20 டிசம்பர் 2013

மலாலா - கல்வியின் தேவதை

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டக் குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற
     விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில்ஆணுக் கிங்கேபெண்
     இளைப்பில்லை காணென்று கும்மியடி
                                  மகாகவி பாரதி

     குஷால் பள்ளி. 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் செவ்வாய்க் கிழமை 9 ஆம் நாள். நேரம் பிற்பகல் 12.00 மணி. பள்ளியின் மணி ஒலிக்கிறது. தேர்வு முடிந்து மணவ, மாணவியர் வெளியே வருகின்றனர். பள்ளிப் பேரூந்து காத்திருக்கிறது. உண்மையிலேயே அது பேரூந்து அல்ல. டயோட்டோ வாகனம். வெள்ளை நிறம், பின்புறத்தில் இருபுறமும் இரண்டு நீண்ட இருக்கைகள். நடுவிலும் ஒரு இருக்கை.


     இருபது மாணவிகளும், மூன்று ஆசிரியைகளும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு அமர, வாகனம் புறப்படுகிறது. சில நிமிடங்களில், ஒரு இளைஞன், தாடி வைத்த இளைஞன், சாலையின் குறுக்கே வந்து கை காட்டி வாகனத்தை நிறுத்துகிறான்.

     மற்றொரு இளைஞன். வெள்ளை உடையில், குல்லாய் அணிந்து, கைக் குட்டையினை கண்களுக்குக் கீழே முகத்தை மறைத்தவாறு கட்டியிருப்பவன், வாகனத்தின் பின்புறம் வருகிறான்.

     மலாலா யார் ?
    யாரும் பதில் கூறவில்லை. ஆனால் மாணவிகள் அனைவரும், அவர்களை அறியாமலேயே, முகத்தை மறைக்காதவாறு அமர்ந்திருக்கும் மாணவியைப் பார்க்கிறார்கள்.

     இளைஞன், மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை வெளியே எடுக்கிறான். மூன்று முறை சுடுகிறான். மலாலா இரத்த வெள்ளத்தில் சாய்கிறாள்.




நண்பர்களே, நான் படிக்க வேண்டும், என்னைப் படிக்க விடுங்கள், என் போன்ற சிறுமிகளையும் படிக்க விடுங்கள் என்று குரல் எழுப்பியமைக்காகக் கிடைத்தப் பரிசுதான், இந்த துப்பாக்கிக் குண்டு.

     தொலைக் காட்சியில் தோன்றி, பெண்களைப் படிக்க விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தாரல்லவா, அதற்குப் பரிசுதான் இந்த துப்பாக்கிக் குண்டு.

     அமெரிக்காவின் தூதுவர், ரிச்சர்டு ஹெல்புரூக், அவர்களைச் சந்தித்து, தன் பன்னிரெண்டாவது வயதில், பெண்கள் படிப்பதற்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தாரல்லவா, அதற்குக் கிடைத்தப் பரிசுதான், இந்த துப்பாக்கிக் குண்டு.

     நண்பர்களே, பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்த சிறுமி மலாலாவிற்குத், தலிபான்கள் வழங்கிய அன்புப் பரிசுதான் இந்த துப்பாக்கிக் குண்டு. காரணம் மலாலா பள்ளி செல்கிறார். மற்ற மாணவியரையும் படிக்க வற்புறுத்துகிறார். பெண்கள் படிக்கலாமா? படிக்க விடலாமா? தவறாயிற்றே.

      நண்பர்களே, தலிபான் தீவிரவாதி மூன்று முறை சுட்டான். முதல் குண்டு மலாலாவின் இடது புருவத்திற்கு அருகில், உள்ளே நுழைந்து, மூளைக்கு மிக அருகில் பயணித்து, இடது தோள் பகுதியில் வேகத்தைக் குறைத்து, உள்ளேயே ஓய்வெடுக்கத் தொடங்கியது.



    

முதல் குண்டு துளைத்த மறுவினாடியே, மலாலா சரிந்து விழுந்து விட்டதால், மற்ற இரு குண்டுகள், அருகிலிருந்த மாணவி ஷாகியாவின் இடது தோள் பட்டையையும், கையையும் துளைத்தன. இதில் ஒரு குண்டு, கைநட் என்ற மாணவியின் வலது கையை உரசிக் கொண்டு சென்றது.

     நண்பர்களே, மலாலா ஸ்வாட் மத்திய மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். செய்தி பரவியது. உலகே ஒன்று திரண்டு கண்டனக் குரலை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. மலாலா உயிர் பிழைக்க ஆங்காங்கே பிரார்த்தனைகள், வேண்டுகோள்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.






  பின்னர், மலாலா ஸ்வாட் மருத்துவ மனையில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம், பெஷாவர் நகரில் உள்ள CMH (Combined Military Hospital) மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


     கர்னல் ஜுன்எய்ட். அம் மருத்துவமனையின் இள வயது மருத்துவர். மலாலாவை ஸ்கேன் செய்கிறார். மூளையில் குண்டு படவில்லை. ஆனால் குண்டு, மண்டை ஓட்டினைத் துளைத்துக் கொண்டு சென்ற பொழுது, மண்டை ஓட்டின் சில துகள்கள், மூளையினைக் குத்திக் காயப்படுத்தி இருப்பது தெரியவருகிறது. இதன் விளைவாய் மூளை வீங்கத் தொடங்கிவிட்டதைப் பார்க்கிறார்.

     நண்பர்களே, நமக்கு கையிலோ, காலிலோ அடிபட்டால், அடிப்பட்ட பகுதி வீங்குவதைப் பார்த்திருப்போம். மலாலாவிற்கும் அப்படித்தான் மூளை வீங்கத் தொடங்கி இருந்தது.

        நண்பர்களே, மூளை வீங்கினால் என்னவாகும். மண்டை ஓட்டின் உட்புறப் பகுதியில் முட்டும். அதற்கும் மேலே வீங்குவதற்கு, மண்டை ஓட்டிற்குள் இடம் இருக்காது. மேலும், மேலும் வீங்கத் தொடங்கும்போது,  வீங்குவதற்கு மண்டை ஓடு இடமும் கொடுக்காது. இதன் காரணமாக மூளையில் அழுத்தம் அதிகரிக்கும், முடிவில் மரணம்தான்.

     நண்பர்களே, கர்னல் ஜுன்எய்டு அடுத்து செய்த செயலைச் சொன்னால், நம்ப மாட்டீர்கள். இளவயது மருத்துவரானாலும், துணிச்சலுடனும், புத்திசாலித் தனத்துடனும் செயல்பட்டார்.

      மூளையின் வீக்கத்தைக் கட்டுப் படுத்த இயலாது. ஆனால் மூளை வீங்குவதற்கு இடவசதி செய்து கொடுக்கலாமல்லவா?. அதற்கு மூளையின் வீக்கம், மண்டை ஓட்டினைத் தொடும் இடத்தில் உள்ள, மண்டை ஓட்டினை வெட்டி எடுத்து, மூளை வீங்க வழி ஏற்படுத்தித் தருவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்.

     எட்டு சென்டிமீட்டர் அகலம், பத்து சென்டிமீட்டர் நீளத்திற்கு, மண்டை ஓட்டை, ரம்பம் கொண்டு வெட்டி எடுத்தார்.


     நண்பர்களே, மலாலா பூரண குணம் அடைந்த பிறகு, மூன்று மாதங்கள் கடந்தபின், மண்டை ஓட்டினை மீண்டும் பொறுத்த வேண்டும். அதுவரை மண்டை ஓட்டின் துண்டுப் பகுதியைப் பாதுகாத்தாக வேண்டும். எங்கு வைத்துப் பாதுகாப்பது. மலாலாவின் வயிற்றுப் பகுதியைக் கீறிப் பிளந்து, மண்டை ஓட்டின் துண்டினை, குடல் பகுதியில் பாதுகாப்பாகச் சொருகி வைத்தார்.

        இலண்டன், பிரம்மிங்ஹோம், ராணி எலிசபெத் மருத்துவ மனையினைச் சார்ந்த இரு மருத்துவர்கள், மருத்துவர் ஜாவிட் மற்றும் மருத்துவர் ஃபியானோ இருவரும், அச்சமயம் ராவல்பிண்டியில் இருந்தனர். மருத்துவர் ஃபியானோ குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.
     நண்பர்களே, இவ்விருவரும் பெஷாவர் மருத்துவ மனைக்கு வருகை தந்து, மலாலாவைப் பரிசோதித்தனர். இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. மேலும் இரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. எனவே, சிறப்பு வசதிகளை உடைய வேறு மருத்துவமனைக்கு மாற்றப் பரிந்துரை செய்தனர். ராவல் பிண்டி மருத்துவ மனைக்கு மலாலா மாற்றப் பட்டார். ஆனாலும் முன்னேற்றமில்லை. மலாலாவின் நிலைமை மோசாமாகிக் கொண்டே சென்றது.

      பாகஸ்தான் பிரதமர் கியானி பல்வேறு சுற்று ஆலோசனைக்குப் பின், மலாலாவை இலண்டன் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்தார். உடனடியாக மாலாவிற்கு பாஸ்போர்ட் தயாரானது.

     நண்பர்களே, இங்குதான் மிகப் பெரிய பிரச்சனை தலை தூக்கியது. மலாலாவை எவ்வாறு இலண்டனுக்கு கொண்டு செல்வது? மருத்துவமனை வசதியுடன் கூடிய விமானம் பாகிஸ்தானிடம் இல்லை. அமெரிக்கா உதவ முன் வந்தது. ஏற்றுக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இல்லை. காரணம் அமெரிக்காவின் உதவியை ஏற்றால், உள்நாட்டில் குழப்பம் கொந்தளிக்கத் தொடங்கிவிடும்.

     பிரிட்டீஸ் அரசு விமானம் வழங்க முன் வந்தது. ஆயினும், பாகிஸ்தான் அரசிடமிருந்து, முறையான வேண்டுகோளினை எதிர்பார்த்தது. பாகிஸ்தான் மசியவில்லை.

      நண்பர்களே, இக்கட்டான இந்நேரத்தில், ஐக்கிய அரபு நாடுகளின் மன்னர் குடும்பம், தங்களது சொந்த பயன்பாட்டிற்கான விமானத்தை, வழங்கி உதவ முன்வந்தது. நவீன மருத்துவமனையுடன் கூடிய சொகுசு ரதம் அது.

      மருத்துவர் ஃபியானோ அவர்களின் நேரடி மேற்பார்வையில், மலாலா, இலண்டன் எலிசபெத் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.

     நண்பர்களே, சுடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 16 ஆம் நாள், மலாலா கண் திறந்து பார்த்தார். முகம் முழுவதும் மருத்துவ உபகரணங்கள். பேச இயலா நிலை. மருத்துவர் ஃபியானோ ஒரு குறிப்பேட்டையும், பேனாவையும் தருகிறார். மலாலா எழுதினார்.

அப்பா எப்பொழுது வருவார்?
மருத்துவ மனைச் செலவிற்கு எங்களிடம் அதிக பணம் இல்லையே?
When will my father come?
We don’t have a lot of money

        நண்பர்களே, பார்த்தீர்களா? நினைவு திரும்பியதும் மலாலாவின் முதல் கவலையைப் பார்த்தீர்களா? பணம் இல்லையே, எப்படி தந்தை இவ்வளவு மருத்துவ மனைச் செலவினங்களையும் சமாளிப்பார் என்ற கவலை.




     சில நாட்களுக்குப் பின், மலாலாவைக் காண வந்த, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, முழுச் செலவினங்களையும் பாகிஸ்தான் அரசு ஏற்கும் என அறிவித்தார். மலாலா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


     நண்பர்களே, மலாலாவிற்கு உலகெங்கினும் இருந்து வாழ்த்து அட்டைகள், நினைவுப் பரிசுகள், இனிப்புகள் என அன்பளிப்புகள் மலை, மலையாய் குவிந்தன.

     ஒரு அன்பளிப்பு, மறைந்த பெனாசிர் பூட்டோ அவர்களின் மகன்களிடமிருந்து வந்திருந்தது. உள்ளே இசுலாமியப் பெண்கள், தலைக்கு மேல் அணியும் இரு துப்பட்டாக்கள். பெனாசிர் பூட்டோ அணிந்த துப்பட்டாக்கள். மலாலா தன் முகத்தினை, துப்பட்டாக்களில் புதைத்து முகர்ந்து பார்க்கிறார். பெனாசிர் பூட்டோவின் வாசம் வீசுகிறது. ஒரு துப்பட்டாவில், ஒரு நீண்ட கருமை நிற தலை முடி.

     நண்பர்களே, ஐக்கிய நாடகள் சபையில், தனது 16 வது பிறந்த நாளில் மலாலா உரையாற்றினார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

எங்களைப் புத்தகத்தையும், பேனாவையும் எடுக்க விடுங்கள்.
அவைகளே எங்களது வலிமையான ஆயுதங்கள்.
Let us pick our books and pens.
They are our most powerful weapons.

     நண்பர்களே மலாலா விடுத்த வேண்டுகோளை, ஆற்றிய உரையைத் தொலைக் காட்சிப் பெட்டியில் பார்த்திருப்பீர்கள். செய்தித் தாட்களில் படித்திருப்பீர்கள்.

      நண்பர்களே, அன்று மலாலா அணிந்திருந்த உடை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பிங்க் நிற சல்வார் காமீஸ். வெள்ளை நிற துப்பட்டா. இந்தத் துப்பட்டா பெனாசிர் பூட்டோவின் துப்பட்டா.



    

பதினாறு வயதே நிரம்பிய மலாலாவின் சாதனை பெரியது. அவரது போராட்டம் மகத்தானது. துப்பாக்கி ஏந்திய தலிபான்களுக்கு இடையில் நின்று, எழுது கோலை ஏந்தப் போராடியவர் அவர்.

     நண்பர்களே, மலாலா கூறுவதைக் கேளுங்கள்.

     தலிபான் தீவிரவாதியால் சுடப்பட்ட பெண் என நினைவு கூறப்படுவதை நான் விரும்பவில்லை. பெண்களின் கல்விக்காகப் போராடி வருபவர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.

I don’t want to be thought of,
as a girl who was shot by the Taliban,
but by the girl who fought for education.
This is the cause to which I want to devote my life.




மலாலாவைப் போற்றுவோமா நண்பர்களே,
மலாலாவின் கனவு நிறைவேற வாழ்த்துவோமா நண்பர்களே






71 கருத்துகள்:

  1. தேவதையைப் பற்றித் தெரிந்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
  2. மலாலா அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... இத்தனை தகவல்கள் விளக்கமாக விரிவாக...

    நன்றிகள் பல...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான படங்களுடன் அரிய தகவல்களுடன்
    மலாலா குறித்து ஒரு விரிவான அருமையான்
    பதிவு கொடுத்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எங்களைப் புத்தகத்தையும், பேனாவையும் எடுக்க விடுங்கள்.
    அவைகளே எங்களது வலிமையான ஆயுதங்கள்.
    Let us pick our books and pens.
    They are our most powerful weapons.

    வலிமை மிக்க வரிகள்...!

    பதிலளிநீக்கு
  5. வாசிக்க வாசிக்க மனதுக்குள் என்ன ஆச்சோ என்று
    உண்மையிலேயே தவித்துவிட்டேன் ஐயா!..

    இவ்வளவு விபரம் ... இவ்வளவென்ன எதுவுமே தெரியாது.
    இன்றுதான் உங்களால் அறிந்துகொண்டேன்! சாதனைத் தேவதை!
    சாதிக்கப்பிறந்தவள் சாகமாட்டாள்!
    நிச்சயம் அவள் கனவு பலிக்கும்! பூரண நலம்பெற வேண்டுகிறேன்.

    ஐயா உங்கள் கைவன்மை எழுத்துத் திறமைக்கு ஒரு சல்யூட்!!!
    நல்ல பதிவும் பகிர்வும் ஐயா!
    அருமை! வாழ்த்துக்கள்!

    த ம.4

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    மலாலா பற்றி மிக அருமையாக கூறியுள்ளீர்கள்.. அழகிய புகைப்படங்கள் படங்கள்முதலில் தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா. அத்தோடு அறிவியல் கருத்தையும் .நடுவில் புகுத்தியுள்ளீர்கள்.(மூளை வீங்கினால் என்னவாகும்.)கொடுத்த விளக்கம் நன்று.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. அந்த இளம்பெண்ணுக்கு எவ்வளவு பாராட்டு வழங்கினாலும் தகும். அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா20 டிசம்பர், 2013

    வணக்கம்
    ஐயா.
    த.ம 6வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. இது வரை கேள்விப்படாத தகவல்களுடன் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  10. படிக்க ஆசைப்பட்ட பெண்னுக்குச் செய்யப்பட்ட கொடுமையைப் படிக்கும் போதே - மனம் கலங்கியது..

    உனர்ச்சி மயமான பதிவு!..

    பதிலளிநீக்கு
  11. ஏற்கனவே அறிந்திருந்தாலும் நீங்கள் எழுதிய விதம் மனதில் அதிர்வை ஏற்படுத்தி விட்டது . மனதை உருக்கும் பதிவு . உணர்வேண்டியவர்கள் உணர்ந்தால் சாரி.
    மலாலா ஒரு அதிசயப் பெண்

    பதிலளிநீக்கு
  12. ஒரு சாதனைப் பெண் மணியின் துன்ப துயரங்களோடு கூடிய
    வரலாற்றைப் பதிவு செய்த விதம் மெய் சிலிர்க்க வைக்கின்றது .
    அறிவுச் சுடர் ஏந்தி வந்த அந்தத் தெய்வக் குழந்தைக்கு என்றென்றும்
    இறைவன் துணையிருப்பான் .அன்புச் சகோதரரே சிறப்பான
    படைப்பாற்றலால் மனத்தை உருக்கும் பகிர்வு தந்தீர்கள் .
    உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க
    நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  13. மலாலா சாதாரணப் பெண் அல்ல ,சாதனை சிகரத்தை தொடப் போகும் தேவதைப் பெண் !
    +1

    பதிலளிநீக்கு
  14. படிக்க விரும்பிய பெண்ணுக்கு எவ்வளவு கொடுமைகள் இழைக்கப் பட்டுள்ளன ? ;(

    வைத்தியம் செய்ய அழைத்துப்போக UAE ராஜ குடும்பம் விமானம் கொடுத்து உதவியுள்ளது, மனித நேயச் செயலாக உள்ளது. பாராட்டுக்குரியது.

    மலாலாவைப் போற்றுவோம், மலாலாவின் கனவு நிறைவேற வாழ்த்துவோம்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான பதிவு அய்யா. மிக்க நன்றி. மலாலாவின் பெயர் சின்னஞ்சிறு வயதிலேயே உலகமுழுவதும் பிரபலமானதற்கு முற்றிலும் தகுதியானவர்தான். அவருக்குத் துணிச்சலுடனும், புத்திசாலித்தனத்துடனும் மருத்துவம் செய்த மருத்துவர்கள் உலகப் பெண்கல்வி ஆதரவாளர்களின் பாராட்டுக்குரியவர்கள். இந்தச் செய்தியைத் தங்கள் பதிவிலிருந்துதுதான் தெரிந்துகொண்டேன். “பேனா முனையே வாள்முனையை விடவும் வலிமையானது” என்பதை நாம் மலாலாவுடன் சேர்ந்து முழங்குவோம். அந்தச் சிறுமியை நமது வழிகாட்டியாகக் கொண்டு பெண்கல்வியை வளர்ப்போம் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா21 டிசம்பர், 2013

    மலாலா! தேவதை என்பதை விட அதனை விட ஒரு அற்புதமான சக்தி, மதவாதிகள் பெண்களை பூட்டி வைத்தனர், அடக்கி வைத்தனர், விதிகளையும் நியமங்களையும் எழுதி மிதித்தனர், ஆனால் அவற்றை எல்லாம் கடந்து வந்து கல்விக்காய் உயிரையும் விட்டு மறுபிறவி எடுத்துள்ளார். உலகம் முழுவதும் எத்தனையோ பெண்களுக்கு கல்வியின் வாசமே தெரியாமல் அல்லல்படுகின்றனர், அவர்களுக்கு இவர் ஒரு உற்சாக பானம், பலருக்கு கல்வி வசதிகள் கொடுக்கப்பட்டும் அதனைப் பயன்படுத்தாமல் வீணடிப்போருக்கு மலாலா ஒரு பாடம். அவருக்காய் உறுதுணையாய் நின்ற பாகிஸ்தான் அரசும் உலகும் பாராட்டத்தக்கது. மலாலாவுக்கு அதன் பின் எத்தனையோ வெளிநாட்டு வாய்ப்புக்கள், குடியுரிமைகள் எல்லாம் கிடைத்தும் தனது தாய் பூமிக்கே திரும்பி போராட நினைத்த துணிவு, கண் விழித்ததும் தந்தையைக் குறித்து கவலைப்பட்ட பெண் மனம், தெய்வம் என்ற ஒன்று இருந்திருந்தால் அத் தெய்வம் மலாலாவைப் போன்று இருந்திருக்கும் என்பேன். நீடுழி வாழ வேண்டும் !

    --- விவரணம் ---

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. உலகம் முழுவதும் எத்தனையோ பெண்களுக்கு கல்வியின் வாசமே தெரியாமல் அல்லல்படுகின்றனர், அவர்களுக்கு இவர் ஒரு உற்சாக பானம், பலருக்கு கல்வி வசதிகள் கொடுக்கப்பட்டும் அதனைப் பயன்படுத்தாமல் வீணடிப்போருக்கு மலாலா ஒரு பாடம்.
      ஆம் நண்பரே தாங்கள் சொல்வதுதான் சரியானது.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  17. நெகிழ்ந்து அழுதேன்... மலாலாவின் முதல் கையெழுத்தை கண்டு...
    பகிர்ந்தோம்...
    https://www.facebook.com/malartharu

    பதிலளிநீக்கு
  18. மலாலாவைப் பற்றி இவ்வளவு தெளிவாக அதிகமான செய்திகளைப் புகைப்படங்களுடன் அளித்தமைக்கு நன்றி. பலருக்கு முன்னுதாரணம் மலாலா. கடந்த மாதம் மண்டேலா, இப்போது மலாலா. வாய்ப்பிருப்பின் 2000 முதல் உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான சர்மிளா பற்றி உங்களிடமிருந்து ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
      மணிப்பூர் சர்மிளா பற்றி எழுத முயல்கின்றேன் ஐயா.

      நீக்கு
  19. மலாலாவைப் பற்றிய தகவல்களை அருமையாகச் சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி! மலாலாவின் கனவு நிறைவேற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. மிகமிக அருமையான பதிவு! தான் நினைத்ததை சாதிக்கும் இந்தச் சிறிய பெண்ணைப் போற்றிப் பாடுவோம்! நல்ல விஷயங்களுக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்தவர்! அதுவும் சிறு வயதில்! வாழ்க மலாலா!

    பதிலளிநீக்கு

  21. இன்றைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் இந்த தேவதை!.
    மனிதனுக்கு மனிதனைத் தவிர வேறொருவர் தீங்கிழைக்க முடியாது என்பதற்கு மலாலா வாழ்க்கை உதாரணம். அந்த படங்கள் நம்மை வெட்கமுறச் செய்கின்றன. இதிலிருந்து மீண்டெழுந்த மலாலா, நிச்சயம் ஒரு தேவதைதான்!

    மிக அருமையான பதிவு அய்யா!.

    பதிலளிநீக்கு
  22. பாரதி உருவகம் செய்த பெண் இவள் தானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதி பார்க்க நினைத்த புதுமைப் பெண் நிச்சயம்
      மலாலா போல்தான் இருப்பார்.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  23. படங்களுடன் பகிர்வு அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  24. மிக அருமையான பதிவு.இந்தநூற்றாண்டின் வீரமங்கையை பற்றி அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி.மலலா மங்கையரின் மணிவிளக்கு !மலலா என்ற ஒளிதீபத்தை மக்கள் முன் கொண்டுவந்த மாமணிக்கு வணக்கங்கள் பல பல.நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மிக அருமையான பதிவு.இந்தநூற்றாண்டின் வீரமங்கையை பற்றி அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி.மலலா மங்கையரின் மணிவிளக்கு !மலலா என்ற ஒளிதீபத்தை மக்கள் முன் கொண்டுவந்த மாமணிக்கு வணக்கங்கள் பல பல.நன்றி.

    பதிலளிநீக்கு
  26. எங்களைப் புத்தகத்தையும், பேனாவையும் எடுக்க விடுங்கள்.
    அவைகளே எங்களது வலிமையான ஆயுதங்கள்.//
    அருமையான வேண்டுகோள்.

    மலாலாவின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

    அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. பல அறிந்திராத தகவல்களுடனான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. மலாலாவை போற்றுவோம்,
    பெண்கல்வியும்,விழிப்புணர்வும்
    வளர வாழ்த்துவோம்/

    பதிலளிநீக்கு
  29. அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  30. என் இனிய ஜெயகுமார் அவர்களுக்கு, வீர பெண்குழந்தை மலாலா பற்றிய தங்களின் பதிவு மிக அருமையாகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் விதமாகவும் அற்புதமாக தொடுக்கப்பட்டுள்ளது. செல்வி.மலாலா அவர்களின் மனத்தின்மை நம் பெண் குழந்தைகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு நாம் ஆண்டவனை வேண்டுவோம். மேலும் உலக அளவில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முதல் எட்டு மலாலா விருதுகளில் முதல் இரண்டு விருதுகள் நமது இந்தியாவை சேர்ந்த ரசியா சுல்தான் என்ற +1 மாணவிக்கும் பெங்களூரை செர்ந்த மாணவனுக்கும் கிடைத்துள்ளன என்பது நம் அனைவருக்கும் பெருமை கொள்ள கூடிய செய்தியாகும்.தங்களின் ஒவ்வொரு பதிவும் மென்மேலும் மெருகேறிக்கொண்டே செல்கிறது என்றால் அது மிகையாகாது.நன்றி.

    பதிலளிநீக்கு
  31. கண்கலங்கி நிற்கின்றேன் பெண்ணாய் பிறந்ததை விட வேறு தவறு எதுவும் செய்ய வில்லை.பூமியில் வாழ எத்தனை போராட்டங்களை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.ஆனாலும் சாதித்துவிட்டாள் மலாலா.நன்றி விரிவான தகவல் தந்தற்கு சார்.

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா22 டிசம்பர், 2013

    மிக பவித்திரமான ஓரு பதிவு.
    இதை, தந்ததற்கு மிகுந்த நன்றி.
    மனமுருக்கியது. ( இந்த எலிசபெத் மருத்துவமனையில் எம் மகள் றிசப்சனிஸ்டாக புகுந்து
    பின் தியேட்டக் கிளார்க்காக உயர்ந்து 10 வருடங்களிற்கு மேல் பணி புரிந்தார்.
    இப்போ மன நலஆலோசகராக மேலும் படித்து தமிழ் பெண்களின் இன்னல் தீர்க்கிறார் இலண்டனில்.)
    தங்களிற்கு இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
      தங்கள் மகளுக்கு எனது அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.
      மன நலம் சார்ந்த சேவை, உடல் மருத்துவ சேவையினை விட, மிக உயர்ந்த உன்னத சேவை.

      நீக்கு
  33. மலாலா குறித்து என் வகுப்பறையில் பகிர்ந்திருக்கிறேன் .என்றாலும் இவ்வளவு விரிவாய் சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொண்டத்து மிக பயனுள்ளது சார்.என் வகுப்பறையில் பயன்(பயண)படும் .பயனுள்ள தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  34. மலாலா பற்றிய தகவல்கள் அனைத்தும் முன்பே படித்திருந்தாலும் மீண்டும் இங்கே ஒரு முறை படிக்கும்போது அவரை நினைத்து பெருமிதம் தோன்றியது.......

    அவரது இலக்கினை அடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  35. அன்புள்ள ஜெயக்குமார்..

    பொறுப்பானதும் கசிவானதுமான பதிவு.

    மலாலாவையும் மண்டேலாவையும் நினைத்துப் பெருமையும் கசிவும் அடைகிறேன். தொடர்ந்துகொண்டேயிருக்கிறது மனத்துள் இருவைரையும் நினைக்குந்தோறும். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

  36. வணக்கம்!

    தமிழ்மணம் 15

    பெண்கல்வி கேட்டுப் பெருந்துயா் பட்டாலும்
    வன்செல்வி வாழ்வார் வளா்ந்து

    பெண்ணுரிமை இல்லாமல் பெற்ற விடுதலையில்
    மண்ணுரிமை பேசல் மயிர்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா24 டிசம்பர், 2013

    இந்தப் பதிவின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி!

    பிரதீப்

    பதிலளிநீக்கு
  38. கல்வி கேட்டதற்காக எத்தனை துயரங்களைக் கடந்து விட்டார் மலாலா. படித்ததும் கண்ணீர் துளிகளை நிறுத்த முடியவில்லை சகோதரரே. சுடப்பட்டு கண் விழித்ததும் அப்பாவின் நிலையை எண்ணிய அந்த பிஞ்சு குழந்தையின் மனதை என்னவென்று சொல்வேன். பெண் என்பதற்காக அவள் பட்ட துன்பங்களை எண்ணுகையில் மனம் கனக்கிறது. இருப்பினும் போராடும் துணிச்சல் மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பி போராடும் குணம் அவளை உலகத்தின் உச்சியில் நிறுத்தி விட்டது. குணமடைய உதவிய உலகத்தாருக்கும், பிரார்த்தனை செய்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளோடு கைகூப்பி வணங்குகிறேன். மிக அழகாக பகிர்ந்த தங்களுக்கு நன்றீங்க சகோதரர்.

    பதிலளிநீக்கு
  39. இவர் பேசிய பேச்சை யூ டியூப் ல் குழந்தைகளுடன் அமர்ந்து முழுமையாக கேட்டேன். நாம் அடையும் துன்பங்கள் நமக்கு அசாத்தியமான சக்தியை அதன் மூலம் உண்ரந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு