27 மார்ச் 2015

அறிவுத் திருக்கோயில்


வரும் பகைவர் படைகண்டு மார்தட்டிக் களம் புகுந்த
மக்களைப் பெற்றோர் வாழ்க
மனம்கொண்ட துணைவர்க்கு விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க
உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம்காத்த உள்ளம் வாழ்க
திடமான தோள்களும் செயல் வீரர் மரபும் வாழ்க
பாவாடை தெய்வானை பல்லாண்டு பல்லாண்டு
நீடூழி நிறைவோடு வாழ்க வாழ்க வாழ்க

     கடந்த 22.3.2015 ஞாயிற்றுக் கிழமை காலை நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்களும், திருவாரூர் புறப்பட்டோம்.

     பள்ளி அலுவல் தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கத்தான் இப்பயணம். முதல் நாள் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, நாளை காலை 10.00 மணிக்கு, திருவாரூர் கோயிலுக்கு வருகிறேன். கோயிலிலேயே சந்திப்போம் வாருங்கள் என்றார்.

     திருவாரூர் கோயிலுக்குச் சென்றோம். வழக்கறிஞரைச் சந்தித்தோம். பேசினோம். விடை பெற்றோம்.

     கோயிலை விட்டு வெளியே வந்த பொழுது, திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. சன்னா நல்லூருக்குச் சென்று வந்தால் என்ன, என்னும் ஓர் ஆசை மனதில் உதித்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்க மகிழ்வுந்தின் ஓட்டுநரும், நண்பருமான ரமேஷிடம், சன்னா நல்லூருக்குப் போக வேண்டுமே என்றேன். அருகில்தான் இருக்கிறது தாராளமாகப் போய்வருவோம் என்றார்.

19 மார்ச் 2015

எழுத்துக்களைப் பொதுவில் வைப்போம்


நண்பர்களே, நலம்தானே.

யாதும் ஊரே, யாவரும் கேளீர்

என்றார் கனியன் பூங்குன்றனார். இப்பெருமகனாரின் வாக்கு, இணையத்தால், வலைப் பூவால் இன்று உண்மையாகி இருக்கிறது.

     வலைப் பூ நமக்கு, உலகெங்கினும் உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. முகமறியா நம் நட்பு, எல்லைகளற்று, பரந்து பரட்ட இவ்வுலகு முழுவதும் பரவியிருக்கிறது.

     நம் அனைவரையும் இணைப்பது, நமது தொப்புள் கொடி உறவான தமிழ் அல்லவா.

13 மார்ச் 2015

சுவடிகளைத் தேடி

   

 தமிழ் நாடெங்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார், பாதம் தேயத் தேய, நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். சுவடிகளைத் தேடித்தான் இந்த அலைச்சலும், நடையும்.

      அன்னைத் தமிழைக் காக்க வேண்டும், ஓலைச் சுவடிகளில் பொதிந்துள்ள, அருந்தமிழை அச்சேற்றி, நூலாக்கி, இறந்துபடாமல் காக்க வேண்டுமே என்ற கவலை.

     திருநெல்வேலியில், வக்கீல் சுப்பையா பிள்ளை என்பாரிடம், ஏடுகள் பல இருப்பதாக அறிந்த நாளில் இருந்தே, இருப்பு கொள்ளவில்லை. திருநெல்வேலிக்குச் சென்றாக வேண்டுமே என்ற எண்ணம், இடைவிடாமல், மனதை வற்புறுத்திக் கொண்டே இருந்தது.

     இதோ, பெரியவர் கிளம்பி விட்டார்.

06 மார்ச் 2015

அறம் செய்

    

ஆண்டு 1941. கோவை வருமான வரித்துறை அலுவலகம். அனுமந்தராவ் மிகவும் கண்டிப்பானவர். நேர்மையானவர். நன்கு படித்து, பட்டம் பெற்று, வருமான வரித்துறை அலுவலராகப் பதவியேற்று, ஆங்கிலேயர்களே, பாராட்டும் வகையில் பணியாற்றி வருபவர்.

       தனக்கு முன்னாள் உள்ள கணக்குப் பதிவேடுகளை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறார். பக்கத்துக்குப் பக்கம், ஒவ்வொரு நாளும், தர்மம் செய்த வகையில் செலவு 500, தர்மம் செய்த வகையில் செலவு 700 என்று, செலவுக் கணக்கு, தர்மக் கணக்காகவே நீண்டு கொண்டே செல்கிறது.