09 நவம்பர் 2018

40 பைசா வைப்பு நிதி




     வைப்பு நிதி

     நிரந்தர வைப்பு நிதி

     நிரந்தர வைப்பு நிதி என்றால் என்ன என்பதை, இன்று நாம் அறிவோம்.

     அதாவது, ஒரு பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு பேச்சுப் போட்டி நடத்தவும், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும் விரும்புகிறோம் எனில், நாம் என்ன செய்வோம்.


     போட்டிகளை நடத்தவும், பரிசுகள் வழங்கவும் தேவைப்படும் தொகையினை, ஆண்டுதோறும் கொடுப்போம்.

      அல்லது,

     ஆண்டுதோறும் தேவைப்படும் தொகையானது, வட்டியாகக் கிடைக்கும் வகையில், ஒரு பெருந்தொகையை, நிலைத்த சேமிப்பாக ஏற்படுத்துவோம்.

     இதில், இந்த இரண்டாவது செயலைத்தான் செய்தார் இம் மாமனிதர்.

     தான் விரும்பும் செயல், ஆண்டாண்டு காலம் தொய்வின்றித் தொடர, ஒரு நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்தினார்

     தொகை எவ்வளவு தெரியுமா?

     நாற்பது காசுகள்

     என்ன? வெறும் நாற்பது காசுகளுக்கு ஒரு வைப்பு நிதியா?

     நாற்பது பைசாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

     பத்து ரூபாய் காசையே கடைகளில் வாங்க மறுக்கும் காலமல்லவா இது?

     இதில் நாற்பது காசுகளுக்கு வைப்பு நிதி ஏற்படுத்தி, அதில் கிடைக்கும் வட்டியை வைத்துக் கொண்டு, எதைத்தான் செய்ய இயலும்.

     நீங்கள் வியப்பது புரிகிறது

     பணமும், காசுகளும் மதிப்பிழந்து வரும் காலமிது.

     ஆனால், அன்று காசுகளுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் அதிகம், அதிகம்.

     எவ்வளவு தொகையினை வைப்பு நிதியாக வைக்கிறோமோ, அத்தொகையில், கால் பங்கு, ஆண்டுதோறும் வட்டியாகக் கிடைத்த காலம் அது.

     ஒரு பைசா காசைக் கொடுத்து, ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 140 வாழைப் பழங்களை வாங்கலாம்.

     உண்மை

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     இந்நிலை நேற்றல்ல, கடந்த ஆண்டும் அல்ல

     அதற்கும், அதற்கும் முன்

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இதுதான் நிலை.

     40 காசுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி.

     ஆண்டொன்றுக்கு 10 காசு வட்டியாய் கிடைக்கும்

     இந்தத் தொகையைக் கொண்டுதான், ஒரு விழாவை, திருவிழாவை நடத்தி இருக்கிறார்கள்.

     பத்து பைசா காசைக் கொண்டு, ஊரே ஒன்று கூடி கொண்டாடும் ஒரு விழாவை, திருவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.

     என்ன விழா தெரியுமா?

     பிறந்த நாள் விழா

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு மன்னனின், மாமன்னனின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

     மன்னனின் திருவுருவச் சிலைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, அன்னம் படைத்து, மேள தாளம் முழுங்க பெருவிழாவை நடத்தி இருக்கிறார்கள்.

      ஐப்பசித் திங்கள் சதயத் திருநாளன்று விழா.

      பிறந்த நாள் விழா

      சதயத் திருவிழா என்றவுடன், பளிச்சென்று நினைவிற்கு வந்துவிடுகிறதல்லவா, இம்மாமன்னனின் பெயர்.

      ஆம்


மாமன்னன் இராஜராஜ சோழனின்
பிறந்த நாளைக் கொண்டாடத்தான் இந்த வைப்பு நிதி.


கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன்
ஏற்படுத்திய வைப்பு நிதி.

     தஞ்சையில், வானுயரக் கற்றளியை எழுப்பி, அழியாப் புகழ் பெற்ற, தன் தந்தையின் மறைவிற்குப் பின், தன் தந்தைக்குத் திருஉருவச் சிலை வடித்து, ஒவ்வோராண்டும், திருஉருவச் சிலைக்கு சந்தனக் காப்பு செய்து, பரிவட்டம் கட்டி, பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார் இராஜேந்திர சோழன்.

     எந்த ஊரில் கொண்டாடினான்.

      தஞ்சையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன், சதய விழா நடந்ததா என்று தெரியாது.

     ஆனால், திருஅரபுரம் கோயிலில் சதய விழா நடைபெற்றிருக்கிறது.

      இக்கோயிலின் அம்மன் சன்னதி வலப்புறம் உள்ள நிலைக் காலில், சதய விழாச் செய்திகள், கல்வெட்டாய், இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

     திரு அரபுரம்

     இன்றும், இக்கோயிலுக்கு அருகில் உள்ள சிற்றூர் அரயபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

     108 சிவாலயம்

     பாபநாசம்

     தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது இக்கோயில்.





ஆனால், இன்று இக்கோயிலில் இராஜராஜன் திருமேனி எதுவும் இல்லை.

     காலத்தால் கரைந்து போய்விட்டது.

     ஆயினும் காலத்தால் கரையாமல், கள்வர்களால் இடம் பெயராமல், நிலைத்து நிற்கும், நிலைக்கால், இன்றும் மாமன்னன் இராஜராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை முழங்கிக் கொண்டே இருக்கிறது என்கிறார், வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்கள்.


வரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ்
போன்றோரின் அரும் முயற்சியால்,
கற்றூண்களில் மறைந்தும், பூமிக்குள் புதையுண்டும் கிடக்கும்,
தமிழனின் அருமை, பெருமைகள்  எல்லாம்
மெல்ல மெல்ல மேலெழுந்து வரத் தொடங்கி இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளரின்
தேடல் தொடர
வாழ்த்துவோம், போற்றுவோம்.