15 ஜூன் 2012

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சில நினைவலைகள்




     


    கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக வீற்றிருக்கும் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களுக்குக் கடந்த பல நாட்களாக உடல் நலக்குறைவு. 
சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவ மனையில் 
கடந்த 2.6.2012 சனிக் கிழமை முதல், தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

     ஓரிரு நாட்களில் மருத்துவ மனையிலிருந்து தஞ்சாவூர் திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனாலும் உடலில் சர்க்கரையின் அளவு நிலையில்லாமல் கூடுவதும் குறைவதுமாக இருந்ததால், பல நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய நிலை.

சங்கச் செயலாளர்
      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய்த் திகழும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக உடன் பணியாற்றும்  நண்பர்கள் மு.பத்மநாபன், அ.சதாசிவம், வெ.சரவணன் அகியோருக்கும் எனக்கும், சென்னை சென்று செயலாளரைப் பார்த்துவர வேண்டும் என்ற விருப்பம். ஆயினும் பள்ளிக்கூடம் திறந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில் விடுமறை எடுக்க முடியாத நிலை. மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் இத்தருணத்தில் விடுமுறை எடுக்கவும் மனமில்லாத சூழல். எனவே விடுமுறை நாளான சனிக்கிழமை (9.6.2012) சென்னை சென்று செயலாளரைப் பார்ப்பது என்று முடிவு செய்தோம்.

     சனிக் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் நால்வரும் சந்தித்தோம்.காலை 4.20 மணிக்கு வரவேண்டிய திருச்செந்தூர் விரைவு வண்டி, ஒரு மணி நேரம் தாமதமாக 5.25க்கு வந்தது. வண்டி தாமதமான ஒவ்வொரு நிமிடமும் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. திருச்செந்தூர் விரைவு வண்டி வந்தபொழுது, பெட்டியினுள்ளே நிற்பதற்குக் கூட இடமில்லை. முன்பதிவு செய்யாமல் வந்ததை எண்ணி வருந்தினோம். ஆனாலும், கும்பகோணம் சென்றடைந்ததும், நாலவருக்கும் உட்கார இடம் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

     திருச்செந்தூர் விரைவு வண்டியானது நன்பகல் 12.00 மணியளவில் சென்னை எழும்பூர் சந்திப்பைச் சென்றடைந்தது.

     செயலாளருக்குத் துணையாக சென்னையிலேயே தங்கியிருக்கும் நண்பர் மோகன் அவர்களும், நண்பரும் ஓட்டுநருமாகிய ரமேஷ் அவர்களும், இன்னோவா காருடன் எங்களுக்காகக் காத்திருந்தனர். காரில் பயணித்து மருத்துவ மனைக்குச் சென்று செயலாளரைச் சந்தித்தோம்.

     செயலாளரும் அவரது துணைவியாரும் எங்களை வரவேற்றனர். செயலாளரின் உடல் நிலை குறித்து அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். மருத்துவ மனையில் இருப்பவரை அதிக நேரம் பேசி தொடந்தரவு செய்ய விரும்பாமல், மாலை வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றோம்.

நண்பர் சுதாகர்
     அன்று இரவே சென்னையிலிருந்து தஞ்சைக்குத் திரும்ப முடிவு செய்திருந்தோம். இரவுப் பயணமாகையால் தொடர் வண்டியில் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை கிடைக்குமானால் நன்றாக இருக்குமே என எண்ணினோம். நண்பர் சரவணன் அவர்கள், சென்னையிலேயே வசிக்கும் நண்பர் சுதாகர் அவர்களைத் தொடர்பு கொண்டார். இவ்விடத்தில் நண்பர் சுதாகர் அவர்களைப் பற்றியச் சில செய்திகளைச் சொல்லியே ஆகவேண்டும்.

      சுதாகர் கரந்தையினைச் சேர்ந்தவர். ஒன்றாம் வகுப்பு முதல் எம்.சி.ஏ., வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே பயின்றவர். எம்.சி.ஏ., படித்து முடித்த பிறகு வேலை வாய்ப்பு தேடிச் சென்னையில் கால் பதித்தவர். பழகுவதற்கு இனிமையானவர். கடுமையான உழைப்பாளி. ஒரு பணியினைத் தொடங்கிவிட்டால், அதே சிந்தனையாய் இருந்து, அச்செயலினைச் செய்து முடித்த பிறகே, சற்றேனும் இளைப்பாறும் குணமுடையவர்.

     ஒரு கணினி பயிற்சி மையத்தில் பணியில் சேர்ந்து, தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இன்று சொந்தமாக Saraswathi Institute of Animation என்னும் நிறுவனத்தை வெற்றிகரமாக நிருவகித்து வருபவர்.

       இரண்டு வருடங்களுக்கு முன், எனது மகளின் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை வந்திருந்த பொழுது, தனது பல்வேறு பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாள் முழுதும் மருத்துவ மனையில், என்னுடன் கூடவே இருந்து உதவிய உன்னத நண்பர்.

     மதிய உணவிற்குப் பிறகு, நண்பர் சுதாகர் அவர்களைப் பார்ப்பதற்காக தியாகராய நகர் சென்றோம். ராஜா பாதர் தெரு முனையிலேயே, எங்களுக்காகக் காத்திருந்து, தனது சரஸ்வதி கணினி பயிற்சி மையத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

     சென்னை, தியாகராய நகரில் ராஜா பாதர் தெருவில் அமைந்திருக்கும், குப்புசாமி வளாகத்தின் இரண்டாம் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் இவரது கணினி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக குளிர்சாதன வசதியுடன், எப்பக்கம் திரும்பினாலும், கணினி, LCD Projector உடன்கூடிய சிறிய, பெரிய பயிற்சி அறைகள். பஞ்சாப் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெப் டிசைனிங், பி.எஸ்ஸி.,(மல்டி மீடியா), எம்.எஸ்ஸி., (மல்டி மீடியா) திரைப்படத் தயாரிப்பு, எடிடிங், அனிமேசன் என பத்திற்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகளை திறம்பட நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பயின்ற 6,000 ற்கும் மேற்பட்டவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எங்களுக்காக, தனது கணினி பயிற்சி மாணவர்கள் தயாரித்த  குறும்படம் ஒன்றினைத் திரையிட்டுக் காட்டினார்.


     குறும் படத்தின் பெயர் பலி ஆடு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆர்வத்தினையும், விருப்பத்தினையும் பொருட்படுத்தாமல், தங்கள் மகன் எந்த துறையில் தனது முழுத் திறமையினையும் வெளிப்படுத்துவதில் வல்லவன் என்பதை உணராமல், தங்கள் அபிலாசைகளையும், விருப்பங்களையும், வலிய திணிக்கின்றனர். இதனால் இறுதியில் பெற்றோர்களின் ஆசையும் நிறைவேறாமல், பிள்ளைகளின் விருப்பமும் நிறைவேறாமல், ஒரு இளம் தலை முறையினரின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்குவதை, முகத்தில் அறைந்தாற் போல் வெளிப்படுத்துகிறது இக்குறும் படம்.

     சில நிமிடங்களே ஓடும் இப்படத்தினைப் பெற்றோர்கள் பார்ப்பார்களேயானால், பல்லாயிரம் இளம் தலை முறையினரின் எதிர்காலம் காப்பாற்றப்படும். இத்தகு வீரியம் மிக்கக் குறும்படங்கள், ஒரு கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே முடங்கி விடுவது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

     நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆயிரமாயிரம் கோடிகளை வாரி இறைக்கும் அரசு, இதுபோன்ற சிறந்த குறும் படங்களைத் தேர்வு செய்து, குறைந்த பட்சம், மே மற்றும் ஜுன் மாதங்களில், உயர் கல்விக்கான சேர்க்கை நேரத்தில், திரையரங்குகளில், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுமேயானால், அதுவே மிகப் பெரிய சமூக சீர்திருத்தமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

     குறும்படம் நிறைவுற்றபிறகு, சதாகர் தனது நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்தார். இரவு 10.30 மணிக்குப் புறப்படும் மலைக் கோட்டை விரைவு வண்டியில் நால்வருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகள் கிடைத்தன. இரவுதான் புறப்பட வேண்டும், இன்னும் பல மணி நேரமிருக்கிறது, எங்கு செல்லலாம் என்ற பேச்சு வந்தபொழுது, சுதாகர் உடனே கூறினார், எம்.ஜி.ஆர், அவர்களின் நினைவு இல்லம் இதே தி.நகரில்தான் இருக்கிறது அங்கு செல்வோம்.

     தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர், அவர்களின் அலுவலகம் இருந்தது? நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.

     வீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய  மண்டபத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.

     வீட்டினுள் நுழைகிறோம்.  TMX 4777  என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.

     அறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின் உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில்  கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா?, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா? கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம்.

     வீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்கக் குட்டிகளை எம்.ஜி.ஆர் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ்  ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும்.  அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.

     அடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின் காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம் உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.

    அருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில் பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

     அடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக அறையாகும்.

     மீண்டும் தரைத்தளத்திற்கு வந்தோம். மாடிப் படியினை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தோம். எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, அ.தி.மு.க வில் இணைந்த முதல் பன்னிரண்டு பேர் கையொப்பமிட்ட உறுப்பினர் படிவம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

     அடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர் பட்டியலும், ஒவ்வொரு படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம் சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978 ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.

     எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே, கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா எம்.ஜி.ஆர்.

    உமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.

     தமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.

     உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல்  அல்லவா.

     எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.

       தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.

       தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.

      நூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர முடிந்தது.

      நண்பர் சுதாகர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.


----------------------------------
நண்பர்களே 
மெ...ஆ....ஆ
(பலி ஆடு)
குறும்படத்தினைக் காண வேண்டுமா?
கீழே உள்ள இணைப்பை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்யுங்கள்



http://www.youtube.com/watch?v=nW-nH6C65Tw



01 ஜூன் 2012

கரந்தைப் புலவர் கல்லூரி




உமாமகேசுவரனார்
      உலகின் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று போற்றப்படும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற ஆண்டு 1911 ஆகும். தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், கல்வி வளர்ச்சிப் பணிகளையும் தனது இரு கண்களெனக் கருதிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்,1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியானது தொடங்கப் பெற்றது.

        தமிழோடு கைத் தொழில்களையும் கற்றுக் கொடுக்கும்படியான கலாசாலைகளை ஏற்படுத்துதலே பயன் விளைவிக்கும் என்று தமிழவேள் உமாமகேசுவரனார் எண்ணினார். இக்கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பியிராமல், சொந்தமாகத் தொழில் செய்து நாட்டை வளமாக்க வேண்டும் என்பதே உமாமகேசுவரனாரின் விருப்பமாகும். எனவே எட்டாம் வகுப்பு வரை பயிற்று விக்கப் பட்ட, இக்கல்லூரியில், நெசவு, நூல் நூற்றல், பாய் முடைதல், மரவேலைகள், நூற் கட்டு, அச்சுத் தொழில் முதலியனவும் கற்றுத் தரப்பெற்றன.

     கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியில் பயின்று, மேற் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக ஒரு தனித் தமிழ்க் கல்லூரியினை நிறுவிட உமாமகேசுவரனார் விரும்பினார்.

ஞானியார் அடிகள்
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நாள் தொடங்கி, சங்கத்தை அண்டாது, அணுகாது விலகியிருந்தது செல்வம் மட்டுமே. போதிய நிதி வசதியின்மையால், உமாமகேசுவரனாரின் கல்லூரிக் கனவானது, ஆண்டுகள் பல உருண்டோடியும் கானல் நீராகவே நீடித்தது.

     சற்றும் அயராத உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற ஆண்டு 1911 ஆகும். எனவே 1936 ஆம் ஆண்டிலேயே வெள்ளி விழாவினைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் பொருளாதார வசதி இடம் கொடுக்காததால், இரண்டு ஆண்டுகள் தாமதமாகவே வெள்ளி விழா கொண்டாடப் பெற்றது.

     திரு க.வெள்ளைவாரணன் என்பார் இப் புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியராக நியமனம் செய்யப் பெற்றார். பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய பேராசிரியர் வெள்ளைவாரணனார் இவர்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளின் சீரிய தலைமையில், சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில், தமிழ் மணம் கமழ நடைபெற்றது.  தமிழ் நாட்டின் பல இடங்களில் இருந்தும், இலங்கை, மைசூர் முதலிய நாடுகளிலிருந்தும் தமிழன்பும், தமிழறிவும், தமிழ்த் தொண்டாற்றலுமுடைய தமிழ்ப் பெருமக்கள் சுமார் ஐயாயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கரந்தைப் புலவர் கல்லூரி

   
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெள்ளி விழாவின் இரண்டாம் நாளான 16.4.1938 சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு தமிழ்ப் பெருமன்றத்தில் கடவுள் வணக்கமும், தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பெற்ற பின் கரந்தைப் புலவர் கல்லூரியின் தொடக்க விழா தொடங்கியது.


     விழாத் தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள், தம் பொருளுரைகளை அழகு மிகத் திரட்டி கல்லூரியினைத் திறந்து அருளினார்கள். அப்போது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்,
             நன்மா  ணவராகும் வண்டர்  நனிபயின்று
             பன்மான்  கலைத்தேன்  பருகுமா  -  மண்மான்
             கரந்தைத் தமிழ்ச் சங்கச் கல்லூரிப்  பூங்கா
             பரந்தொளிர்ந்து  வாழியார்இப்  பார்
எனப் பாடி வாழ்த்தினார்.

     கல்லூரிக் கட்டிடத்தில் அலங்கரிக்கப் பெற்று வைக்கப்பெற்றிருந்த தமிழ்க் கடவுள் முருகன் திருவுருவத்திற்கு வழிபாடு செய்யப் பெற்றது. தொடர்ந்து ஞானியாரடிகளும் மற்றவர்களும் வகுப்பறைக்குச் சென்றனர். நாதமுனி என்னும் பெயருடைய மாணவர் உட்பட பத்தொன்பது மாணவர்களுடன் புதிய கல்லூரியின் முதல் வகுப்பானது தொடங்கப் பெற்றது.

வெள்ளைவாரணனார்
     ஞானியார் அடிகள் அவர்கள் வித்துவான் வெள்ளைவாரணன் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி, தமிழ் கற்பிக்கத் தொடங்குமாறு வேண்டினார். வெள்ளைவாரணன் அவர்களும், திருக்குறளின் தலைக்குறளாகிய அகர முதல என்னும் அருமைத் திருக்குறளைக் கற்பித்தார். அவரைத் தொடர்ந்து ஞானியாரடிகள் அவர்கள் புதிதாக தொடங்கப் பெற்றுள்ள கல்லூரியை வாழ்த்தி, அகரமுதல எனத் தொடங்கும் திருக்குறளின் பருப் பொருளும், நுண் பொருளும் இனிது விளக்கினார்.

     தமிழ் வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டு புரிந்து வரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைக் கண்டு மகிழ்வடைந்த பலரும், கல்லுரியானது தழைத்து சிறந்தோங்க நன்கொடைகளை வழங்கினர். திருச்சிராப்பள்ளி திருவாளர் டி.எஸ். பொன்னுசாமி பிள்ளை என்பார், தாம் நடத்தி வருகின்ற அறக்கட்டளையின் வருவாயினை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தரும சாசனம் எழுதி முடிக்க எண்ணியிருப்பதாக,  விழா மேடையிலேயே அறிவித்தார்.

சிவ, குப்புசாமி பிள்ளை
    மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச விடுதி வசதி, இலவச உணவு வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பெற்றன.கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியரான திரு சிவ. குப்புசாமி பிள்ளை அவர்கள், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேற்பார்வையாளர் பணியினை ஏற்று தமிழ் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுபட்டார்.

     தமிழவேள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குடந்தை பாணாதுறை உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தொண்டு செய்து வந்தவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பகுதியில் வரலாற்றுத் துறையில் பல ஆண்டுகள் தொண்டு செய்து ஓய்வு பெற்றவரும், தமிழ் நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்,சனிக் கிழமைகள் தோறும், தனது சொந்த செலவிலேயே, கரந்தைக்கு வந்து, கல்வெட்டு பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.


சதாசிவ பண்டாரத்தார்
      தமிழவேளும் தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டாக்டர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு அறிஞரால் எழுதப் பெற்ற, இன்றளவும் உலக மொழி வரலாற்றில், திராவிட மொழிகளுள் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் அரிய பெரிய ஆங்கில நூலை, மாணவர்களுக்கு மொழிபெயர்த்து தக்க விளக்கங்களோடு போதித்து வந்தார்.

     கல்லுரி ஒன்றை நடத்துவது என்றால் போதிய பொருள் வருவாய் வேண்டுமல்லவா? சங்கத்தை நடத்துவதற்கே போதிய பொருள் இல்லாதபோது, கல்லூரியினை நடத்துவது எவ்வாறு இயலும்? ஆனாலும் தொடங்கிய பணியினை இடையிலேயே நிறுத்தி விடுவது இழுக்காகிவிடுமல்லவா? எனவே மனம் தளராத உமாமகேசுவரனார் தமிழ்ப் பெருமக்களுக்கு கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளினை விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் இப்போது தமிழ்நாடு முற்றுமே மதிக்கத்தகும் அரும்பணியை மேற்கொண்டிருக்கிறது. கரந்தைத் தமிழ்க் கல்லூரி, முதல் வகுப்புடன் அரும்பியிருக்கின்றது. மேலும் நான்கு வகுப்புகள் நாளடைவில் தோன்றி முற்றுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. இதன் இன்றியமையாத அங்கங்களாகிய இசை, ஓவியம், மருத்துவம், சிற்பம் போன்ற தொழிற் கலைகளும் ஈண்டு முகிழ்ததுப் பிஞ்சு, காய் கனிகளாகி நற்பயன் நல்க வேண்டும். இவ்வெண்ணங்கள் சிறு அளவிலாவது உருப்பெற வேண்டுமானால் நூறு மாணவர்களுக்காவது, உண்டியும், உறையுளும் தருதற்கான மாணவர் இல்லமும், பத்து ஆசிரியர்களாகினும் பணி செய்தற்குரிய வசதிகளும் அமைக்கப்பட வேண்டும். ஆண்டு தோறும் ரூபாய் ஐயாயிரத்திற்குக் குறையாத வருவாய் தட்டில்லாது வந்து கொண்டே இருத்தல் வேண்டும்.  இதுபோது தொடங்கியிருக்கும் முதல் வகுப்பில் பத்தொன்பது மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். திருச்சி, நெல்லை, கோவை, வட தென் ஆற்காடுகள், ஆய பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர் ஒன்பதின்மர். யாழ்பாணத்து மாணவர் ஒருவர் வருவாரென்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேயா நாட்டிலிருந்தும் விண்ணப்பம் வந்துள்ளது. இவர்களின் பன்னிருமாணவர்கள் சங்கத்தார் அமைத்திருக்கும் இல்லத்தே இருந்தும், ஏனோர் வெளியே இருந்தும் கல்வி பயின்று வருகின்றனர். இதனை உய்த்து நோக்குவோர் இக்கல்லூரி தமிழ் நாட்டிற்கு உரியதெனவும், இதனைப் பேணி வளர்த்தல் தத்தம் கடமை எனவும் தமிழன்பர்கள் கருதுவர் என்று எண்ணுகிறோம். தமிழ்ப் புலமையும், தொழிற் கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச்சிறந்த நன்முயற்சியாகும். இம் முயற்சி உரம் பெறுவதற்கு, இலக்கிய இலக்கண நூல்களேயன்றிக் கலை நூல்களையும் எளிய விலைக்கு வெளியிடுதல் வேண்டும். இத்தகைய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொள்ளவும், செவ்வனம் இயற்றவும் அறிவாளிகள், செல்வர்கள், அன்பர்கள் ஆகிய அனைவரின் துணையும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

     இவ்வேண்டுகோள் விரும்பியவாறு பலனளிக்கவில்லை. ஆயினும் கல்லூரி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது. கல்லூரியானது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தபோது, மேலும் ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப் பட்டார். சங்கத்தின் புகழ்பாடும் நல்ல கவிஞராகவும், தமிழையும் தமிழ் நாட்டு அரசியலையும் அறியாது சோம்பிக் கிடந்த தமிழ் மக்களிடையே, உணர்ச்சி ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் சொற்பொழிவாற்றும் நாவன்மை உடையவருமாகிய திரு கோ.வி.பெரியசாமிப் புலவர் அவர்கள் இரணட்வது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

பேரிடியாய் விழுந்த தடை

      1940-41 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின் மூன்றாமாண்டில் கல்லூரியானது காலடி எடுத்து வைப்பதற்குள், பேரிடியாய் தடை என்னும் உத்தரவு ஒன்று சென்னைப் பல்கலைக் கழகத்தால் பிறப்பிக்கப் பெற்றது. கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க முடியாது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்து விட்டார்.

      காரணம். ரூபாய் ஐம்பதாயிரம் தொகையினை இணைப்புக் கட்டணமாய் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ரூபாய் ஐம்பதாயிரம் பொறுமானமுள்ள சொத்துக்களுக்கு உரிய பத்திரங்களைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். கரந்தைத் தமிழ்ச் சங்கமோ, இரண்டில் எதையுமே நிறைவேற்றும் நிலையில் இல்லை. ஒரு வருடம் கல்லூரியினை நடத்துவதற்கான ரூபாய் ஐயாயிரத்திற்கே வழி இல்லாதபோது, ரூபாய் ஐம்பதாயிரத்திற்குச் சங்கம் எங்கே போகும். எனவே கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதோ, அங்கீகாரம் வழங்குவதோ முடியாது.கல்லூரியினை உடனே மூடுங்கள் என்று சென்னைப் பல்கலைக் கழகம் உறுதியாய் அறிவித்தது.

     கரந்தைப் புலவர் கல்லூரி மூடப்பட்டது. கல்லூரியில் பயின்ற மாணவர்கள் திசைக்கொருவராய் சென்றனர். அகப்பட்ட தொழிலில் அமர்ந்தனர் பலர். சிலர் வெள்ளத்தில் அகப்பட்டவன் துரும்பைப் பிடித்துக் கரையேறுதல் போல, தனியே கல்லூரியும், ஆசிரியரும் இல்லாவிட்டாலும், தனிமையில் பயின்று தமிழ்க் கலைகளில் அறிஞராயினர். சிலர் வேலையின்றித் தவித்தனர்.

     எடுத்த செயலினை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் திறன் வாய்ந்த உமாமகேசுவரனார் மட்டும் உள்ளம் தளர்ந்தாரில்லை. தமிழ்ப் பெருமக்களை நோக்கி, கரந்தைப் புலவர் கல்லூரிக்குப் போதிய முதற்பொருள் இன்மையான் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஒப்ப மறுக்கின்றனர். தமிழ் நாட்டின் எல்லைக்குள் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளின் வளர்ச்சியைக் கருதி உழைக்கும் கலைக்கூடங்கள் எத்தனை? அவற்றிற்காகப் பணி செய்து செழுமையுடன் தருக்குற்று வாழும் கணக்காணர் எத்துணையர்?  இந்நிலையில் தமிழ் மொழி ஒதுக்கிடம் பெறுவதும், தமிழ்ப் புலவர்கள் வீணர்கட்கு எளியராய் அஞ்சி வாழ்வதும் இழிவன்றோ? தமிழ் மக்கள் இப் புலவர் கல்லூரிக்குப் பொருளுதவி புரிந்து தம் கடனாற்றுவார்களாக என மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுததார்.

     தஞ்சை வட்டக் கழகத் தலைவராக செல்வாக்குடைய பதவியினையும், சிறந்த வழக்கறிஞர் என்னும் பெயரினையும் பெற்றிருந்த தமிழவேள் அவர்களால், தம்மிடம் ஆதரவு நாடிவரும் செல்வந்தர்களிடமிருந்து, எளிதில் பெரும் பொருளைத் திரட்டியிருக்க முடியும். ஆனாலும் அதனைச் செய்தாரில்லை. அதற்கும் அவரே காரணத்தைக் கூறுகிறார். கேளுங்கள். பொய்யும் புரட்டும் உடையவர்கள்கால் பெறும் பொருள் நம் சங்கத்திற்கு வேண்டியதில்லை. தமிழ் வளர வேண்டும் என்ற விருப்பத்துடன் யாரேனும் ஒரு காசு கொடுத்தாலும் அதனைப் பெரும் தொகையாக ஏற்று மகிழ்வோம் என்றார்.

      சங்கநிதி  பதுமநிதி  இரண்டுந்  தந்து
           தரணியொடு  வானாளத்  தருவ  ரேனும்
      மங்குவார்  அவர்செல்வம்  மதிப்பேம்  அல்லேம்
           மாதமிழுக்  கேகாந்தர்  அல்லராகில்
     அங்கமெலாம்  குறைந்தழுகு  தொழுநோ  யராய்
           ஆவுரித்துத்  தின்றுழலும்  புலைய  ரேனும்
     தங்குபுகழ்ச்  செந்தமிழ்க்கோர்   அன்ப  ராகில்
           அவர்கண்டீர்  யாம்வணங்குங்  கடவு  ளாரே

     தமிழ் மக்களிடம் இருமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. இப்புலவர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் கண்டால்தான் எனது இப்பிறவி முழுமைபெறும். புலவர் பட்டத்துடன் வெளிவரும் மாணவனைக் கண்ட அடுத்த விநாடியே எனது உயிர் பிரியுமானால் மிகவும் மகிழ்வேன் என்று தமிழன்பர் சிலரிடம் கூறி வருந்திய உமாமகேசுவரனாருக்கு, வெள்ளி விழாவின் போது தனது உறவினரான, திருச்சி டி.எஸ்.பொன்னுசாமி பிள்ளை அவர்கள் தனது அறக்கட்டளையின் வருவாயினை சங்கத்திற்காக எழுதி வைக்க முன்வந்தது நினைவிற்கு வரவே, திருச்சி நோக்கிப் பயணமானார்.

டி.எஸ். பழனிசாமி பிள்ளை அறக்கட்டளை

     திருச்சி தென்னூரில் வசித்து வந்த செல்வந்தர் திருவாளர் சண்முகம் பிள்ளை அவர்களுக்கு திருமக்களாய் உதித்தோர் மூவர். மூத்தவர் ச.முத்துசாமி பிள்ளை, இரண்டாமவர் ச. பொன்னுசாமி பிள்ளை, மூன்றாமவர் டி.எஸ்.பழனிசாமி பிள்ளை ஆவர்.

   
வள்ளல்  தி.ச.பழனிசாமி பிள்ளை
திரு டி.எஸ்.பழனிசாமி பிள்ளை அவர்கள் வழக்கறிஞராய் பணியாற்றி பெரும் செல்வம் சேர்த்தவர். இவர் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் காலமானார்.  இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததாலும், மேலும் இவர் தனது இறுதிக் காலத்தில் உயில் எதனையும் எழுதி வைக்காததாலும், இவரது சகோதரர்களே இவரின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்கள் ஆனார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் சொத்துக்களை இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அவ்வாறு செய்தார்களில்லை. உண்மையின் உறைவிடமாகவும், பெருந்தன்மையின் இலக்கணமாகவும் விளங்கிய இவரது சகோதரர்கள் ச.முத்துசாமி பிள்ளை மற்றும் ச.பொன்னுசாமி பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து, 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் நாள், தங்களது தமையனாரின் சொத்துக்களை மூலதனமாக வைத்து, அவர் பெயரிலேயே,  டி.எஸ்.பழனிசசாமி பிள்ளை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள்.

ஈஸ்வரன் கிருபையால் எங்களுக்கு வேண்டிய சொத்துக்கள் இருப்பதாலும், எங்களுடைய பிள்ளைகளும் சம்பாதிக்கத் தக்கவர்களாயிருப்பதாலும் காலஞ்சென்ற எங்கள் சகோதரர் பழனிசாமி பிள்ளை, தனக்குப் பின் தன் சொத்துக்களை தரும வாசக சாலையும், தரும பள்ளிக்கூடமும் Elementary Education and Industrial School , அதாவது தன்னுடைய பள்ளிக் கூடம் விட்டுப் போகும் பொழுதே  பையன்கள் 4 அணாவாவது சம்பாதிக்கும்படியான கைத் தொழில் எதாவதொன்று கற்றுக் கொண்டு போக வேண்டுமென்றும், Non Brahmin Hostel and Scholarship நம்முடைய வகுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் யோசித்தார் என்பதனைப் பதிவு செய்து இவ்வறக்கட்டளையினை நிறுவினார்கள்.

     இதுமட்டுமா? தங்களுக்குப் பின் இவ்வறக்கட்டளையைப் பராமரிக்க தக்கவர் யார் என்பதைக் குறிப்பிடும் போது, ச.முத்தசாமி பிள்ளை மற்றும் ச.பொன்னுசாமி பிள்ளை ஆகியோரின், கறை படியாத, நேர்மையான பெருந்தன்மையான உள்ளத்தினையும், அவர்கள் தங்கள் தமையனாரிடத்தும், அறக்கட்டளையின் பேரிலும் வைத்திருந்த பற்றும் பாசமும் வெளிப்படுவதைக் காணலாம்.

     எங்கள் ஆயுசுக்குப் பிறகு, எங்களில் ச.முத்துசாமி பிள்ளையின் குமாரர்களாகிய பாலசுப்பிரமணிய பிள்ளை, அருணாசலம் பிள்ளை மற்றும் எங்களில் ச.பொன்னுசாமி பிள்ளையின் குமாரர்களாகிய ரெத்தின சபாபதி பிள்ளை, டி.இராமலிங்கம் பிள்ளை ஆகியோரை எங்களுக்குப் பிறகு தருமங்கள் நடத்திவர நியமிக்கிறோம். இந்த வாரிசுகளுக்குப் பின்னால் யாருடைய ஸ்தானமாவது காலியானால், அந்த ஸ்தானத்தை மற்றவர்கள் ஒருமித்து, நம்மடைய குடும்பத்தில் தரும சிந்தனையும் யோக்கியதையும் உள்ளவருமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பதிவு செய்தனர்.

     அறக்கட்டளையினை நிறுவியவுடன், பொன்னுசாமி , முத்துசாமி இருவரும் தரும வாசக சாலையைத் தொடங்கினர். பள்ளிக் கூடம், தொழிற் பயிற்சிப் பள்ளியும் நிறுவிட கட்டிடம் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே தவிர, போதிய வருமானம் இல்லாமையால்,  அக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க அவர்களால் இயலவில்லை. இவ்வறக்கட்டளையில் சொத்துக்கள் இருந்தனவே தவிர, அச்சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்த அளவாகவே இருந்தது.

     மேலும் இவ்வறக்கட்டளையினை நிறுவியவர்களில் ஒருவரான எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்கள் 23.11.1934 இல் காலமானார். இதனால் அறக்கட்டளைப் பணிகளில் பெரிதும் தொய்வு ஏற்பட்டது.

    இந்நிலையில்தான் 1938 இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட டி.எஸ்.பொன்னுசாமி பிள்ளை அவர்கள் அறக்கட்டளையின் வருவாயினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவித்தார்.

அறக்கட்டளையில் மாற்றம்

     போதிய முதற்பொருள் இன்மையால் சென்னைப் பல்கலைக் கழகத்தார், கரந்தைப் புலவர் கல்லூரியை அங்கீகரிக்க மறுத்ததும், கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு பல்லாற்றானும் முயன்ற தமிழவேள், இறுதியாக திருச்சிக்குப் பயணம் செய்து டி.எஸ. பொன்னுசாமி பிள்ளை அவர்களைச் சந்தித்தார்.

     இச்சந்திப்பின் பயனாக தி.ச.பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் குறிக்கோளில் சில மாற்றங்களைச் செய்து, அம்மாற்றங்களை அதிகாரப் பூர்வமாக பத்திரப் பதிவு செய்யவும் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் முன்வந்தார்.

     இதன்படி, ஏழை மாணவர்கட்குத் தொழிலும் கல்வியும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் தம்பி டி.எஸ்.பழனிச்சாமி பிள்ளை அவர்களும், எனது அண்ணன் டி.எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களும், நானும் ஆகிய மூவர்களும் கொண்டிருந்த எண்ணமாயிருந்தும், இதில் கண்டிருக்கும் சொத்துக்களை கொண்டே, அதை முடிப்பது முடியாத கருமமாயிருப்பதாலும், இதே கருத்துக்களை நிறைவேற்றும் எண்ணத்துடன் தஞ்சாவூரிலுள்ள, கருந்தட்டாங்குடி, தமிழ்ச் சங்கமானது மாணவர்களுக்கு இல்லங்கள் அமைத்து உண்டி, உறையுள் முதலியன கொடுத்து, தொடக்கக் கல்வியும் தமிழ்ப் புலவர் கல்லுரியும் ஏற்படுத்தி, மாணவர்கட்கு தொழிற் கல்வியும் பெற வசதிகள் செய்தது நடத்தி வருகின்றமையால், அதன் வாயிலாகவே, எமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் சாலச் சிறந்தது எனக் கருதி, 1.11.1930 இல் நானும், டி.எஸ்.முத்துசாமி பிள்ளையும் எழுதி வைத்த டிரஸ்ட் பத்திரத்தை, இப்போதைய தேவைக்குத் தக்கவாறு மாறுதல் செய்து, இதுமுதல் நடந்து வர வேண்டிய தரும பரிபாலன ஏற்பாடுகளை இதன் மூலமாக எழுதி வைக்கின்றேன் என 1940 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் நாள் திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில், மாற்றியமைக்கப் பட்ட அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டது.

உயிர் பெற்ற கல்லூரி

    தி.ச.பழனிசாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்து, பதிவு செய்யப்பெற்ற பத்திரத்தின் நகலினை, சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு அனுப்பி, அறக்கட்டளையின் சொத்துக்களையே, ஐம்பதாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள முதற்பொருளாக ஏற்றுக் கொண்டு, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று உமாமகேசுவரனார் கடிதம் எழுதி வேண்டினார். மேலும் இரண்டாண்டுகளாக முதல்வர் என்று ஒருவர் இல்லாமலேயே செயல்பட்ட, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களை முதல்வராகவும் அறிவித்தார்.

     நாவலர் அவர்களைக் கல்லூரி முதல்வராகவும், அறக்கட்டளைச் சொத்துக்களை முதற்பொருளாகவும், ஏற்றுக் கொண்ட, சென்னைப் பல்கலைக் கழகம், 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது. கல்லூரிக்குப் புத்துயிர் வந்தது.

     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் முதல்வராக, உமாமகேசுவரனார் மேல் கொண்டிருந்த அன்பால், பாசத்தால், ஊதியம் எதுவுமே பெறாத மதிப்பியல் முதல்வராக 1941 முதல் நான்காண்டுகள் தொண்டாற்றினார்.

     ஆனால்,  இப்புலவர் கல்லூரியில் பயின்று வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் காணும் நாளே என் வாழ்வில் பொன்னாள், அதுவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் திருநாள். புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ட அடுத்த நொடியே என் உயிர் பிரியுமானால், அதை விட பேரானந்தம் வேறொன்றுமில்லை என்று பலவாறு கனவு கண்டிருந்த உமாமகேசுவரனாரின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

     ஆம். வடபுலப் பயணம் மேற்கொண்டிருந்த உமாமகேசுவரனார், தமிழகம் திரும்பாமலேயே, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்த அடுத்த மாதமே,  அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் சிற்றூரில் 9.5.1941 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். என்னே விதியின் விளையாட்டு.

     பல்கலைக் கழகத்தோடு இப்புலவர் கல்லூரி இணைந்த பிறகு 1942இல் முதல் வித்துவான் புகு முக தேர்விலும், 1943 இல் முதல் முதனிலைத் தேர்விலும், 1945 முதல் இறுதி நிலைத் தேர்விலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாயினர். இறுதி நிலைத் தேர்வில் முதன்முதலாகக் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரும் வெற்றி பெற்றனர். இவர்களுள் அ.மா.பரிமணம் என்பாரும், இரா.கலியபெருமாள் என்பாரும், வித்துவான் இறுதி நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் முதல் தரத்தில் வெற்றி பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கப் பரிசினை வென்றார்கள்.

தமிழர் கடமை

      கல்லூரித் தொடங்கப் பெற்றாலும் தனியொரு கட்டிடம் இன்றியே, இக் கல்லூரிச் செயலாற்றி வந்தது. பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே, தஞ்சை நகரப் பெரு வணிகர்களின் முயற்சியால், கல்லூரிக்கெனத் தனியொரு கட்டிடம் கட்டப்பெற்றது.

      கரந்தைப் புலவர் கல்லூரி என்பது வெறும் செங்கற்களாலும், மணலாலும் கட்டப்பெற்றக் கல்லூரியன்று. தமிழவேள் உமாமகேசுவரனாரின் அயரா உழைப்பாலும், உதிரத்தாலும், உருப் பெற்றக் கல்லூரியாகும்.

    தி.ச.பழனிசாமி பிள்ளை, தி.ச.முத்துசாமி பிள்ளை, தி.ச.பொன்னுசாமி பிள்ளை என்னும் வள்ளல்களின், வள்ளல் தன்மையால் உயிர் பெற்ற கல்லூரியாகும்.

     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிவ.குப்புசாமி பிள்ளை, வெள்ளைவாரணனார், பெரியசாமி புலவர் மற்றும் எண்ணற்ற பெயர் தெரியாத தமிழன்பர்களின் உழைப்பால், நன்முயற்சியால் உயர்ந்த கல்லூரியாகும்.

      கரந்தைப் புலவர் கல்லூரியும், மாணவர் இல்லங்களும் வளர, செழிக்க, தஞ்சை நகர வணிகர்கள் ஆற்றியுள்ள சேவை அளவிடக்கரியதாகும். நாள்தோறும் சங்க அலுவலர்கள், கடைவீதிக்கு ஒரு சாக்குப் பையுடன் செல்வார்கள். தஞ்சை நகர வணிகர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் வருவாயின் சிறு பகுதியை சங்கத்திற்கு அன்பளிப்பாய் வழங்குவார்கள். பணமாக மட்டுமல்ல, அரிசியாக, காய் கனிகளாக, மளிகைப் பொருட்களாக, தங்களால் இயன்றதை, ஒரு நாள், இரு நாள் அல்ல தினமும் வழங்கி, வளர்த்த கல்லுரி இப் புலவர் கல்லூரியாகும்.


           கரந்தை, கூடலூர், குளமங்கலம், அரசூர், அம்மன்பேட்டை, பள்ளியக்கிரகாரம், சுங்கான்திடல், ஆலங்குடி, ஆத்தூர் போன்ற ஊர்களில் சிறு,சிறு அரிசி அரவை ஆலைகள் அதிகமாய் இருந்த காலகட்டம் அது. அன்றைய நாளில் அறுவடை மூலம் கிடைக்கும் நெல்மணிகளை, பத்தாயம் என்றழைக்கப்படும் சேமிப்பு கலன்களில் சேமித்து வைத்து, அவ்வப்போது உணவிற்குத் தேவைப்படும் அளவிற்கு, நெல்மணிகளை அரைத்து அரிசியாக்கிக் கொள்வார்கள். தஞ்சைப் பகுதியை சுற்றியுள்ள அனைத்து அரிசி அரவை ஆலைகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒரு சாக்குப் பை வைக்கப் பெற்றிருக்கும். தங்களின் இல்லங்களுக்குத் தேவையான அரிசியை அரைத்துச் செல்லும் அன்பர்கள், அந்த அரிசியிலிருந்து, ஒரு கைப் பிடியோ அல்லது ஒரு படி அரிசியையோ, தங்களின் வசதிக்கு எற்றவாறு, சங்கத்தின் சார்பில் வைக்கப்பெற்றிருக்கும் சாக்குகளில் அன்பளிப்பாய் அளித்துச் செல்வார்கள். சங்க அலுவலர்கள் வாரந்தோறும் அரிசி அரவை ஆலைகளுக்குச் சென்று, சங்கத்தின் சாக்குப் பையில் சேர்ந்திருக்கும் அரிசியை, மாணவர் இல்லதில் கொண்டு சேர்ப்பார்கள். இவ்வாறாக தஞ்சையினைப் சுற்றியுள்ள மக்கள் அனைவரும், இது நமது சங்கம், இது நமது மாணவர்களுக்கான இல்லம், இது நமது மக்களுக்கானக் கல்லூரி, இச் சங்கம் பாடுபடுவது நமது மக்களுக்காக என்றுணர்ந்து, தங்களது குடும்ப வளர்ச்சியும் சங்க வளர்ச்சியும் வேறுவேறல்ல, ஒன்றே எனக் கருதி உணவிட்டு வளர்த்த கல்லூரி இப்புலவர் கல்லூரியாகும்.

        தமிழ்ப் பெரியோர்கள், தமிழன்பர்கள், செல்வந்தர்கள், பெரு, சிறு வணிகர்கள் என அனைவரின் தன்னலமற்ற தியாகத்தாலும், உழைப்பாலும், உதிரத்தாலும் வளர்ந்த கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரியாகும்.

        இன்று தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி என உமாமகேசுவரனாரின் பெயரினையும், உயிரினையும் பெற்று வளர்ந்து நிற்கும் இக்கல்லூரியினைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும், தமிழராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.