01 ஆகஸ்ட் 2012

நீராருங் கடலுடுத்த ...


     கடந்த 27.7.2012 வெள்ளிக் கிழமை வழக்கம் போல், காலை 8.45 மணியளவில் வீட்டிலிருந்து, இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 9.00 மணியளவில் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியை அடைந்தேன்

     9.15 மணிக்குப் பள்ளியின் பேரவைக்  கூட்டம் தொடங்கியது.  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் அனைவரும், தத்தம் வகுப்புகளில் இருந்து, வரிசை வரிசையாகப் புறப்பட்டு, தலைமையாசிரியர் அறைக்கு எதிர்புறம் திரண்டனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் இப் பேரவைக் கூட்டம் நடைபெறும்.

     பேரவைக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சி தமிழ்த் தாய் வாழ்த்து. மாணவியர் ஐவர் ஒலிப் பெருக்கி முன் நின்று, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான நீராருங் கடலுடுத்த... என்னும் பாடலை ராகத்துடன் பாடினர். அடுத்ததாக சங்க வாழ்த்து. கரந்தைக் கவியரசு அவர்களால் இயற்றப்பெற்றப் பாடல்.

              வாழி  பகலோன்  வளரொளிசேர்  ஞானமெலாம்
              ஆழி  செலுத்துதமிழ்   அன்னையே  வாழியரோ
              நங்கள்  கரந்தைத்  தமிழ்ச்சங்கம்  நாள்நாளும்
              அங்கம்  தழைக்க  அமைந்து.


     சங்க வாழ்த்துப் பாடலை பாடி முடித்தபின் தலைமையாசிரியர் திரு சொ. இரவிச்சந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அடுத்ததாக ஒரு மாணவி திருக்குறள் ஒன்றினைப் படித்து, அக்குறளின் பொருளினை விளக்கினார். மற்றொரு மாணவி அறிவோம் அறிவியல் என்னும் தலைப்பில் அறிவியல் செய்தி ஒன்றினை வாசித்தார். மூன்றாவது மாணவி இன்றைய செய்திகள் என்னும் தலைப்பில், நாளிதழ்களின் வெளியான செய்திகள் மூன்றினை வாசித்தார். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். தேசிய கீதத்துடன் பேரவைக் கூட்டம் இனிது நிறைவுற்றது.

     மாணவ, மாணவியர் வரிசை வரிசையாக தங்களது வகுப்புகளுக்குத் திரும்பினர். பேரவைக் கூட்டத்தின் முதல் நிகழ்வாகப் பாடப்பெற்ற நீராருங் கடலுடுத்த பாடலை மனதில் அசைபோட்டவாறே எனது வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பிற்குள் நுழைந்ததும், மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறினர். மாணவியருக்குக் காலை வணக்கம் கூறி அமரச் சொன்னேன்.

நண்பர் சரவணன்
     நான் பத்தாம் வகுப்பு ஆ பிரிவின் வகுப்பாசிரியர். மாணவியர் மட்டுமே உள்ள வகுப்பு. இம்மாணவியருக்கு ஆங்கிலமும், கணிதமும் கற்பிக்க வேண்டியது எனது பணியாகும். உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் என்னுடன் பணியாற்றும், எனது நண்பர் திரு வெ. சரவணன் அவர்கள் அடிக்கடி, நாம் மாணவர்களுக்குப் பாடத்தினை மட்டும் போதிப்பதால் பலனில்லை. வாழ்வின் யதார்த்தத்தினையும், கல்வியின் அவசியத்தினையும், உழைப்பின் உயர்வினையும், நன்நெறிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறுவார். இதனாலேயே, பாடத்துடன் உலக நடப்புகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகள், அறிவியல் செய்திகள், கல்வியின் முக்கியத்துவம் என பல்வேறு செய்திகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறுவது எனது வழக்கம்.

      மாணவியரைப் பார்த்து, பேரவைக் கூட்டத்தில் நீராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றதே, அதை எழுதியவர் யார் தெரியுமா? என்று கேட்டேன். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்றனர். இப்பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக பாடப் பெற, முயற்சி மேற்கொண்டது யார் தெரியுமா? எந்த அமைப்பு தெரியுமா? எனக் கேட்டேன். மாணவியருக்குப் பதில் தெரியவில்லை. யாரென்று கூறுங்கள் என்றனர்.

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
      நீராருங் கடலுடுத்த என்னும் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக, இன்று தமிழகம் முழுவதும் பாடப் பெறுவதற்கு, நமது கரந்தைத் தமிழ்ச் சங்கம்தான் காரணம் என்றேன். மாணவியர் வியப்பில் ஆழ்ந்தனர். எப்படி? என்று கேட்டனர்.

     இன்று மதியம், வாழ்க்கைக் கல்விக்காக ஒரு பாடப் பிரிவு ஒன்று உள்ளதல்லவா? அப்பொழுது இது பற்றி விளக்கமாகப் பேசலாம் என்று கூறினேன். அன்று மதியம் இரண்டாம் பிரிவு வேளையில் மாணவியர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். நானும் மகிழ்வோடு பேசத் தொடங்கினேன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

     முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின் தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம், 1901 இல் தோன்றிய மதுரைத் தமிழ்ச் சங்கமாகும். ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று போற்றப்படும் பெருமைக்கு உரிய தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் கண்ட ஆண்டு 1911.

     தமிழர்கள் தனித் தமிழில் பேசுவதை விடுத்து, தமிழோடு வடமொழிச் சொற்களையும் கலந்து பேசுவதைப் பெருமையாய் கருதிய காலம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலமாகும். தமிழோடு வடமொழியினைக் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பெரும்பான்மைத் தமிழர்களால், அதிலும் குறிப்பாக கற்றறிந்தவர்களால் பேசப் பட்டது.

     இக்கால கட்டத்தில் தனித் தமிழைப் போற்றி  வளர்க்க, வீறு கொண்டு எழுந்த அமைப்பு கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயராத, ஓயாத பணியின் காரணமாக, தனித தமிழில் பேசும் பழக்கம் உண்டாயிற்று. இத் தனித் தமிழ் நடை கரந்தை நடை என்றே போற்றப் பட்டது.

உமாமகேசுவரனார்
     இத்தகு பெருமைமிகு சங்கத்தின் முதல் தலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.

          கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளிலிருந்தே, தமிழின் பெருமையினைத் தமிழர்க்கு உணர்த்த உமாமகேசுவரனார் கையில் எடுத்த பேராயுதம் விழாக்களாகும். திங்கள் தோறும் விழாக்கள் நடத்தி, தமிழ்ப் பெருமக்களை அழைத்து, தமிழின் பெருமையினைக் கல்லாதவர்களும் உணரும்படிச் செய்தார்.

     ஆயினும் உமாமகேசுவரனாருக்கு ஒரு மனக்குறை நெஞ்சை நெருடிக் கொண்டே இருந்தது. அக்காலத்தில் கோயில் திருவிழாக்களின் போது, கதா காலேட்சபங்கள்  நடைபெறும். மகா பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், அரிச்சந்திரன் கதையினையும், உரை நடையும், பாட்டும் கலந்த நடையில் கதா காலேட்சபமாய் விளக்குவர். விடிய விடிய மக்களும் அயராது கண் விழித்து கதை கேட்டு மகிழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பாட்டோடு ஒன்றிய இனமல்லவா நமது தமிழினம்.

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை, தமிழின் பெருமையினைப் பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் உமாமகேசுவரனாரின் உள்ளத்தே உரு பெற்றது. உமாமகேசுவரனார் தினமும் அதிகாலையில் தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியராய் தேவார, திருவாசகத்தையும், இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பாவையையும், உளமுருகப் பாடிக் களிப்புறும் நல் மனத்தினர்.

     தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.

          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த என்னும் இப்பாடல் சங்க மேடையில் கோலேச்சத் தொடங்கியது.

வே.இராமசாமி வன்னியர்
     சங்க விழாக்கள் அனைத்திலும், முதல் நிகழ்வாக நிராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றது. நீராருங் கடலுடுத்தப் பாடலை, சங்க மேடையில் அரங்கேற்றியப் பெருமைக்கு உரியவர் கூடலூர் வே. இராமசாமி வன்னியராவார்.

     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது, வெளியிடப் பெற்ற கரந்தைக் கட்டுரை என்னும் பெயருடைய வெள்ளி விழா மலரில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரை, நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும் என்பதாகும். ,இக்கட்டுரையில் உமாமகேசுவரனார் குறிப்பிடுவதைப் பாருங்கள் சங்கத்தின் விழாக் காலங்களிலெல்லாம், கேட்போர் உள்ளம் கனிய, தமிழ்த் தெய்வ வணக்கத்தை இன்னிசையோடு, இருபத்து நான்காண்டுகளாக இடைவிடாது பாடி வந்த, உண்மைத் தமிழ்த் தொண்டர் கூடலூர் வே.இராமசாமி வன்னியரவர்களது இன்னிசையை இனி கேட்பதற்கில்லையே என்பதை எண்ணுந்தோறும் நம்மவருள்ளம் வருந்தாதிராது.

     சரி. இனி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரென்று சிறிது காண்போமா? வாருங்கள் கேரளத்தின் திருவிதாங்கூர் துறைமுகப் பட்டினமான ஆலப்புழைக்குச் சென்று வருவோம்.

மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

     மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாஞ்சில் நாடு தந்த நற்றமிழர். 1855 முதல் 1897 வரை நாற்பத்தியிரண்டு ஆண்டு குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்தவர்.

     தனது நவீனக் கவிதை நாடகத்திற்கு மனோன்மணீயம் என்னும் அற்புதப் பெயர் சூட்டியவர். வரலாற்று ஆய்வு, நாடகம், கவிதை, ஆராய்ச்சி, உரைநடை, ஆங்கில நூலாக்கம் என பல துறைகளில் நூல்கள் பலவற்றை இயற்றிய பெருமைக்கு உரியவர்.

               அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
               கொடுமலையாளக்  குடியிருப்புடையேன்
               ஆயினும்  நீயே  தாயெனும்  தன்மையின்

என, மனோன்மணீயம் நாடகப் பாயிரத்தில் தழிழையேத் தனது தாயாகப் பாவித்துப் போற்றி, தான் பிறந்தது மலையாள நாடு என்பதையும் குறிப்பிடுகிறார் சுந்தரம் பிள்ளை.


                      ஊக்கம்  குன்றி  உரம்  குன்றி
                           ஓய்ந்த  தமிழர்க்  குணர்வூட்டி
                      ஆக்கம்  பெருக,  அறிவோங்க
                           ஆண்மை  வளரச்செய்து உலகியல்
                      மீக்கொள்  புகழைப்  பெற்றெழுந்த
                           வாரலோன்  நமது  சுந்தரனைப்
                      பாக்கள்  புனைந்து  மகிழ்ந்துநிதம்
                           பாடி  இனிது  போற்றுவமே

என்ற கவிமணியின் பாட்டிலிருந்தே மனோன்மணீம் சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமையினை நன்குணரலாம்.

     திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்  என்று உரைப்பதிலே தனி இன்பம் கண்டவர் மனோன்மணீம் சுந்தரம் பிள்ளை அவர்களாவார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, சுந்தரம் பிள்ளை அவர்களின் திராவிடப் பற்றையும், அச்சமென்பதை அறியாத தூய தமிழ் மனத்தினையும், தெளிவாக விளக்கும்.

     வீரத்துறவி  விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த விவேகானந்தருடன், சுந்தரம் பிள்ளை, மதப் பற்று, இன உணர்வு, தத்துவம் பற்றி வாதப் பிரதிவாதம் புரிந்துள்ளார். உண்மையைத் தேடும் ஞானியல்லவா சுந்தரம் பிள்ளை.

சுவாமி விவேகானந்தர்
     திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர் சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இனி சங்க நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

தமிழவள் கமழ் மொழி

     சங்க மேடையில் நீராருங் கடலுடுத்தப் பாடலைப் பாடினால் மட்டும் போதுமா? தரணியெங்கும் இப்பாட்டுப் பரவ வேண்டாமா? தமிழின் புகழ் தலை நிமிர வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் எண்ணம் செயலாக்கம் பெற்றதை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை (1913) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது பாருங்கள்.

மூன்றாம் ஆண்டு அறிக்கை (1911)
     பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாதிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம். எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாக திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ்த் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.

     இதுமட்டுமல்ல, இதோ இப்பக்கத்தைப் பாருங்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கையே (1917), நீராருங் கடலுடுத்த என்னும் பாடலுடன்தான் தொடங்குகின்றது.
ஆறாம் ஆண்டு அறிக்கை

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு பல ஊர்களிலும் , சங்கத்தின் கிளைகள் தோன்றி நடைபெற்ற காலம் அது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அக் கிளைச் சங்கங்கள் நடத்தும் விழாக்களிலும், நீராருங் கடலுடுத்த பாடலே தமிழ்த் தாய் வாழ்த்தாக முன்னிலைப் படுத்தப் பெற்று பாடப் பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்களே இல்லை என்று கூறத்தக்க வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சங்க விழாக்களில் பங்கு கொண்டனர். இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள், தங்கள் பகுதிகளில், தாங்கள் நடத்தும் விழாக்களிலும் நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை முதல் நிகழ்வாகப் பாடி விழாவினை நடத்தத் தொடங்கினர். இதன் விளைவாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

அரசு ஆணை

     1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. 6.3.1967 இல் பேரறிஞர் அண்ணா துரை அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றார்.

அண்ணா -கலைஞர்
     பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.

     முதல் பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப் பெற்ற, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடத்த என்னும் பாடல்.

     இரண்டாவது பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல். ஆம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்தான் அது..

          வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே
                மன்னியமூ  வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே
          தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்
                தென்குமரி  யாயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி
          கானார்ந்த  தேனே  கற்கண்டே  நற்கனியே
                கண்ணே  கண்மணியே  அக்கட்புலம்சேர்  தேவி
          ஆலாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே
                அம்மே  நின் சீர்முழுதும்  அறைதல்யார்க்  கெளிதே?

கரந்தைக் கவியரசு
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்ற பாடலையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடலையும், படித்துப் படித்து மயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், கரந்தைக் கவியரசர் அவர்களின் பாடலையே, தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்ய விரும்பினார். எனினும், திராவிடத்தின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராடிய போராளி அண்ணா அவர்களை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலில் உள்ள
தெக்கணமும் அதிற்சிறந்த  திராவிடநற் றிருநாடும்
என்னும் வரியிலுள்ள திராவிட என்னும் வார்த்தை சுண்டி இழுத்தது.

     எனவே, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாக, அரசு விழாக்களின் போது பாட வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் அரசு ஆணை வெளியிட எற்பாடு செய்தார். ஆனால் எதிர்பாராத வகையில் உடல் நலம் குன்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் 3.2.1969 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்ததனால், அரசு அணை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாவைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சில நாட்கள் தமிழகத்தின் பொறுப்பு முதல்வரானார். 10.2.1969 அன்று டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராய் அரியனையில் அமர்ந்தார்.

     டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராய் பொறுப்பேற்ற அடுத்த வருடமே, 23.11.1970 ஆம் நாளன்று, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடுத்த என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத் துறையின் சார்பாக அரசாணை (மெமோ எண், 3584.70-4, 23 நவம்பர் 1970) வெளியிடப் பெற்றது.

அரசு ஆணை
      தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன் முதலில் மெட்டமைத்து இசையமைத்தப் பெருமைக்கு உரியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் அவர்களாவார். மெல்லிசை மன்னர் இசையமைத்த நீராருங் கடலுடுத்த பாடலினை உள்ளடக்கிய, ஒலித் தட்டு ஒன்றும், அரசு ஆணையுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டது. இதன் பயனாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

மாணவியர் மகிழ்ச்சி

     நீராருங் கடலுடுத்த பாடலின் வரலாற்றையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பினையும் அறிந்த மாணவிகள் கையொலி எழுப்பி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். பாடப் பிரிவு நிறைவுற்றமைக்கான மணி ஒலிக்கவே, மணவியர்க்கு நன்றி கூறி வகுப்பில் இருந்து  விடைபெற்றேன்.

ஒரு நெருடல்

மீ.இராமதாசு
     வகுப்பு முடிந்து ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் வந்தமர்ந்த பின், புலவர் மீ. இராமதாசு அவர்கள் என் நினைவில் வந்தார்.  அன்று மாலையே கரந்தை, நாராயணன் கொத்தன் தெருவில் இருக்கும், புலவர் மீ. இராமதாசு அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவரைச் சந்தித்தேன்.

     புலவர் மீ. இராமதாசு அவர்களின் மாணவன் நான். உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

     நீராருங் கடலுடுத்த பாடல் தொடர்பாக தாங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும், தமிழ் வளர்ச்சித் துறையிலும் ஒரு வேண்டுகோளினை முன் வைத்தது எனக்கு நினைவிருக்கின்றது. அந்த வேண்டுகோளினைப் பற்றிக் கூறுங்களேன் என்றேன்.




        நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
        சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
        றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
        தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடற்  றிருநாடும்
        அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
        எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே
        பல்லுயிரும்  பல உலகும்  படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
        எல்லையறு  பரம்பொருள்  முன்இருந்தபடி  இருப்பதுபோல்
        கன்னடமும்  களிதெலுங்கும்  கவின்மலையாளமும்  துளுவும்
        உன்  உதிரத்து,  உதித்து எழுந்தே  ஒன்று  பல ஆயிடினும்
        ஆரியம்  போல உலக வழக்கு  அழிந்து  ஒழிந்து  சிதையாஉன்
        சீரிளமைத்  திறம்வியந்து செயல்மறந்து  வாழ்த்துதுமே

என்பதே மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய முழுப் பாடலாகும்.

     12 வரிகளை உடைய இப்பாடலின் முதல் ஆறு வரிகளை மட்டுமே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது. இப்பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் அவர்கள் , இசைக்கு ஏற்றவாறு, பாடலின் கடைசி வரியினையும் சேர்த்து,

        நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
        சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
        றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
        தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
        அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
        எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே
                                                  தமிழணங்கே
        உன் சீரிளமைத் திறம்வியந்து  செயல்மறந்து வாழ்த்துதுமே
                                                  வாழ்த்துதுமே
                                                  வாழ்த்துதுமே

எனச் சுரப்படுத்தி இசையமைத்தார்.

     ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் தயாரித்து வழங்கும் பள்ளிப் பாடநூல்களில், நீராருங் கடலுடுத்த பாடலின்  மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள் இடம் மாறி அச்சிடப்படுகின்றன.

      பாடப் புத்தகங்களின் தற்சமயம் இருக்கும் பாடலினைப் பாருங்கள்,

            நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
            சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
            தெக்கணம  மதிற்சிறந்த   திரவிடற்  றிருநாடும்
            தக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
            அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
            எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே
                                                      தமிழணங்கே
            உன் சீரிளமைத் திறம்வியந்து  செயல்மறந்து வாழ்த்துதுமே
                                                      வாழ்த்துதுமே
                                                      வாழ்த்துதுமே

     ஒரு பாடலின் வரிகளை இடம் மாற்றி அமைக்கும் உரிமை, அந்தப் பாடலினை எழுதியவருக்கு மட்டும்தான் உண்டு. எனவே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின்  மூன்றாம் மற்றும் நான்காம் வரிகளை, சுந்தரம் பிள்ளை இயற்றிய வரிசையிலேயே அச்சிட வேண்டும், பாடப் பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.
பாட நூலில் தமிழ்த் தாய் வாழ்த்து

     எனது இந்த வேண்டுகோளினைத் தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் முன்வைத்தேன், தமிழ் வளர்ச்சித் துறைக்கும் அனுப்பினேன். ஆனால் ஆண்டுகள் பல மாறின, பாடல் வரிகள்தான் மாறவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நானும் வருத்தத்துடன் விடைபெற்றேன்.