25 நவம்பர் 2015

புத்தகத்தைக் காதலித்தவன்


ஆண்டு 1823, ஒடிசலான தேகம். உட்புறம் சுருங்கி ஒட்டிய கண்ணங்கள். குழி விழுந்த கண்கள். அழுக்கடைந்த உடை.

     அச்சிறுவனின் வயது பதினான்குதான். ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. ஆனாலும் ஆர்வம் என்னவோ படிப்பதில்தான்.

     அச்சிறுவனுக்கு ஓர் ஆசை. தணியாத தாகம். விம்ஸ் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றினை, எப்படியாவது படித்துவிட வேண்டும் என்னும் தாகம்.


      விலை கொடுத்து வாங்க வழியில்லை. கடன் வாங்கித்தான் படித்தாக வேண்டும். ஆனால் அந்த புத்தகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

     யோசித்துப் பார்த்தான். ஜோஸய்யா கிராஃபோர்டு மனக் கண்ணில் தோன்றினார். இவர் ஒரு விவசாயி. பணக்காரர், ஆனாலும் படிப்பாளி.

     நிச்சயம் இவரிடம் இந்த புத்தகம் இருக்கும் என்ற நம்பிக்கை, அச்சிறுவனின் மனதில் துளிர் விட்டது.

     மறுநாள் அதிகாலையிலேயே, கிளம்பி நடக்கத் தொடங்கினான்.

     பன்னிரெண்டு மைல் தூரம் நடந்தாக வேண்டும். நடந்தான். அந்த விவசாயியைச் சந்தித்தான். அச்சிறுவன் எதிர்பார்த்தபடியே அப்புத்தகம் அவரிடம் இருந்தது.

     சிறுவனின் புத்தக ஆர்வத்தைக் கண்ட விவசாயி, வியந்துதான் போனார். பணம் கடன் கேட்டு வருபவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். புத்தகம் கடன் கேட்டு வந்த முதல் ஆள் நீதான். அதுவும், இவ்வளவு சிறு வயதில், இவ்வளவு தொலைவு நடந்து வந்திருக்கிறாயே? தருகிறேன் என்றார். தந்தார்.

    ஒரு பெரும் புதையலைக் கண்டெடுத்த உணர்வு அச்சிறுவனுக்கு. இரு கரங்களையும் நீட்டி, பெற்றுக் கொண்டான்.

     வீட்டினை அடைய, திரும்பவும் பன்னிரெண்டு மைல் தொலைவு நடந்தாக வேண்டும். நடந்தான் நடந்தான், படித்துக் கொண்டே நடந்தான்.


வீட்டினை அடையவும், இருள் சூழவும் சரியாயிருந்தது. விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்துக் கொண்டு, அதன் அருகிலேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினான்.

     நடு இரவு நெருங்க நெருங்க, கண்கள் அவனையும் அறியாமல் மூடி, மூடி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கின.

     வேறு வழியில்லை உறங்கித்தான் ஆக வேண்டும். சிதிலமடைந்திருந்த, தன் மர வீட்டுச் சுவற்றின், ஒரு பொந்தில், புத்தகத்தைச் சொருகி வைத்துவிட்டு உறங்கத் தொடங்கினான்.

      இருபத்து நான்கு மைல் நடந்த களைப்பு. புத்தக ஆர்வத்தில் உணவினைக் கூட உண்ண மறந்ததால் உண்டான அசதி. படுத்தவன், நன்றாக விடிந்த பிறகுதான் எழுந்தான்.


எழுந்தவன் புத்தகம் சொருகி வைத்திருந்த பொந்தைப் பார்த்ததும் அதிர்ந்துதான் போனான். இரவு பெய்த மழை, சுவற்றின் பொந்திற்குள் நுழைந்து, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நனைத்திருந்தது.

      மெதுவாக கையை விட்டு புத்தகத்தை வெளியே எடுத்தான். படபடக்கும் மனதுடன் வீட்டை விட்டு வெளியே வந்து, சூரிய ஒளியில் காய வைத்தான்.

       படிக்காமல் மீதமிருந்த பக்கங்களை, கடும் வெயிலில் அமர்ந்து, காய வைத்துக் கொண்டே படித்தான்.

     புத்தகம் முழுதாய் காய்ந்த போது, அப்பளம் போல் உப்பி, உருவே மாறியிருந்தது.

     என்ன செய்வது என்று தெரியவில்லை. புத்தகத்தை எடுத்துக் கொண்டு பன்னிரெண்டு மைல் நடந்தான். ஜோஸய்யாவைச் சந்தித்தான்.

ஐயா, மன்னிக்க வேண்டும். நேற்று இரவு பெய்த மழை, புத்தகத்தை பாழ்படுத்தி விட்டது.

இனி இப்புத்தகம் எனக்கு வேண்டும். அதற்குரிய பணத்தை எடு என்றார்.

ஐயா, தங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை, ஆனாலும் உடலில் வலு இருக்கிறது. வேலை கொடுங்கள், கூலியை எடுத்துக் கொள்ளுங்கள்.

     அடுத்த மூன்று நாட்கள், விவசாயியின் வீட்டிலேயே தங்கினான். அவர் வயலில் வேலை பார்த்தான்.

      நான்காம் நாள். அச்சிறுவனின் முகமெங்கும் ஓர் மகிழ்ச்சி. இனி இப்புத்தகம் எனக்குச் சொந்தம், எனக்கே சொந்தம். புத்தகத்தை மார்போடு அணைத்தபடி, மகிழ்வோடு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நண்பர்களே, இச்சிறுவன் படித்த புத்தகம் என்ன தெரியுமா?
விம்ஸ்
என்பவர் எழுதிய
ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு.



இச்சிறுவன் யார் தெரியுமா?
பின்னாளில்,
வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் குடியேறிய,
அமெரிக்காவின்
16 வது ஜனாதிபதி
ஆபிரகாம் லிங்கன்.





68 கருத்துகள்:

  1. முதன்முதலாக ஆப்ரகாம் லிங்கனின் பெயர் வியட்நாம்வீடு திரைப்படம் பார்க்கும்போது மனதில் பதிந்தது. அதில் தந்தை, தன் மகனிடம் ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்படி அறிவுரை கூறுவார். அந்த வசனத்தைக் கேட்ட நான் உள்ளூர் நூலகத்தில் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அன்றே என் மனதில் பதிந்தார் இவர். அருமையான சாதனையாளரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. No wonder!Books are greatest transformers of human mind,provided one dwells upon what he reads.Aravindan,hero of Na.Parthasarathy's novel "Kurinji malar" was my mentor during my adolescent days and transformed me what I am today.
    Thanks Mr.Jayakumar

    பதிலளிநீக்கு
  3. புத்தக ஆர்வம்! ரசித்தேன் பதிவை.
    தம +1

    பதிலளிநீக்கு
  4. ஆம். நண்பரே! பிறருடைய வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் நாமும் வரலாறு படைக்க முடியும். மிக நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. நான் இப்படி புத்தகம் கடன் கேட்க நடந்ததில்லை. ஆனால் நூல் நிலையத்திற்கு நடந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. படிப்பினையூட்டும் பதிவு..
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  7. படும் கஷ்டங்கள் மனிதனை உயர்த்தும் என்பதற்கு நேரடி சாட்சியாய்,.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
    த,ம 3

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான சாதனையாளர் பற்றிய அறியாத தகவலுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  9. அய்யா வணக்கம். அரிய தகவல், ஆர்வத்தைத் தூண்டும் நடை. எனக்கும் இதுபோலொரு தகவல் உண்டு என் 9ஆம் வகுப்பின்போது பி.ஜி.கருத்திருமன் தொகுத்த கம்பராமாயணம் (ஒருபக்கம் பாடல் எதிர்ப்பக்கம் பொருள் என 1000பாடல்களில் கம்பன்) நூலகநூலை எங்கள் வீட்டு “சிம்னி“விளக்கு கொஞ்சம் தின்றுவிட..அப்பாவிடம் அழுது கேட்டு நூலகத்தில் கொடுத்து நூலையே வாங்கிக் கொண்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது, மறக்க முடியாத பதிவு அய்யா நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிம்னி விளக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும் ஐயா
      நன்றி

      நீக்கு
  10. நல்ல புத்தகம் ஒருவரை சிறந்தவராக சாதனையாளராக மாற்றும் என்பதற்கு மிக சரியான உதாரணம்... இன்றைய மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும்.

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  11. ஆபிரகாம் லிங்கனின் வெற்றியின் ரகசியம் இதுதானா :)

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை சகோ.. நம்மைப் போல் ஒருவர் ( புத்தகம் படிப்பதில் :)

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு சகோ, வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. இந்த நிகழ்வைப் படித்திருக்கின்றோம் என்றாலும் தமிழில் உங்கள் அழகிய தமிழில் வாசித்து மகிழ்ந்தோம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் புத்தகம் வாசிக்கத் தூண்டினால், புத்தகங்களைப் போல நல்லதொரு நண்பன் இல்லை எனலாம். லிங்கனி வெற்றி ரகசியமும் அதுதான்..

    பதிலளிநீக்கு
  15. லிங்கன் பற்றிய அறிய பதிவு....தங்களைப்போன்றோர்களால் தான் இதனைக்கொண்டுவர முடியும்.....போடும் பதிவுகள் யாவும் பொக்கிஷங்கள்...

    பதிலளிநீக்கு
  16. அறியாத அரிய தகவல் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  17. அப்புத்தகமே அவருடைய வாழ்க்கைப் பயணத்தை மாற்றி இருக்கிறது அரிய விடயம் ஒன்று அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே.. வாழ்த்துகள்

    ஒரு புத்தகம் மனிதனுடைய வாழ்க்கையை மாற்றி விடும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு காரணம் என்னையும் ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் எண்ணங்களை உருவாக்கி இருக்கின்றது இது கடந்தகால உண்மை.

    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  18. சாதனையாளத் தகவல்
    மிக அருமை.
    மிக்க நன்றி
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு அய்யா...பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. வியப்பான சம்பவங்கள்!
    ]எனினும் உண்மை வரலாறு!~
    தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. அறியாத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  22. ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வை சுவைபடச் சொன்னமைக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  23. லிங்கனைப் பற்றிய அரிய தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அறியாத அரிய தகவல், பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் !

    தெருவிளக்கில் படித்தவர் ஆபிரகாம் லிங்கன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அவர் இப்படி ஒரு புத்தகப் புழுவாய் இருந்திருப்பார் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  27. அரிய தகவல் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வரலாற்றை மாற்றி எழுதிய சக்தி படைத்தது அல்லவா புத்தகங்கள். அறியாத அரிய செய்தி யை சுவையாக தந்ததமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. சொல்லிய விஷயமும்
    சொல்லிச் சென்றவிதமும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. ஆபிரகாம் லிங்கனின் புத்தக ஆர்வம் பற்றிய இந்தப் பதிவு படிப்பவர்களையும் புத்தகப் பிரியர்களாக்கிவிடும், சகோதரரே.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  31. வாசிப்பு அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்திருக்கின்றது என்பதற்கு ஆபிரகாம் லிங்கனின் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக அமைகின்றது. வளரும் பயிரை முளையில் தெரியும் என்பார்களே. அவரது தேடலின் ஆர்வம் அவரை ஜனாதிபதியின் ஸ்தானத்திற்கு உயர்த்தியிருக்கின்றது

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள ஜெயகுமார்

    வணக்கம். என்னுடைய சிறுவயதில் என் அப்பா அறிமுகப்படுத்திய தலைவர்களில் ஒருவர் லிங்கன். இந்த கதையை நான் கேட்டிருக்கிறேன், இதுபோன்ற பல கதைகளை இரவில் எனக்கும் என்னுடைய தம்பிக்கும் சொல்வார். இப்போது என் அப்பா இல்லை. ஆனால் இந்தக் கதையும் அவரின் நினைவும் இருக்கின்றன. உங்களின் இந்த பதிவால் என்னுடைய அப்பாவின் நினைவு வந்துவிட்டது. இது மட்டும் அல்ல. தாமசு ஆல்வா ஏடிசன் ஒரு பைண்டிங் கடையில் வேலை பார்த்தபோது ஒரு ஆற்றைக் கடந்து பைண்டிங் செய்த புத்தங்களைக கொடுக்க செல்லும்போதும் பைண்டிங் செய்ய எடுத்து வரும்போதும் புத்தகங்களைப் படித்துவிடுவாராம். இப்படி பல அரிய கதைகளை என் அப்பா சொல்லியிருக்கிறார். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  33. இக்கதையை என் மகன் சொல்ல அறிந்துகொண்ட பேறு எனக்கு, அண்ணா :)
    உங்கள் நடையில் இன்னும் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    ஒரு அற்புதமான மனிதனின் வெற்றி இரகசியத்தினை மிக இலகுவாக வாசிப்பவர்களின் மனதில் பதியும் அளவிற்கு பதிவிட்டது மிக அழகு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு