09 அக்டோபர் 2024

பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன

 


இந்த சமூகத்தில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் அத்தனைப் பேரும் பிச்சைக்காரர்களா? அல்லது உழைக்காமலே வளத்துடன் வாழ்பவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் பிச்சைக்காரர்களா? எப்படி இதை சரி செய்வது? சரி செய்ய முடியுமா?

     இவர் தன் நூலில் எழுப்பும் இந்தக் கேள்வி, நம் முகத்தில் அறைகிறது.

     கதைப் புத்தகம்தானே என எளிதில் புறந்தள்ளவும் முடியவில்லை.

     எங்குமே ஒழுங்கீனம்தான் மதிப்புடையதாக இருப்பதுபோல் பட்டது. ஜால்ரா அடிப்பவர்கள், துதி பாடுபவர்கள், பணத்துக்கு வளைபவர்கள், முகத்துக்கு நேரே ஒன்றைப் பேசி, பின்னாலே வேறொன்றைச் சொல்லி இகழ்பவர்கள்.

     படிக்கப் படிக்க மனம் நினைவலைகளில் மூழ்கி கனத்துப் போகிறது. நான், என் வாழ்வில் இதுபோன்ற மனிதர்களால் எதிர்கொண்ட இன்னல்கள், இன்னல்களால் எழுந்த மன உளைச்சல்கள் வரிசை வரிசையாய் நினைவிற்கு வந்தன.

     தன்னளவில் ஒரு நிறைவு இருப்பதை நடராசன் உணர்ந்துதான் இருந்தார். அவரின் வாழ்நாள் முழுக்கக் கனவாக இருந்தது, ஒரு ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான்.

     மாசம் பொறந்தா சரியா சம்பளம் வந்துடுது. நிறைவான சம்பளம் … நிறைவான வேலை… அதை எப்படித் தவறாகச் செய்ய முடியும்? செய்யக் கூடாது. செய்யவும் மாட்டேன் என்று இருபத்து மூன்று ஆண்டுகள் உழைத்துப் பணியோய்வு, அதுவும் தன்விருபபப் பணியோய்வு கொடுத்து வந்தவர் நடராசன்.

     ஒவ்வொரு வரியும் வியப்பைக் கொண்டு வந்து என்னுள் குறித்த வண்ணம் இருக்கிறது. என்னைப் பற்றித்தான் எழுதியிருக்கிறாரோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகிறது.

     நானும் ஆசிரியன்தான்.

     விருப்ப ஓய்வுதான்.

     நிறைவான சம்பளம்.

     நிறைவான பணி.

     அதே சமயம், இதை எழுதியவரும் ஆசிரியர்தான், பேராசிரியர்.

     பெயரை மட்டும் மாற்றி அவரைப் பற்றியே எழுதியுள்ளாரோ எனும் எண்ணமும் உதிக்கத்தான் செய்கிறது.

---

     சௌந்தர்யா, நா ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கேன். ஒரு துளிகூட ஒழுக்கங்கெட்ட வழியிலே போய் சம்பாதிக்கலே.

     எந்தத் தகப்பனும் பெத்த மகளின் வாழ்வை சீரழிக்கிற மாதிரி ஒரு காரியத்தைப் பண்ணவே மாட்டான்.

     உனக்கு என்னைப் பத்தித் தெரியும்.

     இந்த உலகத்துக்குத் தெரியும்.

     உலகத்துலே நல்லவங்க இன்னும் இருக்காங்க.

     உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பேன்.

     இனிமே யாரும எம்பொண்ணு வாழ்க்கையைப் பத்திப் பேசக்கூடாது.

     வருவான்.

     நிச்சயம் நல்லவன் ஒருத்தன் வருவான்.

     இனிமே பொறக்கப் போறதில்ல.

     எப்பவோ பொறந்திருப்பான்.

     ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வரியின் ஒவ்வொரு எழுத்தும் உள்ளத்தில் அப்படியே ஒட்டிக் கொள்கிறது.

     கதை என்பதையும் மறந்து, நூலின் வரிகளில் கலந்து, கரைந்து போய்விட்டேன்.

---

     இன்னுமொரு காரியும் நீங்க பண்ணித் தரனும்.

     நான் இத்தனையும், என்னோட மாணவி முல்லைக்காகச் செய்யறேன்.

     ஏன்னா, இன்னிக்குப் படிப்புதான் எல்லாத்துக்குந் தேவை.

     ராமுவுக்கு நாளைக்கு என்ன தீர்ப்பு சொல்லுவாங்கன்னு தெரியாது.

     முல்லைக்கு நாளை மறுநாள் பரிட்சை தொடங்குது.

     இந்தப் பரிட்சை முடியிரவரைக்கும், முல்லை என் வீட்டுல தங்கிப் பரிட்டை எழுதட்டும்.

     இங்க இருந்தா, அவளுக்குப் படிக்கிற மனநிலை மாறும், கெட்டுப் போகும் பரிச்சை முடிந்ததும், கொண்டு வந்து நானே விட்டுடறேன்.

---

     ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று குறு நாவல்கள்.

     மூன்றுமே ஆசிரியரை மையப்படுத்திய நாவல்கள்.

     ஆசிரியருக்குப் பெருமை சேர்க்கும் நாவல்கள்.

     எளிமையான எழுத்து.

     ஆனால் வலிமையானத் தாக்கம்.

     முதல் வரியிலேயே கதை தொடங்கி விடுகிறது.

     தொடர்ந்து தொய்வின்றி, மனதிற்கு நெருக்கமாய் பயணித்து, முடிவில், படிக்கும் நமக்குள்ளும் ஒரு நிம்மதி பெருமூச்சினைப் பிறக்க வைக்கிறது.

    


கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு, தஞ்சையில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்று, எட்டாம் தேதி காலை, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையைத்தில் இருந்து, எங்கள் அன்பு மகளைப் பார்ப்பதற்காக, மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் நோக்கி, நானும், என் வாழ்க்கை இணையரும் பயணித்தோம்.

    இப்பயணத்தின்போது படிப்பதற்காக, சில புத்தகங்களையும் உடன் எழுத்துச் சென்றிருந்தேன்.

     தொடர்வண்டி அரக்கோணத்தைக் கடந்த நிலையில், இந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன்.


படிக்கப் படிக்க, விரைவுத் தொடர் வண்டியின் வேகத்திற்கு இணையாகப் பக்கங்களும் ஓடிக்கொண்டே இருந்தன.

    179 பக்கங்களையும் படித்த பிறகுதான் புத்தகத்தைக் கீழே வைத்தேன்.

     இதில் பெரிய வியப்பு என்னவென்றால், இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, இப்புத்தகத்தின் ஆசிரியர் அலைபேசி வழி அழைத்தார்.

     ஜெயக்குமார், வீட்டில் இருக்கிறீர்களா? என்றார்.

     ஔரங்காபாத் சென்று கொண்டிருக்கிறேன். தங்களின் புத்தகத்தைப் படித்தவாறே பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.

     மகிழ்ந்து போனார்.

     நெகிழ்ந்து போனேன்.

     இந்நூலின் ஆசிரியர் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், மனதில் ஒரு வியப்பு அல்ல, மலைப்பு தோன்றும்.

     எப்படி இவரால் முடிகிறது?

     தமிழ்ப் பேராசிரியர் பணி ஓய்விற்குப் பிறகு, எழுதுதலே இவரது முழு நேரப் பணியாகிவிட்டது.

     எழுதுகோல், இவரது விரலின் நீட்சியாகவே மாறிவிட்டது.

     பார்க்கும் காட்சிகளில் எல்லாம், கேட்கும் வார்த்தைகளில் எல்லாம், இவருக்கு, தன் கதைகளுக்கானக் கரு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

     இவரும் எழுதி, எழுதி கதைகளைப் பிரசவித்துக் கொண்டே இருக்கிறார்.

     கதைகள் பூத்துக் கொண்டே இருக்கின்றன.

இவர்தான்


ஹரணி

இவரது நூல்


பூக்கள் பூத்துக் கொண்டேயிருக்கின்றன.

படித்துப் பலநாட்கள் கடந்தும், கதையின் வாசம் வீசிக் கொண்டே இருக்கிறது.

 

பூக்கள் பூத்துக் கொண்டேயிருக்கின்றன.

Pustaka Digital Media Pvt Ltd.,

7-002, Mantri Residency,

Bannerghatta Main Road,

Bengaluru – 560 076

+91 7418555884

விலை ரூ.200

14 கருத்துகள்:

  1. பேரன்பும் நன்றியும். மனம் நிறைய நினைக்கிறது. நெகிழ்ந்து மெளனிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஒவ்வொரு நூலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது ஐயா. நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அயரா பணி தங்களுடையது. நன்றி ஐயா

      நீக்கு
  2. மிகச் சிறந்த நூல் அறிமுகம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கரந்தை மைந்தரே! எந்தநூல் அறிமுகமானாலும் அதில் தங்களின் ஆழுமையை நீங்கள் வெளிப்படுத்தத் தவறியதில்லை வாழ்த்துகள் தங்களுங்கும் நூலாசிரியருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வளிக்கின்றன. நன்றி நண்பரே

      நீக்கு
  4. நல்லதொரு நூல் அறிமுகம். பேராசிரியர் ஹரணி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மனதை நெகிழ வைத்த பதிவு. இது போன்ற கதைகளை வாசிக்க வாசிக்கதான் நமக்கு ஏற்படும் துன்பங்கள் ஒன்றும் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. நாம் மனம் வருந்தி பலனில்லை என்பதும் திருந்தி நடக்க வேண்டிய மனித (?) ஜென்மங்கள் உணர வேண்டும் என்பதும் புரிகிறது. தங்களின் பார்வையில் எழுதிய விமர்சனம் அருமை நண்பரே. திரு.அன்பழகன்(ஹரிணி) ஐயாவின் எழுத்துகள் எப்பொழுதும் மனிதர்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை என்பதில் எனக்கு ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, ஹரணி ஐயா அவர்களின் எழுத்துக்கள், மனித மனத்தின் உணர்வுகளை ஒவ்வொரு கதையிலும் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன.
      நன்றி நண்பரே

      நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு