30 ஏப்ரல் 2015

சரித்திரம் படைக்கும் சன்னா நல்லூர்

     

ஆண்டு 1962. தஞ்சாவூர் மாவட்டம். மெலட்டூர். வெட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த, அணைக் கட்டை, நீர் தேக்கும் கண்மாயாக மாற்றி அமைக்கும் பணி நிறைவுற்ற நிம்மதியில் நிற்கிறார், அந்தப் பொதுப் பணித் துறையின் இளம் பொறியாளர்.

     தமிழக முதல்வர் கர்மவீரர் காமராசரும், பொதுப் பணித் துறை அமைச்சர் ராமையா அவர்களும், விவசாயத் துறை அமைச்சர் கக்கன் அவர்களும், பல முறை நேரில் வந்து பார்வையிட்ட, கண்மாய் பணி நிறைவுற்றிருக்கிறது.

    ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் மட்டுமல்ல,அந்த இளம் பொறியாளர் உள்ளத்திலும், ஏதேதோ எண்ணங்கள், கரை புரண்டோடிக் கொண்டிருக்கின்றன. பணி நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை, ஓர் நிறைவு இல்லை.

28 ஏப்ரல் 2015

எழுதுகோலே இவர் தெய்வம்


எல்லாரும் வாருங்கள்
எழுந்து நடக்கலாம்
இத்தனை நாள் நடந்ததெல்லாம்
என்னவென்று பார்க்கலாம்
என்று நம்மை அழைத்தவர் ஜெயகாந்தன்.

     சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள், அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி.

இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். நீங்கள், நல்ல மனிதராயிருந்து, நல்ல இதயத்தோடு, இந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்
எனஇளைஞர்களை அழைத்தவர் ஜெயகாந்தன்.

சிறுகதை மன்னனா நான்?

என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதை சக்கரவர்த்திகளையேச் சந்தித்துவிட்டு வந்தவன்.

22 ஏப்ரல் 2015

மகளுக்காக



என் கணவர் என்னை விட்டுப் பிரிந்தபோது, பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வாழ்வினையே வெறுத்துப் பல முறை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கூட இறங்கினேன்.
  
ஆனாலும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஒரு புறம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது. தற்கொலைக்கான மனத் தூண்டுதலைத் தவிர்ப்பதற்காக மருத்துவரை நாடி, மனோதத்துவ சிகிச்சையும் பெற்றேன். தற்கொலை உணர்வினையும் தாண்டி, வாழ்ந்தாக வேண்டும், வாழ்ந்தே ஆக வேண்டும் என போராடியதற்கு, ஒரே காரணம், என் மகள், என் அன்பு மகள்.
  
சிறு வயது முதலே துன்பத்தில் உழன்று, வறுமையில் நான் வாடியதைப் போல, என் மகள் மோசமான சூழ்நிலையில் வாழ வேண்டியவளே அல்ல என்று உறுதியாக எண்ணினேன். என் துயரின், என் துன்பத்தின் நிழல் கூட, என் மகள் மீது, விழக்கூடாது என்பதற்காகப் போராடினேன்.

16 ஏப்ரல் 2015

பண்ணாராய்ச்சி வித்தகர்


ஆண்டு 1949. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி, விழா அரங்கு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மேடையைப் பார்த்தவாறு, மேடையில் நடு நாயகமாய் அமர்ந்திருக்கும், அம் மனிதரைப் பார்த்தவாறு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

     கருணை பொங்கும் கண்கள். பரந்து விரிந்த நெற்றி. ஒளி வீசிப் பிரகாசிக்கும் முகம். ஒலிப் பெருக்கியின் முன்வந்து, பாடத் தொடங்குகிறார்.

     தமிழிசைப் பாடல்கள் அரங்கு முழுதும் நிரம்பி வழியத் தொடங்குகிறன. மாணவர்கள் அனைவரும், மெய் மறந்து, இவ்வுலகினையே மறந்து, தமிழிசையில் மூழ்கி, புதியதோர் உலகில், காற்றுடன் கலந்து, காற்றோடு காற்றாய் மிதக்கின்றனர்.

     உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டே சென்றவர், திடீரென்று பாடலை நிறுத்தி, பாடலின் பொருளினை விளக்குகிறார்.

     பாடலின் பொருளினை விளக்கிக் கொண்டே சென்றவர், பொருளினை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறி முடித்த, அடுத்த நொடி, பாடலினை, விட்ட இடத்தில் இருந்து, அதே உச்சஸ்தாயியில் தொடருகிறார்.

09 ஏப்ரல் 2015

மீன் மார்க்கெட்டில் திருமணம்

   

 ஆண்டு 1907. மராட்டிய மாநிலம். பம்பாயின் பரேல் பகுதி.

     பைகுல்லா மீன் மார்க்கெட்.

     மாலை 7.00 மணியளவில், அன்றைய வியாபாரம் முடிந்து, கடைக்காரர்கள், ஒவ்வொருவராய், மிச்சம் இருந்த மீன்களுடன் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

      வியாபாரிகள் அனைவரும் வெளியேறிய பின், அப்பகுதி மக்கள் ஒவ்வொருவராக, மீன் மார்க்கெட்டினுள் நுழையத் தொடங்கினர்.

      தரையிலே, அங்கு இங்கு என, எங்கும் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருந்த பெரிய கற்களில், ஒருவர் இருவர் என அமர்கின்றனர்.

       சிறிது நேரத்தில் மீன் மார்க்கெட் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

02 ஏப்ரல் 2015

ஆனை மலை


நண்பர்களே, நலம்தானே.

      கடந்த பல வருடங்களாக, சில நூறு முறையாவது மதுரைக்குச் சென்று வந்திருப்பேன்.

      ஒவ்வொரு முறை, ஒத்தக் கடையைக் கடந்து செல்லும் பொழுதும், நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் ஆனை மலையைக் கண்டு வியப்பு அடைந்திருக்கிறேன்

      இயற்கை தந்த கொடையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் ஆனை மலையை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும், ஆனை மலையில காலார நடந்து மகிழ வேண்டும், ஆனை மலையில் மோதித் திரும்பும் காற்றை சுவாசித்து இன்புற வேண்டும் என்ற எனது எண்ணம், நிறைவேறாமல், பகற் கனவாகவே நீடித்து வந்தது.