27 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 6


--------. கடந்த வாரம் --------
உண்மையின் உறைவிடமாய் விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்ட துணை ஆட்சியாளருக்கும், ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, தன் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளினார்.
-------------------------------
   
     பின்னர் சென்னை சென்று, சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டப் படிப்பினை வெற்றிகரமாக முடித்த உமாமகேசுவரனார், கரந்தை திரும்பி, அந்நாளில் சிறந்து விளங்கிய வழக்கறிஞர் கே.சீனிவாச பிள்ளை என்பாரிடம் சேர்ந்து, வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளிலேயே சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தனியே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.

     உமாமகேசுவரனார் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியபோது, ஒருசில தமிழர்களே வழக்கறிஞர்களாய் இருந்தனர். ஏ.டி.பன்னீர் செல்வர், ஐ.குமாரசாமி பிள்ளை, மருத முத்து மூப்பனார், அழகிரி சாமி நாயுடு, எம்.வேங்கடாசலம் பிள்ளை என விரல் விட்டு எண்ணிவிடலாம்.

     பெயர்ப் பலகைக் கூடத் தொங்க விடாமல், ஏறத்தாழ முப்பத்தியிரண்டு ஆண்டுகள், திறம்பட வழக்கறிஞராயய் பணியாற்றியவர் உமாமகேசுவரனார்.

     இடையறா உழைப்பு, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே வாதிடும் உயரிய குணம், அச்சம் என்பதை என்னவென்றே அறியாத உள்ளம் இவையே வழக்கறிஞர் உமாமகேசுவரனாரின் பண்புகளாகும்.

     எக்கட்சிகாரரிடமும் வழக்காடுவதற்கு உரிய தொகை இவ்வளவு என ஒருபோதும் கூறமாட்டார். பணம் கொடுக்க இயலாத ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்காக, எவ்விதத் தொகையும் பெறாமல் வழக்காடி வெற்றி தேடித் தருவார்.

     இவ்வாறான தன்மைகளால் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் நம்பிக்கையானவராகத் திகழ்ந்தார். இதனாலேயே அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியும் இவரை நாடி வந்து பெருமையடைந்தது.

     இத்தகு பெருமை வாய்ந்த, தகுதி வாய்ந்த, தனது சகோதரரைத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்க இராதாகிருட்டினன் உளம் கொண்டார். தனது சகோதரரை, நண்பர்களோடு சேரந்து சென்று சந்தித்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின தலைமைப் பொறுப்பினை ஏற்றிட ஒப்புதலைப் பெற்றார்.

     இவ்வாறாக, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றிட, அனைத்து நிலைகளிலும் அயராது உழைத்தமையால் இராதாகிருட்டினனை சங்கம் நிறுவிய துங்கன் என அனைவரும் போற்றலாயினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

         
நாவலர் ந.மு.வே
தஞ்சாவூர், கரந்தை, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில், 1911 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப் பெற்றது.


    
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்ற கந்தப்ப செட்டியார் சத்திரம் இன்று பாழடைந்த நிலையில்
கரந்தைத் தமிழ்ச் சங்கம், என்றென்றும் வளர் பிறையாய் வளர, தமிழ் மொழியின் இழந்த பெருமைகளை மீட்க, கீழ்க் கண்டோர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
 
இராசாளியார் மற்றும் பெத்தாச்சி செட்டியார்
ஆதரிப்பாளர்கள்

அரித்துவார மங்கலம், பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

ஆண்டிப்பட்டி, பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார்



சபைத் தலைவர்

திரு த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

உதவி சபைத் தலைவர்

மோகனூர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை

காரியதரிசி

திரு பி.கல்யாண சுந்தரம் பிள்ளை

உதவிக் காரியதரிசி

திரு கோவிந்தசாமி பிள்ளை

பொருளாளர்

திரு எஸ். தட்சிணாமூர்த்தி பிள்ளை

விகிதர்

திரு அ. கணபதி பிள்ளை

அங்கத்தினர்கள்

திரு த.வே.இராதாகிருட்டின பிள்ளை
திரு பா.சிவகுருநாத பிள்ளை
திரு ஆர். கிருட்டினசாமி பிள்ளை
திரு ஜி. மாது சாமி வன்னியர்
திரு டி.கே. இராமசாமி பிள்ளை
திரு மகா தேவ ராவ்
திரு கி. நாக பிள்ளை
திரு பி.வேங்கடாசலம் பிள்ளை
திரு அயில் செட்டியார்
பட்டுக்கோட்டை திரு வி. நாராயண சாமி பிள்ளை
பட்டுப் கோட்டை திரு துரைசாமி நாயுடு
கரந்தை திரு முருகேசன்

கௌரவ அங்கத்தினர்கள்

திரு சேதுராம பாரதியார்
திரு அர்.சுப்பிரமணிய அய்யர்
திரு உ.நா.அப்பாசமி அய்யர்
திரு ஐ.சாமிநாத முதலியார்
திரு எல்.உலகநாத பிள்ளை
திரு சோமநாத ராவ்
திரு மு.வேங்கடசமி நாட்டார்
திரு ஜோசப் பிள்ளை
திரு வீ.சுப்பராய பிள்ளை
திரு பழனி வேலு பிள்ளை
திரு ஆ.வை. இராமசாமி பிள்ளை
திரு மரு.குப்பு சாமி பிள்ளை
திரு நா.அ.மு. திருவேங்கடம் செட்டியார்
திரு இராமசாமி வன்னியர்
திரு சிவஞானம் பிள்ளை
திரு மு.ஆப்பிரகாம் பண்டிதர்
உக்கடை திரு பாப்பா நாடு சமீன்தார்
திரு வி.ஏ. வாண்டையார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற பிறகு, வித்தியா நிகேதனம் சரியாக செயல்படாது போயிற்று.  ஆயினும் வித்தியா நிகேதனத்தின் தலைவர் இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பேரில், எவ்வித மன வருத்தமும் அடையாது, வேண்டும் உதவிகளைச் செய்து வந்தார்.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திங்கள் தோறும் கூட்டங்கள் நடத்துவதென்றும், ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பெற்றது.

     மக்கள் வேற்று மொழிச் சொற்கள் கலக்காத தூய தமிழில் பிழையின்றிப் பேசுமாறும், எழுதுமாறும் செய்வதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் குறிக்கோள் ஆயிற்று. தமிழகத்தின் தெருக்களில் தமிழ்தான் இல்லை என்னும் இழி நிலையினைப் போக்க வேண்டும் என்பதற்காகக், கரந்தைத் தமிழ்ச் சங்கம்  வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது.

      ஆண்டுதோறும் நடைபெற்ற ஆண்டு விழாக்களில், தமிழகத்துப் பெரும் புலவர்கள் அனைவரும் வந்து பங்கேற்றனர். தமிழ்ப் புலவர்கள் ஓரிடத்தில், ஒன்று கூடுவதற்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழி செய்தது. தமிழைத் தமிழர்களே கற்காது புறக்கணித்தபோது, தமிழில் பேசுதல் கற்றவர்களுக்கு இழுக்கு என்ற கருத்து, வேரூன்றத் தொடங்கிய போது, அழகிய தமிழ்ச் சொற்களின் இடத்தினை, வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் பிடித்து அரசாளத் தொடங்கியபோது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயராயப் பணிகள் , தமிழக மக்களிடத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கின.

     தமிழும், வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடை மறைந்து, தூய தனித் தமிழில் பேசும் பேச்சு வழக்கு உண்டாயிற்று. இந்த தனித் தமிழ் நடை, கரந்தை நடை என்றே போற்றப் பெற்றது.

     விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை என்னும் சொல் மறைந்து, திருமண அழைப்பிதழ் என்னும் சொல் தோன்றியது. மகாராய ராய ஸ்ரீ போய் திருவாளர், திரு என்னும் தமிழ்ச் சொற்கள் வழக்கத்திற்கு வந்தன. பிரசங்கம் என்பது சொற்பொழிவு ஆயிற்று, அக்கிராசனாதிபதி தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆகவும், பொக்கிஷத்தார் பொருளாளராகவும் மாறிப் போனார். சீமான், சீமாட்டி என்ற செற்கள் போய் திரு, திருமதி, என்னும் சொற்களும், செல்வன், செல்வி போன்ற எண்ணற்ற தூய தமிழ்ச் சொற்களும் வழக்கிற்கு வந்தன.

     சங்கம் தோன்றிய நாளில், உதவி சபைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட, மோகனூர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், 1913 ஆம் ஆண்டிலிருந்து செயலாளர் பொறுப்பேற்று செம்மாந்தப் பணியாற்றத் தொடங்கினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம்

     உலக மொழிகளுள் உயர் மொழியாய் வீற்றிருந்த தமிழ் மொழி, மீண்டும் அவ்வுயர்வைப் பெற வேண்டும் என்ற ஆராத காதலினாலும், தமிழ் மக்கள் கலை நயம் முதலிய எல்லா நலங்களையும் பெற்று, உலக மக்களுள் ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தினாலும், உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்கும் பணியினைத் தொடங்கினார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. நூலகம் ஒன்றினைத் தொடங்க எண்ணி முயற்சி மேற்கொண்ட உமாமகேசுவரனார், சேகரித்த நூல்களை அடுக்கி வைப்பதற்குக்கூட இடம் இல்லாமல் தவித்த தவிப்பை அடுத்தவாரம் பார்ப்போமா நண்பர்களே.