27 டிசம்பர் 2013

பொன்னியின் செல்வன்

நிலமுள்ளளவும் நீருள்ளளவும்
கலை உள்ளளவும் நிறை பெற்றோங்கும்
இறை உறை கோயிலை எழுப்பிய மன்னன்
நிறைபுகழ் ஓங்க வாழ்த்துவம் இனிதே
-          பாவலர் பாலசுந்தரம்

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த பதிமூன்று வருடங்களாக, தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, தஞ்சைப் பெரியக் கோயில் வழியாகத்தான் செல்கிறேன், வருகிறேன்.

20 டிசம்பர் 2013

மலாலா - கல்வியின் தேவதை

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டக் குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற
     விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில்ஆணுக் கிங்கேபெண்
     இளைப்பில்லை காணென்று கும்மியடி
                                  மகாகவி பாரதி

     குஷால் பள்ளி. 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் செவ்வாய்க் கிழமை 9 ஆம் நாள். நேரம் பிற்பகல் 12.00 மணி. பள்ளியின் மணி ஒலிக்கிறது. தேர்வு முடிந்து மணவ, மாணவியர் வெளியே வருகின்றனர். பள்ளிப் பேரூந்து காத்திருக்கிறது. உண்மையிலேயே அது பேரூந்து அல்ல. டயோட்டோ வாகனம். வெள்ளை நிறம், பின்புறத்தில் இருபுறமும் இரண்டு நீண்ட இருக்கைகள். நடுவிலும் ஒரு இருக்கை.

13 டிசம்பர் 2013

மண்டேலா ஓய்வெடுக்கட்டும்

If you want to make peace with your enemy,
You have to work with your enemy.
Then he becomes your partner.
-          Nelson Mandela

     என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகப் பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற இலட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான்.

07 டிசம்பர் 2013

வாழ்வின் விளிம்பில்

தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னங்  சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்று நினைத் தாயோ?
-          மகாகவி பாரதியார்

     நண்பர்களே, நரை கூடித்தான் போய்விட்டது இம்மனிதருக்கு. மீசையும், தலைமுடியும் வெண்ணிறமாய், அவரது மனம் போலவே காட்சியளிக்கின்றன. சின்னஞ்சிறு கதைகள் பல உண்டு இவரிடத்தில். இவரது பேச்சினைப் போலவே, இவரது எழுத்துக்களும் காந்தமாய் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை.

ஓடி விளையாடு பாப்பா – நீ
    ஓய்ந்திருக்க லாபாது பாப்பா
என்று பாடுவாரே மகாகவி பாரதி, இவ்வரிகள் பாப்பாவிற்கு மட்டுமல்ல இந்தத் தாத்தாவிற்கும் பொருந்தும். ஓய்வறியா உழைப்பிற்குச் சொந்தக்காரர் இவர்.

     ஆம் நண்பர்களே, இம்மனிதருக்கு வயது வெறும் எழுபத்து ஐந்துதான். உடலின் வயது என்று சொல்வதைவிட, அனுபவத்தின் வயது எழுபத்து ஐந்து என்று சொன்னால், மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆண்டுதோறும் இவரது உள்ளத்தின் வயது மட்டும் குறைந்து கொண்டே போகிறது.

     நண்பர்களே, இவர் யார் என்று ஊகித்துவிட்டீர்கள் அல்லவா? ஆம் தங்களின் ஊகம் சரிதான். நமது ஜி.எம்.பி., ஐயா அவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

 ஊன்றுகோலைப் பற்ற வேண்டிய வயதில், பல வேடிக்கை மனிதரைப் போல் வீழாமல், நெஞ்சம் நிமிர்த்தி, விசாலப் பார்வையோடும், சுவைமிகு சொல்லோடும் இவர் வலம் வருவதற்கு, இவரது கைகள் எழுதுகோலைப் பற்றி இருப்பதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். சரிதானே நண்பர்களே.

      வாழ்வின் விளிம்பில். ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின், சிறுகதைத் தொகுப்பு. ஆனால் இவற்றில் இருப்பதெல்லாம் கதைகள் அல்ல, வாழ்வியல் யதார்த்தங்கள்.


    

மனித வாழ்க்கையே விசித்திரமானது. அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல், வியாதியால் நலிவுற்று, யாரும் உதவ இல்லாமல், அனாதையாய் ஆறுதலற்றுக் கிடக்கும் ஜீவன்களும் வாழத்தான் ஆசைப்படுகின்றன.... இல்லை.... சாவைக் கண்டு பயப்படுகின்றன.

     வாழ்வின் விளிம்பில் என்னும் நூலின் முதற் கதையிலேயே நாம் கரைந்து போய்விடுவோம்.
     ஆலய வழிபாடுகளும், ஆண்டவன் தரிசனமும் மகப்பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால், அந்த பாக்கியம் இல்லாதவர்களே இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை எது என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையும், திருத்த முடியாத குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

     கேள்விகளே பதிலாய்.. என்னும் சிறுகதையில், ஐயா அவர்களின் எழுபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தை நாம் அறியலாம்.

     அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள். யாருக்காவது சேகரனைப் பற்றிய நினைவோ, ஏறி வந்த ஏணி பற்றிய எண்ணமோ இருப்பதில்லை என மனித மனத்தின் சுயநலத்தை, ஏறி வந்த ஏணி என்னும் கதையில் இறக்கி வைக்கிறார்.

     சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தது. இதை செலவு செய்யலாமா, நமக்கு தேவைதான் என்ன.. உடுக்க ஏதோ துணியும், உயிர்வாழ உணவும் போதாதா? தேவைக்கு மேல் செலவு செய்பவன் எங்கோ ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ உருவாக்குகிறான் என்று காந்தி சொன்னதாக படித்த ஞாபகம்.

     வாழ்க்கையில் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை, அனுபவி ராஜா அனுபவி என்னும் கதையில், எதையுமே அனுபவிக்காத ஒருவன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

     இப்படியும் ஒரு கதை என்னும் சிறு கதையில், முன்னொரு காலத்தில், கேரள மண்ணில் நடைமுறையில் இருந்த அவலத்தை, நம் கண் முன்னே நிறுத்துகிறார். படிக்கப் படிக்க நமக்கு மனம் பதறுகிறது. படித்தபின், இதனின்று மீண்டு வர சில நிமிடம் ஆகலாம்.

     கண் தெரியாமல் இருப்பதுபோல், பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்.

     பார்வையும் மௌனமும் என்னும் இக்கதை நம்மையும் மௌனத்தில் ஆழ்த்தும் வல்லமை படைத்தது.
 
ஒரு இனிமையான காலைப் பொழுதில்
ஜி.எம்.பி.,ஐயா, அவரது துணைவியார், ஹரணி அவர்களின் மகன்,  ஹரணி மற்றும் நான்
      நண்பர்களே, சிறுகதை என்னும் வடிவத்திற்குள் அடங்காமல் திமிறும் கதைகள் இவை. கதைகளில் அலங்காரமில்லை, ஆனால் உண்மையின் ஆழமிருக்கிறது.

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க
    உன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
    அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?

எனப்பாடும் பாவேந்தரின் வழி நின்று, பொதுமக்கள் நலம் நாடி, புதுக் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லவும், எழுதவும் ஜி.எம்.பி.,ஐயா அவர்களை வாழ்த்துவோமா நண்பர்களே?

வாழ்த்த வயதில்லை எனத் தயங்க வேண்டாம்,
உயர் குணமும், நல் மனமும்
இருக்கிறது நம்மிடம்
வாழ்த்துவோம் நண்பர்களே,

தொடரட்டும் ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்களின் எழுத்துப் பணி.

நூறாண்டு காலம் வாழ்க

நோய், நொடியில்லாமல் வாழ்க.
-------

மழலை நலம் பெற வேண்டுவோம்

குழல்இனிது யாழ்இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்

     நண்பர்களே, இன்று 7.12.2012 சனிக் கிழமை மாலை, பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு, நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, வருகை தந்தார் ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் திருமிரு புலவர் பன்னீர் செல்வம்.

     புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம். அங்கு பல்லாண்டுகளாக திருவள்ளுவர் ஞான சபை என்னும் அமைப்பினை நிறுவி வள்ளுவத்தின் வாக்கினைப் பரப்பி வருபவர். வள்ளுவரும், வள்ளுவமும் இவரது இரு கண்கள். தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருபவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் கொலுவீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இவரே காரணகர்த்தா.

     தஞ்சைக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தந்தவர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பி, மாலையோடு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தார்.

     நானும், நண்பர் சரவணன் அவர்களும், புலவரை வரவேற்று, திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். மாலை அணிவித்து, இரு கரம் கூப்பியபடி, அகர முதல எழுத்தெல்லாம் என இராகத்துடன் பாடத் தொடங்கினார். பாடப் பாட இவரின் நா தழுதழுக்கிறது.

     நண்பர்களே, நேற்றுதான் இவருக்குப் பெயரன் பிறந்திருக்கிறான். பெயரனை உச்சி முகர்ந்து, குழந்தைபோல், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டியவர் இவர். ஆனால் கண்களில் கண்ணீர் மழ்க வள்ளுவனை நாடி நிற்கிறார்.

     ஆம் நண்பர்களே, இயற்கையின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது. நேற்று பிறந்த இவரது பெயரனுக்கு ஆசன வாயே இல்லை.

     வள்ளுவத்தை மட்டுமே வாழ்நாள் முழுதும், மந்திரம் போல் முழங்கி வரும் இவரது பெயரன், ஆசன வாய் இல்லாமலேயே பிறந்திருக்கிறான். கடவுள் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறாரே, அது ஏன் நண்பர்களே.

     புதிதாய்ப் பிறந்த பச்சிளங் குழந்தைக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து, ஆசன வாயை உருவாக்க வேண்டுமாம். இன்று காலை முதல் அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தாக வேண்டும்.

     நண்பர்களே, என் பெயரனுக்கு ஏன் இந்த நிலை என்று கேட்டு, இவர் தெய்வத்தை நாடிச் செல்லவில்லை. வள்ளுவனை நாடி வந்திருக்கிறார். இவருக்குத் தெரிந்ததெல்லாம் வள்ளுவரும், வள்ளுவமும் மட்டுமே.



     திருவள்ளுவர் சிலையின் முன் நின்று கைக் கூப்பி, வள்ளுவத்தைப் பாடிக் கொண்டே இருக்கிறார். பார்த்துக் கொண்டிருந்த எங்களின் கண்கள் கலங்குகின்றன.

     நண்பர்களே, வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துவோமா நண்பர்களே, இறைவனை வேண்டுவோமா நண்பர்களே.


மழலை நல் வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுவோம்.