மனிதரெலாம் அன்புநெறி
காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனித தத்துவமாம்
இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்
இனிதினிதாய்
எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று
மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
-
பாவேந்தர் பாரதிதாசன்
எதையும் படிக்காம சொல்லக்
கூடாது. யாரோ ஒரு தலைவர் சொன்னாரு, ஏதோ ஒரு பத்திரிக்கையிலே படிச்சேன்னு சொல்லாதே.
மூல நூல்களைப் படி.
தந்தை என்றால் இவரல்லவோ
தந்தை. அறிவுரை என்றால் இதுவல்லவோ அறிவுரை.
அறிவுரை வழங்கியதோடு
விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து,
நூறு புத்தகங்களை அந்தத் தந்தை, தனது 19 வயது மகனிடம் கொடுத்தார்.
இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி.
மகனின் மனம் மகிழ்ச்சியால்
விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்க்கிறார்.
நூறு கோடி ரூபாய்
சொத்துக்களைப் பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு, ஒவ்வொரு நூலாய் படிக்கிறார்.



