17 நவம்பர் 2018

பேயும் நோயும்




     அது ஒரு காலம்.

     ஒரு பெண் கருத்தரிக்கிறார்.

     குடும்பமே மகிழ்கிறது

     அன்றிலிருந்து உணவு முறை மாறுகிறது


     காலையும், மாலையும், ஐந்து பூண்டு பல்லை அரைத்து நசுக்கி, நாட்டுப் பசு மாட்டுப் பாலில் கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

     பெருங்காயம் சேர்த்த ரசம்

     முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் இந்த உணவு முறை.

     பின்னர், குழந்தை பிறக்கும் வரை, ஒவ்வொரு நாளும், ஒரு நாட்டு மாதுளை.

     கருவில் நன்கு வளர்ந்த குழந்தை புரண்டு, திரும்பி, வெளிவரத் துடிக்கும் பொழுது, பிரசவ வலி தொடங்கும்போது, திருநீற்றுப் பச்சிலையை சாறு பிழிந்து, அடி வயிற்றில் தடவுகிறார்கள்.

     வலி வெகுவேகமாய் குறைகிறது

     உடன் சுகப் பிரசவம்.

     இன்றோ, இதையெல்லாம் மறந்தே போய்விட்டோம்.

     குழந்தை பிறந்தவுடன், தாயின் அசதி போக்க, உடலுக்கு வலிமை கூட்ட, திருநீற்றுப் பச்சிலையின் விதையினை, ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குடிக்கக் கொடுக்கிறர்கள்.

     உடலின் அசதி அலுப்பு பறந்து போகிறது

     இன்றோ இதையெல்லாம் மறந்தே போய்விட்டோம்.

     குழந்தை பிறந்த பின், தாயையும் சேயையும், வீட்டின் ஒரு பகுதியில், தனித்துத்தான் வைத்திருந்தார்கள்.

     இப்பகுதியின் பெயர் முத்து அறை

     மறந்தே போய்விட்டோம்.

     எதற்காகத் தாயையும், சேயையும் தனித்து வைக்க வேண்டும்.

     பிரசவத்தின் காரணமாக, தாயின் உள்ளும், புறமும் ரணம் ஏற்பட்டிருக்கும். இக்காயங்களை ஆற்றியாக வேண்டும்.

     எனவே தாய்க்குத் தனி உணவு

     பிரண்டை, மிளகு, பூண்டு, உப்பு மற்றும் சங்கு இலை சேர்ந்த, தனி உணவைச் சமைத்து வழங்கினார்கள்.

     புண் வெகுவேகமாய் ஆறிற்று.

     மறந்தே போய்விட்டோம்.

     இந்த உணவுகளோடு சேர்த்து மருந்துகளையும் கொடுத்தார்கள். 

     காய கருப்பட்டி

     சட்டி காயம்

     இவைதான் மருந்துகள்

     சுக்கு, பூண்டு, கருப்பட்டி மூன்றையும் அரைத்துக் குழைத்து சிறு சிறு உருண்டையாய் உருட்டினால் காய கருப்பட்டி.

     சுக்கு, பூண்டு, கருப்பட்டியோடு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பேறுகால மருந்தையும் சேர்த்துக் கலந்து, மண் சட்டியில் காய்ச்சி, லேகியம் போல் தயாரிப்பதுதான் சட்டி காயம்.

      இம்மருந்துகளால் தாயின் உடல் வலிவு பெற்றது

     குழந்தைக்காக விரிந்த உடல் உறுப்புகள், மீண்டும் சுருங்கி தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது

      மறந்தே போய்விட்டோம்

     தாய்க்கு மட்டும்தானா மருந்து

      சேய்க்கு இல்லையா என்னும் கேள்வி எழுகிறதல்லவா

      உண்டு

     சேய்க்கும் மருந்து உண்டு.

     உர மருந்து

     அக்கால வீடுகளில் அம்மிக்கல், உரை கல் என இரண்டு இருக்கும் 

     அம்மிக்கல் அன்றாட உணவிற்குத் தேவையான மசாலா பொருட்களை அரைப்பதற்கு .

     அம்மிக் கல்லின் பயன் பற்றிய ஒரு வியப்பான செய்தி தெரியுமா?

      அம்மிக் கல்லை நாள்தோறும் பயன்படுத்துவோரை, மார்பகப் புற்று நோய் நெருங்கவே நெருங்காது.

       இன்றைய பெண்களில் நிறைய பேருக்கு அம்மிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.

      உரை கல்

      சிறிய வடிவிலான கல்

      மருந்துகளை இக்கல்லில் தேய்த்து எடுப்பார்கள்

       அம்மிக்கு அரைக்கனும், மருந்துக்கு உரைக்கனும் என்ற ஒரு பழமொழியே நம் மொழியில உண்டு.

     உர மருந்து

      ஜாதிக்காயை உரை கல்லில் ஒரு உரசு உரசுவார்கள், அதாவது ஒரே ஒரு முறை தேய்ப்பார்கள்.

     மாசிக்காய் ஒரு உரசு

     கடுக்காய் ஒரு உரசு

     சுட்ட வசம்பு ஒரு உரசு

     பெருங்காயம் ஒரு உரசு

     மழைக்காலம் எனில், இவற்றோடு

     சுக்கு ஒரு உரசு

     சித்தரத்தை ஒரு உரசு

     இந்து உப்பு ஒரு உரசு

     இத்துணையையும் ஒன்றின் மேல் ஒன்றாக, உரை கல்லில் உரசி, விரலால் அழுந்தத் தடவி வழித்து எடுத்து, தண்ணீர் கலந்து குழந்தைக்குக் கொடுத்தார்கள்.    

     உர மருந்து

     குழந்தை நலமோடு, உடல் வலிவோடு, உள்ளத் தெளிவோடு வளர்ந்தது.

     மறந்தே போய்விட்டோம்.

     நண்பர்களே, நம் நினைவுகளை, நம்மைக் கடந்து, நம் பெற்றோரையும் கடந்து, சற்றுப் பின்னோக்கிச் செலுத்திப் பார்ப்போமா.

     நமது தாத்தா, பாட்டி எல்லாம் மகிழ்ச்சியாகத்தானே வாழ்ந்தார்கள்.

     தங்கள் வீட்டில், பழைய வீட்டு மனை அல்லது நிலப் பத்திரங்கள் இருந்தால் எடுத்து ஒரு முறை படித்துப் பாருங்கள். 

     நம் தாத்தா கலத்துப் பத்திரம்

     பத்திரங்களில் நம் தாத்தாக்கள் தங்களின் பெயரினை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

     தங்கள் தாத்தாவின் பெயருக்குமுன், சுகவாசி என்னும் அடைமொழியும், தங்களின் பாட்டியின் பெயருக்குமுன் சுக ஜீவனம் என்னும் அடைமொழியும் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

      சுக வாசி

      சுக ஜீவனம்

      அதுவல்லவா வாழ்க்கை

     நம் முன்னோர், உழவனும் உழத்தியுமாக வாழ்ந்த காலத்தில், மகிழ்ச்சியாகத்தானே வாழ்ந்தார்கள்.

     இன்று நாம் வளமாக இருக்கிறோம்

     நலமாக இருக்கிறோமா?

     மகிழ்வாக இருக்கிறோமா?

     எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருத்துவமனை என்று ஓடிக் கொண்டல்லவா இருக்கிறோம்.

     கை நிறைய, இரசாயண மாத்திரைகளை அள்ளி அள்ளி, உணவு போல் முழுங்கிக் கொண்டல்லவா இருக்கிறோம்.

     ஏன் இந்த நிலை?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

என முழங்கும் திருமந்திர வரிகளை மட்டுமல்ல, நம்மையுமே நாம் மறந்து விட்டோம்.

     நம் மரபுகளை மறந்து விட்டோம்

     நம் மண்ணை மறந்து விட்டோம்

     நம் மண்ணின் மாண்பை மறந்து விட்டோம்.

     நம் மண்ணின் உணவை மறந்து விட்டோம்.

     உணவு என்பது உடலுக்கு எரி பொருள் மட்டுமல்ல.

     உணவு என்பது உண்பவனை மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பதுடன், சமூகம் சார்ந்ததாக, பண்பாடு சார்ந்ததாக, சுற்றுச் சூழல் சார்ந்ததாக, தெய்வம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

     பிள்ளையார் கோயிலில் சுண்டல் தருவார்கள்.

      பெருமாள் கோயிலில் புளி சாதம் தருவார்கள்

      ஒவ்வொரு தெய்வத்திற்கும்கூட தனித் தனி உணவு.

       ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு உணவைப் படைத்த, நம் முன்னோர், பேயைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

      பேயும் நோயும் கற்பனை.

      பேய் கற்பனை

       நோய் கற்பனை

       நோய் என்று எதுவும் இல்லை, அது ஒரு குறைபாடு.

       இக்குறைபாட்டினைப் போக்கும் மருந்து உணவு.

      உணவே மருந்து

      மருந்தே உணவு

      இன்றைய நோய்களுக்கு முக்கிய காரணம் அரிசு

      ஆனாலும் அரிசிதான் நோய் தீர்க்கும் மருந்து

      அரிசி, தீட்டாத அரிசிதான் மருந்து.

       அரிசியில் கூட, பளபளப்பைத் தேடித் தேடி, மருத்துவமனைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம்.

      நம் நாட்டில் எத்துணை வகையான அரிசி வகைகள் இருக்கின்றன தெரியுமா?

     சொன்னால் நம்ப மாட்டீர்கள்

நடுவண் அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும்
National Beauro of Plant Genetic Research
அமைப்பின் பதிவேடுகளின் படி
நம் நாட்டில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல
முழுதாய்
ஒரு இலட்சம்
அரிசி ரகங்கள் இருக்கின்றன.

      வியப்பாக இருக்கிறதல்லவா

      ஒரு இலட்சம் அரிசி வகைகள்

      உண்மை

     மறந்தே போய்விட்டோம்.

     ஒரு சட்டை வாங்குவதற்கு நாம் செலவிடும் நேரத்தை, ஒரு காலணி வாங்குவதற்கு நாம் செலவிடும் தொகையை, நாம் உண்ணும் அரிசியைத் தேர்ந்தெடுப்பதற்காகச் செலவிடுவதே இல்லை.

      வேதனை அல்லவா

      இவ்வுலகில், வெள்ளை பொன்னி, சிவப்பு பொன்னி என்று இரண்டே இரண்டு அரிசி வகைகள்தான் உள்ளன.

     ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி, குண்டு பொன்னி, அந்த பொன்னி, இந்தப் பொன்னி என, ஆயிரம் பொன்னி அரிசி வகைகள் இன்று அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

     ஆனால் இவை எதுவுமே உண்மையில் பொன்னியே அல்ல.

     பொன்னி என்பது இன்று வணிகப் பெயராக, சந்தைப் படுத்துதலின் உத்தியாக, தாரக மந்திரமாக மாறித்தான் போய்விட்டது.

       நம்மிடத்தில் என்ன இல்லை?

        எல்லாம் இருக்கிறது

      நாம்தான் தெரிந்து கொள்வதில்லை

       அறிந்து கொள்வதில்லை

       பின்பற்றுவதும் இல்லை

       பிறப்பு முதல் இறப்பு வரை நெல்லுடன் வாழ்ந்த சமூகம், நம் சமூகம்.

       ஆனால் நாம் அந்த மரபு குணத்தை இழந்து விட்டோம், மறந்து விட்டோம்.

      சரியான, முழுமையான, முறையான உணவு இல்லையேல், எந்த மருந்தும் வேலை செய்யாது.

      சரியான, முழுமையான, முறையான உணவு இருந்தால், எந்த மருந்தும் தேவைப்படாது.

       மறந்தே போய்விட்டோம்.

       ஆண் குழந்தைப் பிறக்க வேண்டுமா, திருமந்திரம் வழி காட்டுகிறது.

       பெண் குழந்தைப் பிறக்க வேண்டுமா, திருமந்திரம் சுட்டிக் காட்டுகிறது

       கூனாய், குருடாய், செவிடாய், முடமாய் பிறப்பதற்கானக் காரணங்களை, புட்டுப் புட்டு வைக்கிறது நம் திருமந்திரம்.

      மறந்தே போய்விட்டோம்.
----

      நண்பர்களே, நாம் இன்னும், நம் மரபுகளை முற்றாக மறந்துவிடவில்லை, இழந்துவிடவில்லை, முழுமையாய் அழித்துவிடவில்லை, இப்பொழுதேனும் விழித்தெழுங்கள், திரண்டு வாருங்கள், இழந்த, மறந்த நம் மரபுகளை மீட்டெடுப்போம் வாருங்கள், வாருங்கள் என


வேளாண்மைச் செம்மர், இயற்கை மருத்துவர்
திரு கோ.சித்தர் அவர்கள்
பெருங்குரலெடுத்து அழைத்தபோது,
கும்பகர்ணத் தூக்கம் கலைந்த உணர்வோடு,
உடல் சிலிர்த்துத்தான் போனது.

மக்கள் மறந்த மரபுகள்
(வேளாண்மை, உணவு, மருத்துவம்)
என்னும் தலைப்பில்,
ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
கடந்த 11.11.2018 ஞாயிறன்று மாலை, பதினென் சித்தர்களின் அடியொற்றி வாழ்ந்துவரும்
திரு கோ.சித்தர் அவர்களின்
பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்கின்றேன்.

எல்லோர்க்கும் அது ஏடகம்
என்றாலும் அதுதான் பீடகம்
இலக்கியத்தின் நல் தேடகம்
இனிமை தரும் ஓர் ஆடகம்
இங்கில்லை எதிலும் பூடகம்
இருள் மனதை நன்றே மூடகம்
உரை கேட்டால் வாரா பீடகம்
உரை வீச்சில் நல்ல மேடகம்
ஆன்மிகத்தமிழ் திகழ் பாடகம்
ஆர்வலர் பலர் வந்து கூடகம்
இல்லையிதற்கொரு ஈடகம்
நல்லோர் பலரிதை நாடகம்
வருவோர்க்கில்லை வாடகம்
நாளும் நாளுமதன் புகழ் நீடகம்
என ஏடகம் அமைப்பின் அருமையை, பெருமையை, தன் கவி வரிகளால், உயர்த்திப் பிடிக்கும்,


உலகு சுற்றிவரும் உன்னதக் கவிஞர்
பாவலர் தஞ்சை தர்மராசன் அவர்கள்
இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார்.


அருள்நிதி ஜெ.சங்கர் அவர்கள்
விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.


செல்வி என்.ஜோசபின் ஜெனிபர் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.


திரு இராம.நாகராஜன் அவர்கள்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

சிறப்புரையாற்றிய
திரு கோ.சித்தர் அவர்கள், தன் உரையில்,
ஓர் இயக்கம், சமூகப் பார்வையோடு செயல்படுமானால்,
அது வளர்ந்தே தீரும் என்று உரைத்ததை உண்மையாக்கி,


சமூகப் பார்வையோடும், சமூக அக்கறையோடும்
செயலாற்றிவரும், பணியாற்றிவரும்
ஏடக நிறுவுநர்
முனைவர் மணி.மாறன் அவர்களை
வாழ்த்துவோம், போற்றுவோம்.