27 மார்ச் 2015

அறிவுத் திருக்கோயில்


வரும் பகைவர் படைகண்டு மார்தட்டிக் களம் புகுந்த
மக்களைப் பெற்றோர் வாழ்க
மனம்கொண்ட துணைவர்க்கு விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க
உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம்காத்த உள்ளம் வாழ்க
திடமான தோள்களும் செயல் வீரர் மரபும் வாழ்க
பாவாடை தெய்வானை பல்லாண்டு பல்லாண்டு
நீடூழி நிறைவோடு வாழ்க வாழ்க வாழ்க

     கடந்த 22.3.2015 ஞாயிற்றுக் கிழமை காலை நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்களும், திருவாரூர் புறப்பட்டோம்.

     பள்ளி அலுவல் தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கத்தான் இப்பயணம். முதல் நாள் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, நாளை காலை 10.00 மணிக்கு, திருவாரூர் கோயிலுக்கு வருகிறேன். கோயிலிலேயே சந்திப்போம் வாருங்கள் என்றார்.

     திருவாரூர் கோயிலுக்குச் சென்றோம். வழக்கறிஞரைச் சந்தித்தோம். பேசினோம். விடை பெற்றோம்.

     கோயிலை விட்டு வெளியே வந்த பொழுது, திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. சன்னா நல்லூருக்குச் சென்று வந்தால் என்ன, என்னும் ஓர் ஆசை மனதில் உதித்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்க மகிழ்வுந்தின் ஓட்டுநரும், நண்பருமான ரமேஷிடம், சன்னா நல்லூருக்குப் போக வேண்டுமே என்றேன். அருகில்தான் இருக்கிறது தாராளமாகப் போய்வருவோம் என்றார்.


      திருவாரூரில் இருந்து, மயிலாடுதுறை செல்லும் சாலையில் பயணித்தோம்.

     நண்பர்களே, எதற்கு இந்தப் பயணம் தெரியுமா?

     வலைப் பூ நமக்கு உலகு முழுவதும், எண்ணற்ற உறவுகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

     ஆண், பெண் என்னும் பால் வேறுபாடின்றி, இளையவர், முதியவர் என்னும் வயது வித்தியாசமின்றி, அனைத்து உறவுகளையும், சகோதரர், சகோதரி என்னும், இரு அன்பார்ந்த உறவுக்குள் அடக்கும் உன்னத பந்தத்தை, வலைப் பூ ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

     வலைப் பூ மூலம்தான் இப்பெரியவருடன், இம்மாமனிதருடன், பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை. ஆயினும் என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

குடியரசுத் தலைவரின் கரங்களால்,
1994 ஆம் ஆண்டு
வஷிஸ்ட் சேவா
என்னும்
உயரிய விருதினைப் பெற்றவர்.


கர்னல் பா.கணேசன்

இந்த இராணுவ வீரர் பிறந்த ஊர்தான்

சன்னா நல்லூர்.

     நாகப்பட்டினம் கும்பகோணம் சாலையும், திருவாரூர் மயிலாடுதுறை சாலையும், ஒன்றை ஒன்று சந்திக்கும், நான்கு முனைச் சந்திப்பில் அமைந்திருக்கும் எழில் மிகு சிற்றூர் சன்னா நல்லூர்.

     இச்சிற்றூரில் பிறந்து, பள்ளிப் படிப்பை இவ்வூரிலேயே பயின்று, செட்டிநாடு அண்ணாமலைப் பாலிடெக்னிக்கில் தொழிற் கல்வியைத் தொடர்ந்தவர்.

     இரண்டாண்டுகள் பொதுப் பணித் துறையில் பணியாற்றி, பின் நெஞ்சம் நிறைந்த கனவுகளோடும், உயர் இலட்சியத்தோடும், இந்திய இராணுவத்தில் இணைந்தவர்.

     மகராஷ்டிர மாநிலம், புனே இராணுவக் கல்லூரியில், பி.டெக்., படிப்பினை, அக்கல்லூரியிலேயே அதிக மதிப்பெண் பெற்று, முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, பொறியாளர் பட்டமும் பெற்றவர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பது ஆண்டுகள், முழுதாய், முழுமனதுடன் இராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

     நண்பர்களே, அடுத்த மாநிலத்திற்குச் சென்று வந்ததையோ, அல்லது அடுத்த நாட்டிற்குச் சென்று வந்ததையோ, வாழ் நாள் சாதனையாக, பெருமை பொங்கப் பேசும், மக்கள் நிறைந்த இப்புவியில், பூமிப் பந்தின் தென் துருவமாம், அண்டார்ட்டிக்காவில், ஒரு வருடத்திற்கும் மேல் குடியிருந்தும், ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் இருப்பவர் இவர்.

உண்மை, நண்பர்களே, உண்மை.

அண்டார்ட்டிக்கா

     நாற்புறமும் கடலால் சூழப்பட்ட, 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி. எங்கு பார்த்தாலும், நீண்ட நெடிய பணி மலைகளைக் கொண்ட உறை பணி மண்டலம்.

     அண்டார்ட்டிக்காவில் கடல் நீரின் மேல் மிதக்கும் பணித் தரைகளின், உயரம் என்ன தெரியுமா? சுமார் 2 கி.மீ. எப்பொழுதும் தொடர்ந்து வீசும் பணிப் புயலின் வேகம், ஒன்றும் அதிகமில்லை, 350 கி.மீ வேகம் மட்டும்தான்.

     ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பகல் பொழுதுகளையும், அடுத்த ஆறு மாதங்களுக்கு விடாமல் நீடிக்கும் இரவுப் பொழுதுகளையும் கொண்ட வினோத துருவம் அண்டார்ட்டிக்கா.

     பென் குயின், சீல் போன்ற மிகச்சில பணிப் பிரதேச விலங்கினங்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதி.


Dakshin Gangothri

இத்தகு கடும் உறை பணி உலகில்,
இந்தியா அமைத்திட்ட,
முதல் தென்துருவ ஆய்வுத் தளத்தின் பெயர்
தக்ஷிண் கங்கோத்ரி

இந்த ஆய்வுத் தளத்தின் தலைவராக,
இந்திய அரசால் நியமிக்கப் பட்டவர்தான்,
கர்னல் பா.கணேசன்.

ஒன்றல்ல, இரண்டல்ல, 480 நாட்கள் இந்த உறை பணி உலகில், கால் பதித்து, நின்று, நிதானித்து, திறம்படப் பணியாற்றியவர்தான்
கர்னல் பா.கணேசன்.

     நண்பர்களே, தென் துருவ முதல் ஆய்வுத் தளத்தின் தலைவராக, நியமிக்கப் பட்டவுடன், இவர் செய்த முதல் செயல் என்ன தெரியுமா?

     தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, சொந்த ஊருக்கு, சன்னா நல்லூருக்குச் சென்றார். அவ்வூரின் மண்ணை ஓர் பெரும் பையில் அள்ளி, மூட்டையாய் கட்டி, தனது உடமைகளுடன், தனது ஊர் மண்ணையும், தென் துருவத்திற்கு எடுத்துச் சென்றார்.

     தென் துருவத்திற்குச் சென்றதும், சன்னா நல்லூர் மண்ணை, தென் துருவத்தில், விதை போல் தூவி மகிழ்ந்தார்.

     இன்று அண்டார்ட்டிக்கா உறை பணியில், சன்னா நல்லூர் மண்ணும் இரண்டறக் கலந்திருக்கிறது.

     தக்க்ஷிண் கங்கோத்ரியில், தன் பணி முடிந்து, கிளம்பும்போது, 50 கோடி ஆண்டுகளாக, 5000 மீட்டர் ஆழத்தில், உறை பணியில் மூழ்கியிருந்த, ஓர் கற் பாறையினைப் பெயர்த்து, தன்னுடனே எடுத்து வந்தார்.

    அக்கற்பாறையினை என்ன செய்தார் தெரியுமா?

     வாருங்கள். பார்ப்போம்.
--
    திருவாரூரில் இருந்து புறப்பட்ட நாங்கள், முப்பது நிமிடங்களுக்குள் சன்னா நல்லூரை அடைந்தோம். சாலையின் இடது புறம்




அறிவுத் திருக்கோயில்

     அறுகோண அமைப்பில், ஆறு வட்ட வடிவ, தூண்களுடன் கூடிய ஒரு சிறு திறந்த வெளி மண்டபம்.



    


ஆறு பக்கங்களிலும், மூன்றடி உயரச் சுவர். சுவற்றில் இந்திய தேடியக் கொடி, இன்றுதான் வரையப் பட்டதைப் போல், புதிதாய், பளிச்சென்று காட்சி தருகின்றது.

     அறுகோணத்தின் மையத்தில், அறுகோண வடிவில் ஓர் தூண். தூணின் மேல், ஒரு அறுகோண சிமெண்ட் பலகை.

     அப்பலகையின் மேல், சிங்கம் போல், கம்பீரமாய், தென் துருவமாம் அண்டார்ட்டிக்காவில் இருந்து, கொண்டு வரப் பெற்ற கல்.

சிலிர்த்துப் போய்விட்டேன்
நண்பர்களே,
சிலிர்த்துப் போய்விட்டேன்.

     சேரன் செங்குட்டுவன், இமயம் வென்று, அங்கிருந்து கல் எடுத்து வந்து, பத்தினித் தெய்வமாம், கண்ணகிக்குக் கோயில் கட்டினான் என்று படித்திருக்கிறேன்.

    ஆனால், இன்றோ, இந்த நவீனச் செங்குட்டுவன், கர்னல் பா. கணேசன் அவர்கள், அதையும் தாண்டி, பூமிப் பந்தின் தென் கோடிக்கேச் சென்று, கல் எடுத்து வந்து, தான் பிறந்த ஊரில், ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறார், அறிவுத் திருக்கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்கோயிலின் கருவறைத் தெய்வமாய், அக்கல்லினைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்.

உள்ளம் பெருங்கோயில  ஊனுடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே

என்னும் திருமூலரின் வாக்கிற்கு இணங்க,

மனிதனே தெய்வம், எண்ணங்களே வாழ்க்கை

என்னும் உயரிய, உன்னத தத்துவத்தை, எளியோர்க்கும் உணர்த்தும் வகையில், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, இந்த அறிவுத் திருக்கோயில்.

     நண்பர்களே, வாய்ப்பு கிடைக்கும் பொழுது, சன்னா நல்லூருக்கு, ஒரு முறை சென்று வாருங்கள், அறிவுத் திருக்கோயிலைக் கண்டு வாருங்கள்.

தக்ஷின் கங்கோத்ரி வெற்றிப் பயணத்திற்காக , இந்திய அரசு வெளியிட்ட தபால் உறை


    

    





      

75 கருத்துகள்:

  1. மிக அரிய செய்திகளை தருகிறீர்கள். வியப்பு மேலிடுகிறது. நவீன செங்குட்டுவனின் செயல் நீங்கள் சொன்னது போல் சிலிர்க்கத்தான் வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      பிறந்த ஊரினை மறக்காத மாமனிதர் அல்லவா அவர்

      நீக்கு
  2. மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா... ஒரு நாள் கண்டிப்பாக சென்று வருகிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. 50 கோடி ஆண்டுகளாக, 5000 மீட்டர் ஆழத்தில், உறை பணியில் மூழ்கியிருந்த, ஓர் கற் பாறையினைப் பெயர்த்து, தன்னுடனே எடுத்து வந்தார்.///அய்யா கர்னல் கணேசனைப் பாராட்டத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. நம்மிடையே வாழும் இதுபோன்ற அறியப்படாத ஆளுமைகளை அறியத்தரும் தங்களின் முயற்சி வேண்டப்பெறுவது.
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  5. அரிய தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! ப்ரமிக்க வைக்கிறது இந்தச் செய்தி! தமிழன் தென் துருவத்திலும் கால் பதித்து தமிழ் மண்ணை அங்கு இட்டு தமிழ் நாட்டில் தென் துருவத்தின் பாறை இடம் பெயர்ந்து...ஆஹா....அருமை பெருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென் துருவத்தில் தமிழ் நாட்டு மண்ணும் கலந்திருக்கிறது
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. அரியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..
    நிச்சயம் - இந்த விடுமுறையின் போது சன்னாநல்லூரில் அண்டார்டிகா - தரிசனம் தான்!..

    பதிலளிநீக்கு
  7. கர்னல் கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவரது உழைப்பும் நாட்டுப்பற்றும் ஈடு இணையற்றது. அறிவுக்கோயில் பயணம் புதிய செய்திகளை நிறைவாகத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பும் நாட்டுப் பற்றும்
      மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க உரியது ஐயா
      நன்றி

      நீக்கு
  8. சிலிர்க்க வைக்கும் தகவல்!
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. இதுதான் சொந்த ஊர் பற்றி
      சிறந்த நாட்டுப் பற்று
      நன்றி நண்பரே

      நீக்கு
  10. புதிய தகவல்களை அற்புதமாக புகைப்படங்களுடன் விளக்கிய விதம் கண்டு மகிழ்ந்தோம். நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பதிவை படித்து நானும் சிலிர்த்துப் போய்விட்டேன். அறிய தகவல், பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கர்னல் பா.கணேசனின் சாதனையைக் கண்டு பரவசமடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. நண்பரே தங்கள் பதிவைக் கண்டு உள்ளம் மகிழ்வில் திளைக்கிறது
    இதுபோல் தங்கள் பணி மேலும் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  14. அய்யா,

    கடந்தகால வரலாற்றில் பெருமை சுவடு பதித்த பலரை பற்றி மிக சிறப்பாக எழுதுபவர் நீங்கள்... அவர்களுக்கு ஈடான அர்ப்பணிப்புடன் சம காலத்தில் வாழும் ஒரு மாமனிதரை பற்றிய இந்த பதிவை படித்து நானும் மெய்சிலிர்த்தேன்... எனது பூர்வீகமான காரைக்காலிலிருந்து அதிக தூரத்தில் இல்லை சன்னா நல்லூர் !

    " தக்ஷிண் கங்கோத்ரி " பத்திரிக்கைகளில் படித்த ஞாபகம் உண்டு... ஆனால் இந்த மாமனிதரை பற்றிய பெருமைகளை எத்தனை தமிழ் ஊடகங்கள், பத்திரிக்கைகள் பேசியிருக்கின்றன ?!

    உங்கள் பணி தொடர வேண்டுகிறேன் அய்யா.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாமனிதரை பற்றிய பெருமைகளை எத்தனை தமிழ் ஊடகங்கள், பத்திரிக்கைகள் பேசியிருக்கின்றன ?!//
      நடிக நடிகர்களையும், அரசியல் வாதிகளையும் பற்றி எழுதவே பத்திரிக்கைகளில் இடமில்லை
      கர்னல் போன்ற மாமனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
      நன்றி நண்பரே

      நீக்கு
  15. பெயரில்லா27 மார்ச், 2015

    சிறப்புப் பதிவாக நாம் அறியாததைத் தந்தீர்கள்
    மக்க மகிழ்வு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இன்றைய மாமனிதர்கள் இவர்கள், தங்களின் தேடுதல் வித்தியாசமானதே. தேடுங்கள் நாங்கள் அறிய. தாங்கள் சொன்னது முற்றிலும் சரியே. நவீன செங்குட்டுவன். நாம் பார்த்த செங்குட்டுவன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தென் துருவத்தில் இந்திய அரசின் ஒரு ஆராய்ச்சி கேந்திரமாக தக்ஷிண கங்கோத்திரி செயல் பட்டது படித்திருக்கிறேன் ஆனால் அதில் நம்மூர்த் தமிழர் தலைமை ஏற்றிருந்தார் என்பதும் மற்ற செய்திகளும் இப்பதிவின் மூலமே அறிந்தேன் ஓசைப்படாமல் செயல் ஆற்றிய கல்னல் .பா. கணேசன் போற்றப்பட வேண்டியவரே. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்னல் பா.கணேசர் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஐயா
      நன்றி

      நீக்கு
  18. வணக்கம் நண்பரே இவரது செயல் பிரமிக்க வைக்கிறது இந்தியன் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது இவரது வலைப்பூவுக்கு நான் ஆரம்ப காலத்தில் போவேன் இடையில் விடுபட்டு விட்டது நிச்சயம் அந்த அறிவுத்து திருக்கோயில் காணவேண்டியதே நானும் ஒருநாள் போவேன்.
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் இந்த அறிவுத் திருக்கோயிலைக் காண வாருங்கள்
      நண்பரே
      நன்றி

      நீக்கு
  19. எத்தனையோ முறை சன்னாநல்லூரை கடந்து சென்று இருக்கிறேன். அங்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறது என்று தெரியவில்லை.
    உள்ளம் உவகை கொண்ட பதிவு அய்யா!.
    தகவலுக்கு நன்றி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      அடுத்த முறை சன்னா நல்லூர் வழியாகச் செல்லும்போது,
      அவசியம் பாருங்கள்

      நீக்கு
  20. very good experience of sharing. sir. .good post. vanakkam.my great salute to Antarctica return Ganesan sir.pl.convey it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்னல் பா.கணேசன் வணக்கத்திற்கு உரியவர்தான் நண்பரே
      நன்றி

      நீக்கு
  21. வணக்கம்
    ஐயா.

    அறியாத தகவல் நவீன செங்குட்டுவனின் செயலை கண்டு வியந்து விட்டேன்... ஆதாரத்துடன் பதிவை எழுதியுள்ளீர்கள்... படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுகிறது... பகிர்வுக்கு நன்றி த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. கர்னல் பா. கணேசன் பற்றியும் அறிவுத்திருக்கோயில் பற்றியும் அறியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன்! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. புதிய தகவல் தெரிந்துகொண்டேன். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  24. அரிய தகவல்கள். கர்னல் பா.கணேசன் அவர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அரிய தகவலை அறியத் தந்ததற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  26. இன்றோ, இந்த நவீனச் செங்குட்டுவன், கர்னல் பா. கணேசன் அவர்கள், அதையும் தாண்டி, பூமிப் பந்தின் தென் கோடிக்கேச் சென்று, கல் எடுத்து வந்து, தான் பிறந்த ஊரில், ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறார், அறிவுத் திருக்கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்கோயிலின் கருவறைத் தெய்வமாய், அக்கல்லினைக் காட்சிக்கு வைத்திருக்கிறார். கர்னல் பா.கணேசன் பாராட்டுக்குரியவர்.போற்றுதலுக்குரியவர். வாழ்த்துகளூக்குரியவர். இவ்வரிய தகவலைப் பதிவாக்கிய அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமாரின் பணி சிறப்பான பணியாகும்.

    இவரைப் பாராட்டி வாழ்த்தி மகிழ் வேண்டும்.

    நல்வாழ்த்துகள் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களே !
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும்
      பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      நன்றி

      நீக்கு
  27. கர்னல் கணேசன் அவர்களின் அருஞ்செயலையும் அவர் பிறந்த மண்ணாகிய சன்னா நல்லூரின் பெருமையினையும் பாரறியச் செய்த தங்களின் இப்பதிவிடுகைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்ங்களின் வருகையும் வாழ்த்தும்
      பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      நன்றி

      நீக்கு
  28. அன்புள்ள அய்யா,

    அறிவுத் திருக்கோயில் கர்னல் பா. கணேசன் அவர்கள் கட்டிய அறிவுத் திருக்கோயிலைக் கட்டியது ஆச்சர்யப்பட வைத்தது. இந்த நவீனச் செங்குட்டுவனைப் பற்றி அறியத்தந்தது மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம. 13

    பதிலளிநீக்கு
  29. அறிவு திருக்கோவில்
    உறைய வைக்கும்
    உணர வைக்கும்
    உருக வைக்கும்
    பகிர்வுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  30. ஆளுமைத் திறமைமிக்க அறிஞர்களையும்,
    கர்னல் பா.கணேசன் போன்ற மறவர்களையும்
    மனதில் நிறித்தி போற்றி வரும் தங்களது செயல்
    போற்றுதலுகிகுரியது கரந்தையாரே!
    கர்னல் பா.கணேசன் அவரக்கு சல்யூட்
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்னல் பா.கணேசன் அவரக்கு சல்யூட்
      நன்றி நண்பரே

      நீக்கு
  31. அறியாத செய்திகளை அறியத் தந்த பகிர்வு....
    வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா...

    பதிலளிநீக்கு
  32. சிலிர்த்துப் போய்விட்டேன்
    நண்பர்களே,
    சிலிர்த்துப் போய்விட்டேன்.

    பதிலளிநீக்கு
  33. அரிய செய்திப் பகிர்வுக்கு நன்றி. தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  34. அரிய தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றிகளய்யா.

    பதிலளிநீக்கு
  35. கர்னல் கணேசன் சாருக்கு ஒரு சல்யூட். தேடிச்சென்று பார்த்து, பதிவில் பெருமை சேர்த்த உங்கள் மனவளத்துக்கு என் அன்பும்,வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  36. சகோதரரே அவரை தேடிச் சென்று பார்த்திருப்பது அளப்பரிய செயல் அவற்றை எம்மோடு பகிர்ந்தது அதனிலும் பெரிது மேலும் தொடருங்கள் இவ்வண்ணமே நன்றி சகோ! இனி தொடர்வேன். சகோ வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  37. இன்று நம்மிடையே வாழும் ஒரு மாபெரும் சாதனையாளரின் சரித்திரத்தைப் படித்ததுடன். அவருடைய பொன்னான கையொப்பத்தையும் கண்டு மகிழ முடிந்தது, தங்களின் இந்தப்பதிவினால். பகிர்வுக்கு நன்றிகள்.

    கர்னல் சாருக்கு நம் மரியாதை கலந்த வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  38. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக.உள்ள அறிவாலயமொன்றை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு