15 நவம்பர் 2015

கடவுளைக் காண்பேனோ


       அபுதாபியில் இருந்து ஓர் அன்புக் கட்டளை. பாசக்கார, மீசைக்கார நண்பரிடமிருந்து ஓர் உத்தரவு.

    முன்பு ஒரு முறை கனவில் காந்தியைக் கண்டவர். இப்பொழுது கடவுளையேக் கண்டிருக்கிறார்.

கடவுளைக் கண்டேன்
தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.


      


கடவுளைப் பற்றிய எனது எண்ணங்கள் சற்று வேறானவை. எனவே எழுதலாமா, வேண்டாமா என்ற சிந்தனைதான் முதலில் மனதில் தோன்றியது. இருப்பினும் நண்பரின் உத்தரவினை மீற இயலாதல்லவா.

     சில வருடங்களுக்கு முன்பு வரை, நானும் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியினைப் பின்பற்றுபவனாகவே இருந்துள்ளேன்.

     ஆனாலும் நாளடைவில், என் மனவோட்டம் மெல்ல மெல்ல மாறத்தான் தொடங்கியது. காரணம் நான் படித்த புத்தகங்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட இன்னல்கள், சந்தித்த அனுபவங்கள்.

    பொது நலனை முன் வைத்தும், சுய நலனை முன் வைத்தும், நான் கண்ட காட்சிகள் என்னுள் மாற்றத்தை உருவாக்கின.

     உத்ரகாண்ட் மாநிலத்தில் இறைவனைத் தரிசிக்கச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் பலி.

     கோயிலுக்குப் பாத யாத்திரைச் சென்றவர்கள் மீது லாரி மோதியது. பலி எண்ண்ணிக்கை 10 ஆக உயர்வு.

      பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், நூற்றுக் கணக்கான, குழந்தைகள் உடல் கருகி இறந்த கொடுமை. என்ன பாவம் செய்தார்கள் இந்த மழலைகள்.

     இலங்கையில் ஒரு இனமே, நமது தொப்புள் கொடி உறவே, சற்றேறக்குறைய அழிக்கப் பட்டு விட்டதே. அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற, அப்பாவித் தமிழச்சிகளின் கற்பைக் காப்பாற்ற, தெய்வம் தன் சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுத்து, கும்பகர்ணனைப் போல் உறங்கி அல்லவா போய்விட்டது.

      இவை போன்ற எண்ணற்ற சோகங்களை, கடவுள் காப்பாற்ற மறந்த தருணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

       இவை மட்டுமல்ல நண்பர்களே, என் தினசரி வாழ்வில் நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஆன்மீகவாதிகள். மெல்ல மெல்ல நான் விலக இவர்களும்தான் காரணம்.

       வாரந்தோறும் கோயிலுக்குச் செல்வார்கள். பேச்செல்லாம் தெய்வ மணம் கமழும். ஆனால் செயலில் நாணயம் என்பது, ஒரு துளியும் இல்லாதவர்கள்.

     உழைப்பு என்பது சிறிதும் இன்றி, ஊதியத்தை மட்டுமே நாடும் பக்திமான்கள்.

     படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்வார்களே, அதுபோன்ற ஆன்மீக வாதிகளைக் கண்டு, உள்ளம் நொந்ததுதான் மிச்சம்.

      ஆனால் இன்று இவர்களைப் போன்றவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். வஞ்சகமின்றி, உண்மையாய் உழைப்பவர்களோ, ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, கூனிக் குறுகி வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை.

     என் மகளின் இதயத்தில், துளை இருக்கிறது என்று, ஒருவர் இருவர் அல்ல, மூன்று மெத்தப் படித்த, இதய மருத்துவர்கள், மூத்த மருத்துவர்கள் சொல்ல, அவர்களின் வாக்கினை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நானும் எனது குடும்பமும் பட்ட துயர் எனக்கு மட்டும்தான் தெரியும். கடவுளுக்கு நிகரான மருத்துவர்களின், அலட்சியப் போக்கோ அல்லது வணிக நோக்கோ, நானறியேன். ஆனாலும் துயர் மட்டும் எனக்குச் சொந்தமாகிப் போனது.

       நான்காவதாய் ஒரு மருத்துவர், நேர்மையான மருத்துவர், உண்மையிலேயே தெய்வம் போல் வந்து, அறுவை சிகிச்சை அரங்கு வரை, என் மகளை அழைத்துச் சென்று விட்டு, துளையே இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்றாரே பார்க்கலாம். இம் மருத்துவரை, நான் மட்டும் அணுகாமல் இருந்திருந்தால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

      அலட்சியப் போக்கிற்கும, வணிக நோக்கிற்கும் உரியதா மருத்துவம். மாட மாளிகைகளோடும், அரண்மனை போன்ற மருத்துவ மனைகளோடும் இவர்களும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்.

      காசுள்ளவர்களைக் கண்டால், கடவுள் கூட, கண்டும் காணாதது போல், போய்விடுகிறாரே.

     கடந்த மாதம், ஏழுமலையானைத் தரிசிக்க, படியேறி நடந்தே சென்ற, எனது மைத்துனர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

   அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, எனது மைத்துனர், ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே படியேறி இருக்கிறார். வழியில் நெஞ்சு வலி. யாரோ மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. இவ்வளவிற்கும் எனது மைத்துனரது வயது என்ன தெரியுமா? வெறும் 37 தான்.

    எனது மைத்துனர் இறந்து போனதை அறியாமலேதான், புதுகையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில், குடும்பத்துடன் கலந்து கொண்டேன்.

     திருப்பதி சென்றவர், திரும்பவில்லையே என திங்கட்கிழமை தேடத் தொடங்கினோம். செவ்வாய்க் கிழமைதான், அவர் இறந்து போனதே தெரிந்தது. புதன் கிழமை இரவுதான், அவரது உடல் வீடு வந்து சேர்ந்தது.

     திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இலவச அமரர் ஊர்தியில், எனது மைத்துனரது உடல் வீடு வந்து சேர்ந்தது. பிறகுதான் தெரிந்தது. மலை வழி நடந்து, படியேறி இறைவனைத் தரிசிக்கச் செல்வோரில், சிலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மலை ஏறும் போது இறந்தால், அமரர் ஊர்தி இலவசம்.

     கால் வலிக்க வலிக்கப், படியேறி வரும் பக்தனுக்கு, இறைவன் கைகொடுக்காமல், அமரர் ஊர்தியை அனுப்புகிறாரே, இது நியாயமா?

என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே.

கடவுளைக் கண்டால்

மீசைக்கார, பாசக்கார நண்பரே
இதோ உமக்காக
எனது ஆசைகளைப் பட்டியலிடுகிறேன்.
நிறைவேற்ற வேண்டியது, தங்களின் பொறுப்பு




01.    அரசு அதிரடி. சிறு குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தடை. ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் இழுத்து மூடப் பட்டன. ஐந்து வயது நிறைவுற்ற பிள்ளைகளே பள்ளியில் சேர்க்கப் பெறுவர்.
02.    கல்வி கட்டாயமாக்கப் படுகிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கும், சிறுவர்களைப் பணியில் அமர்த்துவோருக்கும் ஆயுள் தண்டனை.
03.    தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் அரசுடமையாக்கப் பட்டன.
04.    இது நாள்வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று, மருத்துவர் பட்டம் பெற்றவர்கள், தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றத் தடை.
05.    கோயில்களில் உண்டியல்களை அகற்ற உத்தரவு.
06.    அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு தரிசன வழி, வி.ஜ.பி. தரிசன வழி போன்ற, காத்திருப்பு ஏதுமின்றி, வந்தவுடன் வணங்குவதற்கான வழிகள் தடை செய்யப் படுகின்றன. அனைவருக்கும் ஒரே தரிசனம்தான், தர்ம தரிசனம்.
07.    உண்ணும் உணவைத் தேர்ந்தெடுப்பது அவரவர் தனி உரிமை.
08.    உலகின் அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றினைத்தான். ஆனால் மோதல்களுக்கு மதங்களே காரணமாய் அமைவது வருந்துதற்கு உரியது. எனவே அரசியல் அமைப்புகள் மதம் பற்றிப் பேசுவதும்., மத அமைப்புகள் அரசியல் பற்றிப் பேசுவதும் தடை செய்யப் படுகிறது.
09.    இந்தியாவின் அனைத்து நதிகளும் தேசிய மயமாக்கப் படுகின்றன.
10.    தேர்தலில் வெற்றி பெற்றோரின், செயற்பாடுகளை ஆண்டுக்கு ஒரு முறை, மதிப்பீடு செய்து, தொடர்வதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ வழி வகை செய்யப் படுகிறது.
11.    வாக்குப் பதிவு கட்டாயமாக்கப் படுகிறது
12.    இருபது வயது நிரம்பிய அனைவருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும், மூன்றாண்டு இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் படுகிறது.
13.    ஊழலையும், வளர்ந்து வரும் இலஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில், அச்சிடப் பெற்ற பணம், இனி செல்லாது என்று அறிவிக்கப் படுகிறது. வங்கி அட்டை மூலமாகத்தான், இனி அனைத்து பரிமாற்றங்களும் நடைபெறும். ஒரு ரூபாய்க்கு ஒரு சாக்லெட் வாங்குவதற்கும், வங்கி அட்டையினைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். அதே சமயம், ஒருவர், ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள அனுமதிக்கப் படுவர்.


என்ன நண்பரே, போதுமா?
நிறைவேற்றுதல் இனி தங்கள் கடன்.

       
     

61 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா...அருமையான ஆசைகள்...நிறைவேறினால் மகிழும் உலகு.....நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. அவர் கேட்டிருந்த ஆசைகள் 10 தானே!
    தாங்கள் வெளியிட்டிருப்பதோ..!

    13 ஆசைகள்

    இருந்தாலும் தங்களுக்கு பேராசைதான் அய்யா!.. :-)

    தங்களின் பதிவில் நான்காவதாய் வந்தாரென்று சொல்லியுள்ளவரைப்போல் தினமும் நாம் பல கடவுளரைக் காண்கிறோம். ஆனால் நம் அறிவு அவர்களை காணத்தவறுகிறது.

    தங்கள் மைத்துனர் மறைந்த தகவலை அந்த கடவுள்தான் சொல்ல வில்லை போகட்டும். அதை இத்தனை நாள் சொல்லாமல் இயல்பாய் இருக்கும் தங்கள் தன்மையை யாருடன் ஒப்பிடுவது..

    கடவுள் என்பவர் வெளியில் இல்லை அய்யா அவர் தங்களைப் போன்றோர் மென்மையான மனங்களில்தான் இருக்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      நடமாடும் கடவுள்கள் பலரை நேரில் சந்தித்திருக்கிறேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  3. அன்புள்ள கரந்தையாரே!

    குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் போதுதான் அதன் வலி தெரியும். அதை அனுபவித்தவனுக்கு மட்டும் அந்தத் துடிப்பு, துயரம், நிம்மதியற்ற அலைபாயும் மனம், நோயின் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வரும் வரையில் அல்லது வந்தவுடன் அந்த நோயாக இருக்கக்கூடாது என்று எண்ணுகின்ற உள்ளம் அனுபவித்த பெற்றோருக்கு மட்டுமே தெரியும்.

    பெற்றோருக்குப் பிள்ளைகளைவிட பெரிய செல்வம் எது இருக்க முடியும்?

    தவறாகக் கணித்த மருத்துவர்களை என்னவென்று சொல்வது? தேவையில்லாம் சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. செய்த அறுவை சிகிச்சைகளும் சில நேரங்களில் தவறாக அலட்சியத்துடன் செய்து அதனால் படும் அவதியும் பலர்பேர் சொல்வதையும் கேட்டுப் பரிதாபப்பட்டதும் உண்டு. இருந்தாலும் ‘நான்காவதாய் ஒரு மருத்துவர், நேர்மையான மருத்துவர், உண்மையிலேயே தெய்வம் போல் வந்து, அறுவை சிகிச்சை அரங்கு வரை, என் மகளை அழைத்துச் சென்று விட்டு, துளையே இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்றாரே பார்க்கலாம்.’ அவர்தான் வாழும் தெய்வம்... காணும் கடவுள். மருத்துவர்களில் பல பேர் இப்படி இருக்கவே செய்கிறார்கள். உயிரைக் காப்பாற்றுவது இவர்கள கையில்தானே இருக்கிறது.

    கடவுள் இருந்தால் அவரைப் பார்க்கப் போகின்றவர்களையாவது காப்பாற்ற முடியாத கடவுள் என்ன செய்யப் போகிறார்? கடவுள் தன்னையே அவரால் பாது காத்துக் கொள்ள முடியவில்லை... மற்றவரை எங்கே பாதுகாப்பது?

    மைத்துனர் இறந்து போனதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    தந்தை பெரியாரிடம் ‘கடவுள் இல்லை’ என்று சொல்கிறீர்களே கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன சொல்வீர்கள்? என்று கேட்ட பொழுது, “நான் ஏன் இல்லைன்னு சொல்றேன்... இருக்காருன்னு சொல்லிட்டுப் போறேன்” என்றாராம்.

    பத்து நல்ல ஆசைகள் நிறைவேற வேண்டும்.

    நன்றி.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  4. தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த, தேவகோட்டை கில்லர்ஜியிடமே பந்தை தட்டிவிட்டு, பொறுப்பை சொல்லி விட்டீர்கள். இனி, அவராயிற்று கடவுளாயிற்று. உங்கள் கோரிக்கை எண்.3 ஐ இப்போதுள்ள ஆட்சியாளர்களே நிறைவேற்றலாம்; முக்கியமான, அவசியமான கோரிக்கை.

    உங்கள் மைத்துனர் மரணம் – எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும். (அவர் புதிதாக மலைப்பாதையில் ஏறத் துவங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  5. நண்பர் கில்லர்ஜியின் அன்பிற்காக... நன்றி ஐயா...

    மைத்துனர் இறந்து போனது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. முத்தான பத்தும்
    நல்ல சிந்தனைக்கே!

    பதிலளிநீக்கு
  7. வந்த கடவுள் சொல்லியிருப்பாரே:

    என்னால் இதெல்லாம் நேரடியாக செய்யமுடியாது கரந்தையாரே !!

    இருந்தாலும் உமது கோரிக்கைகள் நியாயமாக இருப்பதால்,

    உம்மை 2016 முதல் ஐந்தாண்டுகட்கு தமிழகத்தின் முதல்வராக ஆக்குகிறேன்.

    நீங்கள் செய்யுங்கள்.

    என்று சொல்லி மறைந்திருப்பார்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. அடேயப்பா! எத்தனை பொறுப்பாய் இந்த பதிவை கையாண்டிருகிறீர்கள்!! நெகிழ்வான பதிவு அண்ணா!

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஜி தொடரில் வந்துவிட்டீர்கள். 10க்கு மேல் எழுதிவிட்டீர்கள் போலுள்ளது. நேரமின்மை காரணமாக எனக்கு தாமதமாகிறது. விரைவில் தொடர்வேன். கில்லர்ஜி பொறுத்துக்கொள்வார்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பரே..
    முதலில் தங்களின் மைத்துனர் மறைவு அறிந்து வேதனைக்கிறேன் தங்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்கள் அவரது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகளும்...

    தங்களின் தலைப்பே ஒரு மாற்றத்தைக் கொடுத்தது தாங்கள் சொல்லும் அனைத்து விடயங்களும் 100க்கு100 உண்மை இன்றைய வாழ்வில் ஆத்திகர்கள் வழி மாறுவதற்கான காரணங்கள் மிகவும் சரி அதில் பலரும் உண்டு அந்தப்பலரில் நான் இருப்பது எனக்குத் தெரியும் தாங்களும் இருப்பது இன்றே முழுமையாக அறிந்தேன் (ஏற்கனவே ஐயா ஜியெம்பி அவர்களின் பதிவுக்கு நான் கொடுத்த பின்னூட்டத்துக்கு ஆதரவு கொடுக்கும் பொழுதே சிறிது அறிந்திருந்தேன்)

    தாங்கள் எழுதிய பதிவு எனது கோரிக்கைக்காக மட்டுமே என்பதை அறிந்து பெருமையாக இருக்கின்றது காரணம் அனைத்துக் கோபத்தையும் பகிர்ந்து விட்டு எனது கோரிக்கையை வைத்தீர்கள் பார்த்தீர்களா ? அங்குதான் தங்களின் உயர்ந்த மனம் பளிச்சிடுகிறது பாராட்டிச் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை எனக்கு.

    முதல் கோரிக்கை தங்களது நெடுநாள் கனவு என்பது நானிறிந்த விடயமே... எனக்கு இதில் உடன்பாடு உண்டு சமீபத்தில் படித்தேன் ஏதோவொரு நாடு 12 வது வயதில்தான் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமாம் இதனைப்பற்றி பதிவு எழுதுவேன் உண்மைதானே அந்த வயது வரையிலாவது குழந்தைகள் சந்தோஷமாக பறந்து திரியட்டுமே...

    எந்த ஆசைகளையுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தரமான பொதுநல ஆசை இதில் ஐந்தாவது நன்று அந்தப்பணத்தால்தானே பிரட்சினைகள் உண்டியலே இல்லாவிட்டால் ? அருமையான சிந்தனை.
    முடிவில் வைத்தீர்களே பதிமூன்றாவது மிகவும் நன்று நண்பரே.... இது ஒன்று மட்டும் சரியானால் அனைத்தும் இதனுள் அடக்கம்.

    எனது வார்த்தைக்கு மதிப்பளித்தமைக்கு நன்றி நண்பரே..

    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கும் நாடு
      பின்லாண்டு நண்பரே
      உலகு முழுவதிலும் இருந்து கல்வியாளர்கள் அங்கு சென்று
      ஆராய்ந்த வண்ணம் உள்ளனர்
      நன்றி நண்பரே
      தங்களின் நீண்ட கருத்துரைக்கும்
      மாறா அன்பிற்கும்

      நீக்கு
  11. நானும் உங்களைப் போலவே ,கடவுளைத் தொலைத்தவன்தான் !நீங்களாவது கிலலர்ஜியின் அன்புக்கு கட்டுப்பட்டு ஆசைகளைக் கூறி விட்டீர்கள் ,நேரமின்மை காரணமாய் என்னால் அதுகூட முடியவில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  12. தங்களின் மைத்துனர் இளவயதில் இறந்தது வருத்தத்தை தருகிறது! உங்களின் நியாயமான கோபங்களும் நியாயமான ஆசைகளும் புரிகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பிற்கும்
      புரிதலுக்கும் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  13. நண்பர் கரந்தை ஜெயக்குமாரின் மனத்தில் இத்தனை போராட்டங்களா ? இவர் கடந்து வந்தது இத்தனை எரிமலைகளா ?

    வெகுண்டு எழும் உங்கள் கோபம் நியாயம். சங்கிலியாய் மனித சமூகத்தை பிணைத்திருக்கும் தளைகளில் நீங்கள் தொட்டதும் சில. அதற்கு வைக்கும் தீர்வுகளை ஆசைகளாக சொன்னதும் அபாரம்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அண்ணா, உங்கள் மகளுக்கு இதயத்தில் துளை என்று சொன்ன மூன்று மருத்துவர்களுக்கும் இதயம் இருக்கிறதா என்று ஐயம்! நல்ல வேளை, நான்காவதாக பார்த்த மருத்துவர் மகளை நல்லபடியாக அனுப்பிவைத்தாரே.. அந்த நேரத்தில் உங்கள் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும். மணவை அண்ணா சொல்வதுபோல் பெற்ற பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பெற்றவர் மனம் படும் வேதனை சொல்லமுடியாதது. மருத்துவர்களின் பண ஆசையினால் நானும் இதை அனுபவித்துள்ளேன்.

    உங்கள் மைத்துனர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். அதிர்ச்சியான விசயம்.
    முதல் ஆசை மிகவும் தேவை, ஆனால் பெற்றோர்களே இதற்குக் தடை சொல்வார்களோ என்று தோன்றுகிறது. இங்கு என் இளையவன் வகுப்பில் வீட்டுப்பாடம் குறைவாக இருந்தது, ஆனால் சென்ற மாதம் நடைபெற்ற ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பில் பல பெற்றோர்கள் (இந்திய, சீன) அதிகமாக்கச் சொல்லிக் கேட்டதால் செய்துவிட்டனர். அட, இங்கேயும் இப்படி மாறச் செய்கிறீர்களே என்று வருத்தப்படத்தான் முடிந்தது.
    அனைத்து ஆசைகளும் முத்தான ஆசைகள். நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      கூட்டுக் குடும்பம் என்ற பந்தம் முடிவுக்கு வந்துவிட்டக் காரணத்தால்,பெற்றோர்களால்,தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள இயலாநிலை, எனவேதான் பிரி.கே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் முக்கிய இடத்தினைப் பிடித்து விட்டன என்று எண்ணுகின்றேன்
      நன்றி சகோதிரியாரே

      நீக்கு
  15. கடவுளைக் காண்பேனா..... நல்ல கேள்வி. நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்வி தான்.

    உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்.

    உங்கள் மைத்துனரின் இழப்பு - ஈடு செய்ய முடியாதது. எனது இரங்கல்களும்.

    பதிலளிநீக்கு
  16. நெகிழ்ச்சியானதொரு பதிவு. நியாயமான கேள்விகள். அவசியமான ஆசைகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. பதிவின் ஆரம்பம் ரொம்ப வருத்தமான நிகழ்வுகளைச் சொன்னது... தங்கள் மைத்துனரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ஐயா... ரொம்ப வருத்தமாக இருந்தது....

    வருத்தங்கள் இருந்தாலும் கில்லர்ஜி அண்ணாவின் அழைப்பை ஏற்று நல்ல ஆசைகளைச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான ஆசைகள்.. எல்லாம் நிறைவடையும்... அது வரைகாத்திருப்போம்...இப்படியான தொடர்பதிவினால் நமது வலையுலகம் மிக உச்சாகமாக உள்ளது.. த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      நண்பர் கில்லர்ஜி வலை உலகிற்கு புதுஇரத்தத்தைப் பாய்ச்சி இருக்கிறார்
      நன்றி நண்பரே

      நீக்கு
  19. தங்கள் மகளுக்கு நடந்தது மருத்துவர்களின் அறியாமை. அவர்கள் சரியாக மருத்துவப்படிப்பைக் கற்காமை. இல்லை பணத்தாசை. நல்ல காலம் நான்காவதாக மருத்துவர் நல்லது செய்துள்ளாரே...

    தங்கள் மைத்துநருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள். 37 வயதே!

    பதிவு மனதைத் தொட்டது.

    தங்கள் ஆசைகள் அனைத்தும் நியாயமானவையே. நடந்தால் நல்லதே!

    பதிலளிநீக்கு
  20. உங்கள் மைத்துனரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
    ஆசைகள் நிறைவேறட்டும்

    பதிலளிநீக்கு
  21. நல்ல மருத்துவர்கள் இன்று மிகவும் குறைவாகவே உள்ளனர். அரசு மருத்துவர்கள் வேலையில் சுணக்கம் காட்டுகிறார்கள். தனியார்துறையில் பணியாற்றும் மருத்துவர்களோ தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக நம்மிடம் பணம் பிடுங்கும் எந்திரங்களாக மாறிவிடுகிறார்கள்....இளம் வயது மரணங்கள் நிச்சயம் நெஞ்சை நடுங்க வைப்பவையே. ஆனால். இறைவனது இருப்பை அல்லது இல்லாமையை இந்நிகழ்வுகள் மட்டுமே தீர்மானித்து விட முடியாது. (2) பேரிடர்களின் போது உயிர் பிழைத்தவர்கள் ' இறைவன் அருளால் பிழைத்தோம்' என்பார்கள். அதே விபத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டிருந்தால் அவர்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் ? மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா- "என்றார் கவியரசர். (3) மைத்துனரை இழந்து வாடும் தங்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல மருத்துவர்கள் இன்று மிகவும் குறைவாகவே உள்ளனர். அரசு மருத்துவர்கள் வேலையில் சுணக்கம் காட்டுகிறார்கள். தனியார்துறையில் பணியாற்றும் மருத்துவர்களோ தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக நம்மிடம் பணம் பிடுங்கும் எந்திரங்களாக மாறிவிடுகிறார்கள்....இளம் வயது மரணங்கள் நிச்சயம் நெஞ்சை நடுங்க வைப்பவையே. ஆனால். இறைவனது இருப்பை அல்லது இல்லாமையை இந்நிகழ்வுகள் மட்டுமே தீர்மானித்து விட முடியாது. (2) பேரிடர்களின் போது உயிர் பிழைத்தவர்கள் ' இறைவன் அருளால் பிழைத்தோம்' என்பார்கள். அதே விபத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டிருந்தால் அவர்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் ? மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா- "என்றார் கவியரசர். (3) மைத்துனரை இழந்து வாடும் தங்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா16 நவம்பர், 2015

    //இலங்கையில் ஒரு இனமே, நமது தொப்புள் கொடி உறவே, சற்றேறக்குறைய அழிக்கப் பட்டு விட்டதே. அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற, அப்பாவித் தமிழச்சிகளின் கற்பைக் காப்பாற்ற, தெய்வம் தன் சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுத்து, கும்பகர்ணனைப் போல் உறங்கி அல்லவா போய்விட்டது.//

    அட போங்கள் ஐயா, இதை பார்த்து உங்கள் மனம் மாறி விட்டது. ஆனால் போர் முடிந்து அந்த வெடிச் சத்தம் கூட காதை விட்டு போகவில்லை அடுத்த சில மாதங்களிலேயே நல்லூர் கந்தசுவாமிக்கும் மற்றும் இன்னபிற யாழ்ப்பாணத்திலுள்ள கோயில்களுக்கும் தங்கத் தேர் இழுத்து அப்படியே பக்தியில் உருகியவர்கள் நாங்கள். ஆனால் பள்ளிகூடங்களும் பசித்த வயிறுகளும் அரசாங்க உதவிக்காக இன்னும் காத்திருக்கின்றன.
    என்ன குருட்டு பக்தியோ ?

    நிற்க, தமிழ்நாட்டு சொந்தங்களின் உண்மையான அன்பும் அக்கறையும் எங்களை நெகிழ வைக்கிறது.
    இதற்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?
    மிக்க நன்றி ஐயா

    - ஈழத்தில் இருந்து ஓர் தமிழச்சி

    பதிலளிநீக்கு
  24. மிகுந்த மனச்சுமையுடன் இந்தப் பதிவினை அளித்திருக்கின்றீர்கள்.. வாசிக்கும் போது நானும் மனம் வருந்தினேன்..

    துயருற்றிருக்கும் தங்கள் குடும்ப்த்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் தேறுதலையும் காலம் அளிக்கட்டும்..

    கடந்த சில நாட்களாக - திருச்செந்தூர், உவரி என்று திருக்கோயில்களில் தரிசனம்.. எனவே தான் தாமதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன ஐயா
      தங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  25. மனம் கனக்கத் தான் செய்கிறது, அது எப்படி சகோ, எவ்வளவு வேதனைகள் உள்ளுள் இருந்தாலும், வெளியில் சிரித்தப்படி ,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அழகான ஆசைகள் அத்தனையும் நிறைவேற வேண்டும்
    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  27. ஆசைகள் யாவும் நிறைவேற வேண்டும்!

    பதிலளிநீக்கு
  28. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு நிம்மதி இழப்புதான். வாழும் வயதில் மரணத்தை தழுவுவது மனதை தேற்றவியலா இழப்பு. இந்த ஒரு மாதத்தில் அதிலிருந்து மீண்டாலும் நினைவுகள் தொடரதான் செய்யும். அதைதான் இங்கும் காண்கிறேன்.

    மற்றபடி

    பட்டியலை நிறைவேற்ற மீசை கடவுளா?

    அவரிருக்கும் நாட்டு கடவுள் வேறு. அப்புறம் கடவுள்களுக்குள் சண்டை வேறு வந்துவிடும் கரந்தையாரின் கோரிக்களை நிறைவேற்ற

    நமது தேவைகளை நாம்தான் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். நமது உரிமைகள் எனில் நாம்தான் மீட்க வேண்டும்.

    கடவுள் ??????????!!!!!!!!!!!!!!!!!!!!.......................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      கடவுள் கேள்விக்குறிதான்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. என் இனிய நணபர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தங்களின் மனதில் எரிமலைக் குழம்பாக தகித்து கொண்டிருக்கும் பல வருத்தங்களில் சிலவற்றினை மட்டும் இங்கு சீற்றத்துடன் வெளியேற்றி விட்டு சற்றே ஆசுவாசம் அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஏறத்தாழ இருபத்தி மூன்று ஆண்டுகள் உங்களுடன் இணைந்திருப்பவன் என்பதால் உங்கள் உள்ளம் சற்றேனும் அறிந்தவன் நான். ஓடி ஓடி கோவில் சென்று தெய்வத்தை வணங்கும் குணம் கொண்டவர் தாங்களே தெய்வம் இருக்கிறதா? என்று வினவுவதற்கான காரணத்தினையும் அறிந்தவன் நான் அதே கோபம் என்னுள்ளும் எழுந்து என்னை தகிக்கிறது.
    தாங்கள் குறிப்பிட்டதைப் போல கோவிலுக்கு சென்று தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்பவர்கள், மறு நொடியே பிறருக்கு இன்னல் செய்யும் செயலினை செய்வதனைக் காணும் பொழுது கண்டிப்பாக கொதிப்பு ஏற்படவே செய்யும். உண்மையிலேயே கடவுள் இருக்கிறார் என்று அந்த பக்தர்கள் நம்பினால் கடவுள் நமக்கு தண்டனை கொடுத்து விடுவார் என எண்ணி பிறருக்கு துன்பம் விளைவிக்க அஞ்சுவார்கள்.
    மருத்துவராக பணியேற்று பின் குழந்தைகள் கல்வி உளவியல் நிபுணராக மாறிய மாண்டிசோரி அம்மையார் அவர்கள் பள்ளியில் சேர்க்கப் படும் குழந்தைகள் ஒரே நேரத்தில் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் சிரமம் கொள்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து கண்டறிந்து கிண்டர் கார்டன் முறையினை உருவாக்கி அதில் வாசித்தலுக்கு மட்டுமே இடம் அளித்தார்கள். அக்குழந்தையின்( 4 வயது) கை தசைகள் எழுத்துப் பயிற்சிக்கு ஏற்றது அல்ல என்பதையும் அழுத்தம் திருத்தமாக தன்னுடைய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார்கள்.ஆனால் பணம் பெருக்கும் உள்ளம் உடையோரிடம் பெரும்பாலும் கல்வி நிலையங்கள் இருப்பதாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ( ஏற்கனவேதான் கூட்டுக் குடும்பத்திற்கு வேட்டு வைத்துவிட்டோம்) போன்ற காரணங்களினால் கே ஜி,. என்பது முதலில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆனது, பிறகு ப்ரீ கே ஜி ஆகி க்ரெச் வரை இந்த சமூகம் சென்று விட்டது.
    குழந்தைப் பருவத்தை முழுவதும் அனுபவிக்காத சமூகத்தை உருவாக்கி என் மகன்/மகள் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், ஆசிரியர், காவலர், அலுவலர் என்று வாய் நிறைய கூற விரும்பும் நம் சமூகம் என்றாவது ஒரு நாள் என் மகன்/மகள் ஒரு சிறந்த மனிதன் என பெருமையுடன் கூற முற்படுகிறதா? என்பதே நம் ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  31. உங்கள் எழுத்து மனதை வருடியது கவலை தான்...உங்கள் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு