21 அக்டோபர் 2017

ஃபீனிக்ஸ்




      அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      கரவொலியால் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      ஆண்டு 2014, மார்ச் 4

      அமெரிக்காவின் முதல் பெண்மணி திருமதி ஒபாமா அவர்கள், விருதுடன் மேடையில் காத்திருக்க, விருது பெற இருப்பவர், மெல்லப் படியேறி மேடைக்கு வருகிறார்.

       விருது பெற மேடைக்குப் படியேறி வருபரைக் கண்டு, ஒரு நிமிடம், அரங்கே திடுக்கிடுகிறது.


       ஒவ்வொருவர் விழியிலும் வேதனை.

       வேதனையினையும் மீறி கை தட்டல் எழுகிறது,

       கரவொலி அரங்கினையும் கடந்து வின்னைப் பிளக்கிறது.

----

      ஆண்டு 2008.

      புது தில்லி.

      மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் வீட்டை விட்டு வெளியே வந்து.

      நான்கு சுவர்களுக்கு உள்ளேயே அவரது வாழ்வு முடங்கிப் போனது.

      மூன்றாண்டுகளுக்கு முன், மருத்துவமனையில் இருந்து, வீட்டிற்குள் நுழைந்தவர்தான், அதன்பின் வெளியே வரவேயில்லை.

இதுபோன்ற நிலையில் உயிர் வாழ்வதைவிட, இறந்தே போயிருக்கலாம்.

       மருத்துவமனையில், தன்னைக் காண வந்த உறவினர்களும், நண்பர்களும், பேசிக்கொண்டது, இவரது காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது,

      தந்தையின் அரவணைப்பால், தாயின் பாசத்தால், சகோதரரின் நேசத்தால் மெல்ல மெல்ல மீண்டு வந்தார்.

       மிகவும் ஏழ்மையான குடும்பம்.

       1990 ஆண்டு ஜுன் மாதம் முதல் நாள், இவர் பிறந்த போது, குடியிருக்கக் கூட வீடு இல்லாத நிலை.

       புது தில்லி பேரூந்து நிலையமே இவர்களது வீடாகிப் போனது.

       இவர் பிறந்த நான்காம் நாளே, பேய் மழை. புது தில்லியே நடு நடுங்கிப் போனது.

      சிறு குழந்தையை, தன் மார்போடு அணைத்து, கூனிக் குறுகி, இவரது தாய் அமர்ந்திருக்க, தந்தையோ, வில் போல் வளைந்து நின்று, இருவர் மீதும், மழை நீர் படாமல், பிறந்த குழந்தை நோய்வாய்ப் படாமல் காத்தார்.

      மழை தனிந்ததும் அலையாய் அலைந்து, ஒரு சிறு வீடு பிடித்து அடைக்கலமாயினர்.

       மழையிலும், புயலிலும் தானே கேடயமாக இவரைக் காத்த, இவரது தந்தை, மெல்ல மெல்லத் தன் மகளைத் தேற்றினார்.

கலங்காதே,

துணிவு கொள்

வெளியே வா

உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, இவ்வுலகுதான் உன்னைப் பார்த்து, தலைகுனிய வேண்டும்.

வெளியே வா,

தலை நிமிர்ந்து வா

      உடலில் மட்டுமல்ல, மனதிலும் மெல்ல மெல்ல வலு சேர்ந்தது.

      புத்துணர்ச்சியுடனும், புதிய எழுச்சியுடனும் வெளியே வந்தார்,

--.

    

     2005 ஆம் ஆண்டு.

     புது தில்லி.

     துக்ளக் ரோடு, பேருந்து நிலையம்.

     அந்தப் பெண் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

     வயதோ 15 தான்.

     அழகு முகம்.

     ஆனாலும் முகத்தில் கவலையின் ரேகைகள்.

     பதினைந்து வயதுச் சிறுமிக்கு என்ன கவலை இருக்க முடியும்.

     கடந்த பல மாதங்களாகவே ஒரு தொல்லை, காதல் தொல்லை.

     எப்படி மீண்டு வருவதென்று, இச்சிறுமிக்குத் தெரியவில்லை.

     வீட்டில் சொல்லவும் பயம்.

     இவரைப் போல் இரண்டு மடங்கு வயதுடைய ஒருவன், காதலிக்கிறேன், காதலிக்கிறேன் என தினமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

நான் படிக்க வேண்டும். நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும். வறுமையில் வாடும் குடும்பத்திற்கு உதவிட வேண்டும்.

      அவன் விடுவதாய் இல்லை.

      இதோ, அவனே வருகிறான்.

      நண்பர் ஒருவருடனும், ஒரு பெண்ணுடனும் பேசிக்கொண்டே வருகிறான்.

      பேருந்தோ வரவில்லை, இவனோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறான்.

      என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.

      அருகில் வந்தவன், பைக்குள் கையை விட்டு, ஒரு பாட்டிலை எடுத்து, மூடியைத் திறந்து, பாட்டிலில் இருந்த திரவத்தை, அச்சிறு பெண்ணின் மேல் வீசினான்.

       முகமும், உடலின் பல பாகங்களும் நனைந்தன.

        ஈரம் பட்ட அடுத்த நொடி, உடலும், முகமும் வெந்து போய் உருக்குலையத் தொடங்கியது.

       பாலி, அமிலத்தைக் கொட்டியிருக்கிறான்.

        தரையில் விழுந்து, அனலிடைப் புழுவாய் துடிக்கத் தொடங்கினாள்.

---

      பல மாதங்களை மருத்துவ மணையில் கழித்து, உயிர் பிழைத்து, உருவத்தை இழந்து, வீட்டிற்குள் புகுந்தவர், வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

       மூன்று வருடங்கள் கடந்தபின், வீட்டை விட்டு வெளியே வந்தார்.

        நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்.

         தன்மீது அமிலம் வீசியவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல.

        தன்னைப் போல், இன்னொரு பெண் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக.

       அமிலம் விற்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப் படவேண்டும். யார் வேண்டுமானாலும் அமிலம் வாங்கலாம் எனும் நிலை மாற வேண்டும். என்பதற்காக, நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்.

       ஏழாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, 2013 இல்தான் நீதிமன்றம், அமிலம் விற்பதற்கான நடைமுறைகளை விதித்துத் தீர்ப்பளித்தது.

     ஆனால், கொடுமை என்ன தெரியுமா?

     இச்சிறுமியைக் காதலிப்பதாய் கூறி., தொடர்ந்து வந்து, தொல்லைகள் கொடுத்து, அமிலத்தை வீசி, சிறுமியை உருக்குலைத்தவன், சிறை புகுந்த இரண்டே மாதத்தில், பரோலில் வெளியே வந்து, தனது உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதுதான்.

---


    

நீதி மன்றத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்தவர், STOP ACID ATTACKS அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

     






தொலைக் காட்சிகளில், துணிவோடு, முகம் காட்டத் தொடங்கினார்.

      சமூக சேவகர் அலோக் தீக்ஷிட் என்பாருடன் காதலும் மலர்ந்தது.

      இருவரும் இணைந்தும் வாழத் தொடங்கினர்.

      மழலையும் பிறந்து வாழ்வில் மகிழ்ச்சியை அழைத்து வந்தது.

---

அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.




தீயின் கரங்கள் தீண்டியபோதும்,
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து வந்தவர்,
இதோ, தலை நிமிர்ந்து
வீரப் பெண்மணி
விருதினை வாங்க படியேறிக் கொண்டிருக்கிறார்.

அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

இவர்தான்

லஷ்மி அகர்வால்.

வீரப் பெண்மணியைப் போற்றுவோம் வாழ்த்துவோம்.