17 ஜூன் 2018

தாகம் தீர்க்கும் வழிகள்




     உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்றன.

     எரி சக்திற்கு மாற்றாக, விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, மண்ணெண்ணை, நில ஆவி, புனல் மின்சாரம், அனல் மின்சாரம்,அணு மின்சாரம், சூரிய சக்தி, காற்று, அலை ஆகியவற்றில் இருந்து பெறும் மின்சாரம், சாண எரி வாயு, எனப் பல வழிகள் இருக்கவே இருக்கின்றன.

     ஆனால், தண்ணீருக்கு மாற்றாக என்ன இருக்கிறது?


     எது இருக்கிறது?

     இவ்வுலகில் தண்ணீருக்கு மட்டும், மாற்று என்பது கிடையவே கிடையாது.

---

     உலகில் மொத்தம் நாற்பது டெல்டாப் பகுதிகள் இருக்கின்றன.

     உலகு முழுவதும் உள்ள, இந்த நாற்பது டெல்டாப் பகுதிகளிலும், தலையாயது, நமது காவிரி டெல்டா ஆகும்.

     இதற்குக் காரணம் என்னவென்றால், உலகின் வேறு எந்த டெல்டாவிலும் இல்லாத அளவில், சிற்பக் கலை, நாட்டியம், சித்திரம், கர்நாடக இசை போன்ற, நுண்கலைகளின் பிறப்பிடமாக, காவிரி டெல்டா திகழ்வதே ஆகும்.

     காவிரி

     தமிழகப் புனித நதி

     தமிழகத்தின் எழுபது விழுக்காடு, கால்வாய்ப் பாசனத்திற்கு, இந்தக் காவிரியே காரணமாகும்.

      தமிழக நெல் விவசாயப் பரப்பளவில், நாற்பது விழுக்காடு, காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது.

     இதுமட்டுமல்ல, தமிழகத்தின், ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 23 மாவட்டங்களின் குடி நீர் ஆதாரமாக விளங்குவதும் காவிரியே ஆகும்.

---

     ஒரு தனி மனிதனின் தண்ணீர் தேவை எவ்வளவு தெரியுமா?

     ஒவ்வொரு தனி மனிதனுக்கும், நாள்தோறும் குடிப்பதற்கு மூன்று லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

     தனி மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நீரின் அளவு 135 லிட்டர் ஆகும்.

     தனி மனிதன், நாள் ஒன்றிற்கு, உண்ணும் உணவினைத் தயார் செய்ய, விளைவிக்க, 3500 லிட்டர் முதல் 4500 லிட்டர் வரை நீர் தேவைப்படுகிறது.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நாம் ஒரு நாள் உண்ணும் உணவினை உற்பத்தி செய்வதற்கே, 3500 லிட்டரில் இருந்து 4500 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

     அப்படியானால், ஒரு தனி நபருக்கு, ஒரு ஆண்டிற்கு, தேவைப்படும் தண்ணீரின் தேவை என்ன தெரியுமா?

     1700 கன மீட்டர்

     அதாவது

     17,00,000 லிட்டர்

     பதினேழு இலட்சம் லிட்டர்.

    ஆனால் நம்மிடம் இவ்வளவு நீர் வளம் இருக்கிறதா?

    வாருங்கள் ஒரு பருந்துப் பார்வைப் பார்ப்போம்.

    தமிழகத்தின் சராசரி ஆண்டு நீர் வளம் 1643 டி.எம்.சி.,

    இன்று ஒரு தனி நபருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் நீரின் அளவு 641 கன மீட்டர் மட்டுமே.

    அதாவது, 2054 கன மீட்டர் பற்றாக்குறையுடன்தான் நாம், இன்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

     இன்னும் 32 ஆண்டுகளில், 2050 ஆம் ஆண்டில், ஒரு தனி நபருக்கு 416 கன மீட்டர் நீர் மட்டும்தான் கிடைக்கும்.

     பற்றாக்குறை 1284 கன மீட்டராக உயரும்.

     75.53 விழுக்காடு பற்றாக்குறை ஏற்படும்

     ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்,

     மனதை தயார் செய்து கொள்ளுங்கள்

     இந்நிலை தொடருமானால், 2050 வது ஆண்டில், தமிழக மக்களுக்கு, ஒரு நாளில், ஒரு வேளைக்குப் போதுமான உணவைத்தான் உற்பத்தி செய்ய இயலும்.

     நம் காலம் ஓடிவிடும்,

     கிட்டத்தட்ட ஓடி விட்டது.

     ஆனால் நம் பிள்ளைகளின், நம் பெயரப் பிள்ளைகளின்  நிலைமை என்ன?

     இந்நிலையினை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்?

----

     இன்றைய நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் மழையின் மூலம் பெற்றபடும் நீரின் அளவு 60 டி.எம்.சி.,

     காவிரி டெல்டாவின்  நிரந்தர நீர் வளம் 20 டி.எம்.சி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரின் அளவு 177.25 டி.எம்.வி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, முழுமையாக நீர் கிடைக்குமா என்பது தனிக் கதை.

     கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.

     கிடைத்தால், டெல்டாவின் மொத்த நீர் ஆதாரம் 257.25 டி.எம்.சி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பு பொய் ஆகுமேயானால், கானல் நீராக மாறுமேயானால், 2050 ஆம் ஆண்டில், டெல்டாவிற்குத் தேவைப்படும் நீரின் அளவு 424 டி.எம்.சி., ஆக உயரும்.

     பற்றாக்குறை 217 டி.எம்.சி., ஆக வளரும்.

     என்ன செய்யப் போகிறோம்?

     நமது பிள்ளைகளுக்காக, நமது பெயரப் பிள்ளைகளுக்காக, நமது சந்ததியினருக்காக, என்ன செய்யப் போகிறோம்?

---

     முதலில் நாம் தண்ணீரைச் சேமிக்கப் பழக வேண்டும்.

     அன்றாடப் பயன்பாடு

     விவசாயப் பயன்பாடு

     தொழிற்சாலைப் பயன்பாடு

     வியாபாரப் பயன்பாடு

என ஒவ்வொரு நிலையிலும், நீரைச் சேமித்தே ஆக வேண்டும்.

     வீட்டினைப் பொறுத்தவரை, கழிவறையில் தொடர்ந்து நீர் கசிவதால், நாள் ஒன்றுக்கு 200 கேலன் நீர் வீணாகிறது.

     குழாயில் ஒரு சொட்டு சொட்டினால், ஓர் ஆண்டில், 3000 கேலன்  நீர் வீணாகிறது.

     இதனைச் சரி செய்ய வேண்டும்.

     குழாயினைத் திறந்து வைத்தபடி, பல் துலக்குவதால், முகச் சவரம் செய்வதால், நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் நீர் வீணாகிறது.

     பாத்திரத்தில் நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால், தினமும் 13 முதல் 15 லிட்டர் வரை சேமிக்கலாம்.

      வீட்டில் சமையல் பாத்திரங்கள் கழுவிய நீரைத் தோட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும்,

     பாத்திரம் கழுவும் இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம் முழு கொள்ளளவை எட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

     இதுமட்டுமல்ல,

     மழை நீர்ச் சேகரிப்பு

    செயற்கை முறை நில நீர்ச் செறிவு

    கோடை உழவு

     மாற்றுப் பயிர்

     நீர் வளம் அற்றப் பகுதிகளுக்கு தானியம் இறக்குமதி செய்தல்

     மாசடைந்த தண்ணீரை நன்னீராக்குதல்

     உலக வெப்பத்தைக் கட்டுப் படுத்துதல்

     கடல் நீர் ஊடுறுவலைத் தடுத்தல்

     நீரி நிலைகளைப் புதுப்பித்தல்

     நதிகளை இணைத்தல்

முதலிய வழிகளில் தண்ணீர் பற்றாக்குறையினைச் சமாளிக்கலாம்.

     நம்மைவிட குறைந்த மழை அளவுகளை உடைய, அமெரிக்கா போன்ற பிற நாடுகள் அனைத்தும், மழை நீரைத் தேக்கி, முறைப்படுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும், முறையாகப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை என்பதே இல்லை, என்னும் நிலையினை உருவாக்கி விட்டன.

     நாம் என்று, இதுபோல் மாறப் போகிறோம்.

     தண்ணீரைப் பிரித்துக் கொடுப்பதில், ஜாதி, மதம், இனம், நிறம், வகுப்பு, பிரிவு, மொழி, கொள்கை, நாட்டு எல்லை, அரசியல், எதுவும் தடைக்கல்லாகவே இருக்கக் கூடாது.

     இவையெல்லாம் பெருந்தடைகளாக நீடிக்குமானால், தண்ணீர் கிடைக்காமல் இருக்குமேயானால், இத்தடைகளைத் தகர்க, நம்முன் இரண்டே இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.

     முதல் வழி

     தண்ணீர் பற்றாக் குறையுடன் வாழக் கற்றுக் கொள்வது.

     இரண்டாவது வழி

     வீதிக்கு வந்து போராடுவது.

     போராடிப் போராடி நம் உரிமையைப் பெறுவது,

     இரண்டில் நாம், எதைச் செய்யப் போகிறோம்.

     முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.

-----

     பொழிவு,

    சொற்பொழிவு நிறைவு பெற்ற பொழுது, அரங்கு முழுவதும் ஓர் அமைதி.

தஞ்சாவூர், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின்,
பருவகால மாற்ற ஆய்வு மையத்தின்,
மேனாள் இயக்குநர்
முனைவர் ப.மு.நடராசன் அவர்கள்,


காவிரி – தாகம் தீர்க்கும் வழிகள்

என்னும் தலைப்பிலானப் பொழிவினை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்த பிறகும், அமைதி தொடரத்தான் செய்தது.

     என்ன செய்யப் போகிறோம்?

     எப்படி வாழப் போகிறோம்?

     நம் வருங்காலச் சந்ததியினர் எப்படி வாழ வைக்கப் போகிறோம்?

     காசு, பணத்தை மட்டும், நம் சந்ததியினருக்கு விட்டுச் சென்றால் போதுமா?

      உள்ளத்தில் கேள்விகள் சூறாவளியாய் சூழன்றடிக்க, வெளியிலோ அமைதி.

      கடந்த 10.6.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை, ஏடகம் அமைப்பின் சார்பில், நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்தான், முனைவர் ப.மு.நடராசன் அவர்களின்  உரையினைக் கேட்டு, மூச்சு விடக்கூட மறந்து அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

      ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டும், அனைவர் உள்ளத்திலும் புகுந்திப்பது தெளிவாய் தெரிந்தது.


ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிரானரியின் தலைவர்
ரொட்டேரியன் ஆர்.பழனியப்பன் அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்க.

அரசு விருது பெற்றத் தஞ்சை ஓவியர்
திரு ஆ.ராகவன் அவர்கள்
வந்திருந்தோரை வரவேற்றார்.

ஏடகம் அமைப்பின் செயலாளர்
பா.விஜி அவர்கள்
நன்றிரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.


ஏடகம் அமைப்பின் நிறுவனர்,
தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தின், தமிழ்ப் பண்டிதர்
திரு மணி.மாறன் அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

      மாதந்தோறும், இரண்டாம் ஞாயிறு மாலை, சீரியச் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து, திறம்பட நடத்திவரும், ஏடக நிறுவனர் திரு மணி.மாறன் அவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்.