13 அக்டோபர் 2014

வேருக்கு நீர்


ஜுலை 15
காமராசர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும்,
ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவோம்
இதுவே,
கர்மவீரர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்.

     நண்பர்களே, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் அன்று வெளியிட்ட எனது பதிவினை, மேற்கண்டவாறுதான் நிறைவு செய்திருந்தேன்.

     இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு மின்னஞ்சல் வந்தது.


அன்புள்ள ஆசிரியருக்கு,

     அவ்வப்போது உங்கள் வலை தளத்தைப் பார்த்து வருகிறேன்.

      ஏழை மாணவர்களைக் கடக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருப்பீர்கள். இன்றைக்கு உடனே பணம் தேவைப்படுபவர்கள் இல்லாவிடினும், நாளை தேவைப் படுபவர்கள் இருப்பார்கள்.

     அதிலும் கல்வி கற்கும் மாணவன், அதற்கான வெறும் பணம் இல்லாமல், கற்பதை நிறுத்துவது மிகவும் கொடுமை.

     உங்களின் வங்கிக் கணக்கு எண்ணோ அல்லது வேறு வழிகளோ இருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும். என்னால் இயன்ற தொகையை உடனே அனுப்ப ஆவலாக உள்ளேன்.

     மனித மனம் விசித்திரமானது, இன்றைக்கு இருக்கும் எண்ணம் திரும்ப நாளைக்கு வருமா என்பதே சொல்வதறிது. இன்றைக்கு நாமிருக்கும் நிலைமையில் நாளை இருப்போமா என்றும் சொல்வதறிது.

அன்புடன்,
முரளி

     மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க வியப்புதான் மேலிட்டது. கடல் கடந்து வந்த மின்னஞ்சல் இது.
    

நண்பர் முரளி சேஷன், பகரைனில் உள்ள JAWAD BUSINESS GROUP என்ற நிறுவனத்தில், முதன்மைத் தகவல் அலுவலராகப் பணியாற்றி வருபவர்.

     இவர் திருநெல்வேலியைச் சார்ந்தவர். இவரது தந்தை எனது சாதியைச் சார்ந்தவர். ஆசிரிய சாதி.

     இவரது தந்தை ஓர் ஆசிரியர் என்றதுமே, என்னையுமறியாமல், ஓர் பெருமை, என் உள்ளத்தில் இருந்து எட்டிப் பார்த்தது.

     மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பிதாவே குருவானால். கொடுத்து வைத்தவர்தான்.

     நண்பர் முரளி, பொன்னமராவதியின் அருகிலுள்ள, பூலாங்குறிச்சி என்னும் ஊரில், தன் தந்தை தலைமையாசிரியராய் பணியாற்றிய பள்ளியிலேயே படித்தவர்.

     தலைமையாசிரியராய் பணியாற்றிய, இவரது தந்தை, பதவி உயர்வு பெற்று, சிலகாலம், தூத்துக்குடி மாவட்டத்தின், முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

       கடந்த 2008 ஆம் ஆண்டு, வாழ்வினின்றும் ஓய்வு பெற்று, இறைவனின் திருவடி நிழலில் வாழ்ந்து வருபவர்.

      நண்பர் முரளி அவர்களுக்கு எனது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பினேன். சரியாக இரண்டே நாளில், என் அலைபேசியில், ஓர் குறுந்தகவல்.

எனது வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப் பெற்றிருந்தது.

     நண்பர்களே, எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மாணவனின் கல்விச் செலவிற்காக, ரூபாய் ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ அனுப்புவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் முழுதாய் பத்தாயிரம்.

     சிறிது நேரத்தில் ஒரு மின்னஞ்சலும் வந்தது.

அன்புள்ள ஆசிரியருக்கு,

     என்னால்  முடிந்ததை அனுப்பியுள்ளேன். ஆசிரியரிடமிருந்து, தகுதியுள்ளவர்களை அது சென்றடையட்டும்.

     எந்த காரணத்தைக் கொண்டும், செய்யும் சிறு உதவிகளில் கூட, என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. தயவு செய்து இதனை மனதில் கொள்ளவும். மிக்க நன்றி.

அன்புடன்,
முரளி

     நண்பர்களே, எனக்குப் புரியவில்லை. என்ன மனிதர் இவர்.

    
நண்பர் முரளி என்.சேஷன்
( நண்பரின் புகைப்படம் இல்லாமையால், இவ்விடத்தினை நண்பருக்காக
ஒதுக்கீடு செய்து வைத்துள்ளேன்)

சிறு கோயிலுக்கு, குழல் விளக்கு ஒன்றினை காணிக்கையாக வழங்கி, அந்த விளக்கின் மீது, உபயம் என்று தங்களது பெயரினைப் பெரிதாக எழுதி, அவ்விளக்கின் ஒளியினையே, பாதிக்கும் மேல் மறைக்கும், மனிதர்கள் வாழ்ந்து வரும் உலகில், இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போனேன்.

     நண்பரும், நான் பணியாற்றும் பள்ளியின் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களிடம், நண்பர் முரளி அவர்கள் அனுப்பியுள்ள தொகை குறித்துத் தெரிவித்தேன்.

     நான் பணியாற்றும் பள்ளியானது, மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயிலும் பள்ளியாகும். அதிலும் ஏராளமான மாணவர்கள், பள்ளியில் காலடி எடுத்து வைத்திருக்கும், முதல் தலைமுறை மாணவர்கள்.

     தேங்காய் எண்ணயினையேச் சந்தித்தேயிராத தலைமுடி, காலணி காணாத கால்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும், ஒற்றைச் சீருடையினையே, ஆண்டு முழுவதும் அணிந்து வரும், மாணவ, மாணவியர் இருபத்தோரு பேரைத் தேர்ந்தெடுத்தோம். அனைவருமே ஆறாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் பயில்பவர்கள்.

     இந்த இருபத்தோரு பேருக்கும் சிருடை ஒன்றினை, அளவெடுத்துத் தைத்தே வழங்குவது என்று முடிவு செய்தோம்.

      தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள், இருபத்தோரு பேருக்கும், துணி எடுக்க நானும் வருகிறேன் என்றார். பள்ளி உடற் கல்வி இயக்குநர் நண்பர் திரு கே.திவாகர் அவர்கள், நானும் வருகிறேன் என்றார். மூவருமாகச் சென்று சீருடைத் துணிகளை வாங்கினோம்.

     கரந்தைப் பகுதியினைச் சேர்ந்த, சிப்பி தையற் கடை உரிமையாளர், நண்பர் திரு எம்.லஷ்மி குமார் அவர்கள், திபாவளித் திருநாள் பணிகளுக்கு இடையிலும், ஏழை மாணவர்களுக்கு, என் பங்கிற்கு, என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன் என்று கூறி, மிகக் குறைந்த, தொகையினைத் தையற் கூலியாகப் பெற்றுக் கொண்டு, 21 பேருக்கும் சீருடைகளைத் தைத்து வழங்கினார்.

     இடையில் காலாண்டுத் தேர்வும், காலாண்டு விடுமுறையும் குறுக்கிட்டதால், 13.10.2014 திங்கட் கிழமையன்று, நடைபெற விருக்கும், பள்ளிப் பேரவைக் கூட்டத்தின் போது, பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும், சீருடைகளை வழங்குவது என்று முடிவெடுத்தோம்.

நண்பரே, வணக்கம். நலம்தானே.

     தாங்கள் அனுப்பிய தொகையில், தீபாவளித் திருநாளைக் கொண்டாட, புதுத் துணி எடுக்க இயலாத, மாணவ, மாணவியர் 21 பேருக்கு, பள்ளிச் சீருடையினையே, தீபாவளிப் பரிசாக வழங்க எண்ணியுள்ளோம்.

     இச்சீருடைகளை மாணவ, மாணவியருக்கு வழங்கும்போது, தங்களைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டுமல்லவா?

     தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றினை அனுப்ப அன்புடன் வேண்டுகிறேன். நண்பரே, தங்களின் முகத்தினை, படத்தில் கூட, நான் இதுவரை பார்த்ததில்லை.

      முகம் தெரியா நண்பரே, தங்களின் புகைப் படம் ஒன்றினை, மின்னஞ்சலில் அனுப்பினால் மகிழ்வேன்.

என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்

      நண்பர்களே, இவ்வாறு ஒரு மின்னஞ்சலை, நண்பருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். அடுத்த நாளே பதில் வந்தது.

அன்புள்ள ஆசிரியருக்கு,

    தங்களின் கடிதத்துக்கு நன்றி. சிறிய தொகையையும் பெருமிதத்துடன் நோக்கும் தங்களின் மனதிற்கு நன்றிகள்.

     மனதில் திடீரென்று உங்களுக்குப் பணம் அனுப்பலாம். அதனால் சிலருக்குப் பலன் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. பணம் அனுப்பினேன். இந்தச் செயல் புரியத் தூண்டிய இறைவனுக்கு நன்றி. அதனை அப்படியே மறத்தல்தான் சரியான செயலாக இருக்கும். தயவு செய்து என்னுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்ளவும். தங்களின் மற்றும் தங்களின் தலைமையாசிரியரின் எண்ணத்துக்கு நன்றி. இந்தச் சிறிய செயலை மறந்து விடவும்.

     இந்தச் சிறு துளி எவருக்காயினும் உபயோகமாக இருப்பின், அவர்கள் நல்ல நிலைமைக்கு வரும்போது, தன்னிலும் எளியவரை மனதில் நினைத்துத் தகுந்த வாய்ப்பு வரும்போது, அவர்களுக்குச் சிறிதேனும் உதவுகிற எண்ணம் வரப்பெற்றால் அதுவே பெரிது.

      நம் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மகன், தன் சமூகக் கடமையாக நினைத்து, இந்த உதவியைச் செய்துள்ளார் என்று நினைவு கூர்ந்தால் போதுமானது.

     சமயம் வரும்போதெல்லாம் தொடர்பு கொள்கிறேன். நம் எல்லோரையும் இணைப்பது தமிழ் மற்றும் தமிழ் நிலம்.

      சரியான பிள்ளைக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் எழுதுங்கள். இறைவன் அத்தகைய உதவியைச் செய்யும் நிலையில் என்னை வைத்திருப்பானாகில் அவசியம் வேருக்குச் சிறிது நீராகிறேன்.

அன்புடன்,
முரளி

     நண்பர்களே, வேருக்குச் சிறிது நீராகிறேன் என்று கூறியவர், தன் படத்தினையோ, தனது தந்தையின் படத்தினையோ, இன்று வரை அனுப்பவே இல்லை. இவ்வளவு ஏன், தனது தந்தையின் பெயரினைக்கூட தெரிவிக்க மறுத்துவிட்டார்.

      மின்னஞ்சலில் அவரது பெயரினைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், தன் பெயரினைத் தெரிவித்துள்ளார். இல்லையேல் தனது பெயரினைக் கூட தெரிவித்திருக்க மாட்டார்.

       நண்பர்களே, இன்று 13.10.2014 திங்கட்கிழமை காலை, எனது பள்ளியின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் பேசும்போது, நமது பள்ளியின் பட்டதாரி ஆசிரிய்ர் கி.ஜெயக்குமார் அவர்களின், முகமறியா நண்பர் ஒருவர் வழங்கிய தொகையில், 21 மாணவ, மாணவியருக்குச் சீருடை வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

      அடுத்த்தாக நான் பேசினேன். ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரின் மகன், தனது சமூகக் கடமையாக நினைத்து இவ்வுதவியினைச் செய்துள்ளார். பணம் அனுப்பிய நண்பர், கருப்பா, சிகப்பா என்பது கூட எனக்குத் தெரியாது, அவரது முகத்தை இன்றுவரை நான் பார்த்த்தில்லை, ஏன் அவரது குரலைக் கூட இன்றுவரை கேட்டதில்லை. ஆயினும் மனமுவந்து ரூபாய் பத்தாயிரத்தை வழங்கியுள்ளார் என்று கூறியபோது, மாணவ, மாணவியரின் கைத் தட்டலால், பள்ளியே அதிர்ந்தது.

        முதலில் ஒரு மாணவிக்குத் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் சீருடையினை வழங்கினார். பின்னர் மற்ற ஆசிரியர்களை அழைக்கவே, ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு மாணவனுக்குச் சீருடைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

        
தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் உரையாற்றுகிறார்

மாணவர்களிடையே நான் 




தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் பரிசு வழங்குகிறார்


உதவித் தலைமையாசிரியர் திரு ஆ.சதாசிவம் அவர்கள் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு மு.பத்மநாபன் அவர்கள் பரிசு வழங்குகிறார்

ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராசன் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு எஸ்.செந்தில் குமார் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு ஜி. விஜயக்குமார் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு ஆர்.லெனின் பரிசு வழங்குகிறார்

உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் பரிசு வழங்குகிறார்

சீருடையினைப் பரிசாகப் பெற்ற மாணவ மாணவியர்

நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் மாணவர்களைப் பார்த்து, நண்பர் முரளி அவர்கள் செய்திருக்கும் இவ்வுதவியினை நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும், நீங்கள் பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்று, வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு, நீங்களும், உங்களால் இயன்ற உதவியினை, ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும். என்ன செய்வீர்களா என்றார்.

       செய்வோம், செய்வோம் என மாணவ, மாணவியர் உற்சாகக் குரலில் உறுதி அளித்தனர்.


தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண் டேன்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
     தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்

கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
     கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
      சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்
      அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்
      மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
       தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம், ஆங்கே
       சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே
                                              - பாவேந்தர் பாரதிதாசன்


        தன்னலமற்ற, தூய உள்ளத்திற்கு, அன்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரரே, நண்பர் முரளி அவர்களே, இன்றில்லாவிடினும், ஓர் நாள், நாம் சந்திப்போம்.

வாழ்த்துக்கள் நண்பரே
---





78 கருத்துகள்:

  1. நண்பர் முரளிக்கு எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இம்மாதிரியான சில நல்லவர்களால் மனிதத்தின் மீது நம்பிக்கை எழுகிறது. நண்பர் முரளிக்கும், உங்களுக்கும் உங்கள் பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. முகமறியா நண்பர் முரளியின் செயல் பாராட்டுக்குரியது. :)

    //அவர்கள் நல்ல நிலைமைக்கு வரும்போது, தன்னிலும் எளியவரை மனதில் நினைத்துத் தகுந்த வாய்ப்பு வரும்போது, அவர்களுக்குச் சிறிதேனும் உதவுகிற எண்ணம் வரப்பெற்றால் .......//

    அருமையான எண்ணம். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. படித்து மகிழ்ந்தேன், மனம் நெகிழ்ந்தேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா13 அக்டோபர், 2014

    சகோதரர் முரளிக்கு இனிய வாழ்த்து.
    அவர் சீரும் சிறப்புடன் வாழட்டும்.
    கண்கள் கலங்கிய படி வாசித்தேன்.
    பதிவிற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் இளகிய மனம் தெரிகிறது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  6. வேருக்கு நீர் = கரந்தை ஜெயக்குமார் = திரு முரளி என்ற முகமறியா நண்பரின் உதவி. வந்த உதவியை பக்குவமாக பயன்படுத்திய அற்புதமான ஆசிரியர்கள் - எல்லோரும் மாமனிதர்கள், நீடுழி வாழ்க -
    இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும், முக நூல் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  7. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. நண்பர் முரளிக்கும் அவர் அளித்த உதவியை மிகவும் பொருத்தமாய் பயன்படுத்திய உங்களுக்கும் உங்கள் தலைமையாசிரியருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  8. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.
    பிதாவே குருவானால். கொடுத்து வைத்தவர்தான்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல உள்ளங்கள்
    சேவை தொடரட்டும்
    சமுதாயத்திற்கு தேவை
    உங்களின் கருணை
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. திரு.முரளி அவர்கள் வாழ்க பல்லாண்டு.ஈகையால் கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம். கட்டுரையின் வாயிலாக உலகை அன்பு என்னும் கயிற்றால் கட்டுரச்செய்த உங்களின் எழுத்துப்பனிக்கு தலையாய வணக்கம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மனம் நெகிழ்கின்றது ஐயா!..
    நல்ல மனங்கள் என்றென்றும் வாழ்க!..
    நலம் பல பெற்று பெருவாழ்வு வாழ்க!..

    அனைவரையும் இணைப்பது - தமிழ்!.. தமிழே!..

    பதிலளிநீக்கு
  13. 1952ம் ஆண்டு ! பணம் கட்டி பரீட்சை எழுதவேண்டும் ! பணம் கட்டமுடியவில்லை ! கடைசி நாளும் போய்விட்டது ! தலமை ஆசிரியர் கூப்பிட்டார் ! பயந்து நடுங்கிக்கொண்டு பொனேன் ! சத்தம் போட்டார் ! "உங்கப்பா என்ன பண்றார் ? என்று கேட்டார் !
    "இல்லை ! இறந்துவிட்டர்" என்றேன் !
    "போ 1 நல்லபடி ! நாங்கட்டிகறேன் !"
    கண்களை துடைத்துக்கொண்டு கிளம்பினென்!
    "இந்த பாரு ! நல்லபடிச்சு சம்பாதிக்கணும் ! மத்தவ்ங்களுக்கு உதவியா இருக்கணும் ! " என்றார் !
    அது அம்பை தீர்த்தபதி உயர் நிலைப்பள்ளி !
    தலைமை ஆசிரியர் பேயர் E.H .பரமேஸ்வர ஐயர் !
    அந்த மாணவன் பெயர் ஆர்.சியாமளம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவே தெய்வம் என்பதன் அர்த்தம் இதுதானே ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  14. திரு .முரளி சேஷன் தாள எண்ணம் மெய் சிலிர்க்க வைக்கிறது .அந்த நல்ல மனம் எங்கிருந்தாலும் வாழ்க !
    இந்த பதிவு பல பேரை சென்றடைய வேண்டும் ,நமது நண்பர்கள் அனைவரும் த ம வாக்களிக்க வேண்டும் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  15. இது போன்ற மனிதர்களால் தான் இன்றும் மழை பெய்கிறது.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா14 அக்டோபர், 2014

    மதிப்பிற்குரிய ஐயா, பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய பணியைச் செய்திருக்கிறீர்கள். ஈதல் இசைபட வாழ்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் அன்பர் முரளி. இதில் எனக்கு ஒரு சிறிய மனக்குறை உண்டு. பல குழந்தைகள் பயிலும் ஒரு பள்ளியில் ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தால் மற்ற குழந்தைகளுக்கு ஏமாற்றமாய் இராதா? சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்திலுள்ள குழந்தைகளைத் தெரிவு செய்து அவர்கட்குப் பரிசு என்ற பெயரில் பொதுவெளியில் வெளிப்படையாகக் கொடை தந்தால், அவர்களுக்குத் தாழ்வு தனப்பான்மை, சுயபச்சாதாபம் போன்றவை ஏற்படலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவதும் யோசிக்க வேண்டிய விசயம்தான் ஐயா
      ஆனாலும் முடிந்த வரை , ஒவ்வொரு ஆசிரியருமே உதவிக் கொண்டுதான் இருக்கிறோம் நண்பரே

      நீக்கு
  17. தன்னலமற்ற திரு. முரளி அவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  18. ஆயிரம் கோவில்களைக் கட்டுவதிலும் சிறந்த சேவை! தலை வணங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. அண்ணா,
    உங்களால் தான் இதுபோன்ற சாதனைகளை எளிதில் செய்யமுடியும்:)
    அது உங்கள் எழுத்துக்கும், நல்ல மனதிற்கும் கிடைத்த ஆகப்பெரும் பரிசு.**அவர் அப்பா என் சாதி*** என் கண்களையே ஒரு நொடி நம்பாமல், அடுத்தவரி படித்த பின் தான் புரிந்தது:) முரளிகள் பலர் தோன்றட்டும் அண்ணா!

    பதிலளிநீக்கு
  20. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சகோதரா வார்த்தைகளே இல்லை என்ன சொல்லட்டும் வெம்பி அழவைத்த பதிவு என்ன சொல்ல நல்லவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அதுவும் நல்ல தொரு கைகளில் தந்து சரியான வழியில் சென்று சேரும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன். செயல்பட்டிருக்கிறாரரே அங்கு தான் சகோதரா நீங்கள் நிற்கிறீர்கள் நமக்கு பாடம் புகட்டும் பதிவு இது. அது ஒரு பெரிய கம்பெனி. நான் அங்கு இருக்கும் போது அதில் எனக்குத் தெரிந்த பலர் அங்கு வேலை செய்தார்கள் 90 s ல்.
    அவர் எங்கிருந்தாலும் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். தங்கள் அருங்குணதையும் கண்டு மகிழ்கிறேன் சகோ! தங்கள் நட்பு என் பாக்கியமே. மிக்க நன்றி பதிவிற்கு தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பு மனம், இளகிய உள்ளம் தெரிகிறது சகோதரியாரே.
      தாங்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறீர்கள் என்பதை அறியும் போது மனம் மகிழ்கிறது சகோதரியாரே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  22. ஜுலை 15
    காமராசர் பிறந்தநாள்
    கல்வி வளர்ச்சி நாள்
    நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும்,
    ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவோம்
    இதுவே,
    கர்மவீரர் காமராசருக்கு
    நாம் செலுத்தும்
    உண்மை அஞ்சலியாகும்.
    மிகவும் சரியே! நண்பர் முரளிக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! மட்டுமல்ல அவரது பெயர் வெளிவரக்கூடாது என சொல்வது மிக மிகச் சரியே! வெளி வருவது என்றால் அது விளம்பரம் ஆகி விடும் நண்பரே! வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பதுதான் உயர்ந்த விஷயம்!

    அது போன்று செய்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் நண்பரே! தங்கள் சேவையும், முரளிகள் போன்றோரின் சேவைகளும் தொடர வேண்டும்! நண்பரே! மனம் கனத்த பதிவு!

    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      நண்பர் முரளியைப் பொறுத்தவரை, வலது கை கொடுப்பது , இடது கைக்குத் தெரியக் கூடாது என்றுதான் விரும்பினார். அம் முடிவில் இருந்து அவர் எள்ளளவும் மாறவில்லை. உண்மையிலேயே பெரிய மனதிற்குச் சொந்தக்காரர்.
      ஆனால் என்னால் அவர் பெயரைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நண்பர் முரளி கோபிக்காமல் இருக்க வேண்டும்.
      நன்றி நண்பரே

      நீக்கு
  23. நல்ல மனிதர்கள்
    உலகை நம்பிக்கை நிறைந்ததாக மாற்றுகிறார்கள் ...

    பதிலளிநீக்கு
  24. அந்த முகமறியாத சகோதரர் முரளி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். தங்கள் பள்ளியின் கல்விப் பணிகளோடு அறப்பணிகளும் தொடரட்டும்.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகத் தொடருவார் ஐயா
      எனக்கென்னவோ, அவர் இப்பொழுதுதான் முதன் முதலாக உதவி செய்கிறார், என்று தோன்ற வில்லை. நமக்குத் தெரிந்து இப்பொழுதுதான் செய்திருக்கிறார்.
      இதுபோன்ற மனிதர்கள், மற்றவர்களுக்கு என்றென்றும் உதவிக் கொண்டேதான் இருப்பார்கள்.
      நன்றி ஐயா

      நீக்கு
  25. முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இதை தான் "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது" என்று சொல்வார்களோ.

    இன்றைக்கு ஒரு சிறிய செயலை செய்தாலும், அதில் தன் பெயர் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் மத்தியில் முரளி அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      விளம்பரம் தேடும் இவ்வுலகில்
      முரளி போற்றப்பட வேண்டியவர்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  26. நண்பர் முரளிக்கு வாழ்த்துக்கள். நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றார் வள்ளுவர். நிச்சயம் இது நண்பர் முரளிக்கும், அவரது எண்ணத்தை செயற்படுத்திய உங்களுக்கும் பொருந்தும் ஐயா. படிக்கும்போதே மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை மனதார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான பணி! அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. இளமையில் வறுமை கொடிதினும் கொடிது என்பார்கள். அந்த நிலையைக் கடந்த வந்தவர்களுக்கு அது மிக நன்றாகவே புரியும். முகமறியா நண்பர் முரளியின் செயல் "ஊருணி நீர் நிறைந்தற்றே" எனும் குறளை நினைவூட்டியது. வாழ்க பல்லாண்டு! அந்தத் தொகையை உரிய முறையில் பயன்படுத்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! இநதப் பருவத்தில் மாணவர்கள் மனதில் ஆசிரியர்கள் விதைக்கும் விதைகளான நற்பண்புகள் நாளைய சமுதாயம் அலம் பெற உதவும் என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் என்னை நெகிழ வைத்த பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  30. மனம் நெகிழ்கிறது ஐயா... இப்படியும் சில பெரியமனங்கள் இருப்பதினால் தான் உண்மையிலேயே உலகம் சுற்றுகிறது போலும்... வலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக் கூடாது என்பதற்கான முழுமையான அர்த்தத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்... அந்த சாருக்கு நன்றிகள், பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே நண்பர் முரளி பெரிய மனதிற்குச் சொந்தக்காரர்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  31. முரளி அவர்களின் தன்னலமற்ற சேவைகண்டு
    நெஞ்சம் நெகிழ்ந்தேன் ஐயா!

    மிகச் சிறப்பு! அருமையான பதிவாக எங்களுக்கும் அறியத் தந்தீர்கள்!
    மிக்க நன்றி ஐயா!

    முரளி அவர்களுக்கும் உங்களுக்கும்
    இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. நற்பணி தொடர்க...வாழ்த்துக்கள்,சிறு துளி பெரு வெள்ளமாகட்டும்.வானமே எல்லையாகட்டும். மேலும் பல கைலாஷ் சத்யார்த்திகள் இந்தியமண்ணில் உருவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  33. நல்ல மனம் வாழ்க.
    கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது ..
    உங்கள் இருவர் பணிக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்

    மிகவும் நல்ல செய்தி ஐயா,
    படிப்பதற்கு மிகவும் நெகிழ்வாக உள்ளது.
    இப்படிப்பட்ட ஈகை குணம் கொண்டவர்களால்தான் உலகத்தில் மழை பொழிகிறது!
    திரு. முரளி ஐயா சிறந்த புகழ் பெருக இறைவனை வேண்டுகிறேன்!
    நன்றி!
    வணக்கம்!!
    நெகிழ்வுடன்,
    சுமங்கல் சரவணன்

    பதிலளிநீக்கு
  35. நெகிழ்ச்சியான பதிவு. குழந்தைகளுக்கும், முகமறியா நண்பருக்கும் வாழ்த்துகள். இத்தகைய தொண்டு பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  36. உங்களோடு கை கோர்த்த அய்யா அவர்களுக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள், தொடரட்டும் ...... வாழ்த்துக்கள்... தர்மம் தலை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  37. இந்த நல்ல மனம் படைத்த திரு. முரளி அவர்கள் எங்கிருந்தாலும் நல்லபடி வாழ்வார்.
    நல்லோர்க்கு நல்லோர் உதவுவர்!
    த.ம.7

    பதிலளிநீக்கு
  38. வேருக்குச் சிறிது நீராகிறேன். எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்.
    முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் அருட் பணிகள்.

    பதிலளிநீக்கு
  39. அருமை! இதைவிட வேறு சொல் தேவையா !

    பதிலளிநீக்கு
  40. முரளி அவர்களுக்கு பாராட்டுக்கள் . நம்மிடையே இப்படியும் வாழ்கின்றார்கள் என்னும் போது பெருமையாக இருக்கின்றது . அவர் சீரும் சிறப்புடனும் வாழட்டும். எண்ணம் அனைவருக்கும் ஈடேற வாய்ப்பு உண்டு. வசதிகள் கிடைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  41. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வேருக்கு நீர் என்ற இந்தப் பதிவில் திரு.முரளி அவர்களின் நற்குணத்தினைக் குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றி. பெயரில்லா அன்பர் தெரிவித்தது ஒரு வகையில் சரியானது என்றாலும் நல்ல செயல்களை விளம்பரமின்றி செய்வதால் மற்றவர்களுக்கு எந்த தூண்டுகோலும் இல்லாமல் அந்த நற்குணங்கள் வளர வாய்ப்பிருக்காது. தவறான செயல்கள் பலவற்றை மாபெரும் வெளிச்சம் போட்டு காட்டும் இந்த நேரத்தில் உளரீதியாக நாம் சிந்தித்து கொண்டிருந்தால் நல்ல பழக்கங்களை நாம் பரவலாக்க முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். அதனால்தான் அன்றைய பேரவைக்கூட்டத்தில் நண்பர் திரு.முரளி அவர்களைப் பற்றியும் அவரின் ஈகைக் குணத்தினையும் மாணவர்களிடையே கூறினேன். ’அந்த நண்பர் தெரிவிக்க வேண்டாம் என மறுத்தப்பொழுதும் ஏன் அவரைப் பற்றி உங்களிடையே தெரிவிக்கிறேன்?’ என்று மாணவர்களிடம் நான் வினவியப்பொழுது “நாங்களும் நல்ல வேலைக்கு சென்றுப் பணிபுரியும் பொழுது இதைப் போன்று இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று மாணவச் செல்வங்கள் உரக்க கூறிய பொழுது நம் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் கசிந்த அந்த கணத்தை என்னால் மறக்க முடியவில்லை. தொண்டுகள் தொடரவும், தங்கள் பதிவுத்தொண்டு தொடரவும் வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்
    ஐயா.

    அருமையான தகவல் திரட்டுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  43. காலம் எப்படி மாறினாலும் மானுடம் போற்றும் மனிதர்கள் என்றும் இருப்பார்கள என்பதற்கு உதாரணமான மனிதர் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  44. அன்பின் ஜெயக்குமார்

    அருமையான பதிவு

    அருமை நண்பர் முரளியின் குண நலன்கள் நன்று நன்று - பாராட்டுக்குரியவர் -

    நல்வாழ்த்துகள் முரளி
    நல்வாழ்த்துகள் ஜெயக்குமார்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு