02 அக்டோபர் 2015

வாருங்கள், புதுகையில் சங்கமிப்போம்



கூடுங்கள் பதிவர்களே, அனைவருமே ஒன்றாய் – நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே.
                                  புலவர் சா.இராமாநுசம்

    ஒரு திருமண விழா என்றால், இரு குடும்பத்தினரும், மணமக்களின் நண்பர்களும் உற்சாகம் பெறுவர். ஓடியாடி உழைப்பர்.

     ஓரு ஊரில் ஒரு கட்சியின் கூட்டம் என்றால், அந்த ஊரில் மட்டும், அன்று மட்டும் பரபரப்பு காணப்படும்.

     கட்சியின் மாநாடு என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அக் கட்சியைச் சார்ந்த கட்சிக்காரர்கள் மட்டும் விறு விறுப்புடன் காணப்படுவர்.

     சட்ட மன்றத் தேர்தல் என்றால் தமிழகம் மட்டும் பரபரக்கும்.

     நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்தியா மட்டும் பரபரக்கும். மற்ற நாடுகளோ அமைதியாக உற்று நோக்கும்.


     ஒரு ஊரில், ஒரு திருமண அரங்கில் ஓர் விழா. கூச்சல் போட்டு பழக்கமில்லாத, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கொடி பிடிக்காத, எந்த ஒரு சாதிய அமைப்பிற்கும் ஒத்து ஊதாத, சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தை என்றுமே முடக்கி அறியாத, மனிதர்கள் சங்கமிக்கும் ஓர் விழா.

     ஆனால் இந்த விழாவிற்காக, உலகே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. இந்த பூமிப் பந்தில், சற்றேறக்குறைய 144 நாடுகளில் வாழும் தமிழர்கள், இவ்விழாவினைக் காண, இப்பொழுதே தயாராகி விட்டார்கள். பலர் இந்தியாவிற்கு வர வானூர்திப் பயணச் சீட்டோடு, நாட்காட்டியில் மாறும் தேதிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். மீதமுள்ள தமிழினமோ, கணினியில் விழாவினைக் காண, துடிப்புடனும், ஒருவித தவிப்புடனும் காத்திருக்கிறது.

இணையம் வழி இணையும் தமிழர்கள்
இதயம் வழி இணைவதோடு
இனிய தமிழ் வழியும் இணைய
என் வாழ்த்துக்கள்
என நம்மையெல்லாம், ஏற்கனவே வாழ்த்தி விட்டார் மகா கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

நண்பர்களே,
தமிழ் வழி இணைவோமா
புதுகையில் சங்கமிப்போமா
சங்கமித்துத்தான் பார்ப்போமா
புதுகையை புரட்டிப் போட்டுத்தான் காட்டுவோமா
தமிழுலகையே திரும்பிப் பார்க்கத்தான் வைப்போமா





சங்கமிக்க வேண்டிய நாள்
11.10.2015

சங்கமிக்க வேண்டிய களம்
ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
புதுகை

கவிதை – ஓவியக் கண்காட்சி
பதிவர் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழிசைப் பாடல்கள்
பதிவர் அறிமுகம்
நூல் வெளியீடுகள்
போட்டிகள் பரிசு வழங்கல்
வலைப் பதிவர் கையேடு வெளியிடல்
விருதுகள் வழங்கல்
என திகட்டத் திகட்ட நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன.

உலகறிந்த தமிழ் எழுத்தாளர்
திரு எஸ்.இராமகிருஷ்ணன்

கட்டற்ற தகவல் களஞ்சியமான
விக்கிமீடியாவின்
இந்தியத் திட்ட இயக்குநர்
திருமிகு அ.இரவிசங்கர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா

புதுகை மாநகரினையே, வலையில் வீழ்த்திய வித்தகர்
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள் முருகன்

இவர்களோடு
நீச்சல்காரரும்

மாலையில்
பதிவர்களுக்கு
இன்ப அதிர்ச்சிக்
கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன்
முக்கியமான நண்பர்கள் பலரும்
மேடையேறி முழங்கக் காத்திருக்கிறார்கள்.



கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின்
தலைமையில்
திருமிகு
தங்கம் மூர்த்தி,
இரா.ஜெயலட்சுமி,  மு.கீதா,  ச.கஸ்தூரி ரங்கன்,
பொன்.கருப்பையா,  கு.ம.திருப்பதி,  க.குருநாத சுந்தரம்,
வைகறை,  மீரா.செல்வகுமார்,  ராசி.பன்னீர் செல்வம்,
பா.ஸ்ரீ.மலையப்பன்,  மகா.சுந்தர்,  ஆர்.நீலா,
அ.பாண்டியன்,  மைதிலி,  கா.மாலதி,
த.ரேவதி,  ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன்
சு.இளங்கோ, எஸ்.ஏ.கருப்பையா,  தூயன்,
கார்த்தி,  நாக.பாலாஜி,  சு.துரைக்குமரன்,
நண்பா கார்த்திக்,  சோலச்சி,  சரேஷ்மான்யா,  சிவா.மேகலைவன்
முதலான புதுகைப் பதிவர்களின்
தளரா முயற்சியால், கண் துஞ்சா களப் பணியால்
அலைந்து, அலைந்து
புதுகையினையே
வேர்வையில் நனைத்திட்ட இந்நண்பர்களின்
ஓயா உழைப்பால்
அரங்கேறும்
இந்த நல் விழாவில்,

மேலாடை கூட கசங்காமல், மேடையேறி எனது நூலொன்றினை
வெளியிட இருக்கின்றேன்.

புதுகைக் குழுவினருக்கு
எப்படி
நன்றி சொல்வதென்று
புரியவில்லை, தெரியவில்லை.

நன்றி சொல்ல
தேவையான, போதுமான
வார்த்தைகளும் என்னிடம் சிறிதும் இல்லை.


வித்தகர்கள்
தங்களது துறையில் உச்சம் தொட்ட மாமனிதர்கள்
ஐவரைப் பற்றிய
ஒரு சிறு நூல்.

வித்தகர்களில் ஒருவரான,
கர்னல் பா.கணேசன் அவர்கள்
தலைமையில்,

சோழ நாட்டில், புத்த மதத்தினைத் தேடுதலையே
தன் வாழ்வாக வாழ்ந்து வரும்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்
முன்னிலையில்,

சிறு கதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்
முனைவர் ஹரணி அவர்கள்
வெளியிட,

எனது நண்பரும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான
திரு வெ.சரவணன் அவர்கள்
முதற் படியினைப் பெற இருக்கிறார்.

புதுகையில் சங்கமிப்போம்
வாருங்கள் தோழர்களே.


நண்பர்களே,
ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்
ஒரு செய்தியைச் சொல்ல மறந்து விட்டேன்.

வலைப் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 11.10.2015 ஞாயிற்றுக் கிழமை காலை, எனது குடும்பத்தினரும், முனைவர் ஹரணி அவர்களது குடும்பத்தினரும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களது குடும்பத்தினரும், திரு வெ.சரவணன் அவர்களது குடும்பத்தினரும், மேலும் வலைப் பதிவரும்,
நாவல் ஆசிரியரும், குறும் பட இயக்குநருமான,
குடந்தையூர் சரவணன் அவர்கள் குடும்பத்தினரும்
என
குடும்பம், குடும்பமான
சுமார் 25 பேர்
ஒரு வேனில் புறப்படுகிறோம்.

என்ன நண்பர்களே, தாங்களும்
புதுகை  நோக்கிப்  புறப்படத்  தயார்தானே.

வாருங்கள்
புதுகையில் சந்திப்போம்
பு து கை யி ல்   ச ங் க மி ப் போ ம்.



தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட – ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே – முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே

பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –                                            முதிய
புலவனின் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –                                                வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழி பூண்போம்.
                    
                        புலவர் சா.இராமாநுசம்.