05 ஜூலை 2013

அய்யா GMB அவர்களுடன் சில நிமிடங்கள் ...


      கடந்த இரண்டு வருடங்களாக, நான் வலைப் பூவில் தொடர்ந்து எழுதி வருவதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.

     என் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்று, என் வாழ்வின் பாதையை மாற்றியது வலைப் பூ. வலைப் பூவில் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்துத் தவழத் தொடங்கிய என்னைக் கைக் கொடுத்துத் தூக்கி, நடை பயில வைத்த பெருமை, வலைப் பூ நண்பர்களாகிய தங்களையேச் சேரும்.

     வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில பெரிதும் மகிழ்கின்றேன்,

     நேருக்கு நேர் சந்திக்க இயலாவிடினும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுத்தின் வழி சந்திப்பதில் ஏற்படுகின்ற ஆனந்தமே அலாதி.

                     முகநக நட்பது நட்பன்று – நெஞ்சத்து
                     அகநக நட்பதே நட்பு
என்ற  குறளின் வரிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம், வலைப் பூ வாசகர்களுக்காகவே வள்ளுவர் இக்குறளினை எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

     கடல் பல கடந்து உலகின் எம் மூலையில இருந்தாலும், இராமன் கண்ட சேது பாலம் போல், வலைப் பூ தந்த எழுத்துப் பாலத்தின் வழி இணைந்தவர்கள் அல்லவா நாம். முகமறியாத நெஞ்சத்து அகநக நட்பினர் நாம், என்பதில் பெருமை கொள்ளுவோம்.

     எழுத்துக்களின் வழி நட்பு பாராட்டி, மகிழ்ந்த ஒருவரை, எதிர்பாராமல் நேரில் சந்திக்க நேர்ந்தால், ஏற்படும் மகிழ்விற்கு எல்லைதான் ஏது.

    அப்படி ஒரு வாய்ப்பு, ஒரு மகிழ்ச்சி எனக்குக் கிட்டியது. அதனைத் தங்களுடன் பரிந்து கொள்வதில், முரசம் கொட்டி முழங்குவதில் பெருமையடைகின்றேன்.

     கடந்த 27.6.13 அன்று திரு ஹரணி அவர்களின் நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கி முத்தெடுத்த எனது அனுபவத்தினை பகிர்ந்திருந்தேன். மறு நாள் 28.6.13 மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல் வலைப் பூவில் நுழைந்தேன்.



      திரு. ஹரணி பற்றிய பல செய்திகள் புதிது. இன்னுமா அவர் தினமும் அண்ணாமலைப் பல் கலை கழகத்துக்கு தினமும் பயணிக்கிறார்.? அவரது மின் அஞ்சல் மற்றும் தொலை பேசி எண் எதிர்பாராமல் கிடைத்தது. உங்களுடைய தொலை பேசி எண் தெரியவில்லையே. வருகிற வாரம் திருச்சி , வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று பயணிக்கத் திட்டம். என் தொலைபேசி எண். 080-28394331 லாண்ட் லைன் எண். .

    GMB  அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க, கைகளோ அணிச்சையாய் அலைபேசியை எடுத்து, எண்களைத் தட்டின.

     பெங்களூரில் தொலை பேசி ஒலிக்கும் ஒலி கேட்கிறது. GMB அய்யா அவர்களின் காந்தக் குரலை, நேசக் குரலை முதன் முறையாக்க் கேட்டேன்.

     4.7.13 வியாழக் கிழமை காலை 7.15 மணி. கரந்தைத் தமிழ்ச் சங்க வாயிலில், உமாமகேசுவரனாரின் திரு உருவின் காலடியில் காத்திருந்தேன். சிறித நேரத்தில் காரொன்று வந்து நிற்க, மலர்ந்த முகத்துடன் சிரித்தவாறு GMB  அய்யா.

       அய்யா, அம்மா மற்றும் அவர்களின் திருமகனார். வணக்கம் கூறி வரவேற்றேன்.

     அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நால்வரும், திரு ஹரணியின் இல்லத்தில் இருந்தோம். ஹரணி அவர்கள் வீட்டின் மாடியில் இருந்த தனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.

          புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
          புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்
என்பார் பாரதிதாசன்.

      பாரதிதாசன் கூறும் புத்தக்க் சாலைக்குள், புத்தகச் சோலைக்குள், நுழைந்ததைப் போல் ஓர் உணர்வு. அறையெங்கும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள் மட்டுமே.

கையளவு கற்க ஆசை, கடுகளவிலேய உழன்று கொண்டிருக்கிறேன்
என்பார் ஹரணி. இதுவே கடுகளவென்றால், எனது அறையினை நினைத்துப் பார்த்தேன். மௌனமாய் அமர்ந்தேன்.




     உணவருந்த ஹரணி அவர்கள் அழைத்த போது, அய்யா சிரித்துக் கொண்டே மறுத்தார். உணவு வேண்டாம். காபி மட்டும் போதும். உங்களை காணவும், கண்டு பேசி மகிழ்ந்திடவுமே வந்தேன். உணவு உண்ண அமருவோமேயானால், நாம் பேசும் நேரம் குறைந்து விடுமல்லவா? ஒரு நொடியினைக் கூட வீணடிக்காமல் உரையாடி மகிழ  விரும்புகின்றேன்.

      பெங்களூரில் இருந்து திருச்சிக்கு, தொடர் வண்டியில் வந்து, பின்னர் திருச்சியிலிருந்து வைத்தீசுவரன் கோயிலுக்குப் பேருந்தில் செல்வது என்று முடிவு செய்திருந்தோம்.

     ஆனால் பேருந்தில் வந்தால் உங்களைச் சந்திக்க இயலாமல் போய் விடுமே என்றுதான், பெங்களூரில் இருந்து காரிலேயே வந்து விட்டோம் என்றார்.

     நெகிழ்ந்து போனோம்.



     நேற்று திருச்சியில் திரு வை.கோபால கிருஷ்னன் அவர்களையும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்களையும் சந்தித்தேன். திரு ரிஷிபன் அவர்களும், திரு ராமமூர்த்தி அவர்களும் அலைபேசியில் பேசினார்கள் என மகிழ்ந்து கூறினார்.

      பொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB  அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின் அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான்.

     அய்யா அவர்களின் மகன் கூறினார். அப்பாவிற்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவார். வாழ்வியல் அனுபவத்தை, கேட்டதை, பார்த்ததை, ரசித்ததை, படித்ததை என நிறைய எழுதுவார். நான்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு மடி கணினியை கொடுத்து, இதில் எழுதிப் பாருங்களேன் என்றேன். அன்று தொடங்கியவர் என்றார்.

      அம்மா அவர்கள் கூறினார், காலையில் எழுந்த்தும் இவர் காபி குடிக்கிறாரோ இல்லையோ? நேராக கணினிக்குச சென்று விடுவார்.

      தமிழ் தட்டச்சு தெரியுமா? என்று கேட்டோம். அய்யா கூறிய பதில் எங்களை வியப்பின விளிம்பிற்கே கொண்டு சென்றது.

      தெரியாது.

     அடுத்த கேள்வியைக் கேட்க, எங்களுக்கு வார்த்தையே வரவில்லை. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

      எனக்குத் தமிழ் தட்டச்சுத் தெரியாது. கணினியின் விசைப் பலகையில் இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் உரிய, தமிழ் எழுத்தை பலவாறு முயன்று, மனதில் ஒரு பதிவாக பதிய வைத்துக் கொண்டேன். வலது கையின் ஆள் காட்டி விரல் ஒன்றினை மட்டுமே பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

     வலைப் பூவில் ஒவ்வொரு பதிவையும், நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குக்  குறையாமல் எழுதுகிறீர்களே, ஒரு பதிவை முழுமையாய் தட்டச்சு செய்து முடிக்க, எவ்வளவு நேரமாகும் என்றோம்.

     ஒரு பதிவை தட்டச்சு செய்ய எனக்கு ஒரு நாளாகும். காலை முதல் மாலை வரை, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன்.

     பிரமித்துப் போய்விட்டோம். அய்யா அவர்களின் ஆர்வத்திற்கும், மனம் தளரா, விடா முயற்சிக்கும், நாமெல்லாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.

அய்யா, அம்மா, ஹரணியின் மகன் குகன், ஹரணி மற்றும் நான்

      அப்பொழுதுதான் ஒரு உண்மை பளிச்சென்று விளங்கியது. ஊன்று கோலை நாட வேண்டிய வயதில், கம்பீர நடைபோடும் காரணம் புரிந்தது. இவரது கரமும் மனமும், எழுது கோலை அல்லவா இறுகப் பற்றியிருக்கிறது.

     தூயஉள்ளம்  அன்புள்ளம்  பெரிய உள்ளம்
           தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
      தாயுள்ளம்  தனிலன்றோ  இன்பம்  ஆஙகே
           சண்டையில்லா  தன்னலந்தான்  தீர்ந்த தாலே

என்று முழங்குவார் பாரதிதாசன். அய்யா அவர்களின் வலைப் பூவில் நுழைந்து, அவர் பற்றிய தன்னிலை விளக்கத்தைப் பார்ப்போமானால், மனதினை மகிழச் செய்யும் வாசகம் ஒன்றினைக் காணலாம்

When are we going to feel all are equal and love all?

      ஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் GMB  அய்யா அவர்கள்.

வாழ்வின் மறக்க இயலா சந்திப்பு, இச்சந்திப்பு.

26 கருத்துகள்:

  1. நெகிழ வைக்கும் இனிய சந்திப்பு உணர்வுபூர்ணமான வரிகளில் புரிகிறது...

    GMB ஐயா அவர்கள் ஒரு பதிவு எழுத ஒரு நாள் ஆகிறது என்பது வருத்தமாகத் தான் உள்ளது... அவரின் ஆர்வமும் மன உறுதியும் வியக்க வைக்கிறது...! ஐயா அவர்கள் 16 வயது இளைஞர் தான்... வாழ்த்துக்கள் ஐயா...

    பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நல்ல மனிதர்களின் சந்திப்பு
    தேனாய் இனிக்கும் தித்திப்பு
    அது மன இருளில் ஒளி
    வீசும் மத்தாப்பு
    பாராட்டுக்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல மனிதர்.நம் தமிழர்.நானும் பெங்களூர் சென்றால் அவரைச் சந்திக்காமல் திரும்ப மாட்டேன்.நட்பு செல்வங்களைக் காட்டிலும் மகிழ்ச்சித்தரக்கூடியது

    பதிலளிநீக்கு
  4. எழுத்துலக ..........

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ...... முடிவே இல்லாதது. ;)))))

    இனிய சந்திப்புக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. நான் அவர்களை நேரடியாகச் சந்தித்திருப்பதால் நீங்கள் அவர் குறித்துச் சொல்லிப போனது மிகையாகப்படவில்லை சொல்லியது குறைவெனவேப்பட்டது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நெகிழ வைக்கும் சந்திப்பு பற்றிய பதிவு

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஜெயக்குமார் - ஜி எம் பி அய்யாவினையும் அவரது குடும்பத்தாரினையும் சந்தித்து அளவளாவியது குறித்து மிக்க மகிழ்ச்சி - அவர் மதுரை வந்திருந்த போது அனைவரையும் சந்தித்தது இன்னும் மனதில் நிழலாடுகிறது. பழகுவதற்கு இனியவர் - சுறுசுறுப்பில் இளைஞர் - என்றும் மார்க்கண்டேயன் - ஒரு விரல் தட்டச்சா - புதிய செய்தி - பதிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. ஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் GMB அய்யா அவர்கள்.

    வாழ்வின் மறக்க இயலா சந்திப்பு பற்றிய பகிர்வுகள் அருமை..! பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் ஜெயக்குமார்...


    நெகிழ்ந்துபோயிருக்கிறேன் சொற்களற்று.

    உங்களின் அன்பிற்கு என்ன கைம்மாறு செயயப்போகிறேன். நேற்று முன்தினம் சுந்தர்ஜியின் பதிவால் அவரிடன் கடன் பட்டேன். இன்று இந்தப் பதிவால் உங்களிடம் கடனாளி ஆகிவிட்டேன்.

    ஒரு சிறிய சந்திப்பை இத்தனை நேர்த்தியாக எழுதமுடியுமா என்று வியந்து பார்க்கிறேன்.

    உங்களின் எழுத்தாற்றல் இன்னும பல உயரங்களைச் சந்திக்கப்போகிறது. அதில் துளியும் ஐயமில்லை.

    மேன்மேலும் பல சிறப்புக்களை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்றும் வளங்குறையாது பெற்றிருக்கவேண்டும்.

    அண்ணனையும் அண்ணியையும் நினைத்துப் பெருமைகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அன்புமிக்க ஆர்வலர் சந்திப்பு!
    ஆச்சரியத்தில் அமிழ்ந்துபோனேன் ஐயா!

    ஜி அம் பி ஐயா போன்றவர்களால்தான் எம் மொழி இன்னும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

    இனிமையான சந்திப்பினைப் பகிர்ந்து கொண்டமைக்கு இதயங்கனிந்த நன்றிகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  11. அருமையான சந்திப்பு. நானும் அவரது பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
    மிக்க மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. திரு GMB ஐயா அவர்களின் திருச்சி விஜயம் பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட என் பதிவினிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது அனைவரும் தகவலுக்காக மட்டுமே.

    http://gopu1949.blogspot.in/2013/07/20.html

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. மனமொத்தவர்களுடனான முதல் சந்திப்பிற்கு எப்பொழுதுமே ஒரு தனிச்சுவை உண்டு.

    பதிலளிநீக்கு
  15. நல்ல சந்திப்பைப் பகிர்ந்தமையறிந்துமகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான,அழகான,அற்புதமான,அண்பான,அன்னியோன்யமான வலைப்பு நட்பினை நேரில் கண்டு நல்ல நெஞ்சத்தோடு பல நெஞ்சங்களில் அன்பின் நெகிழ்வினை ஊட்டி திலைக்க செய்த அன்பு உள்ளத்திற்கு முதற்கன் எனது நெஞ்சார்ந்த நன்றி.அய்யா பெரியவர் GMB அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவரை பற்றி தாங்கள் வலைப்பூவில் தங்கள் பதிவின் வாயிலாக அவர் ஒரு பட்டாம்பூச்சி தேனியை போன்று சுழன்று தனது எழுத்தின் வாயிலாக தேனைகொடுக்கிறார்.தன் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் உயிரி தேனி. தேனியைபோல் ஒரு சுறுசுறுப்பான மாமனிதர் GMB என்பதை அறிந்துகொண்டதில் நான் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.மார்க்கன்டேயன் என்றும் மார்க்கன்டேயனே!பல மார்க்கன்டையன்களை வாரந்தோறும் எங்கள் முன் கொண்டுவரும் தாங்களும் என்றென்றும் மார்க்கண்டயனே!நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
  17. அன்பு உள்ளங்கள் சந்தித்த விதத்தினை விவரித்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது!..

    பதிலளிநீக்கு
  18. தங்கள் பரவசம் எங்களையும் தொற்றிக் கொண்டது.மனதுக்கு வயதே இல்லை என்பதை நிருபித்து விட்டார் GMB ஐயா அவர்கள். சந்திப்பை நேர்த்தியாக எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  19. Dear KJ.,
    I am very glad to read your article about the meeting of you and Mr.HARINI with Mr.GMB of Bangaluru and I wish you to continue your nice job of introducing TRUE TAMIL PEOPLE. Thanking you KJ. KARANTHAISARAVANAN

    பதிலளிநீக்கு
  20. “நல்லோரைக் காண்பதுவும் நன்று“ என்று தெரியாமலா சொன்னார்கள்?

    பதிலளிநீக்கு
  21. இனியதோர் சந்திப்பு. உங்கள் பதிவு மூலம் எங்களையும் சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  22. // பொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின் அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான் //

    உண்மைதான். முதன்முதல் அவரை நான் சந்தித்த்போதும் இதனையே உணர்ந்தேன்.
    பதிவில் ஹரிணி அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். GMB அவர்களது சிறு பேட்டி தனி சிறப்பு.

    பதிலளிநீக்கு
  23. இனியதொரு சந்திப்பை கொஞ்சம்கூட இனிமை குன்றாமல் மிக அழகாகத் தொகுத்து வழங்கியதற்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. நல்லவர்கள் சந்திப்பும் ஒரு நல்ல புத்தக அறிமுகம் போல!ம்ம் இனிமை அவர் சந்திப்பு என்பதை இயம்பும் பகிர்வு!

    பதிலளிநீக்கு

  25. அன்பின் ஜெயக்குமார் அவர்களுக்கு, எழுத எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. உங்களை நான் சந்தித்ததன்மூலமும் இப்பதிவின் மூலமும்பதிவர்கள் மத்தியில் எனக்கு ஒரு தனி அந்தஸ்து அளித்துப் பெருமை சேர்த்து விட்டீர்கள். கற்றவர்கள் மற்றும் வித்தகர்கள் மத்தியில் நான் ஒரு கற்றுக்குட்டி. எழுதுவதில் உள்ள ஆர்வமும் வயதின் அனுபவமுமே என் பதிவுகளாய் வெளி வருகின்றன. இப்பதிவின், மற்றும் திரு. இளங்கோ அவர்களின் பதிவின் பின்னூட்டங்களில் இருந்து என் இனிய சக பதிவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிய முடிகிறது. இதற்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா09 ஆகஸ்ட், 2013

    வாழ்வின் மறக்க இயலா சந்திப்பு.
    மிக இனிமையாக இருந்தது.
    வாசிக்க மகிழ்வாக இருந்தது.
    பணி தொடர நல்வாழ்த்து சகோதரரே..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு