27 டிசம்பர் 2013

பொன்னியின் செல்வன்

நிலமுள்ளளவும் நீருள்ளளவும்
கலை உள்ளளவும் நிறை பெற்றோங்கும்
இறை உறை கோயிலை எழுப்பிய மன்னன்
நிறைபுகழ் ஓங்க வாழ்த்துவம் இனிதே
-          பாவலர் பாலசுந்தரம்

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த பதிமூன்று வருடங்களாக, தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, தஞ்சைப் பெரியக் கோயில் வழியாகத்தான் செல்கிறேன், வருகிறேன்.

20 டிசம்பர் 2013

மலாலா - கல்வியின் தேவதை

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டக் குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற
     விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில்ஆணுக் கிங்கேபெண்
     இளைப்பில்லை காணென்று கும்மியடி
                                  மகாகவி பாரதி

     குஷால் பள்ளி. 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் செவ்வாய்க் கிழமை 9 ஆம் நாள். நேரம் பிற்பகல் 12.00 மணி. பள்ளியின் மணி ஒலிக்கிறது. தேர்வு முடிந்து மணவ, மாணவியர் வெளியே வருகின்றனர். பள்ளிப் பேரூந்து காத்திருக்கிறது. உண்மையிலேயே அது பேரூந்து அல்ல. டயோட்டோ வாகனம். வெள்ளை நிறம், பின்புறத்தில் இருபுறமும் இரண்டு நீண்ட இருக்கைகள். நடுவிலும் ஒரு இருக்கை.

13 டிசம்பர் 2013

மண்டேலா ஓய்வெடுக்கட்டும்

If you want to make peace with your enemy,
You have to work with your enemy.
Then he becomes your partner.
-          Nelson Mandela

     என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகப் பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற இலட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான்.

07 டிசம்பர் 2013

வாழ்வின் விளிம்பில்

தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னங்  சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்று நினைத் தாயோ?
-          மகாகவி பாரதியார்

     நண்பர்களே, நரை கூடித்தான் போய்விட்டது இம்மனிதருக்கு. மீசையும், தலைமுடியும் வெண்ணிறமாய், அவரது மனம் போலவே காட்சியளிக்கின்றன. சின்னஞ்சிறு கதைகள் பல உண்டு இவரிடத்தில். இவரது பேச்சினைப் போலவே, இவரது எழுத்துக்களும் காந்தமாய் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை.

ஓடி விளையாடு பாப்பா – நீ
    ஓய்ந்திருக்க லாபாது பாப்பா
என்று பாடுவாரே மகாகவி பாரதி, இவ்வரிகள் பாப்பாவிற்கு மட்டுமல்ல இந்தத் தாத்தாவிற்கும் பொருந்தும். ஓய்வறியா உழைப்பிற்குச் சொந்தக்காரர் இவர்.

     ஆம் நண்பர்களே, இம்மனிதருக்கு வயது வெறும் எழுபத்து ஐந்துதான். உடலின் வயது என்று சொல்வதைவிட, அனுபவத்தின் வயது எழுபத்து ஐந்து என்று சொன்னால், மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆண்டுதோறும் இவரது உள்ளத்தின் வயது மட்டும் குறைந்து கொண்டே போகிறது.

     நண்பர்களே, இவர் யார் என்று ஊகித்துவிட்டீர்கள் அல்லவா? ஆம் தங்களின் ஊகம் சரிதான். நமது ஜி.எம்.பி., ஐயா அவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

 ஊன்றுகோலைப் பற்ற வேண்டிய வயதில், பல வேடிக்கை மனிதரைப் போல் வீழாமல், நெஞ்சம் நிமிர்த்தி, விசாலப் பார்வையோடும், சுவைமிகு சொல்லோடும் இவர் வலம் வருவதற்கு, இவரது கைகள் எழுதுகோலைப் பற்றி இருப்பதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். சரிதானே நண்பர்களே.

      வாழ்வின் விளிம்பில். ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின், சிறுகதைத் தொகுப்பு. ஆனால் இவற்றில் இருப்பதெல்லாம் கதைகள் அல்ல, வாழ்வியல் யதார்த்தங்கள்.


    

மனித வாழ்க்கையே விசித்திரமானது. அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல், வியாதியால் நலிவுற்று, யாரும் உதவ இல்லாமல், அனாதையாய் ஆறுதலற்றுக் கிடக்கும் ஜீவன்களும் வாழத்தான் ஆசைப்படுகின்றன.... இல்லை.... சாவைக் கண்டு பயப்படுகின்றன.

     வாழ்வின் விளிம்பில் என்னும் நூலின் முதற் கதையிலேயே நாம் கரைந்து போய்விடுவோம்.
     ஆலய வழிபாடுகளும், ஆண்டவன் தரிசனமும் மகப்பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால், அந்த பாக்கியம் இல்லாதவர்களே இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை எது என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையும், திருத்த முடியாத குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

     கேள்விகளே பதிலாய்.. என்னும் சிறுகதையில், ஐயா அவர்களின் எழுபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தை நாம் அறியலாம்.

     அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள். யாருக்காவது சேகரனைப் பற்றிய நினைவோ, ஏறி வந்த ஏணி பற்றிய எண்ணமோ இருப்பதில்லை என மனித மனத்தின் சுயநலத்தை, ஏறி வந்த ஏணி என்னும் கதையில் இறக்கி வைக்கிறார்.

     சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தது. இதை செலவு செய்யலாமா, நமக்கு தேவைதான் என்ன.. உடுக்க ஏதோ துணியும், உயிர்வாழ உணவும் போதாதா? தேவைக்கு மேல் செலவு செய்பவன் எங்கோ ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ உருவாக்குகிறான் என்று காந்தி சொன்னதாக படித்த ஞாபகம்.

     வாழ்க்கையில் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை, அனுபவி ராஜா அனுபவி என்னும் கதையில், எதையுமே அனுபவிக்காத ஒருவன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

     இப்படியும் ஒரு கதை என்னும் சிறு கதையில், முன்னொரு காலத்தில், கேரள மண்ணில் நடைமுறையில் இருந்த அவலத்தை, நம் கண் முன்னே நிறுத்துகிறார். படிக்கப் படிக்க நமக்கு மனம் பதறுகிறது. படித்தபின், இதனின்று மீண்டு வர சில நிமிடம் ஆகலாம்.

     கண் தெரியாமல் இருப்பதுபோல், பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்.

     பார்வையும் மௌனமும் என்னும் இக்கதை நம்மையும் மௌனத்தில் ஆழ்த்தும் வல்லமை படைத்தது.
 
ஒரு இனிமையான காலைப் பொழுதில்
ஜி.எம்.பி.,ஐயா, அவரது துணைவியார், ஹரணி அவர்களின் மகன்,  ஹரணி மற்றும் நான்
      நண்பர்களே, சிறுகதை என்னும் வடிவத்திற்குள் அடங்காமல் திமிறும் கதைகள் இவை. கதைகளில் அலங்காரமில்லை, ஆனால் உண்மையின் ஆழமிருக்கிறது.

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க
    உன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
    அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?

எனப்பாடும் பாவேந்தரின் வழி நின்று, பொதுமக்கள் நலம் நாடி, புதுக் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லவும், எழுதவும் ஜி.எம்.பி.,ஐயா அவர்களை வாழ்த்துவோமா நண்பர்களே?

வாழ்த்த வயதில்லை எனத் தயங்க வேண்டாம்,
உயர் குணமும், நல் மனமும்
இருக்கிறது நம்மிடம்
வாழ்த்துவோம் நண்பர்களே,

தொடரட்டும் ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்களின் எழுத்துப் பணி.

நூறாண்டு காலம் வாழ்க

நோய், நொடியில்லாமல் வாழ்க.
-------

மழலை நலம் பெற வேண்டுவோம்

குழல்இனிது யாழ்இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்

     நண்பர்களே, இன்று 7.12.2012 சனிக் கிழமை மாலை, பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு, நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, வருகை தந்தார் ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் திருமிரு புலவர் பன்னீர் செல்வம்.

     புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம். அங்கு பல்லாண்டுகளாக திருவள்ளுவர் ஞான சபை என்னும் அமைப்பினை நிறுவி வள்ளுவத்தின் வாக்கினைப் பரப்பி வருபவர். வள்ளுவரும், வள்ளுவமும் இவரது இரு கண்கள். தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருபவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் கொலுவீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இவரே காரணகர்த்தா.

     தஞ்சைக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தந்தவர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பி, மாலையோடு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தார்.

     நானும், நண்பர் சரவணன் அவர்களும், புலவரை வரவேற்று, திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். மாலை அணிவித்து, இரு கரம் கூப்பியபடி, அகர முதல எழுத்தெல்லாம் என இராகத்துடன் பாடத் தொடங்கினார். பாடப் பாட இவரின் நா தழுதழுக்கிறது.

     நண்பர்களே, நேற்றுதான் இவருக்குப் பெயரன் பிறந்திருக்கிறான். பெயரனை உச்சி முகர்ந்து, குழந்தைபோல், ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டியவர் இவர். ஆனால் கண்களில் கண்ணீர் மழ்க வள்ளுவனை நாடி நிற்கிறார்.

     ஆம் நண்பர்களே, இயற்கையின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது. நேற்று பிறந்த இவரது பெயரனுக்கு ஆசன வாயே இல்லை.

     வள்ளுவத்தை மட்டுமே வாழ்நாள் முழுதும், மந்திரம் போல் முழங்கி வரும் இவரது பெயரன், ஆசன வாய் இல்லாமலேயே பிறந்திருக்கிறான். கடவுள் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறாரே, அது ஏன் நண்பர்களே.

     புதிதாய்ப் பிறந்த பச்சிளங் குழந்தைக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து, ஆசன வாயை உருவாக்க வேண்டுமாம். இன்று காலை முதல் அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தாக வேண்டும்.

     நண்பர்களே, என் பெயரனுக்கு ஏன் இந்த நிலை என்று கேட்டு, இவர் தெய்வத்தை நாடிச் செல்லவில்லை. வள்ளுவனை நாடி வந்திருக்கிறார். இவருக்குத் தெரிந்ததெல்லாம் வள்ளுவரும், வள்ளுவமும் மட்டுமே.



     திருவள்ளுவர் சிலையின் முன் நின்று கைக் கூப்பி, வள்ளுவத்தைப் பாடிக் கொண்டே இருக்கிறார். பார்த்துக் கொண்டிருந்த எங்களின் கண்கள் கலங்குகின்றன.

     நண்பர்களே, வள்ளுவத்தையே, வாழ்வியல் தவமாய் மேற்கொண்டு, குறள் வழி நின்று வாழும், பெரியவர் புலவர் பன்னீர் செல்வம் அவர்களின் பெயரன், குறை நீங்கி நல் வாழ்வு வாழ வாழ்த்துவோமா நண்பர்களே, இறைவனை வேண்டுவோமா நண்பர்களே.


மழலை நல் வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுவோம்.

29 நவம்பர் 2013

இணைந்த இதயங்களின் ஓராயிரம் நன்றிகள்

நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்
இதோ வழிகளை எண்ணுகிறேன்.

பார்வைக்கு அப்பால் உன்னை உணரும்போது
ஆன்மாவின், தெய்வீக அருளின் உச்சியில்
நான் உன்னை நேசிக்கிறேன்.

பாராட்டால் குளிர்வதைப் போல்
நான் உன்னைத் தூய்மையாக நேசிக்கிறேன்

சுவாசம், புன்னகை
கண்ணீர்
வாழ்வின் சகல விஷயங்களோடும்
நான் உன்னை நேசிக்கிறேன்.
-           எலிசபெத் பேரட் பிரவுனிங்

     நண்பர்களே, இருளில் இணைந்த இதயங்களான, வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினரின் திருமண நிகழ்வினை, மனக் கண்ணால் கண்டு, நெஞ்சார வாழ்த்தி, இனம் புரியாத உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு நீங்கள் தவிப்பது எனக்குப் புரிகிறது.

     கருத்துரைகளையே, திருமண அட்சதையாய்த் தூவி, மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்ந்திருக்கும், தங்களின் அன்புள்ளம், உங்களின் ஒவ்வொரு எழுத்திலும் தெளிவாய் தெரிகிறது.

     நண்பர்களே, சுவாமிமலை அம்பாள் சன்னதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய உற்றார், உறவினர்களை விட, வலைப் பூவின் வழியாக, இருளில் ஒளி தேடி இணைந்த உள்ளங்களை, நெகிழ்ந்து வாழ்த்திய நேச மிகு நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.


     உண்மையிலேயே மணமக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். பூமிப் பந்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், நேசமிகு வலைப் பூ உறவுகளின், பாசமிகு வார்த்தைகளில் நனைந்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.

     நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் மணமக்கள் இருவரும், தங்களது நன்றியினைத், தங்களது மகிழ்வினைத் தெரிவித்துள்ளார்கள்.

     ஆம் நண்பர்களே, கடந்த புதன் கிழமை 27.11.2013 பள்ளி முடிந்து, வீடு திரும்பிய பின், கணினி முன் அமர்ந்து, மின்னஞ்சலைப் பார்த்தபோது, மனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்தது. காரணம், மனமகண் வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல் காத்திருந்தது.

We humbly accept greetings from the other bloggers.

      மணமக்களை வாழ்த்திய ஆயிரக்கணக்கான வலைப் பூ உறவுகளுக்கு, மணமக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

     நண்பர்களே, அம்மின்னஞ்சலிலேயே ஒரு பாடல். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகை-யில் இருந்து.

கொடுப்பின் அசனம் கொடுக்க, விடுப்பின்
உயிர் இடையீட்டை விடுக்க, எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க, கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.

     சத்தியமாக எனக்குப் பொருள் விளங்கவில்லை நண்பர்களே. மனம் கூசித்தான் போனது. கண்ணிருந்தும், தாய் மொழியாம் தமிழில் நான்கு வரிகளைப் படித்து பொருள் உணர இயலவில்லையே என்ற இயலாமை.

     அலைபேசியை எடுத்தேன். எனது ஆசிரியர் புலவர் கோ.பாண்டுரங்கன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பாடலைச் சொன்னேன். அடுத்த நொடி, விளக்கம் அருவியாய் கொட்டியது.

     ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதானால், உணவைக் கொடு. ஒன்றை விட்டுவிடுவதானால், உயிரைப் பற்றிய பற்றை விட்டு விடு. ஒருவரை உயர்த்த வேண்டுமென்றால், உன் உறவினருள் ஏழையரைத் தாங்கி உயர்த்து. ஒன்றைக் கெடுப்பதானால், கோபத்தைக் கெடு.

     நண்பர்களே, பாட்டின் பொருள் அறிந்த பிறகு வெற்றிவேல் முருகன் மீதான மதிப்பு மேலே, மேலே உயர்ந்த கொண்டே செல்கிறது.

சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.
-          சாரா கே. போல்டன்

     வாழ்வே போராட்டமாய் மாறிய பிறகும், தமிழை நேசித்து வாழும் உள்ளம் வெற்றிவேல் முருகனுடையது என்பதை அறியும்போது, நெஞ்சம் பெருமையில் விம்முகிறது நண்பர்களே.

     நண்பர்களே, இதோ வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல், தங்களின் நேசமிகு பார்வைக்கு.
-------------------------------
Dear Jeyakumar Sir,

We (Nithya and I) have read your blog post and are honoured to be presented in such a wonderful. We also very humbely accept greetings from the other bloggers. Once again our sincere gratitude to you for positively writing our life history.

Sincere Regards,
Vetrivel Murugan and Nithya.


கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்
உயிர் இடையிட்ட விடுக்க; எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க; கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்!
                                           நான்மணிக்கடிகை - (பாடல்-79)


Vetrivel Murugan Adhimoolam,
Department of Sociology,
The New School for Social Research,
65 fifth avenue,
New York, New York 10003.

Home:

1370 Saint Nicholas avenue,
APT 15M,
New York, NY 10033.

Phone: +1-347-208-6976.

E-mails:

avm124@gmail.com

murua795@newschool.edu

vadhimoolam@lagcc.cuny.edu

vadhimoolam@bmcc.cuny.edu

Skipe ID: vetrivelmurugan

Twitter: avm124

-----------------------------------------

     இதுமட்டுமல்ல நண்பர்களே, 28.11.2013 மாலை 6.30 மணியளவில், அலைபேசி அழைத்தது. மறுமுனையில் வெற்றிவேல் முருகன்.

     சார், உங்களது கட்டுரையினைப் படிக்கக் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையினைப் படித்துக் கருத்துரை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த முறை இரும்புத் தலைக்கு வரும்பொழுது, உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.

     மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன் ஐயா, வரும்பொழுது தெரியப் படுத்துங்கள். அவசியம் வருகிறேன் என்றேன்.

     உங்களோடு பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் போன்ற மனிதர்களின் உணர்வுகள், செயல்பாடுகள் குறித்துப் பேச ஆசைப் படுகின்றேன். நீங்கள் இதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். என் போன்றோரை, இவ்வுலகம், இன்னும் முழுமையாய் புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன் என்றார்.


     நண்பர்களே, இதைவிட வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது. நண்பர் வெற்றிவேல் முருகன், இரும்புத் தலைக்கு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பாடகன் பாடியதற்கு மேலான இன்பம் இருக்கிறது
இருவரும் தெய்வீக அருளால் ஒன்றிணைந்து
இதயம் மாறாதிருத்தல், நெற்றி சுருங்காதிருத்தல்
எல்லா இன்னல்களிலும் அன்பாய் சாகும்வரை இருத்தல்

ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது
பல யுகங்கள் இதயமற்றுத் திரியும் இன்பத்திற்கு ஈடானது
மண்ணுலகில் சொர்க்கம் இருக்குமானால்
அது இதுதான் அது இதுதான்.
-          தாமஸ் மூர்

மணமக்கள் இருவரும்
இன்புற்று இனிது வாழ

வாழ்த்துவோம் நண்பர்களே.

23 நவம்பர் 2013

இருளில் இணைந்த இதயங்கள்

அவனுக்குப் பின்னால் வெளிர்நிறக் கடல்
அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்.

நல்ல நண்பன் கூறினான், நாம் பிரார்த்திக்கலாமா இப்போது?
ஐயோ நட்சத்திரங்களைக் கூட காணவில்லை
வீரனே .... தலைவனே, பேசு. நான் என்ன சொல்லட்டும்
ஏன் பேசுகிறாய்? பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்.

காற்று தொடர்ந்து வீச அவர்கள் பயணம் தொடர்ந்தது
இறுதியில் களைத்த நண்பன் கூறினான்,
ஏன், நானும் என் மாலுமிகளும் இறக்கத்தான் வேண்டுமா?
இந்தக் காற்று தன் வழியை மறந்துவிட்டது, ஏனெனில்
பயங்கரமான இக்கடலில் இருந்து கடவுள் விலகிவிட்டார்
வீரனே, தலைவனே, பேசு இப்போது பேசு
அவன் கூறினான் பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வீரனே தலைவனே ஒரு நல்ல வார்த்தை சொல்
நம் நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது?
பாயும் கத்திபோல வார்த்தைகள் பாய்ந்து வந்தன
பயணம் செல், பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வெளுத்து சோர்ந்த அவன் தன் மேடை ஏறினான்
இருளின் ஊடே பார்த்தான். ஆ... அந்த இரவு
இரவுகளில் எல்லாம் இருண்டது. பிறகு ஓர் ஒளி
வெளிச்சம், வெளிச்சம் இறுதியில் ஒளி தோன்றியது
அது வளர்ந்து நட்சத்திர ஒளியில் கொடி விரிந்தது
அது வளர்ந்து காலத்தின் விடியலாக வெடித்தது

அவன் ஓர் உலகை வென்றான். அவன் உலகிற்கு
மாபெரும் பாடம் சொன்னான்
பயணம் செல். தொடர்ந்து பயணம் செல்.
-          ஜோரூன் மில்லர்

     நண்பர்களே, வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே. மேடு, பள்ளங்கள், சோதனைகள், சாதனைகள், குறுக்கீடுகள், பந்த பாசங்கள், உறவுகள், பிரிவுகள், நட்புகள், நம்பிக்கைத் துரோகங்கள் என அனைத்தையும் கடந்துதானே, வெற்றி கண்டுதானே, நிலை குலையாமல் நாம் பயணிக்கிறோம்.

     பிறப்புண்டேல் இறப்புண்டு என்றனர் நம் முன்னோர். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வினில்தான் எத்தனை எத்தனைப் பயணங்கள், எத்தனை எத்தனை சோதனைகள்.

     நண்பர்களே, நாமும் பல சோதனைகளைச் சந்தித்தவர்கள்தான். சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்றவர்கள்தான். ஆனால் வாழ்வே போராட்டமானால்?

வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது
ஓடைநீர் தனது பளபளப்பான நிலையான அழகை
அசோக மர இலைக்கோ தாமரை மலருக்கோ தராமல் போகாது.

வாழ்க்கை இருண்டது , சிக்கலானது என்றாலும் கலங்காதே
நேரம் நிற்காது. உன் துக்கத்திற்காக தாமதிக்காது.
-             சரோஜினி நாயுடு

     சோதனையினையே மூச்சுக் காற்றாய் சுவாசித்தபோதும், சற்றும் தளராமல் போராடி, வாழ்வில் இணைந்த இரு இதயங்களை, திருமணம் என்னும் உன்னத உறவில் ஒன்றிணைந்த இரு நல் உள்ளங்களை, அவர்களின் திருமண விழாவின்போது, சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தேன் நண்பர்களே.

      நண்பர்களே, இவர்கள் இருவரும் காதலுக்காகப் போராடியவர்கள் அல்ல. பிறந்தது முதல் வாழ்வதற்காகப் போராடி வருபவர்கள். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியினையும் போராடிப் போராடியே கடந்து வருபவர்கள்.

      நண்பர்களே இன்னும் விளங்கவில்லையா? மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே, மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண விழாவின் மூலம் இணைந்த இவ்விருவரும், பிறப்பு முதலே கண் பார்வை அற்றவர்கள்.
 
நண்பர் துரை. நடராசன்
      நண்பர் துரை.நடராசன் அவர்கள், நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடற் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர் தஞ்சையை அடுத்த இரும்புத் தலை என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.

     நண்பர்களே, நண்பர் துரை.நடராசன் அவர்கள், இரும்புத் தலை என்னும் எழிலார்ந்த பூமியின் வளர்ச்சிக்காக, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருபவர். இரும்புத் தலையில் மட்டுமல்ல, அதன் சுற்றுவட்ட கிராமங்களிலும், எதாவது ஒரு வீட்டில் மங்கல நிகழ்ச்சி என்றால் அவர்கள் அழைக்கும் முதல் நபரும்,, ஏதாவது ஒரு சிறு பிரச்சினை என்றால் அதனைத் தீர்க்க அவர்கள் அணுகும் முதல் நபரும் துரை நடராசன் அவர்கள்தான். பள்ளி நேரம் போக, இவர் செலவிடும் நேரம் முழுவதும் ஊருக்காகத்தான்.

      நண்பர் துரை நடராசன் அவர்களுடன், ஆசிரியர் அறையில் பேசிக் கொண்டிருந்த பொழுது, இத்திருமணம் பற்றிக் கூறினார். மணமகள் இவரது மைத்துணரின் மகள். இவர் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தும் திருமணம் இது.

     மணமக்கள் பற்றி இவர் பேசப் பேச, மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு. அதனை எவ்வாறு மொழிப்படுத்துவது என்று தெரியவில்லை. மணமக்களைக் காண வேண்டும், நானும் இத்திருமணத்திற்கு வருகிறேன் என்றேன்.

      கடந்த வியாழக்கிழமை 14.11.2013 அன்று காலை, கும்பகோணம், சுவாமி மலையில், அம்பாள் சன்னதியில் இவர்கள் திருமணம்  எளிமையாய் அரங்கேறியது.

      நண்பர்களே, மணமக்களைப் பார்த்தேன். அமைதி தவழும் மலர்ந்த முகங்கள். குழந்தைபோல் இருவரும் சிரித்த சிரிப்பினைக் காண கண் கோடி வேண்டும்.



போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
    பொன்ன டிக்குப்பல்  லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி  தாக முளைத்த தோர்
     செய்ய  தாமரைத்  தேமலர்  போலாளி
தோற்றி  நின்றனை  பாரத நாட்டிலே
     துன்பம்  நீக்கும்  சுதந்திர  பேரிகை
சாற்றி  வந்தனை, மாதரசே எங்கள்
     சாதி செய்த  தவப்பயன்  வாழி  நீ
என புதுமைப் பெண்ணை வாழ்த்துவாரே மகாகவி பாரதியார், அந்த மகாகவி கண்ட புதுமைப் பெண்ணாகவே மணமகள் நித்யா எனக்குத் தோன்றினார். தனக்குப் பார்வையில்லையே என நித்யா வீட்டின் ஓர் மூலையில் முடங்கிவிடவில்லை. பார்வையற்றவர்களுக்கானப் பள்ளிக்குச் சென்றார். படித்தார். நண்பர்களே ஒரு செய்தி சொல்லட்டுமா?. நித்யா எம்.ஏ., பி.எட்., பட்டம் பயின்ற பட்டதாரி. இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே, நித்யா அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்தானே.



கண்உடையார்  என்பவர் கற்றோர்  முகத்துஇரண்டு
புண்உடையார்  கல்லா தவர்

    கல்வி கற்காதவரின் கண்கள், கண்களே அல்ல புண்கள் என்பார் திருவள்ளுவர். திருவள்ளுவர் வழி நின்று சொல்வதானால், மணமகன் வெற்றிவேல் முருகன் அவர்களும் கண்ணுடையாரே ஆவார். ஆம் நண்பர்களே, கண் இல்லையே என்று கலங்காமல் கல்வி கற்றார். இவர் படித்த படிப்பு என்ன தெரியுமா? எம்.ஏ., எம்.ஃ.பில்., பிஎச்.டி.,. ஆம் நண்பர்களே, ஆம் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர் வெற்றிவேல் முருகன். இவர் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டது எங்கு தெரியுமா? நண்பர்களே, இங்கல்ல, இந்தியாவிலேயே அல்ல, அமெரிக்காவில், நியூயார்க்கில். நம்பமுடியவில்லையா நண்பர்களே, உண்மை. இத்தனைக்கும் இவர் ஒன்றும் வசதிபடைத்த வீட்டில் பிறந்தவர் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பிறகு எப்படி அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்தார் என்று தோன்றுகிறதா? உழைப்பு நண்பர்களே உழைப்பு. ஆர்வத்துடன் படித்து, ஒவ்வொரு நிலையிலும், கல்வி உதவித் தொகையினைப் பெற்றே, நியூயார்க் வரை சென்று வந்துள்ளார். தற்பொழுது, பாட்னா மத்திய பல்கலைக் கழகத்தில், பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் தன்னம்பிக்கை எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா நண்பர்களே.

       வெற்றிவேல் முருகனின் தங்கையின் பெயர் செந்தமிழ்ச் செல்வி. இவர் ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர்களே, விதி, விதி என்று சொல்கிறார்களே, அந்த விதி இவர்கள் குடும்பத்தில் எப்படி முழுமையாக விளையாடியிருக்கிறது தெரியுமா? ஆம் நண்பர்களே செந்தமிழ்ச் செல்வியும் கண் பார்வை அற்றவர். மனந்தளராமல் படித்து ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நல் மனதுக்குச் சொந்தக்காரர் ஒருவரை மணந்து கொண்டு, நல்லறமே இல்லறமாய் வாழ்ந்து வருகிறார்.

       நண்பர்களே, அம்பாள் சன்னதியில், திருமணம் முடிந்து, மணமக்கள் இயல்பாய், சிரித்தபடியே பேச, பேச மனதில் ஓர் ஆயிரம் கேள்விகள் வலம் வந்தபடியே இருந்தன.
     என்ன பாவம் செய்தார்கள் இவர்கள். இயற்கை ஏன் இவர்களிடம், தனது திருவிளையாடலை, தனது கொடூர குணத்தினைக் காட்டியுள்ளது. கருப்பு சிகப்பு என்ற வார்த்தைகளின் வித்தியாசத்தினைக் கூட அறியாதவர்கள் அல்லவா இவர்கள். தாங்கள் என்ன நிறம் என்பது கூட தெரியாதவர்கள் அல்லவா இவர்கள். நிறம் என்ன நிறம், நாம் எப்படியிருக்கிறோம், மனிதன் என்றால் எப்படி இருப்பான், கால் எப்படியிருக்கும், கை எப்படியிருக்கும், முகம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், உண்ணுகின்றோமே உணவு, அது எப்படி இருக்கும், சட்டை என்கிறார்களே, வேட்டி, சேலை என்கிறார்களே அவையெல்லாம் எப்படி இருக்கும், என்பதையே அறியாதவர்கள் அல்லவா இவர்கள்.



      நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை மதங்கள். அவை அனைத்தும் போதிப்பது அன்பு என்ற ஒன்றைத்தானே. மதங்கள் போதிப்பதைப் படித்து அறிந்த பிறகும், அதனைப் பின்பற்றாது, கண்ணிருந்தும் குருடர்களாய் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் சுமந்து, பேரழிவை உண்டாக்கி வாழும் மக்கள் பலரிருக்க, அவர்களைத் தண்டிக்காது, இவர்களை மட்டும் ஒளியற்றவர்களாய் பிறக்க வைத்து, ஏன் தண்டிக்க வேண்டும்?. கண்ணற்ற மனிதர்களைப் படைப்பதற்கும் ஒரு கடவுளா?. இக்கடவுள் முற்றும் உணர்ந்தவரா? அனைத்தும் அறிந்தவரா? மனதில் கேள்விகள் தோன்றுகின்றனவே தவிர, பதில்தான் கண்ணா மூச்சு ஆடிக்கொண்டேயிருக்கிறது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், திருமணம் முடிந்த பிறகு, சுவாமிமலை தேவஸ்தான அலுவலகத்திலே, திருமணப் பதிவேட்டில், மாப்பிள்ளை தன் கையெழுத்தினைப் பதிவு செய்தார் என்று கூறினால் நம்புவீர்களா? எனது இரண்டு கண்களாலும் பார்த்தேன்.

     படிவத்தைக் கொடுத்ததும், தனது வலது கையால், போனாவினைப் பெற்றுக் கொண்டு, கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், கைபிடித்து போனாவின் முனையினை வைக்கச் சொன்னார். பேனாவை குறித்த இடத்தில் வைத்ததும், தனது இடது கை, ஆள் காட்டி விரலையும், நடு விரலையும், அகல விரித்து, பேனாவின் முனையில் சொருகினார்.

     நண்பர்களே, நாமெல்லாம் சிறு வயதில், இரண்டு கோடு நோட்டில் எழுதியிருப்போமே நினைவில் இருக்கிறதா? பக்கம் முழுவதும் இரண்டிரண்டு கோடுகளாக அச்சிடப் பெற்றிருக்கும். நாம் அதன் இரண்டு கோடுகளுக்கும் இடையில், குண்டு குண்டாக எழுதிப் பழகினோமே ஞாபகத்திற்கு வருகிறதா?


     நண்பர்களே, இவரும் அப்படித்தான் கையொப்பமிட்டார். இவரைப் பொறுத்தவரை, நடு விரல் மேல் கோடு, ஆள் காட்டி விரல் கீழுள்ள கோடு. கையெழுத்திட வேண்டிய இடத்தின் எல்லைகளாக, மேலும் கீழும் விரல்கள். விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளிவாகக் கையெழுத்திட்டார். மலைத்துப் போய்விட்டேன் நண்பர்களே, மலைத்துப் போய்விட்டேன்.

          வாழ்வின் எக்காலத்தும் மறக்க இயலா திருமணம் இத் திருமணம்.

     நண்பர்களே, கண்பார்வை அற்றவர்கள் இருவர் இணைந்து, ஒரு புதுவாழ்வினைத் துவக்கியிருக்கிறார்கள். இருவரின் தன்னம்பிக்கையும், தைரியமும், நெஞ்சுரமும் போற்றப்பட வேண்டியவை.

     இருளிலேயே இருந்து வாழப் பழகிவிட்ட, இவ்விருவரின் எதிர்கால வாழ்வு ஒளிமயமானதாக அமைய, மனதார வாழ்த்துவோமா நண்பர்களே.

     இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும் கண்ணே போல் போற்றிப் புரக்க, நெஞ்சார வாழ்த்துவோமா நண்பர்களே.

மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
நாளை வரும் மழலை
இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.