17 மார்ச் 2018

மீசை வைத்த புத்தர்



      ஆய்வு.

      இன்று ஆய்வு என்பது பெரும்பாலும், நூல்களுக்கு உள்ளேயே சுருங்கிவிட்டது.

      ஆய்வியல் நிறைஞர் ( எம்.ஃபில்.,) ஆய்வாகட்டும், முனைவர் பட்ட (டாக்டர்) ஆய்வாகட்டும், இலக்கியம், தத்துவம், கதை, சிறுகதை, நாவல் என நூல்களின் பக்கங்களை ஆய்வு செய்வதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறது.

     ஆய்விற்காக நூல்களைத் தாண்டி, களத்தில் இறங்குவோர் வெகு சிலரே.

     அந்த வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.


     களப் பணி

     களப் பணியே இவரது வாழ்வாகிப் போய்விட்டது.

     ஆய்வில் நிறைஞர் முடித்து விட்டார்.

      முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார்.

      முனைவர் பட்டத்தைப் பெற்றுவிட்டோம், மாத ஊதியத்தில், முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தையும் பெற்றுவிட்டோம், இனி சொந்த வேலையைப் பார்ப்போம் என்று சுயநலத்தோடு செயல்படாமல், சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

     காடு, மேடு, வயல், வரப்பு எனச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

      இவரது ஆய்வுக் களம்

      பௌத்தம்

      இவரது ஆய்வு எல்லை

      சோழ நாடு

      அதாவது முன்பிருந்த, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்.

      மூன்று மாவட்ட எல்லைகளைத் தனது ஆய்வு எல்லையாக வரையறுத்துக் கொண்டு, களப் பணியாற்றுவது என்பது லேசுபட்ட காரியமல்ல.

      ஆனாலும் இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

       எதற்காக இந்த எல்லை?

       தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக, சோழ நாட்டில்தான், பௌத்தத்தின் தாக்கம் அதிகமாய் இருந்திருக்கிறது. எனவேதான் இந்த எல்லை.

      சோழ நாட்டு எல்லைக்குள் இவர் தேடிய பௌத்தம் எது?

      கோயில்களா அல்லது விகாரைகளா?

      கோயில்கள் என்பவை வழிபாட்டுத்த தலங்கள் என்பதை நாம் அறிவோம்.

      விகாரைகள் என்பது புத்த மத பிக்குகள் தங்கி, மதப் பணியாற்றும் இடமாகும்.

      பூம்புகாரிலும், நாகப் பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கான எச்சங்கள் இன்று பூம்புகாரில் மட்டுமே மீதமிருக்கின்றன.

      இன்று புத்த கோயில்களோ, புத்த விகாரைகளோ மீதமில்லாவிட்டாலும், சோழ தேசமெங்கும், புத்த சிலைகள் பரவலாக இருக்கின்றன.

      எனவே புத்தர் சிலைகளைத் தேடி, கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதையே, தனது ஆய்வாக, தனது தேடலாக இவர் அமைத்துக் கொண்டு, களத்தில் இறங்கினார்.

     வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகப் பணி. மீதமிருக்கும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேடல்.

      இவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், என் மனக் கண்ணில், முன் வந்து நிற்பவர், இவரது வாழ்க்கை துணைவியார்தான்.

      வாரத்தில் ஏழு நாட்களும் வீட்டில் இல்லாத ஒரு மனிதரை எவ்வாறு பொறுத்துக் கொண்டிருப்பார் என எண்ணிப் பார்ப்பேன்.

       பிறகுதான் காரணம் புரிந்தது.

       புரிதல்

       இருவருக்கும் இடையிலான புரிதல் அப்படிப் பட்டது.

       அண்மையில், இவர் பணி ஓய்வு பெற்றபோது, பணி நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தேன்.


எனக்கு அடுத்தப் பிறவி என்று ஒன்றிருக்குமானால், அடுத்தப் பிறவி மட்டுமல்ல, இன்னும் எத்துணைப் பிறவிகள் எடுத்தாலும், அத்துணைப் பிறவிகளிலும், இவரே எனக்கு மனைவியாய் வாய்க்க வேண்டும், எனப் பெருமிதம் பொங்க மேடையில் பேசிய பேச்சைக் கண்டு, நெகிழ்ந்துதான் போய்விட்டேன்.

       இவரது தேடலின் பலம், இவரது மனைவி.

       இவர் தேடிக் கொண்டே இருக்கிறார்.

       பேரூந்துப் பயணம், பின்னர் வாடகை மிதிவண்டிகளில் பயணம் எனப் பயணித்துப் பயணித்து, தேடித் தேடி, புதிது புதிதாய்,  புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.

       காடு, மேடு, வயற்காடு, ஆற்றங்களைகள் என இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அதிகம் படாத சின்னஞ்சிறு கிராமங்களில் எல்லாம் சுற்றித் திரிந்து, இதுவரை 65 புத்தர் சிலைகளைப் கண்டுபிடித்திருக்கிறார்.

        தனியொரு மனிதராய், இதுவரையில், யாரும் சாதிக்காததை, இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

     இவர் புத்தரைத் தேடப்போய், சமணரைக் கண்டு பிடித்த நிகழ்வுகளும் அதிகம்.

      புத்தர் யார்? சமணர் யார்?

      வேறுபாடு என்ன? எப்படி அறிவது?

      இதோ எளிமையாய் விளக்குகிறார்.

      ஞானம் பெற்றதை குறிக்கும், தீச்சுடர் போன்ற அமைப்பு, தலையில் இருந்தால், அவர் புத்தர்.

      நெற்றியில் திலகம் இருந்தால், அவர் புத்தர்.

      உடலில் ஆடை இருந்தால், அவர் புத்தர்

       உள்ளங் கையில் தர்மச் சக்கரம் இருந்தார், அவர் புத்தர்.

       இவையெல்லாம் இல்லையேல், அவர் சமணர்.

       சமணர் சிலையின் தலையில் தீச்சுடர் இருக்காது, உடலில் ஆடை இருக்காது.

       இவரது ஒவ்வொரு புத்தர் சிலை கண்டுபிடிப்பிற்குப் பின்னும் ஒளிந்திருக்கும், தேடல்கள், அனுபவங்கள் அதிகம், அதிகம்.

       தமிழகத்தில் மட்டுமல்ல, ஏன் உலகில் இருக்கின்ற புத்தர் சிலைகளிலேயே, ஒரே ஒரு மீசை வைத்த புத்தரைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.

        ஆம புத்தருக்கு மீசை இருக்கிறது.

        மீசை வைத்த புத்தர்.

        நம்புவீர்களா? ஆனால் உண்மை,

        மீசை வைத்த புத்தர் இருக்கிறார்.
       

திருச்சி மாவட்டம், மங்கலம் என்னும் சிற்றூரில், மீசை வைத்த புத்தரைக் கண்டு  பிடித்து, வெளி உலகிற்கு அறிவித்திருக்கிறார் இவர்.

        தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள சிற்றூர், பெரண்டாக் கோட்டை ஆகும்.

        இச்சிற்றூரில்  சாம்பான் என்ற ஒரு தெய்வத்தை, இங்கு வாழும் மக்கள் வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து, இவர் அங்கு சென்று பார்த்தபோது, இவருக்கு காத்திருந்தது என்னவோ, அதிர்ச்சிதான்.

         ஆம், சாம்பான் என்று மக்கள் வழிபடும் இந்தத் தெய்வம் புத்தர்.

        எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து, இந்த சிலையினை சாம்பான் சாமின்னுதான் குப்பிட்டுக்கிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்கு விசேசம். அன்றைக்கு இரவு, இந்த சிலைக்கு, பூசை செய்து வழிபாடு செய்வோம்.

         அதுமட்டுமல்ல, வருடத்திற்கு ஒரு நாள், கிடா வெட்டியும் வழிபாடு செய்வோம் என்று அவ்வூர் மக்கள் கூறுவதைக் கேட்டு அதிர்ந்திருக்கிறார்.

       புலால் உண்ணாமையையும், கொல்லாமையையும் போதித்த புத்தருக்கே, கிடா வெட்டு.

      



இங்கு மட்டுமல்ல, தஞ்சையில், பல இடங்களில், புத்தர் சிலைகளை, ஆங்காங்கு வாழும் மக்கள், அய்யனார், செட்டியார், சாம்பான், ரிசி, சிவனார், அமணர், பழுப்பர் எனப் பலப் பெயர்களில் வழிபடும் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறார்.

      அரியலூர் மாவட்டம், ராசேந்திர பட்டிணத்தில், உள்ள புத்தர் சிலையை மஞ்சள் விற்கும் செட்டியார் என அப்பகுதி மக்கள் அழைப்பதையும் கண்டிருக்கிறார்.

       மன்னார்குடியில் இருந்து திருத்துறைபூண்டி செல்லும் வழியில், வாடிவாய்க்கால் என்னும் சிற்றூரில் இறங்கி, மிதிவண்டியில் பயணித்து, புதூரில் ஒரு புத்தர் சிலையைக் கண்டு வியந்திருக்கிறார்.

       காரணம், இப்புத்தரை வழிபட்டால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடுவதாகவும், திருமணமானவுடன், கணவருடன் சேர்ந்து வந்து நன்றி தெரிவிப்பதும், தொடர் கதையாக நிகழ்கிறது என்பதை அறிந்து ஆவணப் படுத்தியிருக்கிறார்.

        தலையில்லாத புத்தர் சிலைகள் பலவற்றையும் கண்டு பிடித்திருக்கிறார். ஒரு முறை, தலையில்லாத நிலையில், ஒரு புத்தர் சிலையினைக் கண்டு பிடித்து, தலை எங்கே என்று விசாரித்த போது, அறுவடைக் காலமல்லவா, நெல்லை போரடிப்பதற்காக, புத்தரின் சிலையைப் பயன்படுத்துவார்கள், தேடிப் பாருங்கள், சுற்றுவட்டார வயல்களில் எங்காவது இருக்கும் என்று கூறுவதைக் கேட்டு திகைத்துப் போயிருக்கிறார்.

       அதேபோல், புதுக்கோட்டை ராமநாதபுரம் எல்லையில், சுந்தர பாண்டியன் பட்டனத்தில், உள்ள ஏகாம்பரேசுவரர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில், நின்ற நிலையில் இருக்கும் புத்தர் சிலையினைக் கண்டு பிடித்து, உலகிற்கு அறிவித்து இருக்கிறார்.

       நின்ற நிலையில் புத்தர் சிலையினைக் காண்பது வெகு அபூர்வமாகையால், இவரது இந்தக் கண்டுபிடிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

       நண்பர்களே, தன் வாழ்வின் பெரும் பகுதியை, புத்தர் சிலைகளைத் தேடுவதற்காகவே செலவிட்டுள்ளார் இவர்.

       இவரோடு எனக்கு சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கும் மேலானத் தொடர்பும், நட்பும் உண்டு.

        இன்று  வலையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இவர்தான். என்னை வலை உலகிற்கு அழைத்து வந்தவரே இவர்தான்.

       இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவரை நான் பௌத்த மதத்தைச் சார்ந்தவர் என்றே எண்ணி இருந்தேன்.

        ஏனெனில், இவரது பேச்சும் மூச்சும் பௌத்தம், பௌத்தம், பௌத்தம்.

      இவர் தனது மூத்த மகனது திருமண அழைப்பிதழை கொடுத்தபோதுதான், இவர் பௌத்தர் அல்ல என்பதையே உணர்ந்தேன்.

       கேட்டபோது சிரித்தார்.

       அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, மெல்லச் சிரித்து விட்டுப் போய்விட்டார்.

       ஆனால், நான் மீண்டும் சுய நினைவிற்கு வருவதற்குத்தான் நேரமாகிவிட்டது.

      இவரது தேடலும், சொல்லும், செயலும், இவரை புற உலகிற்கு பௌத்தராகவே அடையாளப் படுத்தியிருக்கிறது என்றால், இவர் எப்படி உழைத்திருக்க வேண்டும். நினைத்துப் பாருங்கள்.

       ஆனாலும் இவர் தன் உழைபபிற்குரிய உயர்வினை அடையாததுதான் , என் போன்றோர்களின் பெரு வருத்தம்.

        நண்பர்களே, அரசுப் பணியாளர்கள் பலர், ஓய்வு பெறும் நாளில், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர் என்பதை நாளிதழ்களில் வாசித்திருப்போம்.

        ஆனால் இவரோ, ஓய்வு பெறுவதற்கு முதல் நாள், பதவி உயர்வு பெற்றவர்.

       உதவிப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றவர்.

        யாரும ஓய்வு பெறும் நாளுக்கு முந்தைய நாள் பதவி உயர்வு பெற்றதாக, எனக்குத் தெரியவில்லை., அந்த வாய்ப்பு இவருக்குக் கிட்டியிருக்கிறது.

        ஆயினும் இவர், அப்பதவியினையும் தாண்டி உச்சம் தொட்டிருக்க வேண்டியவர்.

         நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

         தாங்கள் நன்கு அறிந்தவர்தான்.


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்,
உதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக் கழகம்
---
      

ஏடகம் அமைப்பின் சார்பில், நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவில் கடந்த 11.3.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை,
சோழ நாட்டில் பௌத்தம்
என்னும் தலைப்பில், இவர் சொற்பெருக்காற்றினார்.

     யானையைப் பிடித்துப் பானைக்குள் அடைக்க முடியுமா? என்ன?

     தனது இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தேடலை, சற்றே கோடிட்டுக் காட்டினார்.

      பார்வையாளர்களாய் நாங்கள் மெய்மறந்துதான் போனோம்.

      இவரைப் பாராட்ட, இவரதுத் தேடலைப் போற்றத் தகுந்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.

போற்றுவோம், வாழ்த்துவோம்.
---


ஆதிபராசக்தி தணிக்கைக் குழு உறுப்பினர்
திரு கு.சிவராஜா அவர்கள்,
பொழிவினைக் கேட்ட வந்திருந்தோரை வரவேற்றார்.


அறந்தாங்கி நகராட்சி ஆணையர்
திரு பே.வே.நவேந்திரன் அவர்கள்
தன் சீரியத் தமிழால், தலைமையுரை ஆற்றினார்.

      நகராட்சி ஆணையர். பெரும் பதவி, ஆனால் வயதிலோ இளையவர். திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், விடுமுறை நாளினைத் திரையரங்கில் கொண்டாடாமல், வாழ்க்கைத் துணையரோடு, ஏடகத்தின் தமிழ் நாடி, இவர் வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.


தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்,
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை
முனைவர் பட்ட ஆய்வாளர்
திருமதி டி.பவானி அவர்கள்
நன்றியுரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.


விழா நிகழ்வுகளைக் கல்லூரி மாணவி
செல்வி இரா.பாரதி நிலா அவர்கள்
தொகுத்து வழங்கினார்.

     இவர் முதுநிலை வருவாய் ஆய்வாளராக, வருவாய்த் துறையில் இருந்தும், தனது வருவாயைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், செந்தமிழின் வருவாயினைத் தேடித் தேடிப் பருகி மகிழும், திரு  சமத்துவ ராஜன் சம்பத் அவர்களின் அன்பு மகளாவார்.

      தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்பார்கள், இவரோ, தன் தந்தையின் தமிழோடு பிறந்து, தவழ்ந்து, வளர்ந்திருக்கிறார்.

      பெயரில் பாரதியோடு, நிலாவையும் சேர்த்துக் கொண்டதால், தெள்ளத் தெளிந்த குளிர் பேச்சால், ஞாயிறு முற்றத்திற்கு ஒளி சேர்த்தார்.

       என் மகளின் வயது ஒத்தவர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக பரிணமிப்பார் என்பதை இவரின், ஏடகப் பேச்சு உணர்த்தியது.

       வாழ்த்துகள் நிலா.


வழக்கம் போலவே,
அமைதியாய், ஆர்ப்பாட்டம் சிறிதுமின்றி,
சிறந்த சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து, அரங்கேற்றி இருக்கிறார்,
ஏடகம் அமைப்பின் நிறுவனர்
திரு மணி.மாறன் அவர்கள்.

நன்றி ஐயா
தங்களின் சீரிய பணி தொடரட்டும்.