09 ஏப்ரல் 2026

புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்

 

இடிந்த வீடுதான்

கடைசிச் செங்கல்

இன்றும் தாத்தா சிரிப்பு

     படிக்கும்போதே மனமும் இடிந்து போகிறது. பாழடைந்து, இடிந்து கிடப்பவை வீடுகள் மட்டும்தானா? இல்லை, இல்லை, பலரது கனவுகளும், சிரிப்புகளும்தான்.

அலைகள் மோதும் கரை

மொழி புரிந்து

கவனமாய் மரம்.

     ஆற்றங்கரை ஓரங்களில், ஆற்றினை நோக்கி வளைந்து நெளிந்து, சாய்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்திருப்போம். கவிஞரும் பார்த்திருக்கிறார், ஆனால் அவர் பார்வையே வேறு. அதனால்தான் அம்மரங்கள் கவனமாய் நிற்பதாக உணர்கிறார்.

அமைதியின் பொருள்

அறிவாயோ நீ?

காற்றில் குருதி வாசம்.

     உலகின் பல நாடுகளைப் போர் மேகங்கள் சூழ்ந்து, ஏவுகனைகள் ஓயாது பறந்து, மனித மனங்களைப் பதறவைத்துக் கொண்டிருக்கும், இன்றைய சூழலில், கவிஞரின் பார்வையும், வரிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அழைப்பில்லை ஆனாலும்

திறந்து கிடக்கும் கதவு

தயங்கும் திருடன்

     படிக்கும்போதே உள்ளத்தில் வியப்பு ஏற்படுகிறது. கவிஞரின் பார்வையே தனி ரகம்தான்.

காத்திரு காக்கை

கனவுப் பேச்சு முடியட்டும்

குழந்தை உறக்கம்.

     குழந்தையின் தூக்கம் கெட்டுவிடும் என்பதற்காகக், காக்கையைக் கூட கரையாமல் காத்திருக்கச் சொல்லும் கவிஞரைப் பாராட்டத்தான் வேண்டும்.

குளிரும் வரை நீ, நான்

தொடர்ந்து பேசலாமே

கோப்பைத் தேநீர்

--

சொற்களற்றுப் போக

நீயும் நானும்

வியந்து பார்க்கும் புள்

     படிக்கும் நமக்கும் வியப்புதான்.  நினைக்கும்போதே சொற்கள், காட்சிகளாய் மாறி, மனத்திரையில் திரைப்படமாய் ஓடுகின்றன.

     ஹைக்கூ.

     கீழ்த்திசை நாடுகளில் இருந்து, விமானம் ஏறிப் பறந்து வந்த ஒரு கவிதை வடிவம்.

     இயற்கையை, பருவ காலங்களை, உயிரினங்களை, வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவதுதான் ஹைக்கூ.

    5,7,5 என்னும் அசைகளில், மூன்றே மூன்று வரிகளில், ஓர் இனம் புரியா உணர்வை, நமக்குள் கடத்துவதுதான் ஹைக்கூ.

     இக்கவிதை வடிவத்தை மேலும், மேலும் பட்டை தீட்டிய வரிகளால், வார்த்தைகளால், மேலும் செழுமைப்படுத்தி இருக்கிறார் இந்தக் கவிஞர்.

காற்றின் திசைவேறு

சொற்கள் விழுந்து கிடக்கும்

புத்தன் மடியில்

--

கூடுதல் கவனம்

மின்மினி, புல்வெளியில்

புத்தன் மௌனம்.

--

கொல்லுதல் அறமன்று

புத்தன் சொற்கள்

உனக்குத்தான் பாடகனே

     நூல் முழுவதும், ஆங்காங்கே, புத்தனை புதிய பார்வையில், நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார்.

     நூலின் தலைப்பிலும், முகப்பிலும் அமைதியாய் புத்தனே காட்சித் தருகிறார்.

புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்

ஹைக்கூ

ஹைக்கூ என்றால், பொருள் என்ன தெரியுமா?

அழைத்துச் செல்லும் வரிகள்

இக்கவிஞரும்,

நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று,

மனித வாழ்வை, வாழ்வின் தரிசனத்தைத்

தன் தேர்ந்த சொற்களால்

நம்மையறியாமல்,

நமக்குள் தினித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர்

எழுத்து, எழுத்து

எனத் தொடர்ந்து எழுத்துடன், இயங்கிக் கொண்டே இருப்பவர்.

தனக்குச் சரி என்று பட்டதைச் சற்றும் தயங்காமல்,

பொது வெளியில் போட்டு உடைக்கும் உணர்வுக் குவியல் இவர்.

இலக்கியத் தரம் என்பது நூல்களின் எண்ணிக்கையாலும்,

ஓட்டெடுப்பின் வழியாகவும் முடிவு செய்யக் கூடியது அல்ல

என்னும் கொள்கை உடையவர்.

கவிதை, சிறுகதைத் தொகுப்பு, கட்டுரை,  ஹைக்கூ

என 15 நூல்களின் ஆசிரியர்.

இவர்தான்

தஞ்சை மண்ணின் மைந்தர்


கவிஞர் நா.விச்வநாதன்

இவரது நூல்


புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்.

 

 

புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்,

மௌவல் பதிப்பகம்,

21/9, வரதர் தெரு மட விளாகம் தெரு,

வலங்கைமான் 612 804

திருவாரூர் மாவட்டம்

விலை.120/

97877 09687, 94888 40898