30 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 6


அத்தியாயம் 6 படை புறப்பட்டது



முதலில் பெரிய மருதுவின் தலைமையில் வாட் படை

குயிலியின் தலைமையில் உடையாள் பெண்கள் படை

சின்ன மருதுவின் தலைமையில் வளரிப் படை

ஒய்யாத் தேவர் படை

வெள்ளிக் கட்டி வைரவன் படை

சிறு வயல் மும்முடியான் படை

சேத்தூர் செம்பியன் படை

மறவமங்கலம் கொங்குத் தேவன் படை

25 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 5


அத்தியாயம் 5 ஹைதர் அலி


புதிய மன்னர் உம்தத்-உல் உம்ரா வாழ்க
தளபதி ஜோசப் சுமித் வாழ்க

முத்து வடுகநாதரைத் தீர்த்துக் கட்டிய
மாவீரத் தளபதி பான் ஜோர் வாழ்க

கைக் கூலிகளின் முழக்கங்கள் சிவகங்கைச் சீமையின் அரண்மனையில் ஓங்கி ஒலித்தன.

     சசிவர்ணத் தேவரும், முத்து வடுகநாதரும் வேலுநாச்சியாரும் உலாவிய அரண்மனை இன்று ஆங்கிலேயர் வசம்.

20 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 4


 அத்தியாயம் 4 உடையாள்


வேலு நாச்சியாரைக் கண்டதும், காளையார் கோயில் மக்கள் கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.

      குதிரையில் இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில் குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.

      வேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும், இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா?

14 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 3


 அத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்

     ஆங்கிலேய கவர்னர் லாட்டீ காட், தனது அரண்மனையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கிறான். முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்கிறது. சில நாட்களுக்கு முன், தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

     ஒரு சிறு பெண், தன்னை என்ன பாடு படுத்திவிட்டாள்? சும்மா விடக்கூடாது அவளை? மனதில் கறுவுதலோடு அங்கும் இங்கும் நடக்கிறான்,நடக்கிறான், நடந்து கொண்டே இருக்கிறான். அன்று நடைபெற்ற நிகழ்வு மீண்டும், மீண்டும் அவன் மனத் திரையில், ஓடிக் கொண்டே இருக்கிறது.

10 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 2


அத்தியாயம் 2 கவுரி நாச்சியார்

    

வேலு நாச்சியார்.

     இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகள். செல்ல மகள். வீர மகள். பன்மொழிப் புலமை வாய்ந்தவர். நிர்வாகத் திறன் மிக்க மாட்சியர். குதிரையேற்றம், யானையேற்றம், சிலம்பம், வாள் வீச்சு அனைத்திலும் வித்தகர்.

      இராமநாதபுரம் அரண்மனையிலே பிறந்தவர், வளர்ந்தவர். மருமகளாய் குடியேறியது சிவகங்கைச் சீமையில். சிவகங்கைச் சிமையின் மன்னர் சசி வர்ணத்தேவரின் திருமகன், இளவரசர் முத்து வடுக நாதரின் கரம் பற்றியவர்.
  

05 டிசம்பர் 2014

வேலு நாச்சியார்


      கிஸ்தி, திரை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி.

     எங்களோடு வயலுக்கு வந்தாயா?, ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை பறித்தாயா? தரணி வாழ் உழவனுக்கு கஞ்சிக் களயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங் கெட்டவனே, எதற்குக் கேட்கிறாய் திரை? யாரைக் கேட்கிறாய் வரி?

     நண்பர்களே, தமிழ் மொழி அறிந்த பெரியவர்கள் முதல், சிறுவர்கள் வரை, அனைவரும், இவ்வீர உரையினை நன்கறிவார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மனை அறியாதவர்கள் யார்?

ஆனாலும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குச் சற்றும் குறைவில்லாத,
வீரத்தாய் வேலு நாச்சியாரை
தமிழ் மக்களில் எத்தனை சதவீதத்தினர் அறிவர்.
மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

02 டிசம்பர் 2014

பந்தக்கால்


அன்பு நண்பருக்கு வணக்கம்,

      ரொம்பவும்தான் நாளாகிப் போனது, உங்களுக்குக் கடிதம் எழுதி.

      பெண் குழந்தை பிறந்திருக்கிறதாமே, சந்தோஷம், வாழ்த்துக்கள்.

      தங்களுக்குத் திருமணமாகி, நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.

      மனைவி கருவுற்றவுடன், ஸ்கேன் பார்த்து, பெண் குழந்தை என்றவுடன் கலைத்து,... இனியும் கலைத்தால், மனைவியின் உயிருக்கு ஆபத்து, என்ற டாக்டரின் எச்சரிக்கையினால், கலைக்காமல் விட்டு, பிறந்த பெண் குழந்தை.

     உங்கள் கூற்றுப்படி, உங்களைத் தட்டிக் கேட்க, ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை, பொய்யாக்கப் பிறந்த பெண் குழந்தை.

     இனி அடுத்ததாய், ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவீர்கள், அப்படித்தானே?

28 நவம்பர் 2014

கடிதத்தில் வந்த பாராட்டு


கரந்தையில் பிறந்தவர் இவர். கரந்தையிலேயே வசித்தும் வருபவர். நான் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், எனக்கு முன்னரே பயின்றவர். இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்.

     400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திற்கும் மேற்பட்ட குறு நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட சிறு கதைத் தொகுப்புகள், 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆங்கிலத்தில் பல கவிதைகள், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் என இவரது எழுத்துப் பணி, பல தளங்களில் விரிந்து கொண்டே செல்லும்.

23 நவம்பர் 2014

விருது

     

நண்பர்களே, வணக்கம். நலம்தானே. வலைப் பூ என்னும் எழுத்து உலகில், மகிழ்ச்சி உலகில் காலடி எடுத்து வைத்து, மூன்றாண்டுகள் ஆகப் போகின்றன.

     மூன்று ஆண்டுகளுக்குள் எத்தனை, எத்தனை புதுப் புது உறவுகளைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது, மனம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறது.

16 நவம்பர் 2014

கனவில் வந்த காந்தி 2


நண்பர்களே நாம், எண்ணற்ற நட்புகளோடு பழகியிருப்போம், பழகிக் கொண்டே வருகின்றோம். ஆயினும் சிலரைப் பார்த்த உடனேயே, பேசத் தோன்றும், நட்பாய்ப் பழகத் தோன்றும். உண்மைதானே.

தேவகோட்டை கில்லர்ஜி

12 நவம்பர் 2014

சுவாசிப்போம்


ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

      படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய புத்தகம்.

நாளை காலை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.

06 நவம்பர் 2014

என் ஆசான்

நண்பர்களே, 
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு
வருமாறு
தங்களை அன்போடு அழைக்கின்றேன்
வருக      வருக



என் ஆசான்


பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
     தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
     எளிமையை என்றும்நான் மறக்கேன்
                             - திருவிசைப்பா

     நண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.

     ஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர் எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள் அல்லவா நாம்.

     ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.

01 நவம்பர் 2014

சிம்பனி


ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள்.

27 அக்டோபர் 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்

21 அக்டோபர் 2014

கரந்தை மாமனிதர்கள்


வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.

ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

வான விரிவைக் காணும் போதெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்

                                   - பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நான் பிறந்தது கரந்தை. நான் தவழ்ந்தது கரந்தை. நான் வளர்ந்தது கரந்தை. நான் பயின்றது கரந்தை. நான் பணியாற்றுவதும் கரந்தை.

     எனக்கு ஒரு நல் வாழ்வு, ஏற்றமிகு வாழ்வளித்த, கரந்தைக்கு, இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னையேக் கேட்டுப் பார்க்கிறேன். விடைதான் தெரியவில்லை.

18 அக்டோபர் 2014

தில்லையாடி

     

தில்லையாடி வள்ளியமை


ஆண்டு 1914. தென்னாப்பிரிக்கா. ஜோகனஸ்பர்க். அதை வீடு என்று கூற முடியாது, ஒரு குடிசை. அக்குடிசையினுள், கிழிந்த பழையத் துணியினைப் போலத்தான், அப்பெண் கிடக்கிறார். எலும்புகளும், எலும்புகளை மூடிய தோலும் மட்டுமே மிச்சமிருக்கினறன. குழி விழுந்த கண்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சிறு அசைவுகள் மட்டுமே, அப் பெண்ணின் உடலில், இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

     கோட், சூட் அணிந்த வழக்கறிஞர் ஒருவர், கவலை தேய்ந்த முகத்துடன், அக்குடிசையினுள் நுழைகிறார். கிழிந்த பாயில் படுத்திருக்கும் உருவத்தைக் கண்டவுடன், அவரது கண்கள் கலங்குகின்றன. எப்படி இருந்த பெண் இப்படி ஆகிவிட்டாரே? இனி இப்பெண் பிழைக்கப் போவதில்லை என்பது பார்த்தாலே தெரிகிறது. நான்தானே, இந்நிலைக்குக் காரணம். என்னால்தானே, இப்பெண் போராட்டத்தில் குதித்தார்.

13 அக்டோபர் 2014

வேருக்கு நீர்


ஜுலை 15
காமராசர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும்,
ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவோம்
இதுவே,
கர்மவீரர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்.

     நண்பர்களே, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் அன்று வெளியிட்ட எனது பதிவினை, மேற்கண்டவாறுதான் நிறைவு செய்திருந்தேன்.

     இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு மின்னஞ்சல் வந்தது.

08 அக்டோபர் 2014

களிறு கண்டேன்


நண்பர்களே, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும் விரும்பும் ஒரு விலங்கு உண்டென்றால், அது யானையாகத்தான் இருக்கும்.

     யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. யானைக் கூட்டங்களைப் பொறுத்தவரை குடியாட்சி கிடையாது. மன்னராட்சிதான். மன்னராட்சி என்பதுகூட தவறு, மன்னி ஆட்சிதான், இராணி ஆட்சிதான்.

     வயது முதிர்ந்த பெண் யானையே கூட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தும். ஒரு கூட்டத்தில் மூன்று சோடிகள் மற்றும் யானைக் குட்டிகள் என பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.

     ஒரு முறை, ஒரு பெண் யானை கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அப்பொறுப்பு, அப்பெண் யானை இறக்கும் வரை தொடரும்.

01 அக்டோபர் 2014

செடிகளின் காதலர்


அப்பா

மகனின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார் தந்தை.

என்னோட மேற்படிப்புப் பற்றி, உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டுமப்பா.

      தந்தை மகனை வியப்புடன் பார்க்கிறார். தன் மகனின் வயதுடைய மற்ற பிள்ளைகள் எல்லாம் பொறுப்பின்றி, எதிர்காலச் சிந்தனைகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக, ஊர் சுற்றித் திரியும்போது, இவன் மட்டும், படிப்பைப் பற்றிக் கவலைப் படுகிறானே. தந்தைக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

சொல்லப்பா

நான் ஐ.சி.எஸ்., படிக்க விரும்புகிறேன் அப்பா. ஆனால் இப் படிப்பைப் படிக்க இலண்டனுக்குத்தான் சென்றாக வேண்டும். செலவு அதிகமாகும்.

செலவு கிடக்கட்டும். ஐ.சி.எஸ்., படித்து முடித்துவிட்டு, நீ என்ன செய்யப் போகிறாய்.

24 செப்டம்பர் 2014

கரந்தை தர்மாம்பாள்

   



ஆண்டு 1938. நவம்பர் மாதம் 13 ஆம் நாள். சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. மக்கள் ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாய்க் கூடிப் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் நம்ப முடியவில்லை.

    சென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள் அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.

18 செப்டம்பர் 2014

நண்பா, விரைந்து முன்னேறு



 சங்கங்களால் – நல்ல
சங்கங்களால் – மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள் போல் – இளஞ்
சிங்கங்கள் போல் – பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

எங்கும் சொல்க – கொள்கை
எங்கும் சொல்க – இதில்
எது தடைவந்த போதிலும் அஞ்சற்க
                         - பாரதிதாசன்

     நண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு. முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான், கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும் நிலைத்து நிற்கிறது நம் மொழி.

     சங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால், எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல் உழைப்பு வேண்டும்.

14 செப்டம்பர் 2014

விருதா? எனக்கா?

     

நண்பர்களே, வலைப் பூ ஒன்று தொடங்கி, எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவினை எழுதியவன், இப்பொழுது வாரம் ஒரு பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.

11 செப்டம்பர் 2014

பாரதி போற்றுவோம்


தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்னென்று சொல்வேன்.
                     பாரதிதாசன்

     ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம் மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட அருகில் செல்ல அச்சப்ட்டார்.

      கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி, தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப் பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன் யானையை நெருங்குகிறார்.

05 செப்டம்பர் 2014

கல்வி, தியாகத் திருநாள்



    1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

28 ஆகஸ்ட் 2014

தமிழ் மண்ணின் மைந்தர்


ஆண்டு 1891. கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து, தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியபோது, அவரின் உடல் நடுங்கத் தொடங்கியது. மருத்துவர் வரவழைக்கப் பட்டார். மருத்துவம் பார்த்தும் பலன்தானில்லை.

     கருணைக் கடலாம் கர்த்தரை மனதில் நினைத்து, மறை  மொழிகளால் மனதாரத் தொழுது, புண்ணியா, உன்னிடமே போதுகின்றேன் என்றார். அடுத்த நொடி, அவரது மண்ணுலக வாழ்வு நிறைவு பெற்றது.

     அந்நாள் 28.8.1891

20 ஆகஸ்ட் 2014

சங்கமம்


பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே,
பழகிக் களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ

     நண்பர்களே, இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், நமது எண்ணங்கள், இறக்கைக் கட்டி, பின்னோக்கிப் பறப்பதையும், இளமைக் கால நினைவலைகளில் மூழ்கி, நிகழ் காலத்தை மறந்து, கண்ணின் விழிகளில் இருந்து, ஒரு துளி நீர் எட்டிப் பார்ப்பதையும், நாம் அனைவரும் அனுபவித்து இருக்கிறோமல்லவா.