நான் கொடுத்த
இந்த தர்மத்தையும், இந்தக் குளத்தையும்,
இந்த மடையையும்
பாதுகாப்பவர்களுடைய பாதங்கள் என் தலைமேல்
---
பெருநற்கிள்ளி சோழப் பேரேரி.
கவிநாட்டுக் கண்மாய் கவிக்குளம் 13 ஆம் நூற்றாண்டில்
இப்படித்தான் அழைக்கப் பெற்றது.
இங்கு பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி என்னும்
சமணக் கோயில் இருந்திருக்கிறது.
இன்று இக்கோயில் இல்லை.
ஆனால்
கல்வெட்டு இருக்கிறது.
சடையாம் பாளை என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டு.
நெருநற்கிள்ளி சோழப்பெரும் பள்ளியான
அரசராம கண்ட பெரும்பள்ளி தன்மம்
தன்மம்
என்றால் தர்மம்.
---
விவசாயிகளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும்,
யாரும், எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாது என்கிறது திருவரங்குளம் கல்வெட்டு.
இருப்பினும், பெருந்தொல்லையைச் சந்தித்திருக்கிறார்கள்
விவசாயிகள்.
பெருங்கிளர்ச்சி ஒன்றினையும், ஒன்றல்ல, இரண்டல்ல
முழுதாய் ஆறு மாதங்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.
1854 ஆம் ஆண்டில்.
புதுக்கோட்டையில்.
அன்றைய மன்னன் இராமச்சந்திர தொண்டைமானுக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இப்பெரும் போராட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்திருக்கிறார்கள்.
நில அளவுகளை அவ்வப்போது மாற்றுகிறீர்கள். ஒரே
அளவிலான அளவுகோலைத்தான் இனி பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு அதிக வரி விதிக்கக் கூடாது.
பயிர் சேதம் ஏற்பட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மழையோ, வறட்சியோ ஏற்பட்டால், உழவர்களுக்கு உணவிற்கும்,
மற்றவற்றிற்கும் வழி வகுக்க வேண்டும்.
வணிகர்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி, விவசாயிகளைத்தான்
பாதிக்கிறது. எனவே வணிகர்களுக்கு அதிக வரி விதிக்கக் கூடாது.
மராட்டியர் மரபிலேயே புதுக்கோட்டை சமஸ்தானம்
செயல்படுவதால், மராத்தியே ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆட்சி மொழியாக தமிழையும் ஆங்கிலத்தையும்
அறிவிக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலுமே இனி நடத்த வேண்டும்.
தமிழே ஆட்சி மொழியாக வேண்டும் என்னும் புரட்சி
முதன் முதலில் புதுக்கோட்டையில்தான் களம் கண்டிருக்கிறது.
இதுதான் புதுகை.
வரலாற்றில் புதுகை.
---
ஏடகம்
ஞாயிறு
முற்றம்.
வரலாற்றில் புதுகை.
கடந்த
பதினான்கு ஆண்டுகளாக, இணைய வழி, வலைப் பூவில் நான் காலடி எடுத்துவைத்து நுழைந்த நாள்
முதல், என் நெஞ்சுக்கு நெருக்கமான ஊராக மாறிப்போனது புதுக்கோட்டை.
புதுக்கோட்டையின் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள்,
ஆசிரியர்கள் என்னையும், தங்கள் நட்பு வளையத்திற்குள் இணைத்து, இந்த எளியேன் மீது, இன்று
வரை மாறா அன்பு செலுத்திவருவது, நான் பெற்ற பேறு.
முகநூல் வழி நான் நன்கறிந்த, அரிய பல கிடைத்தற்கரிய
நூல்களை, மின்னூலாய் கேட்பவர்களுக்கு எல்லாம் வாரி வளங்கும் மின்னூல் வள்ளல், தன் வீட்டு
நூலகத்தில் இருபதாயிரம் நூல்களையும், தன் கணினியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட
மின்னூல்களையும் போற்றிப் பாதுகாத்துவரும், தமிழன்பர், வரலாற்று ஆய்வாளர்
புதுக்கோட்டை,
சுதர்சன் கலை அறிவில் கல்லூரித்
துணை
முதல்வர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவைர்
வரலாற்றில் புதுகை
என்னும்
தலைப்பில் உரையாற்ற இருக்கிறார் என்பதை அறிந்த நாள் முதல் என்னுள் ஒரு மகிழ்ச்சி.
தன் வளமான வார்த்தைகளால், நேசக்குரலால், இரண்டாயிரம்
ஆண்டுகளைக் கடந்த புதுகையின் வரலாற்றை, ஏடக அரங்கில் இறக்கி வைத்து, ஏடக அன்பர்களை
வியப்பில் ஆழ்த்தினார்.
புதுகையின் வரலாறு இத்துணை நீண்டதா?, நெடியதா?
என்று எண்ணி எண்ணி வியக்க வைத்தார்.
குருவாடிப்பட்டி,
இயற்கை விவசாயி
தலைமையில்
நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை
சுவடியியல்
மாணவி
வரவேற்றார்.
பொழிவின்
நிறைவில்
ஏடகப்
பொறுப்பாளர்
நன்றி
கூறினார்.
விழா
நிகழ்வுகளை
சுவைபடத்
தொகுத்து வழங்கினார்.
தஞ்சை ஏடக அரங்கில்
புதுகையின்
வரலாற்று மழை.
ஏடக நிறுவுநர், தலைவர்
நன்றியும் வாழ்த்தும்.