09 நவம்பர் 2023

தற்கொலைக்கு முயன்றவர்



தேவகோட்டை சாலை.

     தொடர் வண்டி நிலையைம்.

     அந்த மாணவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன், அந்த தொடர் வண்டி நிலையத்திற்குள் நுழைகிறார்.

     ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்.

     எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டார்.

     வேறு வழி தெரியவில்லை.

தற்கொலைதான் ஒரே தீர்வாகத் தெரிந்தது.

     பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி.

     வாழ்வே இருண்டு போய்விட்டது.

     இருண்ட உலகில் இருந்து, வெளிச்சத்திற்கு வர வழி தெரியவில்லை.

     இணைந்து, நீண்டு பயணிக்கும் தண்டவாளங்களே, ஒரே தீர்வாகக் கண்களுக்குத் தெரிந்தன.

     வா, வா என்று அழைத்தன.

     இதோ வருகிறேன் என்று வந்துவிட்டார்.

     தொடர் வண்டி நிலையத்தில் கூட்டமே இல்லை.

     நடைமேடையில் கடை வைத்திருந்தவரை அணுகி, ரயில் எப்பொழுது வரும்? எனக் கேட்டார்.

     காலை ரயில் போயிடுச்சி தம்பி, இனி மாலைதான் அடுத்த ரயில் வரும் என்றார் கடைக்காரர்.

     மாலைதான் வருமா?

     அதுவரை என்ன செய்வது?

     எப்படிப் பொழுதைப் போக்குவது?

     மாலை வரை உடலில், உயிரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

     யோசித்தவரின் கண்களில் காந்தி தென்பட்டார்.

     நடை மேடைக் கடையில், தொங்கிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தில் இருந்த காந்தி, இம்மாணவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சத்திய சோதனை.

     மலிவு விலைப் பதிப்பு.

     விலை ரூ.10.

     தன் சட்டைப் பைக்குள் கைவிட்டுப் பார்த்தார்.

     பத்து ரூபாய்க்கும் மேல் இருந்தது.

     எனவே அம்மாணவர், சத்திய சோதனை நூலை விலை கொடுத்து  வாங்கினார்.

     நடைமேடையில் இருந்த நிழலில் அமர்ந்து, காந்தியைப் படிக்கத் தொடங்கினார்.

     மாலை வரை பொழுதைப் போக்கியாக வேண்டுமே.

     படிக்கப் படிக்க காந்தி, மாணவரின் உள்ளத்திற்குள் மெல்ல மெல்ல இறங்கினார்.

     காந்தி பட்ட துயரங்கள், துன்பங்கள், எதிர்கொண்ட அவமானங்கள் மாணவரின் உள்ளத்தை வருத்தியது.

     எத்துணை துன்பங்கள் வந்தபோதிலும், எத்துணைப் போராட்டங்களைச் சந்தித்த போதிலும், உள்ளம் தளராமல், உறுதியாய் எதிர்த்து நின்றுப் போராடி மகாத்மாவாக உயர்ந்த காந்தியின் வாழ்வு, மாணவரை முழுதாய் புரட்டிப் போட்டது.

     எத்துணை இன்னல்களைக் சந்தித்திருக்கிறார்?

     நான் ஒரே ஒரு தோல்விக்கே, தண்டவாளத்தைத் தேடி வந்திருக்கிறேனே?

     நினைக்கவே அம்மாணவருக்கு, வெட்கமாய் இருந்தது.

    உள்ளத்தில் பிறந்த உறுதியோடு எழுந்தார்.

     வீடு திரும்பினார்.

     படித்தார்,

     அடுத்த தேர்வில் வென்றார்.

     அழகப்பா பல்கலைக் கழகத்தில் பி,ஏ., சேர்ந்தார்.

     படித்தார்.

     முடித்தார்.

     எந்தத் தொடர்வண்டி நிலையத்தில், தன் உயிரை மாய்த்துக் கொள்ள வந்தாரோ, அதே தொடர் வண்டி நிலையத்திற்கு மீண்டும் வந்து, தொடர் வண்டியில் ஏறி, சென்னை சென்றார்.

     சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.

     சட்டம் பயின்றார்.

     வென்றார்.

     உழைத்தார்.

     சிறந்த குற்றவியல் வழக்கறிஞராய் ஒளிர்ந்தார்.

     அரசு வழக்கறிஞராய் வளர்ந்தார்.

     1996 ஆம் ஆணடு, சென்னை உயர்நீதி மன்ற நீதியரசராய் உயர்ந்தார்.

     2006 ஆம் ஆண்டு ஜார்கண்ட் உயர்நீதி மன்றம், இவரைத் தன் தலைமை நீதியரசராக்கி அழகு பார்த்தது.

     தேவகோட்டைத் தொடர் வண்டி நிலையைத்தில், தடம் புரண்டிருக்க வேண்டிய வாழ்க்கை, மனம் மாறி, தடம் மாறிப் பயணித்தால், உயர் நீதி மன்றத்திற்கு இவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

இவர் யார் தெரியுமா?

இவர்தான்


நீதியரசர் கற்பக விநாயகம்.

நன்றி



23 கருத்துகள்:

  1. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முன்னரே எழுதபப்ட்டவை.  விதியை மாற்ற யாரால் முடியும்?  ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் விதியின் கைகளில் கருவிகளே..

    பதிலளிநீக்கு
  2. தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்வு நண்பரே. அதனை மிகவும் அருமையாக பதிவிட்டு சிறப்பு செய்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. பா.தென்றல், காரைக்குடி09 நவம்பர், 2023

    அருமையான பதிவு.
    நீதியரசர் வாழ்க்கைக் குறிப்பு,
    தங்களின் எழுத்தின் வழி அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டட்டும்.
    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பகிர்வு. சிறு சிறு பிரச்சனைகளுக்கு உயிரை மாய்த்துக் கொள்வது அதிகரித்து இருப்பது வேதனையான விஷயம். இவரது வாழ்க்கை அப்படி யோசிப்பவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு இன்றைய மாணவர்களுக்கு அவசியம் தேவை. ஏன் அனைவருக்குமே புத்தக வாசிப்பு நம்மை மாற்றும் மமிகப் பெரிய அகிம்சை ஆயுதம்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு.

    நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்.

    முனைவர் செந்தில் குமார் அவர்கள் காணொளி நன்றாக இருக்கிறது.
    வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பற்றி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு- வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தாலும் கலங்கக்கூடாது-கவலைப்படக்கூடாது- எப்படியோ வாழலாம் என்ற முடிவோடு சாதகமான முயறற்சிகளை மேற்கொள்ள வேண்டும்- எல்லாம் நன்மைக்கே- 1947 ம் ஆண்டு பிறந்த நான் 1960 ம் ஆண்டு வரை வகுப்பில் முன்னணியில் திகழ்ந்தேன் 1961-62-63 (மூன்று ஆண்டுகள்) விஞ்ஞான பாடங்களைப்படித்து 1963 டிசம்பரில் எழுதிய சோதனை சித்தியடைய வில்லை 64 மே மாதம் கல்லூரி அதிபர் ஆசிரியர்களின் அனுமதியுடன் (மூன்று மாதங்களுக்குள்-கலைப்பாடங்கள் படித்து)1964 ஆகஸ்ட் மாதம் கலைப்பாடங்களை தமிழ் மொழி மூலம் எழுதி சித்தி பெற்று கிளார்க்CLERK ஆட்சேர்ப்பு சோதனையில் அதிக புள்ளிகள் பெற்று அரசாங்கத்தில் வேலையாகி தொடர்ந்து படித்து SLAS (IAS) சோதனையில் சித்திபெற்று COLLECTOR ஆகினேன். என்னோடு படித்தவர்கள்-எனக்கு படிப்பித்தவர்களை விட உயர்ந்த நிலைக்கு செல்ல முடிந்தது- அத்துடன் எழுத்தாளனாகி இந்தியாவில் பரிசில் பெற்றதோடு 2002 ல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் கடிதமூலமான பாராட்டையும் பெற முடிந்தது. இறைவனுக்கு நன்றி-

    தில்லா
    கொழும்பு-இலங்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, தங்களின் வாழ்க்கையே, மற்றவர்களுக்கு ஒரு பாடம் ஐயா. தங்களின் வருகை மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது. நன்றி ஐயா

      நீக்கு
  8. பெயரில்லா11 நவம்பர், 2023

    நல்ல பதிவு. மனம் என்பது விசித்திரமான ஒன்று. இது முன்னுதாரணமான ஒன்று.

    காணொளியும் கண்டேன் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையான, விழிப்புணர்வுடன் கூடிய பதிவு!

    பதிலளிநீக்கு
  10. நீதியரசரின் வாழ்க்கைக் குறிப்பு நம்பிக்கை விளக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வு.

    உயிரை மாய்க்க துணிபவர்களுக்கு அறிவுரையாக அமையும் .

    பதிலளிநீக்கு
  12. தன்னம்பிக்கை புகட்டும் தரமான பாடம்.

    பதிவு சிறப்பு. வாழ்க காந்திமகான்.

    பதிலளிநீக்கு
  13. அருமை நண்பரே இவரது வீடு எனக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு