26 பிப்ரவரி 2022

அல்லு பகல் நினைவெல்லாம்

     கரிவலம் வந்த நல்லூர்.

     பால் வண்ண நாதர் ஆலயம்.

     ஒரு பெரியவர், கோயில் அலுவலகத்துள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம், சில தகவல்களைக் கேட்கிறார்.

பெரியவர்:  வரகுண பாண்டியர் வைத்திருந்த, ஏட்டுச் சுவடிகள் எல்லாம், ஆலயத்தில் இருக்கின்றனவாமே?

பணியாளர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு, எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

பெரியவர்: அப்படியா, அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திறகு அழைத்துப் போவீர்களா?

பணியாளர்:  அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுண பாண்டியர் இறந்தபிறகு, அவர் சொத்தெல்லாம், கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம், அப்போதுதான் கோயிலுக்கு வந்ததாம்.

பெரியவர் :  அது தெரியும்.  இப்போது அவை எங்கே இருக்கின்றன?

பணியாளர்: குப்பை கூளமாக கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்த காலத்துக் கணக்குச் சுருணைகளோ.

பெரியவர் : வேறே ஏடுகள் இல்லையா?

பணியாளர் : எல்லாம் கலந்துதான் கிடந்தன.

     பணியாளர் பேசப் பேச, பெரியவருக்கு மெல்ல மெல்லக் கோபம் ஏறுகிறது.