28 டிசம்பர் 2015

விக்ரமம்



     நண்பர்களே, கடந்த 4.1.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

     இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, இன்று கண்காணிப்பாளராய் பணியாற்றி வருபவர்.

24 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 7





ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதேபரிந்துஎடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
                         பட்டினத்தார்

வாரணாசி,
4.4.1970
அண்ணன் அவர்களுக்கு,

        விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, எதுவுமே பேசாமல் இருக்கிறாயே என்று எல்லோரும் கேட்டீர்கள். என்ன பேசுவது என்று தோன்றாததால்தான் மௌனம் சாதித்தேன்.

      ஆனாலும் நானும் மனிதன்தானே, மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிக் குமுறல்களை முறையாக வெளிப் படுத்தாவிட்டால், ஒரு பூகம்பம் போல் வெடித்துச் சிதறிப் போய் விடுவேனோ என்று பயப்படுகிறேன்.

19 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 6





பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
                                       பட்டினத்தார்

       அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.

எதிரில் அம்மா.

       மெதுவாக, மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து, கட்டிலை நெருங்குகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதே, எப்படியம்மா இங்கு வந்தாய்?

15 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 5




பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்தபின் கை விடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையிலாயோ?
                                        பாரதி

    கேப்டன் கணேசன் அவர்களின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மேஜர் ஒருவருக்கு, திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற இருந்தது. எனவே அவர் விடுமுறையில் சென்று விட்டார்.

     இந்நிலையில்தான் கேப்டன் கணேசன் அவர்களுக்கு, சன்னா நல்லூரில் இருந்து தந்தி வந்தது.

அம்மா கவலைக்கிடம்.

11 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 4




குருதியின் நதி வெளிபரக்கவே
    குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும் உடல் அடுக்கியே
   கரை எனஇரு புடை கிடக்கவே
                           கலிங்கத்துப் பரணி

இந்திய எல்லைப் புறங்கள்,
5 செப்டம்பர் 1965

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,

    பதான்கோட் இராணுவ மருத்துவ மனையில் இருந்துதான், இக்கடிதத்தை எழுதுகிறேன். போரின் தீவிரத்தால் மருத்துவ மனையே அதிர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்திய விமானப் படையின் விமானத் தளம், மருத்துவ மனைக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இந்திய வான் படை விமானங்களைத் தாக்கவரும், பாகிஸ்தானிய விமானங்களின் குண்டு ஓரிரு முறை மருத்துவ மனைக்குள்ளேயே விழுந்து வெடித்தது.

08 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 3




சிற்றில் நாற்றூன் பற்றி, நின் மகன்
     யாண்டுள னோ?என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
     புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
     தோன்றுவன் மாதோ, போர்களத்தானே
                                புறநானூறு 86

       1965 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.

       1962 ஆம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பால் படு தோல்வி அடைந்த இந்திய இராணுவம், தன்னிலை உணர்ந்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

     ஏராளமான படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதிகாரிகளும், அதிகாரிகள் அல்லாதவர்களும், பெருமளவில் இராணுவத்தில் சேர்க்கப் பட்டனர்.

     இம்மாற்றங்களை அறியாத பாகிஸ்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் குஜராத், கட்ச் பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

04 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 2



 
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்
யாம் ஆர் எமது பாசம் ஆர் என்ன மாயம்
இவைபோக்க கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன் தன் குறிப்பே துணைக்கொண்டு போம் ஆறு அமைமின்
பொய் நீக்கிப் புயங்கன் ஆள் வான் பொன் அடிக்கே
                                          திருவாசகம்

    மகராஷ்டிரா மாநிலம் பூனேயில் ஆரம்ப காலப் பயிற்சி.

    இரண்டு மாதப் பயிற்சியிலேயே, கார்ப்பொரல் என்னும் அணித் தலைவர் தகுதி திரு கணேசன் அவர்களை நாடி வந்தது.

    இரண்டு வருடப் பயிற்சியானது, நாட்டின் அவசரத் தேவையினைக் கருதி ஆறு மாதங்களாகக் குறைக்கப் பட்டது.

29 நவம்பர் 2015

எல்லைப் புறத்தில்




எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனுக்குத் திருநாளாகும்.
                               பாவேந்தர் பாரதிதாசன்

இராணுவ மருத்துவமனை,
பெங்களூர்,
23.8.1963
தேவரீர் அப்பா அவர்களுக்கு,

     தங்களது மகன் கணேசன் தாழ்மையுடன் எழுதிக் கொண்டது. சீனாக்காரனின் அநியாய ஆக்கிரமிப்பிலிருந்து, அன்னை பாரத பூமியைக் காப்பாற்ற வீட்டுக்கொரு ஆள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்ற நம் ஜனாதிபதியின் அபயக் குரலை நீங்கள் ரேடியோ மூலம் கேட்டிருப்பீர்கள்.

     ஐந்து ஆண் மக்களைப் பெற்ற நாம், ஒருவரையும் அனுப்ப முடியவில்லையே, என்று வருந்தவும் செய்திருப்பீர்கள்.

     தங்கள் வருத்தத்தைப் போக்க, நம் குடும்பத்தின், என் அருமை சகோதரர்கள் சார்பில், என்னுயிரை, இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டி நான் புறப்பட்டு விட்டேன்.

25 நவம்பர் 2015

புத்தகத்தைக் காதலித்தவன்


ஆண்டு 1823, ஒடிசலான தேகம். உட்புறம் சுருங்கி ஒட்டிய கண்ணங்கள். குழி விழுந்த கண்கள். அழுக்கடைந்த உடை.

     அச்சிறுவனின் வயது பதினான்குதான். ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. ஆனாலும் ஆர்வம் என்னவோ படிப்பதில்தான்.

     அச்சிறுவனுக்கு ஓர் ஆசை. தணியாத தாகம். விம்ஸ் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றினை, எப்படியாவது படித்துவிட வேண்டும் என்னும் தாகம்.

20 நவம்பர் 2015

நம்ப முடியாத உண்மைகள்



   அது ஒரு அடர்ந்த காடு. காட்டின் மரங்களுக்கிடையே நுழைந்து மெல்ல, மெல்ல முன்னேறுகிறது அப்படை. குதிரைப் படை, காலாட் படை. மெல்ல மெல்ல புதர்களையும், சிறு சிறு செடி கொடிகளையும் மிதித்து நசுக்கிய வண்ணம், அந்தப் படை முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   நீண்ட தூரம் நடந்த களைப்பு போர் வீரர்களின் முகங்களில் தெரிகிறது. அவர்களுடைய ஆயுதங்கள், உடைகளில் சொருகப் பட்டிருக்கின்றன.

    படைத் தலைவன் எச்சரிக்கையோடு, விழிகளால், காட்டினை சல்லடை போட்டுச் சளித்த வண்ணம், முன்னே செல்கின்றான்.

   திடீரென்று குறுக்கே ஓடுகிறது, ஒரு பூனை.

15 நவம்பர் 2015

கடவுளைக் காண்பேனோ


       அபுதாபியில் இருந்து ஓர் அன்புக் கட்டளை. பாசக்கார, மீசைக்கார நண்பரிடமிருந்து ஓர் உத்தரவு.

    முன்பு ஒரு முறை கனவில் காந்தியைக் கண்டவர். இப்பொழுது கடவுளையேக் கண்டிருக்கிறார்.

கடவுளைக் கண்டேன்
தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

10 நவம்பர் 2015

தாகூரில் தோய்ந்தவர்




     கடவுள் எங்கே? என நான் கேட்ட பொழுது, எங்கும் என பதிலுரைத்தது அறிவு. ஆனால் அன்போ இங்கே எனத் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டது.

     அன்பென்னும் நேரான பரந்த, செழிப்பான பாதை தன் முன்னே விரிந்திருக்க, மதங்களென்னும் குறுகிய, ஒற்றடிப் பாதைகள் வழியே சென்றவாறு, உன்னைக் காண, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மதங்கள் வழிகளாயினும், அவைகள் மட்டுமே வழிகளென்பதல்ல.

05 நவம்பர் 2015

என்றாவது ஒரு நாள்




     1902 ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியா. சிட்னி. தன் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமதி இஸபெல், அம் மனிதரைத் தற்செயலாகத்தான் பார்த்தார்.

     அழுக்கேறிய கிழிந்த உடைகளுடன், முகத்தில் நீண்டு வளர்ந்திருந்த தாடி, மீசையுடன், மதுவின் வாடையுடன் அவர் மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.

      மன நிலை பிறழ்ந்தவராய், மது அருந்துவதையே, தன் வாழ் நாள் கடமையாக கடைப்பிடிப்பவர் போல், மெதுவாக ஆடி, ஆடி வந்து கொண்டிருந்தார்.

     எதிரிலே தள்ளாடியபடி வந்த அந்த மனிதர், தன்மீது மோதிவிடுவாரோ என்று எண்ணி, விலகியபோதுதான், அம்மனிதரது முகத்தைப் பார்த்தார்.

30 அக்டோபர் 2015

சிகரத்தை நோக்கி


     நண்பர்களே, அரசு ஊழியர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் நிச்சயமாக இணைந்திருப்பார்கள். பலரோ ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருப்பார்கள்.

      அரசு ஊழியர் அல்லாதவர்களில் பெரும்பாலானர்கள், நிச்சயமாக காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்தே இருப்பார்கள்.

              குடும்பத்தினை மையமாக்க் கொண்ட வாழ்வினை வாழ்ந்து வருபவர்கள் அல்லவா நாம். எனவே காப்பீட்டுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

25 அக்டோபர் 2015

இளைஞர் ஆத்திசூடி




அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்

      சிறு வயதில், தொடக்கப் பள்ளியில், அனைத்து மாணவர்களுடனும் இணைந்து, ஒரே குரலாய் ஓங்கி ஒலித்திட்ட தமிழ் மூதாட்டி ஒளவையின் ஆத்திசூடி.

      இளைஞர்களும் ஏன் முதியவர்களும் கூட எந்நாளும் நினைவில் கொண்டு, பின்பற்ற வேண்டிய ஆத்திசூடி, ஏனோ, கீழ்நிலை வகுப்புகளோடு நின்று விடுகிறது.

     மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே, பள்ளிக்குச் செல்லும் இக்கால மாணவர்கள், ஔவையை அறிவார்களா என்பதே சந்தேகம்தான்.

20 அக்டோபர் 2015

ஜன்னல் ஓரத்து நிலா




தாய் போற்ற தான் உயர
தரணியெங்கும் புகழ் பரவ
கல்வியே தாரக மந்திரம் என்று
கல்லூரி வாசலில் நுழைந்தேன் ...

துப்பாக்கி சப்தம் கேட்டதடா
செல் வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய் குலையுயிராய்...

அங்க அவயங்கள் சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக்கறை படிந்ததடா...

     நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் பதறுகிறது அல்லவா? நமது தொப்புள் கொடி உறவுகளான, ஈழத்து உறவுகளின் நிலைமை பற்றி, செய்தித் தாட்களிலே படித்திருப்போம், உள்ளம் வேதனையில் வாட துவண்டிருப்போம்.

15 அக்டோபர் 2015

புதுகை சங்கமம்




     கடந்த இரண்டு மாதங்களாக, என்று வரும், எனறு வரும் என்று நாள் காட்டியின் தாட்களைப் பார்த்துப் பார்த்து, ஏங்கிக் கொண்டிருந்த, அந்த நாள், அந்த இனிய நாள், வாழ்வின் மறக்க இயலா சிறந்த நாள், கடைசியில் வந்தே விட்டது.

     11.10.2015 ஞாயிற்றுக் கிழமை.

     காலை 7.00 மணி. கரந்தையில் காத்திருந்தது அந்த வேன். இராகவேந்திரா வேன்.

      முனைவர் ஹரணி, முனைவர் பா.ஜம்புலிங்கம், குடந்தையூர் சரவணன் மற்றும் அவரது அருமை மகன், கும்பகோணம் திருநீலக்குடி புலவர் திரு உலகநாதன் மற்றும் அவரது நண்பர், கரந்தை சரவணன் மற்றும் அவரது அன்பு மகன், நான் மற்றும் எனது குடும்பத்தினர், உறவினர்கள் என 15 பேர் வேனில் புறப்பட்டோம்.

10 அக்டோபர் 2015

வென்றோரை வாழ்த்துவோம்


   

  நண்பர்களே, தமிழ்கூறு நல்லுலகே ஆவலுடன் எதிர்பார்த்த, ஐவகைப் போட்டிகளுக்கான முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்று விட்டனர்.

     வெற்றியாளர்களோடு, நடுவர்களாய் திறம்படச் செயலாற்றிய, நமது பெருமைமிகு பதிவர்களின் பெயர்களும் வெளி வந்திருக்கின்றன.

08 அக்டோபர் 2015

புதுமைகள் படைக்கும் புதுகை



நண்பர்களே, இன்னும் இரண்டே, இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன.

புதுகை வலைப் பதிவர் சந்திப்பிற்கு.

இவ்வாண்டு சந்திப்பில்தான் எத்தனை எத்தனை புதுமைகள்.

04 அக்டோபர் 2015

புதுகையில் ஓர் அரை நாள்




தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன் கீர்த்தி
தாழ்வதில்லை, தமிழ்நாடு தமிழ் மக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை.
                                     பாவேந்தர் பாரதிதாசன்

    நண்பர்களே, எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக் கிழமையன்று, புதுகையில், மையம் கொள்ளவிருக்கும், பதிவர் சந்திப்புத் திருவிழா என்னும் புயலானது, அண்மை நாட்களாக, உலகு முழுவதுமே மெல்ல மெல்ல, தன் அதிர்வலைகளைப் பரப்பி வருகின்றது.

     இணையம் என்னும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ஒவ்வொரு, தமிழ் வலைப் பூவுமே, புதுகை புதுகை என புதுகையினைத்தான், தன் நறுமணத்துடன் இணைத்து, தமிழ் மணமாய், வான் வெளியெங்கும் பரப்பி வருகின்றது.

02 அக்டோபர் 2015

வாருங்கள், புதுகையில் சங்கமிப்போம்



கூடுங்கள் பதிவர்களே, அனைவருமே ஒன்றாய் – நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே.
                                  புலவர் சா.இராமாநுசம்

    ஒரு திருமண விழா என்றால், இரு குடும்பத்தினரும், மணமக்களின் நண்பர்களும் உற்சாகம் பெறுவர். ஓடியாடி உழைப்பர்.

     ஓரு ஊரில் ஒரு கட்சியின் கூட்டம் என்றால், அந்த ஊரில் மட்டும், அன்று மட்டும் பரபரப்பு காணப்படும்.

     கட்சியின் மாநாடு என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அக் கட்சியைச் சார்ந்த கட்சிக்காரர்கள் மட்டும் விறு விறுப்புடன் காணப்படுவர்.

     சட்ட மன்றத் தேர்தல் என்றால் தமிழகம் மட்டும் பரபரக்கும்.

     நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்தியா மட்டும் பரபரக்கும். மற்ற நாடுகளோ அமைதியாக உற்று நோக்கும்.

28 செப்டம்பர் 2015

துர்கா தேவி


    

ஆண்டு 1928, டிசம்பர் 17. நேரம் காலை 10.00 மணி. லாகூர்.

     காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார், அந்த ஆங்கிலேய அதிகாரி.

     காவல் நிலையத்திற்கு அருகில் நின்று, நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல் நிலையத்தை நெருங்குகிறார்கள்

     மொட்டை அடித்து மீசையினையும் மழித்து, அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.

24 செப்டம்பர் 2015

இச்சி மரம் சொன்ன கதை



வணக்கம் நண்பரே. இறந்து இரண்டு தினங்களாகிப்போன, தங்களுடன் பேசலாமா, கூடாதா எனத் தெரியவில்லை.ஆனாலும் பேசிப் பார்க்கலாம் அல்லது இப்படியுமாய் எழுதியும், வணக்கம் சொல்லியும் மகிழலாம் என்றிருந்த, நீண்டு போன, பொழுதுகளின் மதியம் ஒன்றில், தோன்றி மறைந்த யோசனையின் படியாய், தங்களுக்கு எழுதுகிறேன் அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

20 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 10


தாய் மண்ணே வணக்கம்


பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.

       சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.

     காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.

17 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 9


மறு ஜென்மம்



காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.

       ஓர் மனித உடல்.

       பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.