20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.

     அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.

     ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி இடிச்சா.

     துள்ளி விளையாடுதோ கெழம்?.

புள்ளைங்க இந்த வாரம் வருமில்ல, அவுங்கவிட்ட சொன்னாத்தான் வழிக்கு வருவீங்க நீங்க.

     சிரிப்பேன் நான், ஆழமாய் அவளைப் பார்த்தவாறே

     பிள்ளைகளிடம் சொல்ல மாட்டாள்.

     படிக்கும்பொழுதே மனதில் ஒரு மகிழ்ச்சி வந்து எட்டிப் பார்க்கிறது. இதுதான், இதுதான் வாழ்க்கை, இப்படிப் பேசிப் பேசி மகிழ்ந்து வாழ்வதுதானே வாழ்க்கை. அன்பின் வெளிப்பாடே இதுபோன்ற வார்த்தைகள்தானே.

     வீடு விட்டு வீதி இறங்கிச் செல்கிறோம், நானும் மனைவியுமாக.

     இப்படியெல்லாம் அருகருகே நடந்து சென்றும் மனம் உரசிப் பேசியுமாய்

     வெளியூரில் இருக்கிற வயது பிள்ளைகளை விடுத்து, தனியே வசிக்கிற வயதான தம்பதிகளுக்கு இப்படித்தான் வாய்க்கப்பெறும் போலும்.

     இந்தச் சிறுகதையை, நண்பர் எனக்காகவே எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில், அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என்று பரபரப்பாய், கலகலப்பாய் இருந்த வீட்டில் இன்று தனித்துத்தான் கிடக்கிறோம்.

     யோசித்துப் பார்த்தால் பெரும்பாலானவர்களின் நிலையும் இதுதான்.

     மனைவிகூட வெகுவாய் கோபித்துக் கொள்வதுண்டு.

     இதெல்லாம் எதுல போயி நிக்கப்போகுதுன்னு தெரியல.

     அவள் சொன்னபடிதான், ஏறிப்போன சுகரில் போய் நின்றது.

     உண்மைதான், நாள்தோறும், நினைத்த நேரத்தில் காபி, காபி, டீ, டீ.

     முடிவு, சுகர் ஓடோடி வந்து, என் உடலில் ஒட்டிக் கொண்டது.

     நண்பரின் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கப் படிக்க, பல கதைகளை எனக்காகவே எழுதியது போன்ற ஓர் உணர்வு.

     அனைவரின் வாழ்விலும் அரங்கேறும் சம்பவங்கள்தான்.

     இருப்பினும், அதனைச் சொல்வதற்கு, நண்பர் கையாளும் வார்த்தைகளும், வார்த்தைகளைக் கோர்த்து சிறுகதையினை நகர்த்திச் செல்லும் லாவகமும், நம்மைக் கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது.

     பல வருடங்களாகவே, இவரது சிறுகதைகளைப் படிப்பதென்றால், எனக்கு ஓர் அலாதி மகிழ்ச்சி.

     காரணம் இவரது ஒவ்வொரு கதையும், நெஞ்சுக்கு நெருக்கமாகி விடுவதுதான்.

     தன்னைச் சுற்றிய சூழல்களுக்குள் முழுமையாய் இறங்கி, இரண்டறக் கலந்து, இவரின் பார்வையில், மனதில் பதிந்தவைகளை, பதிந்தவர்களை, இவர் எழுத்தாக்கி சிறுகதையாய் வடித்து வழங்கும் அழகே, அழகு.

     இவர், தான் வந்த வழியையும், தன்னை ஏற்றிவிட்ட ஏணியையும் என்றும் மறவாதவர்.

     வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், இதோ இவர்தான், இதோ இவரால்தான் என் வாழ்வு மலர்ந்தது எனச் சொல்லத் தயங்காதவர்.

     ஓங்கி வீசுகிறப் பெருங்காற்றில் உருத்தெரியாது, அடையாளமற்றுப் போயிருக்க வேண்டிய, என்னை, தன் தயாள குணத்தால், வங்கி ஊழியர் ஆக்கி, இந்நிமிடம் வரை, எனக்கு இலக்கியத்தின், சொல்லித்தீரா பக்கங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிற, சகோதரி, மகாலட்சுமி சுப்பையா அவர்களுக்கு, செருப்பாய்த் தேய்வது தவிர்த்து, பெரிதாய் ஏதேனும் செய்துவிட இயலவில்லைதான்.

     அதுவும் சரியாக தேய்ந்திருக்கிறேனா தெரியவில்லை.

     செய்நன்றியை முழுமையாய் மறந்து, மறைத்து வாழும் மனிதர்கள், அதிகரித்துக் கொண்டே செல்லும் இன்றைய சூழலில், இப்படியும் ஒரு மனிதர்.

     தன் நெஞ்சின் ஈர நினைவுகளை எல்லாம் எழுத்தாக்கி நூலாக்கி இருக்கிறார்.


ஈரச்சுவடு

     இந்நூலை இவர், தான் பிறந்து வளர்ந்த பெரிய பேராலி மண்ணுக்கும், அவ்வூரின் நினைவுகளுக்கும் படைத்திருக்கிறார்.

நண்பர்


விமலன் அவர்களின்

ஈரச்சுவடு

நூலினை முழுமையாய் வாசித்து முடித்தபிறகும்,

நெஞ்சில் ஈரம் சொட்டிக் கொண்டே இருக்கிறது.

 

ஈரச்சுவடு,

அறிவு ஒளி புத்தகப் பட்டறை,

144, ஜெ.சி.பி., வணிக வளாகம்,

வத்தல் மண்டபம் அருகில்,

மெயின் ரோடு,

சாத்தூர் 626 203

விலை ரூ 90

அலைபேசி 94435 44607