27 செப்டம்பர் 2020

மகாகவி வாழ்க, வாழ்கவே

இவர்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

முன்னாள் மாணவர்.

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் மாணவர்

கரந்தையை

தன் வாழ்வில்

என்றென்றும் மறவாதவர்.

ஏழுவயதில் நான்

இழந்த தாயைப்

பதினெட்டு வயதில்

கரந்தையில் பெற்றேன்

எனக்கூறி, தனக்குத் தமிழ் புகட்டியக் கல்லூரியைத், தன் தாய்க்கு நிகராகப் போற்றியவர்.

கரந்தை மண்

கந்தக மண்

தமிழுணர்வு வெப்பமாகத்

தகிக்கின்ற மண்

தமிழவேள் உமாமகேசுவரனார்

தமிழ் வேள்வி நடத்திய பூமி அது.

எனக் கரந்தையின் பெருமையைப் போற்றியவர்.

இந்தக்

கரந்தைத் தமிழ்ச் சங்க

மண்ணில்

ஒரு சிட்டிகை

உப்புக்கு பதிலாக

உணவில் சேர்த்துக் கொண்டால்

சொரணை செத்தவர்களும்

பிழைத்துக் கொள்ளலாம்

எனத் தமிழின் தொன்மையை, பெருமையை, அருமையை அறியாதவர்களுக்கு, உணராதவர்களுக்கு எடுத்துரைத்தவர்.

     மகாகவி பாரதிக்கு அடுத்து தோன்றிய மகாகவி இவர்தான் என, கற்றறிந்தோர் ஒரே குரலில் முழங்கியபோது, அப்பெருமையினை, அன்னைத் தமிழுக்குப் படைத்தவர் இவர்.

ஒரு மகாகவி

எப்போது சாத்தியம்?

கொல்லர்களில் ஒரு மகாகொல்லன்

கிடைக்கும்போது . .

தச்சர்களில் ஒரு மகா தச்சன்

படைக்கப்படும் போது . .

உழவர்களில் ஒரு மகா உழவன்

முளைக்கும் போது . .

நெசவாளியில் ஒரு மகா நெசவாளி

தறியால் நெய்யப்படும் போது . .

ஒரு மகாகவி உருவாவதும் – அப்போது

சாத்தியம்.

அவர்கள் வரிசையில்

ஓரிடம் கிடைக்குமெனில்

எனக்கென்ன பெருமை?

எனை வளர்த்த

மூத்த கவிஞர்களான என்

முன்னோடிகளுக்கும்

மூத்த தமிழுக்கும் மட்டும்

பெருமை.

அவன் எழுத்துக்கும்

அதைப் படிப்பவர்க்கும்

அது பிறந்த

அன்னைத் தமிழுக்கும் பெருமை

என முழங்கியவர். தமிழ், தமிழ் தமிழ்.

தமிழே இவர் பேச்சு, தமிழே இவர் மூச்சு. அதனால்தான்,

உலகனாய் இருக்கும் நான்

நிச்சயமாய் இந்தியன்

அதைவிடச்

சத்தியமாய்

தமிழன்.

தமிழனாக இருப்பதற்குத்

தடைபோட்டால்

இந்தியனாகத்

தொடர்வது பற்றிச்

சிந்திக்க வேண்டிவரும்.

என்று சற்றும் தயங்காது குரல் கொடுத்தவர்.

28.9.2020

87 ஆம் பிறந்த நாள்

காணும்

இவர் ஒரு

கவிஞர்,

கல்லூரிப் பேராசிரியர்

மொழி பெயர்ப்பாளர், உரை வீச்சாளர்,

கட்டுரையாளர், திரைப்படப் பாடலாசிரியர்

செய்தி வாசிப்பாளர், ஓவியர்

வர்ணனையாளர், இதழாளர், ஆய்வறிஞர்.

பாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர்

பாப்லோ நெருதாவின் தீவிரக் காதலர்.

திராவிடம், பெரியாரிம்

மார்க்சியம், தேசியம்

தமிழ் உணர்வு

உலக மானுடப் பற்றாளர்

என்றெல்லாம் பன்முகங் கொண்டவர்


மகாகவி

ஈரோடு தமிழன்பன் அவர்கள். 

இன்னும் ஒரு நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.



 

குரல் வழிப் பதிவு




 

நண்பர்களே, வணக்கம்.

     மேலும் எனது நான்கு நூல்கள் அமேசான் தளத்தில் இணைந்துள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.





ஐந்து நூல்களையும் 28.9.2020 பிற்பகல் முதல் 30.9.2020 பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

     படித்துப் பாருங்கள் நண்பர்களே,

வலைச் சித்தருக்கு

திருக்குறளாருக்கு

ஜெ!