15 அக்டோபர் 2015

புதுகை சங்கமம்




     கடந்த இரண்டு மாதங்களாக, என்று வரும், எனறு வரும் என்று நாள் காட்டியின் தாட்களைப் பார்த்துப் பார்த்து, ஏங்கிக் கொண்டிருந்த, அந்த நாள், அந்த இனிய நாள், வாழ்வின் மறக்க இயலா சிறந்த நாள், கடைசியில் வந்தே விட்டது.

     11.10.2015 ஞாயிற்றுக் கிழமை.

     காலை 7.00 மணி. கரந்தையில் காத்திருந்தது அந்த வேன். இராகவேந்திரா வேன்.

      முனைவர் ஹரணி, முனைவர் பா.ஜம்புலிங்கம், குடந்தையூர் சரவணன் மற்றும் அவரது அருமை மகன், கும்பகோணம் திருநீலக்குடி புலவர் திரு உலகநாதன் மற்றும் அவரது நண்பர், கரந்தை சரவணன் மற்றும் அவரது அன்பு மகன், நான் மற்றும் எனது குடும்பத்தினர், உறவினர்கள் என 15 பேர் வேனில் புறப்பட்டோம்.


     ஒரு திருவிழாவிற்குச் செல்லும் உணர்வு அனைவரிடமும்.

     காலை 9.00 மணி. புதுகை, ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்.

     தெருவெங்கும் பதாகைகள், வாருங்கள், வாருங்கள் என வரவேற்கும் பதாகைகள்.

     மக்கள் மன்றத்தில் காலடி வைத்த, அடுத்த நொடியே, மனதில் மகிழ்ச்சி, அலைமோதி ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.


வலைத் தமிழ் உறவுகளே
வருக வருக

     வலைப் பதிவர்களின் மாவட்டங்கள் ஒவ்வொன்றாய் வரவேற்புப் பதாகையில் அச்சேறி வரவேற்கும் காட்சி.




பதிவர்களின் பெயர் பதிவு, நூல்கள் விற்பனைப் பிரிவு, அலங்கார மேடை, நீண்ட நெடிய விழா அரங்கு என எங்கு நோக்கிலும் பளபளக்கும் சீருடையில் புதுகை ஆண் பதிவர்கள். உள்ளத்தின் வண்ணத்தினை வெளிச்சமிட்டுக் காட்டும் வெண் உடையில் புதுகையின் பெண் பதிவர்கள்.

     ஆலங்குடியைச் சார்ந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் உருவான, வலைப் பதிவர்களின் கவிதை ஓவியங்கள் அரங்கு முழுதும் நிரம்பி, விழா அரங்கிற்குப் புதுப் பொலிவை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தன.

      கண் கொள்ளா காட்சி. முதற் பார்வையிலேயே, விழாவின் வெற்றி, முகம் காட்டிச் சிரித்தது.

     நண்பர் திரு கஸ்தூரி ரங்கன் அவர்களும், சகோதரி திருமதி கீதா அவர்களும் முகம் மலர வரவேற்றனர்.

      வாருங்கள், வாருங்கள், முதல் தளத்தில், காலை விருந்து காத்திருக்கிறது, சென்று உண்டு வாருங்கள், வாருங்கள் என வரவேற்றனர்.

சார் வாருங்கள், எப்படி இருக்கிறீர்கள், என்னைத் தெரிகிறதா?

     குரலில்தான் எத்தனை மகிழ்ச்சி. முதன் முதலாய் பார்க்கிறேன். ஆனாலும் பெயர் மனதில் மின்னலாய் வெட்டியது.

       தில்லையகத்துப் பதிவர் சகோதரி கீதா அவர்கள்தானே?

       அவரேதான்.

     அரங்கினைக் காணக் காண, அரங்கினில் பதிவர்களைக் காணக் காண, மனதில மகிழ்ச்சி வெள்ளம்.
     

தில்லையகத்து நண்பர் துளசிதரன் அவர்களைக் கண்டேன். குறும் படங்களில் மட்டுமே பார்த்த உருவம், கண் முன்னே வந்தபோது, கரம் பற்றி மகிழ்ந்தேன்.

     தினத் தந்தியில் தினம் ஒரு தகவல். 2003 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தினம், தினம் ஒரு புதுத் தகவலை வாரி வழங்கி வருபவர். அலைபேசியில் குரலைக் கேட்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன். முதன் முதலாய் நேரில் பார்க்கிறேன்.

       4500 நாட்கள், 4500 தகவல்கள். எளிமையாய், பழகுதற்கு இனியவராய் திரு எஸ்.பி.செந்தில் குமார்.
     

மூங்கில் காற்று திரு டி.என். முரளிதரன் ஐயா, சகோதரி எழில், கோவை ஆவி ஒவ்வொருவராய் பார்க்கிறேன்.

      கேலியும் கிண்டலுமான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர், அமைதியாய் அமர்ந்திருந்தார் திரு பழனி. கந்தசாமி ஐயா.

       அருகிலேயே மூத்த பதிவர் புலவர் இராமாநுசன். மதுரைக் கவிஞர் ரமணி. நண்பர் தமிழ் வாசி பிரகாஷ்

             தமிழின் இனிமையைத் தன் கவினுரு சொற்களால் கவிதையாக்கிக் காட்சிக்கு வைக்கும் பாவலர் தென்றல் சசிகலா.

      நாள்தோறும், கிழமைகள் தோறும், பொங்கல் ஆனால் என்ன, தீபாவளி ஆனால் என்ன, எந்த பண்டிகை வந்தால் என்ன, எந்நாளும், என் பதிவே முதற் பொங்கல், என் பதிவே முதல் வெடி, என நாளும் ஒரு பதிவினை சிந்திக்க, வாய்விட்டுச் சிரிக்க பதிவேற்றி வரும் திரு பகவான் ஜி.
     

வலைப் பதிவர் கையேடு என்னும் மகத்தான ஆவணத்திற்கு, தன் உணவு மறந்து, உறக்கம் துறந்து, உடலும் உயிரும் கொடுத்த, நண்பர் ஸ்ரீ மலையப்பன் அவர்களை முதன் முதலாய் கண்டேன்.

ஜன்னல் ஓரத்தில் பெங்களூரின் மூத்த பதிவர் திரு  ஜி.எம்.பி ஐயா அவர்கள். ஐயா அவர்களுக்கு வணக்கம் கூறி மகிழ்த போது, மேடையில் இருந்த ஒலி பெருக்கியின் வழி, மிதந்து வந்தது அந்தக் குரல்.

      கரந்தை ஜெயக்குமார் அவர்களே, பிறகு போட்டோ எடுத்துக் கொள்ளலாமே

      திரும்பிப் பார்த்தால், கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஒலிப் பெருக்கியின் முன் நின்றிருந்தார்.

       கவிஞருக்கு இங்கிருந்தே ஒரு வணக்கம் கூறி இருக்கையில் அமர்ந்தேன்.

      விழா தொடங்கியது.
     


வலைப் பதிவர் கையேடு வெளியீட்டு விழா, ஐவகைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள், பதிவர் அறிமுகங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், இடையிடையே, நண்பர் மகா.சுந்தர் அவர்களின் புதல்வி செல்வி சுபாஷினி அவர்களின் தேனிசைக் குரலில் செவிக்கு உணவளிக்கும், மனதிற்கு இதமளிக்கும் பாடல்கள்.


தமிழ் விக்கிப் பீடியாவில்
250 பதிவுகளை அசராமல், தளராமல் பதிவற்றம் செய்தமைக்காக,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவரகளுக்குப்
பாராட்டு,
திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு
வலைச் சித்தர்
என்னும் சீர்மிகு பட்டம்.

கணினி தமிழில் பிழை திருத்தம் செய்யும்
நாவி மற்றும் வாணி
என்னும் மென் பொருட்களைக் கண்டு பிடித்த
மதுரையினைச் சேர்ந்த இளைஞர்
ராஜாராமன் என்னும் நீச்சல்காரன் அவர்களும்,


புதுக்கோட்டை, ஞானாலயா நூலக நிறுவனர்
திருமிகு பா கிருட்டினமூர்த்தி அவர்களும்

சர்வஜித் அமைப்பினைச் சார்ந்த
டாக்டர் ராமதாஸ் அவர்களும்

திரைப்படக் கவிஞர்
தனிக்கொடி அவர்களும்,


சென்னை மூத்த பதிவர்
புலவர் இராமாநுசம் அவர்களும்


மதுரையின் மூத்த பதிவர்
அன்பின் சீனா அவர்களும்

சிறப்பிக்கப் பெற்றனர்

       நேரம் சென்றதே தெரியவில்லை. மதிய விருந்து காத்திருக்கிறது என்றார்கள்.
      



உணவுக் கூடத்தில்தான், உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும், பதிவருமான சகோதரி திருமதி ஜெயலட்சுமி அவர்களைக் கண்டேன்.

     உணவுக் குழுவின் பொறுப்பாளர். பார்த்துப் பார்த்து, சுவைத்து சுவைத்து, ரசித்து ரசித்து, ஒவ்வொரு உணவு வகையினையும், விருந்தினில் சேர்த்திருந்தார்.

      உணவு அருமை. சுவையோ இனிமை.

      நளபாகச் சக்கரவர்த்தினி என்னும் விருதினையேச் சகோதரிக்கு வழங்கி மகிழலாம்.

       புதுகைப் பதிவர்கள் அனைவருமே, ஆளுக்கொரு உணவுப் பொருளுடன், வாளியினை கையில் எடுத்துக் கொண்டு, என்ன வேண்டும், என்ன வேண்டும், போதுமா அல்லது இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமே, இன்னும் கொஞ்சம்தான் சாப்பிடுங்களேன், என உபசரித்து, உபசரித்து, விருந்திற்கு மேலும் சுவை கூட்டினர்.

      சுவைமிகு உணவினை வயிரார உண்டு, களைத்துப் போய் அமர்ந்திருந்தபோது, அலைபேசி அழைத்தது.

      தொடுதிரையை வருடியபோது, ஓர் இன்ப அதிர்ச்சி.

       அபுதாபியில் இருந்து, மீசைக்கார, பாசக்கார நண்பர் கில்லர்ஜி.

      நேரலையில் விழாவினைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விழா அருமை. என்னால் வர இயலா விட்டாலும், என் தங்கை மகன் என் சார்பில், வந்திருக்கிறார், நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் என்றார்.

     பதிவுலகின் இன்பமே இதுதானே. பதிவுலக உறவென்பது இதுதானே.

     மீசைக்கார நண்பரின் குரல் கேட்டு நெகிழ்ந்துதான் போனேன்.

     மீசைக்கார நண்பரின் அன்புக் குரல், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.  அப்பொழுது கண் எதிரே ஓர் காட்சி அரங்கேறியது. ஓர் சந்திப்பு. முன்னாள் மாணவரும், ஆசிரியரும் சந்திக்கும் அற்புதக் காட்சி.
     

ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மாணவரும், அம்மாணவரின் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் சந்தித்த பரவசக் காட்சி.

       இருவருமே பதிவர்கள்.

        முன்னாள் மாணவருக்கு வயது ஐம்பதிற்கும் மேல் இருக்கும். ஓட்டுநராகப் பணியாற்றுபவர். ஆனாலும் வலையில் வித்தகர். தமிழ் தட்டச்சு முறைகளில் புதுமைகள் பலவற்றை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர்.

      முன்னாள் மாணவரின் பெயர் திரு பரமேசுவரன்.

      முனைவர் அ.கோவிந்தராசு அவர்கள்தான் இவரது ஆசிரியர். தமிழ்ப் பூ என்னும் வலைப் பூவின் ஆசிரியர்.

      வலைப் பூ என்னும் வலை, இன்று இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது. இனி இவர்களின் உறவும், நட்பும் என்றென்றும் தொடரும்.



இளைஞர் ஆத்திச்சூடி
      
       முனைவர் அ.கோவிந்தராசு அவர்களின் சிறு நூல். படித்துப் பாருங்களேன் என்று எனக்கு வழங்கினார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன்.

        

சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள்....

         வேலூர் கோட்ட, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 25 ஆண்டு கால வரலாற்றினைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார், ஒரு ஊழியனின் குரல் வலைப் பூவின் பதிவர் திருமிகு எஸ்.ராமன் அவர்கள். நூலினைப் பார்த்த முதல் பார்வையிலேயே, திருமிகு ராமன் அவர்களின் அயரா உழைப்பு கண் முன்னே தெரிந்தது.

           வலைப் பூ வழியே பார்த்துப் பழகிய நான், இன்றுதான் முதல் முதலில் நேரில் சந்திக்கிறேன். முதல் சந்திப்பிலேயே அவர்தம் நூலினை அன்புப் பரிசாகப் பெற்றேன்.


என்றாவது ஒரு நாள்

           ஆஸ்திரேலியாவில் வாழும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் மொழி பெயர்ப்பு நூல். இந்நூலின் பல பகுதிகளை வலைப் பூவில் படித்துப் படித்து வியந்திருக்கிறேன். படிக்கும் பொழுதெல்லாம், என் உள்ளத்திலே, ஓர் ஆசை, பேராசை தோன்றும். என்றாவது ஒரு நாள் நாமும் இது போல் எழுத வேண்டும் என்று.

            புதுகையில் இவர்தம் உறவினர் ஊஞ்சல் வலைப் பூவின் பதிவர் சகோதரி திருமதி கலையரசி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

            கீதா மதிவாணன் தங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று கூறி, என்றாவது ஒரு நாள் நூலினை வழங்கி மகிழ்ந்தார்.

             ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த எளியேனுக்குச் சகோதரியின் அன்புப் பரிசு.

             என்றும் வேண்டும் இந்த அன்பு.
     




பிற்பகல் நிகழ்வில் எனது நூலின் வெளியீட்டு விழா.

       உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில், அரங்கேறியது.

        அண்ணாமலைப் பல்கலைக் கழக, தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் ஹரணி அவர்கள், வித்தகர்கள் என்னும் எனது நூலினை வெளியிட, உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.

        பூமிப் பந்தின் தென் துருவமாம், அண்டார்ட்டிகாவில், ஒன்றல்ல இரண்டல்ல, முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டவரும், வித்தகர்களில் ஒருவருமான, குடியரசுத் தலைவர் விருது பெற்ற, கர்னல் கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
      

தொடர்ந்து நண்பர் ரூபன் அவர்களின் ஜன்னல் ஓரத்து நிலா நூல் வெளியீட்டு விழா அரங்கேறியது.
    

அடுத்து எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் உரையும், பதிவர்களின் கேள்விகளுக்கு எஸ்.ரா அவரகளின் சளைக்காத பதிலும், கேட்டோரின் செவிகளையும், உள்ளங்களையும் குளிரவைத்தன.

மொத்தத்தில
புதுகை சங்கமம்
ஒரு
வெற்றிச் சங்கமம்.





கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களும்,
வலைச் சித்தர், வலைக் கவி திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும்
கண் துஞ்சா புதுகைப் பதிவர்களும்
பாராட்டுதலுக்கு உரியவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள்.
பாராட்டுவோம், போற்றுவோம்


அகம்கண்டு  முகம்காணா  பலரைக்  கண்டேன்-மேலும்
        அவரோடு  உரையாடி மகிழ்வே  கொண்டேன்!
இகம்தன்னில்  பிறந்ததிட்ட  பயனைப்  பெற்றேன்-நாளும்
         இணையத்தால்  இத்தைய  உறவை உற்றேன்!
நகத்தோடு இணைந்திட்ட  சதைபோல்  இன்றே-புதுகை
     நடத்திட்ட பதிவர்விழா  குறையில்  ஒன்றே!
சுகத்தோடு   அனைவருமே  இல்லம்  சென்றார்-பன்முறை
     சொல்கின்றேன்   வணக்கமென  நன்றி !  நன்றி!

                                               புலவர்  சா  இராமாநுசம்