07 செப்டம்பர் 2019

குளம் தொட்டுக் கோடு பதித்து




மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய் தினார்.

     இம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும், கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.


குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப்
பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகுஞ் சுவர்க்கத் தினிது

     பொருள் புரிகிறதல்லவா?

     சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா? இதைச் செய் என்கிறது சிறுபஞ்சமூலம்.

     என்ன செய்ய வேண்டும்?

     உண்ணாமல், உறங்காமல் இறைவனை நினைத்துக் கடுந்தவம் செய்ய வேண்டுமா?

     வேண்டாம்

     ஏரி வெட்டுங்கள்

     குளம் வெட்டுங்கள்

     சுவர்க்கம் கிட்டும்.

1.   குளம்
2.   கலிங்கு
3.   வரத்துககால், மதகுகள், மிகை நீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல்
4.   பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்காட்டுப் பகுதிகளை உருவாக்குதல்
5.   பொதுக் கிணறு அமைத்தல்

      நம் முன்னோர், நீரின் அருமையினை, நீரின் முக்கியத்துவத்தினை நன்கு அறிந்து, வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா,

     படிக்கப் படிக்க, நம் முன்னோர் கடைபிடித்த நீர் மேலாண்மை, கண்முன் காட்சியாய் விரிவடைகிறது.

தமிழரின் நீர் மேலாண்மை

     தஞ்சை மாவட்டம், பாறைகள் இல்லாத பகுதி என்றுதான், இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன்.

     என் கருத்தைத் தன் களப் பணியால் தகர்த்தெறிந்துவிட்டார் இந்நூலாசிரியர்.

     கச்ச மங்கலம்

     தஞ்சையில் இருந்து பூதலூர், விண்ண மங்கலம், ஒரத்தூர் வழியே கல்லணை செல்லும் சாலையில், வெண்ணாற்றின் வட கரையில் அமைந்துள்ள சிற்றூர் கச்சமங்கலம்.

     இவ்வூரில் ஒரு தடுப்பணை

     கல்லணையில் இருந்து பிரிந்து வரும் வெண்ணாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை.

     இத்தடுப்பணையினை ஒட்டி, ஆற்றின் இரு கரைகளிலும் இரு மதகுகள்.

     தென் கரையில் ஒரு மதகு

     வட கரையில், அடுத்தடுத்து, சிறு இடைவெளியில், இரு மதகுகள்.

     இக்கட்டுமான அமைப்பினை ஆராய விரும்பிய, நூலாசிரியர், ஒரு கோடை காலத்தில், நீர் வரத்து இல்லாத காலத்தில், கச்சமங்கலத்திற்குச் சென்று, தடுப்பணையினை கூர்ந்து ஆய்ந்திருக்கிறார்.

     அப்பொழுதுதான் கண்டுபிடித்திருக்கிறார்

     தடுப்பணையானது இயற்கையாக சிறு, சிறு குன்றுகள் உள்ள பகுதியில், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலாக உள்ள, கற்பகுதிகள், அகற்றப்பட்டு, கிடைமட்ட நிலையில், செவ்வக வடிவில் அமைந்த பெரிய பெரிய கருங்கற் பாறைகளை, அவ்விடத்தில் இட்டு நிரப்பி, தடுப்பணையினை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

     ஆற்றின் குறுக்காக, இயற்கையாக அமைந்த, குன்றுப் பகுதிகளாலும், மனித முயற்சியால் அங்கு இடம் பெற்ற கருங்கற் பாறைகளாலும் அமைந்த, இந்த தடுப்பணையின் மேற்குப் பகுதியானது, மணல் நிறைந்த ஆற்றுப் பகுதியாக உள்ளது.

     தடுப்பணையின் கிழக்குப் பகுதியானது, மேற்குப் பகுதியின் மணற் பகுதியைவிட, பத்து அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

     அதாவது தடுப்பணைக்கு மேற்கே மணல் பகுதி

     தடுப்பணைக்கு கிழக்கே, சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை, மணல் பகுதியே இல்லாத, கற்பாறைகளுடன் கூடியத் தரைப்பகுதி.

     இப்பகுதியினை அடுத்து, வெண்ணாறு கடலில் கலக்கும் வரை மணற் பகுதி.

     வியப்பாக இருக்கிறதல்லவா

     நம் முன்னோர், தகுதியானத் தரைப் பகுதியினைத் தேர்வு செய்து, தடுப்பு அணையினை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைத்திருக்கிறார்கள் என்பது வியப்பினும், வியப்பல்லவா.

-----

     இந்நூலினைப் புரட்டப் புரட்ட, படிக்கப் படிக்கப், பக்கத்துக்குப் பக்கம், நீர் கசிந்து, விரல்களை நணைக்கிறது.

தஞ்சாவூர், சரசுவதி மகால்,
தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர். தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்

தமிழரின் நீர் மேலாண்மை

நூலின் வெளியீட்டு விழா,
கடந்த 31.8.2019 சனிக்கிழமை மாலை, 6.00 மணியளவில்.
தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்றது.



சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்
மாண்புமிகு இரா.சுரேஷ் குமார் அவர்கள்
நூலினை வெளியிட்டுச்
சிறப்புரை ஆற்றினார்.

விழாவிற்குத் தலைமையேற்றிருந்த
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள்,
நூலின் முதற் படியினைப் பெற்றுத்
தலைமையுரை ஆற்றினார்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழக,
தமிழியற் துறைத் தலைவர்
முனைவர் உ.அலிபாவா அவர்கள்,

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்,

தஞ்சாவூர், மன்னர் சரபோசி கல்லூரி,
தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் வி.பாரி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர்
முனைவர் மணி.மாறன் அவர்கள்
ஏற்புரையாற்றினார்

ஏடகப் பொருளாளர்
திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்
நன்றிகூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், தஞ்சை எழுத்தாளர் களஞ்சியம் நிறுவுநர்
கவிஞர் ராகவ் மகேஷ் அவர்கள்
நிகழ்ச்சிகளை
கவியோடு, சுவைபட தொகுத்து வழங்கினார்.

முன்னதாக,
இவ்விழா, இனிது அரங்கேற
கடந்த ஒரு மாதகாலமாக
அல்லும்,பகலும் அயராது பாடுபட்ட
தஞ்சாவூர், கரந்தை, சமண ஆலயத்தின்
அறங்காவலர் குழுத் தலைவரும்,
ஏடகப் புரவலரும்,
ஏடகம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய
திரு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்
விழாவிற்கு வந்திருந்தோரை
மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.

இலக்கியம், வரலாறு, தொல்லியல்
போன்ற தளங்களில்
தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்


முனைவர் மணி.மாறன் அவர்களின்
18 வது படைப்பு இந்நூல்.

வாழ்த்துவோம், போற்றுவோம்.


 ------------


கண் புரை அறுவை சிகிச்சை


நண்பர்களே, வணக்கம்.

     எதிர்வரும் திங்கட்கிழமை (9.9.2019), அன்று காலை, மதுரை, அரவிந்த் கண் மருத்துவமனையில், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கின்றேன்.

     எனவே, சில நாட்களுக்கு வலைப் பூவின் பக்கமோ, முக நூலின் அருகிலோ, வர இயலா நிலை.

     சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்.