14 செப்டம்பர் 2023

தவ்வை

     இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும், சீற்றமும் ஆதிகால மனிதர்களுக்கு அளவிலா அச்சத்தைக் கொடுத்தன.

     காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஐந்தும் அவ்வப்பொழுது தனது ஆற்றலை வெளிப்படுத்திய பொழுது, மனிதர்கள் தங்களைக் காத்துக் கொள்ள கடவுளை நாடினர்.

     காலப் போக்கில், பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையில் இருந்து சிறிது மாறினர்.

     காடும், மலையும், மரங்களும், நீரும், நெருப்பும், காற்றும் அச்சம் தருவன அல்ல, ஆனால் அவற்றுள் எதோ ஒன்று மறைந்திருக்கிறது, உறைந்திருக்கிறது என்று எண்ணினர்.

     இயற்கையினுள் ஒளிந்திருக்கும் அந்த ஆற்றலை, சக்தியாகப் பார்த்தனர்.

     அந்த சக்தியைப் பெண்ணாகப் போற்றினர்.

     வணங்கினர்.

     தாய் தெய்வ வழிபாடு தொடங்கியது.

     அன்று தொடங்கிய தாய் தெய்வ வழிபாடு, இன்றும் சிறுதெய்வ வழிபாடாக, குலதெய்வ  வழிபாடாகத் தொடர்ந்து வருகிறது.

     குடும்பத்தில் நடைபெறும் அத்துணை நிகழ்வுகளிலும் குலதெய்வ வழிபாடு உண்டு.

     திருமணம் என்றால் முதல் அழைப்பு, முதல் அழைப்பிதழ் குல தெய்வத்திற்குத்தான். எனவேதான்,

வழிபடு தெய்வம் நின்புறம் காப்ப

என்று உரைக்கிறது தொல்காப்பியம்.

     கொற்றவை.

     கொற்றவையை வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். இதனால்தான்

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை

என்று சிலப்பதிகாரமும்,

வெற்றிவேல் போர்க் கொற்றவை

என்று  திருமுருகாற்றுப் படையும் உறுதியாய் உரைக்கின்றன.

     அணங்கு.

     அணங்கு என்றால் வருத்துதல் என்கிறது கலித்தொகை.

     இயற்கைத் தனது சீற்றத்தால் கொடுத்த துன்பத்தை, அணங்கு என்று சங்கத் தமிழர் அழைத்தனர். பெருமழையாய்ப் பொழிந்து, பெருந்துன்பத்தைக் கொண்டு வரும், மழை மேகம் நிறைந்த மலைத் தொடரை,

ஆடு மழை அணங்கு சால் அடுக்கம்

என்று புறநானூறும்,

அணங்குடை நெடுங்கோடு

என்று புறநானூறும் கூறுகிறது.

     மேலும், அணங்கு, இடியாய் இடித்து, மின்னலாய் மின்னி, மழையாக, எரிமலையாக, புகையாக, அனற் குழம்பாக வெடித்துச் சிதறி, பல உருவம் எடுத்து வந்து துன்பம் தரும் என்பதை,

சூருடைச் சிலம்பில் சுடப்பூ வேய்ந்து

தாம் வேண்டுவ உருவில் அணங்குமார் வருமே

என்று முழங்குகிறது அகநானூறு.

     இயக்கி.

     இயக்கி என்றொரு தெய்வம்.

     இயற்கையின் எல்லா சக்திகளையும் இயக்குபவள் இயக்கி என பண்டைத் தமிழர் வழிபட்டனர்.

அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்

பால்மடை கொடுத்துப் பண்பின் வெயர்வோள்

ஆயர் முதுமகள் மாதரி என்போள்.

     இயக்கிக்கு பால்சோறு படைத்தாள் மாதரி என்னும் செய்தியை, இவ்வாறு கூறுகிறது சிலப்பதிகாரம்.

     தவ்வை.

     சங்க இலக்கியங்கள் காட்டும் தாய்த் தமிழ் தெய்வங்களுள், குழந்தைகளை ஈன்றெடுத்த பெருவயிற்றுடனும், பரந்து சரிந்த கொங்கைகளுடனும், இன்றைய சிற்பங்களிலும் காட்சி தருபவர் தவ்வை.

ஔவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையக் காட்டி விடும்.

என அழுக்காறாமை அதிகாரத்தில் உரைக்கிறது திருக்குறள்.

     பாவை.

     கொல்லிப் பாவை.

     இயற்கையின் பல்வேறு சக்திகளின் சீற்றங்களால் அழிவுகள் ஏற்பட்டாலும், இயற்கையானது, தன் தன்மையில் இருந்து மாறாது என்பதை

செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித்

தெய்வம் …

    

---

கடந்த

10.9.2023

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

தஞ்சாவூர், நூல் வெளியீட்டாளர்


திரு க.முகுந்தகுமார் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற, ஏடகப் பொழிவில்,

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரிப்

பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர்


முனைவர் க.ஆனந்தி அவர்கள்,

இலக்கியத்தில் பெண் தெய்வம்

என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ச.பொற்கலைச் செல்வி அவர்கள்

நன்றி கூற பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக, பொழிவு கேட்க வந்திருந்தோரை,

ஏடகம், சுவடியியல் மாணவர்


திரு க.கார்த்திக் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ரா.லலிதாம்பிகை அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

எடக அரங்கினுள்

கொற்றவையை

தவ்வையை

அணங்கை

இயக்கியை

அழைத்துவந்து

ஏடகப் பொழிவை

இயக்கிய

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.