05 செப்டம்பர் 2012

தியாகமும் கல்வியும்


      1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

      பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

             டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் அவர்கள் 1975 ஆம் ஆண்டு, தனது 86 ஆம் வயதில் மறைந்தார். இராதாகிருட்டினன் அவர்கள் மறைந்து 37 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டில் நாம் நிற்கின்றோம். இதோ செப்டம்பர் மாதமும் வந்துவிட்டது.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நான், எனது வகுப்பில் ஆசிரியர் தினத்தினைச் சிறப்பாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தேன்.

     கடந்த 24.8.2012 வெள்ளிக் கிழமையன்று, எனது வகுப்பு மாணவிகளிடம், ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு, நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் நடத்துவோமா? என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம், போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்.

     கட்டுரைப் போட்டியினை 29.8.2012 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கும், பேச்சுப் போட்டியினை, ஆசிரியர் தினத்தன்று காலை 9.30 மணிக்கும் நடத்துவது என்று முடிவாயிற்று.

     போட்டிக்கானத் தலைப்பைக் கூறுங்கள் என்றனர். கட்டுரைப் போட்டிக்கானத் தலைப்பு எனது ஆசிரியர்கள், பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர் இராதாகிருட்டினன் என்றேன்.

     மேலும் மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று, தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில், உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

     நான் தற்பொழுது உங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்து வருகின்றேன், எனது வகுப்பறைச் செயற்பாடுகளைப் பற்றிய நிறை, குறைகளை எழுதுங்கள், நான் எனது பணியினை, இன்னும் செம்மையாகச் செய்ய, எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உங்களின் கருத்துக்களையும் எழுதுங்கள் என்றேன்.

     மாணவிகள் மகிழ்வோடு தயாரானார்கள். 29.8.12 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு, கணித சிறப்புப் பயிற்சி வகுப்பின் போது கட்டுரைப் போட்டியினை நடத்தினேன். எனது வகுப்பில் உள்ள 39 மாணவிகளும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் கட்டுரை எழுதினார்கள். கட்டுரைத் தாட்களுடன் வீட்டிற்கு வந்தேன்.

     வீட்டிற்கு வந்த பிறகு, எனது மனைவியிடம் கட்டுரைப் போட்டி பற்றிக் கூறினேன். மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் பார்க்க எனது மனைவி ஆர்வமானார். குறிப்பாக என்னைப் பற்றி, எனது மாணவியர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் என அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எட்டாம் வகுப்பு பயிலும், எனது மகளும் ஆர்வமுடன் எங்களுடன் வந்து அமர்ந்தார். ஒவ்வொரு கட்டுரையாகப் படிக்கத் தொடங்கினோம்.

     எனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, தாங்களாகவே, சுயமாக எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில்,  7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.

     சிலர் தங்களது குடும்ப நிலையினை மனம் திறந்து எழுதியிருந்தனர். ஒரு மாணவி, எனது அப்பாவுடன், உடன் பிறந்தவர்கள் அனைவரும் படித்து நல்ல வேலையில், நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் எனது அப்பா படிக்காத காரணத்தால், கூலி வேலை செய்து வருகின்றார். போதுமான வருமானமின்றி குடும்பமே தவிக்கும் நிலை உள்ளது. நான் நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு முன்னேறி, எனது  அப்பாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தார். படித்த எங்களின் உள்ளம் உருகியது.

     ஒரு மாணவி, கடந்த ஆண்டுவரை ஆசிரியர்களிடம் பேசப் பயப்படுவேன். ஆனால் இந்த ஆண்டு, தாங்கள் என் வகுப்பிற்கு வந்த பிறகு, எனக்கு அந்த பயம் போய்விட்டது. பாடம் தொடர்பானச் சந்தேகங்களைப் பயமின்றிக் கேட்க முடிகின்றது என்று எழுதியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

     சில மாணவிகள் பள்ளியில் தாங்கள் சந்திக்கும் சில இன்னல்களை எடுத்துக் கூறி, தீர்வு காண வேண்டியிருந்தனர்.

      அனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.

     சிறந்த கட்டுரையினை எழுதிய மூவருக்குப் பரிசு வழங்குவோம் என்ற எண்ணத்துடன் இருந்த எனக்கு, எந்தக் கட்டுரைக்கு முதல் பரிசு தருவது, எந்த கட்டுரைக்கு இரண்டாம் பரிசு தருவது என்பதை முடிவு செய்ய முடியவில்லை. இறுதியில் நானும், எனது மனைவியும் ஒன்பது கட்டுரைகளைத் தேர்வு செய்தோம். ஒன்பது கட்டுரைகளுக்குமே முதல் பரிசு வழங்குவது என்று முடிவு செய்தோம்.

கப்பலோட்டியத் தமிழனின் உண்மைப் படம்
     ஆசிரியர் தினமான இன்று 5.9.2012 புதன் கிழமை காலை, உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பிற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய நண்பர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துச் செய்தியினை, இணையதளத்தின் வே2 எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்பினேன். தொடர்ந்து, நாள்தோறும் பார்வையிடும் வலைப் பூ தளங்களைப் பார்வையிடத் தொடங்கினேன்.

     பேராசிரியர் சுபவீ அவர்களின் வலைப் பூவிற்குச் சென்ற பொழுதுதான் தெரிந்தது, செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, இன்னுமொரு பெருமையும் உண்டு என்பது புரிந்தது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய நாள் இந்நாளாகும். ஆம், இந்நாள் செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளாகும்.

     ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தமைக்காக, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்த செம்மலை மறந்தே போய்விட்டோமல்லவா?

      செக்கிழுத்த செம்மலின் தியாகத்தைப் போற்ற வேண்டிய புனித நாள் அல்லவா செப்டம்பர் 5.

     இனி வரும் ஆண்டுகளில், எனது வகுப்பில், வ.உ.சி அவர்களின் பிறந்த நாளினையும், ஆசிரியர் தினத்தினையும் சேர்த்தே கொண்டாடுவது என்று முடிவு செய்தேன்.

     வகுப்பிற்குச் சென்றவுடன், வ.உ.சி.,அவர்களின் பிறந்த நாளும் இன்றுதான் என்ற செய்தியினையும், வ.உ.சி அவர்களின் வீரமிகு, தீரமிகு போராட்ட வாழ்வு குறித்தும் பேசினேன். திடீரென்று ஒரு சிந்தனை, பேச்சுப் போட்டியுடன், ஒரு ஓவியப் போட்டியினையும் நடத்தினால் என்ன என்று.

     நீங்கள் அனைவரும் ஆசிரியர் தினப் பேச்சுப் போட்டிக்குத் தயராக வந்திருப்பீர்கள். செக்கிழுத்த செம்மலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ஓவியப் போட்டி நடத்தலாமா? கப்பலோட்டியத் தமிழனின் திரு உருவை ஓவியமாக வரையத் தயாரா? என்றேன். மாணவிகள் சற்றும் தயங்காமல் தயார் என்றனர்.

     ஆசிரியர் தினப் பேச்சுப் போட்டியுடன், வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.

தமிழாசிரியை திருமதி ப.உஷா ராணி அவர்களும், சமூக அறிவியல் ஆசிரியை திருமதி  வி. சித்திர பாரதி அவர்களும் நடுவர்களாக அமர்ந்து பேச்சுப் போட்டியினை நடத்தி, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். மடை திறந்த வெள்ளம் போல், மாணவிகள் ஆற்றிய சொற்பொழிவில், வகுப்பறைவே நனைந்தது.

     ஓவிய ஆசிரியரும் நண்பருமான திரு ஜி.கோவிந்தராசு அவர்கள் ஓவியப் போட்டிக்கு நடுவராக இருந்து, சிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.

மாணவியர் நாடகம்
     மாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா. பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நண்பர்களான முதுகலை ஆசிரியர் திரு வெ.சரவணன் அவர்களும், உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் அவர்களும், ஆசிரியை திருமதி வி.சித்திர பாரதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

முதற் பரிசு பெற்ற ஓவியம்
          பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக, மாணவிகள் ஒரு சிறு நாடகத்தினை அரங்கேற்றினார்கள். மாணவிகளுக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது வேறு எங்கேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், சற்றும் மனம் தளராமல், ஆசிரிய ஆசிரியைகளை நாடி தங்களது பிரச்சினைகளைக் கூறி தீர்வு காண வேண்டுமே அல்லாது, தவறாக முடிவிற்குச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் வெகு இயல்பாக, நேர்த்தியாக நடித்து, சிறப்பு விருந்தினர்களின் பாராட்டினைப் பெற்றனர்.


      ஒரு சிறிய வகுப்பறையில் நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி    டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்
நினைவினைப் போற்றுவோம்


    


33 கருத்துகள்:

  1. வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்...

    சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு சார்..

    தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு

  2. ஒருமுறை படித்து விட்டேன். இன்னுமொருமுறை படித்து விளக்கமாக கருத்துரை எழுதுவேன். ஆசிரியருக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஐயா. தங்களின் கருத்துரைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் தினத்தை வித்தியாசமான கோணத்தில், மாணவர்களையும் சிந்திக்க வைத்து அவர்களுடைய எண்ண வெளிப்பாடுகளை வெளிக்கொணர்ந்தமையும், வஉசியை நினைவுகூர்ந்தமையும் பாராட்டத்தக்கது. வித்தியாசமான பாணியில் மாணவர்களை ஒவ்வொரு நிகழ்விலும் ஈடுபட வைக்கும் தங்கள் முயற்சி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை. உங்களுடைய மாணவர்களில் மிகச்சிறந்த ஆசிரியர்களாக வருவார்கள் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

      நீக்கு

  5. உங்கள் இந்தப் பதிவின் மூலம் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினம் செப். 5-ம் நாள் என்று அறிந்து கொண்டேன். செய்திக்கு நன்றி. என் இள வயதில் ஒரு ஆசிரியனாக வர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் குடும்பப் பொறுப்புகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் எனக்கு எதிராக இருந்தன, பொறியியல் என்றால் என்னவென்றே தெரியாமல் அந்தபிரிவில் வாழ்க்கையைத் துவங்கி வளர்ந்தேனிப்போது NO REGRETS. இருந்தாலும் மனங்கவர்ந்த பணியில் ஈடுபடவில்லையே என அவ்வப்போது எண்ணுவதுண்டு.ஆசிரியர்கள் மதிப்பிற்குரியவர்கள். இளம் வயதினரை நல் வழிப் படுதிச் செல்பவர்கள். அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்கள். எப்போதும் நான் மதிக்கும் மேன்மக்கள். நீங்கல் எழுதியுள்ளதைப் படிக்கும்போதும், உங்களால் வனையப் பட்டுவரும் குழந்தைகளின் ஈடுபாடு குறித்துப் படிக்கும்போதும் எனக்கு உங்கள் மே பொறாமை ஏற்படுகிறது. உங்கள் தொழில் பணம் சம்பாதித்துக் கொடுக்காமல் போகலாம் ஆனால் ஏராளமாக நன்மதிப்பைப் பெற்றுக் கொடுக்கும். உங்களுக்கும் உங்களைப் போன்ற ஆசிரியகளுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, தங்களின் கருத்துரையும், பாராட்டும் கண்டு உள்ளபடியே பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் ஐயா. தங்களின் வார்த்தைகள் எனக்கு பெரிய உற்சாகத்தையும், தொடர்ந்து நன் முறையில் பணியாற்ற ஊக்கத்தையும் அளிக்கின்றன.தங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களுக்கு என் மனமார்ந்த மகிழ்வினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

      நீக்கு
  7. செப்டம்பர் 5 தான் வ.ஊ.சி பிறந்த நாள் புதிய தகவல். நல்ல பொருத்தமான பதிவு.ஒரு சிறந்த ஆச்சிரியராய் தாங்கள் விளங்குகிரீர்கள் என்பது தெரியவருகிறது.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.தொடர்க உங்கள் பணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு என் மனமார்ந்த மகிழ்வினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

      நீக்கு
  8. தங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.
    நிஜம் தான், இளைஞர்களின் சக்தி மகத்தானது. உங்களின் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துகள். ஆசிரியர் தினம் பற்றிய இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர் தின வாரத்தில் பொறுத்தமான பதிவு..கல்வியைக் கற்பித்த/கற்பிக்கும் தெய்வங்களுக்கு நன்றி கூறி அவர்களை சிறப்பிப்போம்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

      நீக்கு
  12. வாழ்த்துக்கள்

    அருமையான பகிர்வு - பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

      நீக்கு
  13. அருமையான கட்டுரை. டாக்டர்.இராதாகிருஷ்ணன், வ.உ.சி.,etc. போன்ற தலைவர்களை போன்றவர்களை தலைவர்களாக பெற்ற நாம் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். இந்தியன் என்பதில் பெருமிதமாக உள்ளது. இவர்களுடைய தியாகங்களை நினைத்துப் பார்த்தால் இன்றைய தலைமுறை நிச்சயம் திருந்தும். தங்களது மெச்சத்தகுந்த ஆசிரியப்பணி பாராட்டுக்குரியது. தங்களது மாணவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். ஏதோ பாடம் நடத்தினோமா? பரிட்சை வைத்தோமா என்றில்லாமல் இப்படிப்பட்ட கலைகளின் வளர்ச்சிக்கும் உதவும் தங்களைப் போன்ற ஆசிரியர்கள்தான் இந்தியத் தாய்த்திருநாட்டின் ஒளிவிளக்குகள். வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

      நீக்கு
  14. தங்களிடம் பயிலும் மாணவர்கள் நிச்சயம்
    கொடுத்துவைத்தவர்கள்
    ஆசிரியர் தின விழாவினை
    ஒரு சடங்காக கொண்டாடிக்கொண்டிருக்கும்
    இந்தக் காலச் சூழலில் ஒரு பயனுள்ள உயிர்ப்புடன் கூடிய
    நாளாக மாற்றிய உங்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்
    மனம்கொள்ளை கொண்ட பதிவு
    படங்களுடன் ப்திவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, தங்களின் கருத்துரையும், பாராட்டும் கண்டு உள்ளபடியே பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் ஐயா. தங்களின் வார்த்தைகள் எனக்கு பெரிய உற்சாகத்தையும், தொடர்ந்து நன் முறையில் பணியாற்ற ஊக்கத்தையும் அளிக்கின்றன.தங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

      நீக்கு
  15. ஆசிரிய தோழருக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்,ஆசிரியப் பணியை செம்மைப்படுத்தியும், மாணவ,மாணவிகளின் நலனில் அக்கறையும் அவர்களின் திறனை மேன்மைப்படுத்திய தங்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
    நன்றியுடன்
    க அரிசங்கர்பாபு

    பதிலளிநீக்கு
  16. நான் விஜய் டிவியில் 7C யை பார்த்து வருகிறேன். அதில் வரும் ஆசிரியர் ஸ்டாலின் ஒரு கற்பனை பாத்திரம் என்றுதான் கருதிவந்த எனக்கு உங்கள் செயலை பார்த்ததும் உண்மையிலேயே ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    வாழ்த்துக்கள்! ஒவ்வொரு வருடமும் நான் எனது மகளின் டீச்சருக்கு வாழ்த்து அட்டை கொடுத்து அனுப்பும் போது இதைத்தான் நான் எழுதி அனுப்புவேன் The Best Teachers Teach From the Heart, Not From the Book. அதையே நான் உங்களுக்கும் அனுப்புகிறேன்.

    உங்களைப் போல நல்ல சிந்தனை உள்ள டீச்சர்களால் தான் நம் நாடு இன்னும் திறமையான இளைஞர் இளைஞ்யிகளை கொண்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  17. நன்றி ஐயா. உண்மையிலேயே தாங்கள் கூறும் அளவிற்கு நான் தகுதியானவன்தானா என்பதில் எனக்கு நிறைய ஐயமுண்டு. இருப்பினும் தங்களின் வாழ்த்தும் பாராட்டும், நன் முறையில் பணியாற்ற ஊக்கத்தினை கொடுக்கின்றது. நன்றி

    பதிலளிநீக்கு
  18. நல்லதொரு பகிர்வு! தங்களைப் போல மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகிறார்கள்! சிறப்பான பணி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. உங்களைப் போன்ற நல்லாசிரியர் கிடைக்க மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்....

    ஒரே நாளில் இத்தனைப் போட்டிகள், ஒன்பது மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு, சிறப்பான ஓவியம் எனப் படித்து மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எனது பள்ளி நாட்களில் நான் போட்டிகளில் பங்குகொண்டு பெற்ற புத்தகப் பரிசுகள் நினைவில்.....

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஐயா...
    அன்று எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள்
    ராசேந்திரன் மற்றும் முருகானந்தம்
    அவர்களின் பிம்பத்தைத் தங்கள் உருவில் காண்கிறேன்..
    தங்களைப் போன்ற பல ஆசிரியர்களால் தான்
    இன்று நாளைய சமுதாயம் எனும்
    நல் மாணவர்கள் விதைக்கப் படுகிறார்கள்...
    தொடர்க உங்கள் பணி...
    என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு