20 நவம்பர் 2015

நம்ப முடியாத உண்மைகள்



   அது ஒரு அடர்ந்த காடு. காட்டின் மரங்களுக்கிடையே நுழைந்து மெல்ல, மெல்ல முன்னேறுகிறது அப்படை. குதிரைப் படை, காலாட் படை. மெல்ல மெல்ல புதர்களையும், சிறு சிறு செடி கொடிகளையும் மிதித்து நசுக்கிய வண்ணம், அந்தப் படை முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   நீண்ட தூரம் நடந்த களைப்பு போர் வீரர்களின் முகங்களில் தெரிகிறது. அவர்களுடைய ஆயுதங்கள், உடைகளில் சொருகப் பட்டிருக்கின்றன.

    படைத் தலைவன் எச்சரிக்கையோடு, விழிகளால், காட்டினை சல்லடை போட்டுச் சளித்த வண்ணம், முன்னே செல்கின்றான்.

   திடீரென்று குறுக்கே ஓடுகிறது, ஒரு பூனை.


   அடுத்த நொடி, படைத் தலைவன் தன் கைகளை உயர்த்திப் படைகளை நிறுத்துகிறான்.

பூனை

   ஒற்றைச் சொல், மெதுவாக, மிக மெதுவாக அவன் நாவில் இருந்து வெளிப் படுகிறது.

பூனை, பூனை, பூனை, பூனை, பூனை

   படைத் தலைவன் மெதுவாகத்தான் கூறினான். ஆயினும் அந்த ஒற்றைச் சொல், மந்திரம் போல் படை முழுவதும் பரவுகிறது.

   நடந்து நடந்து களைத்துப் போயிருந்த வீரர்களின் உடல்களில் ஒரு மாற்றம். சோம்பல் முன்றிலும் நீங்கி, சண்டைக்குத் தயாராகிறார்கள்.

பூனை, பூனை, பூனை, பூனை, பூனை

    உடைகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆயுதங்கள், கைகளில், போருக்குத் தயாராய்.

     நண்பர்களே, ஒரு பூனையைக் கண்டு ஒரு பெரும் படையே, போருக்கு ஆயத்தமாவது வியப்பாக இருக்கிறது அல்லவா.

     காரணம் இருக்கிறது.

     பூனைகள் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே வாழும் தன்மையுடையவை. எனவே ஒரு பூனை குறுக்கே செல்கிறதென்றால், அருகில், மக்களின் குடியிருப்புகள் இருக்கின்றன என்று பொருள்.

     அங்கு குடியிருப்பவர்களுக்குத் தங்களை நெருங்கும் படை, தங்களின் அரசருடையதா? அல்லது எதிரி நாட்டு அரசருடையதா? என்பது தெரியாது அல்லவா? எனவே தங்களை நெருங்கும் படைகளை, அக் குடியிருப்பு வாசிகள் மறைந்திருந்து தாக்கவும் கூடும்.

     எனவே குடியிருப்புப் பகுதிகளை நெருங்கும் படை வீரர்கள், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது அவசியம்.

     பூனையானது மக்களின் குடியிருப்புப் பகுதிகளை உணர்த்தும் ஒரு கருவியாகத்தான், பண்டைய நாட்களில், படை வீரர்களால் பார்க்கப் பட்டது.

      ஆண்டுகள் செல்லச் செல்ல, பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்ற எண்ணம் படை வீரர்களின் ம்னதில் பதியத் தொடங்கியது. இந்த எண்ணம் மெல்ல, மெல்லப் பரவி, பொது மக்களும் பூனையினை ஆபத்தின் அறிகுறியாக, அபசகுனத்தின் தூதுவனாகப் பார்க்கத் தொடங்கினர்.

     இன்று மன்னன் இல்லை. போருக்கு குதிரையின் மேல் அமர்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

     ஆனால் பூனையின் பயம் மட்டும் தொடர்கிறது.

     பூனை அபசகுனத்தின் அறிகுறி என்றும் ஒரு மூட நம்பிக்கை, ஆழமாக, வெகு ஆழமாக, மக்களின் மனதில் பதிந்து போனதுதான் வேதனை.

---
     வளர்ச்சி என்னும் பெயரில் காடுகளை அழிப்பது நமக்குப் பொழுது போக்கு. மரம் வளர்ப்போம் என்று சொல்லிச் சொல்லி, சிறு சிறு செடிகளை நடுவோம், ஆனால் அடுத்த நாளே மறந்து போவோம். நீர் ஊற்ற மாட்டோம், பேணிக் காக்க மாட்டோம்.

     ஜப்பான் நாடு காடுகளே இல்லாத நாடு. ஜப்பானியர்களுக்கு நெடுங்காலமாகவே, நமது நாட்டில் ஒரு காடு கூட இல்லையே என்னும் கவலை உண்டு.

     காடுதான் இல்லையே தவிர, குப்பைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தன. யோசித்தார்கள். ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

      இதுவரை இல்லாத காட்டை உருவாக்குவது என்று முடிவு செய்து செயலில் இறங்கினார்கள்.

      குப்பைகளை எல்லாம் கடலில் கொட்டிக், கொட்டி செயற்கையாய் ஒரூ தீவினையே உருவாக்கினார்கள். குப்பைகளின் தீவில், மண்ணை நிரப்பினார்கள். சிறு சிறு தாவரங்களை நட்டார்கள். செடிகளை மரங்களாய் வளர்த்தார்கள்.

     செயற்கையாய் ஒரு காடு. 88 ஹெக்டேர் பரப்பளவு. ஒன்பது ஆயிரம் மரங்கள்.

     அடுத்த ஆண்டு, 2016 இல் இக்காட்டின் திறப்பு விழா.

     நம்ப முடிகிறதா, ஆனாலும் உண்மை.

---

    

கேரள மாநிலத்தில், மலப்புரம் மாவட்டத்தில், கொடிஞ்சி என்னும் சிற்றூர்.

     இச்சிறு கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 13 ஆயிரம்தான்.

     இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இவர்களுள் 270 பேர் இரட்டையர்கள்.

     இக்கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் இரட்டையர்கள், இரட்டையர்கள்.

      இதற்கான காரணம் மட்டும், இதுநாள் வரை எந்த விஞ்ஞானிக்கும் புரியவில்லை.

---

     ஆண்டு 1989. அமெரிக்காவின் ஒக்லஹாமா.

     74 வயது நிரம்பிய பில்லி டிப்டனின் மரணம், அவர் வசித்து வந்த தெருவினையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

    பில்லிக்கு குழந்தைகள் இல்லை. எனவே அவரும், அவரது மனைவியும் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    பில்லியின் மனைவி, தனது  கணவர் இறந்த சோகத்தில் மூழ்கியிருக்க, குழந்தைகளோ, தங்களது தந்தையின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி, அவ்வூர் மக்களையேக் கண் கலங்க வைத்தனர்.

     இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தன. பில்லியின் உடலினை வீட்டில் இருந்து கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு சென்றாக வேண்டும்.

    அதற்கு முன் பில்லிக்கு புதிய உடைகளை உடுத்தியாக வேண்டும்.

     பில்லி அணிந்திருந்த பழைய உடைகளை அகற்றியவர்கள், தாங்கள் கண்ட காட்சியில், பேச்சு மூச்சின்றி உறைந்துதான் போனார்கள்.

    பல நிமிடங்கள் யாராலும் பேசக் கூட முடியவில்லை.

    செய்தி மெல்ல, மெல்லப் பரவ அந்த ஊரே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

    காரணம் பில்லி ஆணே அல்ல. நூறு சதவிகிதம் முழுமையான வளர்ச்சி அடைந்த ஒரு பெண்.

    

ஒரு பெண், ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 73 வருடங்கள் எதற்காக, ஆணாக நடிக்க வேண்டும்.

     இன்று வரை யாருக்கும் தெரியாது.

---

     கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகளாக அழியாமல், நிலைத்து நின்று, இன்றும் வாழும் ஒரு உயிரினம் எது தெரியுமா?

     குளிர் மெல்ல மெல்ல உயர்ந்து, நீர் நிலைகள் எல்லாம் பனியாக உறைந்தாலும் சரி, வெயில் மெல்ல மெல்ல உச்சத்தைத் தொட்டு, தனலாய் தகித்தாலும் சரி, இந்த உயிரினம் தாக்குப் பிடிக்கும்.

     ஒரு சொட்டு நீர் அருந்தாமல், ஒரு சிறு துண்டு உணவு கூட உண்ணாமல், ஒரு மாதம் வரை இந்த உயிரினம், உயிர் வாழும்.

     தலையையே வெட்டித் துண்டாக்கினாலும், முண்டமாய் ஒரு வாரம் வரை உயிர் வாழும்.

      நமக்கெல்லாம் வாயில் மட்டும்தான் பல். இதற்கு வயிற்றிலும் பல் உண்டு. உண்ட உணவை அரைத்துச் செரிக்க வைக்க.

     ஒரு முறை, தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும், இந்தப் பெண் இனம், ஒரு ஆண் இனத்துடன் உடலுறவு கொண்டால் போதும். ஆமாம் நண்பர்களே, ஒரே ஒரு முறை போதும். அதன் பிறகு, இந்தப் பெண் இனம், தன் வாழ்நாள் முழுதும் கர்ப்பம் தரித்துக் கொண்டே இருக்கும்.

வியப்பாக இருக்கிறது அல்லவா
நம்ப முடியவில்லை அல்லவா
ஆனாலும் உண்மை
இந்த உயிரினம் எது தெரியுமா?
கரப்பான் பூச்சி.
---

     நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. என்னடா இவன், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத, நம்புவதற்கும் இயலாத செய்திகளாக, சொல்லிக் கொண்டே செல்கிறானே என்ற உங்களின் சிந்தனையோட்டம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

     நான் மேலே குறிப்பிட்ட செய்திகள் அனைத்தையும் ஒரு நூலில் படித்தேன். என்ன ஒரு நூலிலா? என நீங்கள் வியப்பதும் தெரிகிறது. ஆம், ஒரே நூலில். அந்த நூலில் பக்கத்துக்குப் பக்கம், இதுபோன்ற செய்திகள்தான். நம்புவதற்குக் கடினமானவை. ஆனாலும் உண்மையானவை.


நம்ப முடியாத உண்மைகள்

நூலின் பெயரே இதுதான்.
இதனை எழுதியர் யார் தெரியுமா?
நமது நண்பர்தான்.
என்னும்
வலைப் பூவின் பதிவர்


நண்பர்  எஸ்.பி. செந்தில் குமார்.

     புதுகையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில்தான், நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன்.

     புத்தகத்தின் தலைப்பினைப் போலவே, இவரையும் முதன் முதலாகப் பார்த்த பொழுது என்னால் நம்பத்தான் முடியவில்லை.

அவரா, இவர்
நம்பத்தான் முடியவில்லை.

  

கல்லூரி செல்லும் மாணவரைப் போல, தோளில் பையினைச் சுமந்தபடி, மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தார்.

    சமூகவியலும், இதழியலும் பயின்றவர். பயணித்துக் கொண்டே இருப்பவர். பயணக் கட்டுரைகளை யாத்ரிகன் என்னும் பெயரில் எழுதிக் கொண்டே இருப்பவர். கலா தேவி என்னும் பெயரிலும் கட்டுரைகளைப் படைப்பவர்.

     சிறந்த புகைப்படக் கலைஞர்.

     தினத் தந்தி நாளிதழின் வெள்ளி மலரில் இவர் எழுதிய சித்தர்களைப் பற்றியத் தொடரான, சித்தர் அற்புதம் தொடரினைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

    ஹாலிடே நியூஸ், அக்ரி டாக்டர் ஆகிய மாத இதழ்களின் இணை ஆசிரியர்.

    புதுகையில் முதன் முதலாய் சந்தித்த போது, கரம் பற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

    இவரது அயரா, தளரா உழைப்பினைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    நண்பர்களே, நான் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப் பூவில் எழுதி வருகின்றேன். முதலில் மாதம் ஒரு பதிவு, தற்சமயம் வாரம் ஒரு பதிவு.

    வாரத்திற்கு ஒரு பதிவு எழுதவே, எனக்கு மூச்சுத் திணறிப் போகிறது.

     ஆனால் இவரோ, எழுதி, எழுதி, அசராமல் எழுதி, எழுதி மலைபோல் குவித்து வருகிறார்.

     பாராட்ட வார்த்தைகளே இல்லை.

     2003 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் தொடங்கி, நாள்தோறும், ஒரு புதுப் புதுச் செய்திகளை எழுதி வருகிறார்.

      இன்று வரை எழுதி இருக்கிறார். இனியும் எழுதுவார், என்றென்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்.

தினம் ஒரு தகவல்
என்னும் தலைப்பில், இவரது செய்திகள், தினம் தினம் தினத் தந்தி நாளிதழினை அலங்கரித்து வருகின்றன.

     நினைத்துப் பார்க்கிறேன்.

     2003 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் என்றால், இதுவரை, இன்று வரை 4500 செய்திகளுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.

      நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.

      ஆனாலும் ஒன்றுமே அறியாத சிறு குழந்தை போல் பேசுகிறார், சிரிக்கிறார்.

       தங்களைச் சந்தித்ததில், உரையாடியதில், நண்பரென்னும் உறவாய் அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே.


எழுதுங்கள், எழுதுங்கள்
மலை மலையாய்
எழுதிக் குவியுங்கள்.


68 கருத்துகள்:

  1. திரு எஸ்.பி.செந்தில்குமார் அவர்களை புதுக்கோட்டை சந்திப்பில் சந்தித்தேன். அவரது எழுத்துக்களை நான் படித்துவருகிறேன்.. அவரது வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான செய்திகளைக் காணமுடியும். அவர் ஒரு செய்திக்களஞ்சியம். அவரது நூலைப் பற்றிய பகிர்வு, தங்கள் பாணியில், மிக அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்தித்ததும் தங்களுடன் உரையாடியதும் மிக்க மகிழ்ச்சி அய்யா!

      நீக்கு
  2. எஸ்.பி.செந்தில்குமார் சகோ பற்றியும் அவருடைய நூலைப்பற்றியும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அண்ணா. அவருக்கு வாழ்த்துகள்! ஆமாமா தினம் ஒரு செய்தி இத்தனை வருடங்களாய்!!! பெரிய விசயமல்லவா அண்ணா!!

    இது போன்ற நம்ப முடியாத பல உண்மைகளைச் சொல்லும் புத்தகங்கள் வகை வகையாக வைத்திருக்கிறான் என் மகன்..gruesome facts, weird but true facts, etc etc :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியதற்கும் நன்றி சகோ!

      நீக்கு
  3. படிக்கத் தூண்டும் அருமையான செய்திகள் !
    எஸ்.பி.செந்தில்குமார் அவர்களின் சாதனை தொடர வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. அவரின் பணிவு இன்னும் பல உச்சங்களை தொடர வைக்கும்...

    இனிய நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..! அருமை..! அருமை..! நண்பரே!
    நான் எழுதியதைவிட உங்கள் எழுத்துக்கள் வசீகரமாய் இருக்கிறது. எனது தகவல்களை உங்கள் எழுத்தில் கண்டது மகிழ்ச்சி. தங்கள் எழுத்தின் மீது எப்போதும் மரியாதைக் கொண்டவன் நான். எனது 'நம்பமுடியாத உண்மைகள்' நூலை அற்புதமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
    வலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததும், தங்களின் நூல் வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுகள். தங்களின் நட்பு கிடைக்கப் பெற்றது எனது பாக்கியம்.
    நன்றியுடனும் நட்புடனும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உழைப்பு அனைவரையும் மலைக்க வைக்கும் உழைப்பு நண்பரே
      தங்களை நண்பராய் அடைந்ததில் பெருமகிழ்வு கொள்கின்றேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. எத்தனை அழகான பதிவு?வாசிக்கத்தூண்டும் வரிகள்.ஆச்சர்யமான தகவல்கள்...இன்றே அறிந்தேன் நண்பரைப் பற்றி...அறிமுகப்படுத்திய உங்களுக்கும்,நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. செந்தில்குமாரின் எழுத்துக்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். திறமும் சிந்தனையும் மிகுந்த இளைஞர். மேலும் முன்னேற வாழ்த்துக்கள்! அவரை உரிய முறையில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  8. வணக்கம் நண்பரே..
    திரு. எஸ்.பி.செந்தில்குமார் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொஞசம் அறிவேன் தங்களால் இன்றி அரிய விடயங்களும் அறிந்தேன் நன்றி
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  9. என்ன இது ஐயா ஒரு வரலாற்றுச் செய்தியைத்தானே ஆழ்ந்து அழகாய்ப் பகிர்வார்... இன்று புதுமையாய் பகிர்ந்திருக்கிறாரே என்று நினைத்தேன்... பிறகுதான் தெரிந்தது இது கூட்டாஞ்சோறு என்று... செந்தில்குமார் சாரை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்... அருமையாக எழுதுகிறார்... நல்ல விஷயங்களை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து கூட்டாஞ்சோறு உண்ண வாருங்கள். நானும் தொடர்கிறேன்.

      நீக்கு
  10. வணக்கம் நண்பரே! அசரவைக்கும் செய்திகளை தருபவர்தான் கூட்டாஞ்சோறு நண்பர்! அவர் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும்! வழங்கிய உங்களுக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. அவசியம் வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்து விட்டேன்.

    நண்பர் செந்தில் குமாருக்கு வாழ்த்ருகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது புத்தகத்தை வாங்கும் பட்டியலில் சேர்த்து, வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  12. புத்தகத்தின் விலையைச் சொல்ல விட்டு விட்டீர்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      இது வண்ணப் புத்தகம், அனைத்து தகவல்களும் படங்களுடன் கூடியது. மொத்தம் 288 பக்கங்கள். விலை ரூ.150

      நீக்கு
    2. நன்றி நண்பரே.. வாங்கி விடுவேன்.

      நீக்கு
  13. படிக்க வேண்டும் சகோ,
    வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான பதிவு. திரு. செந்தில்குமார் அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நண்பர் செந்திலின் வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்! பிரம்மிப்பு ஊட்டும் எழுத்துக்கு சொந்தக்காரர். விரைவில் அவரது நூலை வாங்கி வாசிக்க வேண்டும். சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்கும் நூல் வாங்கும் ஆர்வத்திற்கும் நன்றி நண்பரே! தங்கள் விமர்சனத்தையும் எதிர்நோக்குகிறேன்.

      நீக்கு
  16. வணக்கம்..ஒரு துப்பறியும் கதை போல் விவரித்து, கடைசியில் மிகச்சரியாக முடித்த விதம் மிக அருமை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை வலைப்பதிவர் சந்திப்பில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  17. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. நானும் இந்த நூலினைப் படித்து வருவதால், எனது கருத்தினை, படித்து முடிந்தவுடன் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன் நண்பரே!

      நீக்கு
  18. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விட வேறு வேலை என்ன இருக்கிறது ஐயா
      அவசியம் செய்கிறேன்

      நீக்கு
  19. என்னடா இது புதிய புதிய வியப்பூட்டும் செய்திகளை இப்படி எடுத்து விடுகிறாரே சரி ஒரு கதம்பப் பதிவாகத் தருகிறார் போலும் என்று நினைத்துத் தொடர்ந்தால், நம் நண்பர் செந்தில் அவர்களின் நூலறிமுகம்!!!

    உங்களின் எழுத்தில் உயிர்த்துடிப்போடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நண்பரின் நூல்.

    உங்களைப் போன்ற எழுத்தாளுமைகள், வளரும் தமிழ் படைப்பாளிகளின் ஆதர்சங்கள்.


    தொடருங்கள் தொடர்கிறேன்.

    த ம

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள அய்யா,

    ‘நம்மமுடியாத உண்மைகள்’ வலைப்பதிவர் விழாவில் நானும் ஆசிரியரின் கையொப்பத்துடன் வாங்கி வந்தேன்.... படிக்க ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் படிக்கிறேன்.

    நன்றி.

    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் படியுங்கள் ஐயா
      எழுத்துத் திறமையோடு உழைப்பும் வெளிப்படும் நூல்
      நன்றி ஐயா

      நீக்கு
  21. ஆஹா! என்ன அருமையான விமர்சனம்! அழகான நடை! அழகு மிளிரும் தமிழ்! துள்ளலோடும், உயிர்ப்போடும் ஒரு நூல்அறிமுகம் இப்படிச் செய்யப்பட்டால் வாசிக்கத் தோன்றாதா என்ன? நண்பர் செந்தில்குமாரின் புத்தகத்தை நாங்களும் வாங்கியுள்ளோம். வாசித்தும் கொண்டிருக்கின்றோம். நாங்கள் இருவர் அல்லவா. வாசித்து முடிக்க வேண்டும்....என்ன வியப்பூட்டும் தகவல்கள் அதில்! அருமையான நூல். நண்பருக்கும் வாழ்த்துகள். இத்தனை அழகாக விமரிசனம் செய்ததற்குத் தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தில் குமார்அவர்கள் போற்றுதலுக்கு உரியவர் நண்பரே
      நன்றி

      நீக்கு
  22. ஆம் மலைப்பாக தான் இருக்கிறது.. நல்ல முன்மாதிரி. வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    ஐயா.

    அறியாத தகவல் ஐயா அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் .ஏனைய தகவலும் வெகு சிறப்பு ஐயா. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.த.ம12
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொங்ர பதிவில் தாங்களும்
      நண்பர் கில்லர்ஜி அவர்களின்அன்பு வலையில் சிக்காதவர் யார் இருக்கிறார்கள்
      நன்றி நண்பரே

      நீக்கு
  24. பூனை,அடுத்து ஜப்பான்,இரட்டயர்கள் என்ன செய்தி பிட்டு பிட்டா வருதேன்னு பார்த்தேன் பிறகுதான் அங்கு சகோ செந்தில்தெரிந்தார்
    வலைப்பதிவர் விழாவில் வரும் நூல்களை கையொப்பம்இட்டு வாங்கிக்கொண்டிருந்தேன் சகோதனது நூல்களைக் கொடுத்துவிட்டு கயொப்பமும்இட்டுச் சென்றபிறகுதான் எனக்கு எங்கோ பார்த்தது போல்
    இருக்கிறதே என்றுசகோவிடமே சென்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பரிசு பெற்றதற்கு வாழ்த்துகளையும்
    தெரிவித்துவிட்டு வந்தேன். வாசிக்கத்தூண்டும் நூல் அறிமுகம் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  25. பதிவு பல்சுவையாக தொடர்கின்றதே என்று இறுதிவரை வந்தால் !செந்தில் சாரின் நூல் பற்றிய எண்ணப்பார்வை .அவரின் தளத்தினையும் நேரம் கிடைக்கும் போது தொடர்பவன்.இன்னும் பல நூல் அச்சில் வர செந்தில்சாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. அதிர்ச்சியும் சுவையும் கலந்த தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். நன்றி...உடுவை

    பதிலளிநீக்கு
  27. Great writer,greatest news,wonderfull presentation of both by ever green ,shining Mr.Jayakumar.
    welldone.

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    எழுதுபவர் யார் என்று அறியாமல் நாள்தோறும் தினத் தந்தி நாளிதழில் தினம் ஒரு தகவல் படித்து வந்தவன் நான். ஆனால் நண்பர் செந்தில்குமார் அவர்களை தங்களுடன் சேர்ந்து புதுகையில் சந்தித்து அறிமுகம் பெற்ற பிறகு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு தகவல் வாசிக்கும் பொழுது நண்பருடைய முகம் மனக் கண்ணில் தோன்றுகிறது என்பதை இங்கு மகிழ்வுடன் பதிவிட விரும்புகிறேன். தாங்கள் செய்த நூல் அறிமுகம் அருமை.

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    எழுதுபவர் யார் என்று அறியாமல் நாள்தோறும் தினத் தந்தி நாளிதழில் தினம் ஒரு தகவல் படித்து வந்தவன் நான். ஆனால் நண்பர் செந்தில்குமார் அவர்களை தங்களுடன் சேர்ந்து புதுகையில் சந்தித்து அறிமுகம் பெற்ற பிறகு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு தகவல் வாசிக்கும் பொழுது நண்பருடைய முகம் மனக் கண்ணில் தோன்றுகிறது என்பதை இங்கு மகிழ்வுடன் பதிவிட விரும்புகிறேன். தாங்கள் செய்த நூல் அறிமுகம் அருமை.

    பதிலளிநீக்கு
  30. நூல் அறிமுகம் மிக அருமை
    நூலாசிரியருக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  31. அடடே...வியப்பு..நிச்சயம் புத்தகத்தை வாங்கிவிடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் !

    ஒரு நல்லவரை வல்லவரை இன்னொரு நல்லவரும் வல்லவரும் ஆகிய தாங்கள் அறிமுகம் செய்ததையிட்டு மகிழ்கிறேன்
    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும் என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது தங்கள் பதிவின் மூலம் நன்றி !

    பூனையினைக் கண்டு பின்வாங்கிய பல பயணங்கள் நன்மையிலும் முடிந்திருக்கின்றன ...! எல்லாம் நம்ம நேரம் இல்லையா !
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  33. நூல் அறிமுகம் மிக மிக அருமை.

    வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் வாங்கி விடுவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அருமையான புத்தகம். அழகான அறிமுகம்.

    வாழ்த்துக்கள் கரந்தையாருக்கும், மதுரையாருக்கும்...

    பதிலளிநீக்கு
  35. அன்று ஒரு பூனை சில நரிக்குறவர்களின் குறுக்கே சென்றது.ஆனால் அந்நிகழ்வு அதற்கே அபசகுனமாயிற்று!

    பதிலளிநீக்கு
  36. நல்லதோர் நூல் அறிமுகம். வாசிக்கும் ஆவல் எனக்குள்ளும். இணையத்தின் மூலம் வாங்க முடியுமா எனும் தகவலையும் சொன்னால் நல்லது.

    செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  37. மிக மிக அரிய தகவல்களைச் சொல்லி
    நம்மை வியக்க வைத்துப் பின்
    இதை தொகுத்து அளித்தவர் நம்மவர்
    எனச் சொல்லி மகிழவைத்த விதம்
    அற்புதம். மிக மகிழ்ச்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு