17 ஆகஸ்ட் 2026

முதலைச் சட்டை



     அவர் ஒரு பெண்.

     எழுத்தாளர்.

     சிறுகதை எழுத்தாளர்.

     வீடும், வெளியும்

     அச்சுவாகனம் ஏறிய இவரது முதல் சிறுகதை.

     இதழ்.

     தினமணியின் பாரதி மலர்.

     வெளிவந்த ஆண்டு என்ன தெரியுமா?

     இன்று நேற்றல்ல.

     90 ஆண்டுகளுக்கும் முன்.

     1935 ஆம் ஆண்டு.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     பெண்கள் படிப்பதே, பெரிய சாதனையாகக் கருதப்பெற்ற, அக்காலத்தில் எழுதத் தொடங்கியவர் இவர்.

     1936 இல் இவரது இரண்டாவது சிறுகதை, மணிக்கொடி இதழில் வெளி வந்தது.

     பெயர் என்ன தெரியுமா?

     முதலைச் சட்டை.

     இந்த இதழின் தலையங்கத்தில், இவ்விதழின் ஆசிரியர் திரு பி.எஸ்.ராமையா எழுதினார்.

     முதலைச் சட்டை என்ற ஒரு கதையைப் பற்றி ஒரு வார்த்தை. இவர் நமது மணிக்கொடியின் கதாசிரியர் ஒருவரின் சகதர்மணி. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே அப்படிப் போலிருக்கிறது.

     இதன்பிறகும் மணிக்கொடி இவரது இரண்டு கதைகளை வெளியிட்டது.

     இப்பொழுதும் இவ்விதழின் ஆசிரியர் தலையங்கத்தில் (15.2.1937) இவரைப் பற்றி எழுதினார்.

     இவர், இதே ரீதியில் எழுதுவாரானால், இன்னும் வெகு சீக்கிரத்திலேயே, நம்முடைய சிறந்த எழுத்தாளர்களை வெகுதூரம், பின்னே விட்டுவிடுவார் என்பதில் சந்தேகமேயில்லை.

     இந்த இடத்தில், இந்த அம்மணி இன்னார் என்று அன்பர்களின் மகிழ்ச்சிக்குரிய விசயத்தைத் தெரிவித்துவிட வேண்டுமென்று நமக்கு அவா.

     ஆனால், அந்த ஸ்ரீமதி போட்டிருக்கும் நிரந்தரமான தடையுத்தரவை மீற நமக்குத் தைரியமில்லை. இவ்வளவு அருமையாகக் கதையெழுதும் ஆசிரியையின் கோபத்துக்கு ஆளாவது சரியாகுமா?

     இவர் சிறந்த எழுத்தாளராக உருவானதற்குக் காரணம், இவரது கணவர்.

     இவர்களுடைய பதினைந்து ஆண்டுகால மண வாழ்க்கையில் இருவரும், சேர்ந்திருந்ததைவிட, பிரிந்திருந்த காலமே அதிகம்.

     கணவரின் வேலைத் தேடல்.

     மனைவியின் உடல் நலக்குறைவு.

     கணவர் சென்னையில்.

     மனைவி பெற்றோருடன், திருவனந்தபுரத்தில்.

     பிரிந்திருந்த இருவரையும் இணைத்தவை கடிதங்கள்.

     எல்லா பெண்களையும் போலவே நீயும், சமைப்பதும், வீட்டு வேலைகள் செய்வதுமான, சாதாரண வாழ்வை வாழக் கூடாது.

     கணவர் எழுத்தாளர்.

     தன் மனைவியும் எழுத வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

     நீயும் இந்த விசயத்தில், என்கூட தொடர்ந்து வரவேண்டும் என்றுதான் ஆசை. அதனால்தான் உன்னை எழுது, எழுது என்று தொந்தரவு செய்கிறேன்.

     கண்ணா, உன் புத்தியில் எனக்கு ரொம்ப நம்பிக்கை.

     நீ மனசு வைத்தால் நடக்காத காரியம் கிடையாது.

     நான் என்னதான் எழுதிக் குவித்தாலும, நீயும் ஒத்தாசை செய்தால்தானே, எனக்கும் திருப்தி, மகிழ்ச்சி.

     நம்மைப் போல் அமைந்த ஜதை, யார் இருக்கிறார்கள்?

     ஒவ்வொரு கடிதத்திலும், ஒவ்வொரு விதமான அறிவுரைகள், ஆலோசனைகள்.

     நீ படிக்காத புத்தகங்கள், இங்கே நிறைய கிடக்கிறதே, அனுப்பவா?

     நீ நிறைய படிக்க வேண்டும்.

     எழுத வேண்டும்.

     உன்னால் முடியும்.

     இந்த விசயத்தில், நீயும் என்னுடன் தொடர்ந்து வரவேண்டும், என்னுடன் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

     இவர் மேலும் எழுதுவார்.

     மனதில் உள்ள துன்பங்களுக்கு வடிகால் எழுத்துதான்.

     தன் மனைவியின் திறமையை நன்குணர்ந்த, இந்த எழுத்தாளர், கடிதம் எழுதி எழுதியே, தன் மனைவியை படிப்பாளியாக, படைப்பாளியாக மாற்றினார்.

     இப்பெண் எழுத்தாளர், பின்னாளில், அவரது மகளிடம் சொன்னார்.

     உன் அப்பாவுக்குக் கடிதம் எழுதி, எழுதியே, நானும் கதை எழுதப் பழகிவிட்டேன்.

     இவர் யார் தெரியுமா?

     சிறுகதை எழுதிய முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்களில் முதல்வர்.

     குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை, மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்.

இவர்தான்


எஸ்.கமலாம்பாள்

கமலா விருத்தாசலம்.

எழுது, எழுது எனக் கடிதங்கள் எழுதி, எழுதியே

இவரை எழுத வைத்த இவரது கணவர் யார் தெரியுமா?

விருத்தாசலம்

இவர்தான்,

சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், சுக்ராச்சாரி,

இரவல் விசிறி மடிப்பு

எனப் பலப் பல புனைப் பெயர்களில் எழுதியவர்.

ஆனாலும், நிலைபெற்று நிலைத்துவிட்ட இவரது புனைப்பெயர்.



புதுமைப்பித்தன்.