23 மார்ச் 2013

கரந்தைத் தமிழ்ச் சங்கம்


          வாழி  பகலோன்  வளரொளிசேர்  ஞாலமெலாம்
          ஆழி  செலுத்துதமிழ்  அன்னையே  வாழியரோ
          நங்கள்  கரந்தைத்  தமிழ்ச்சங்கம்  நாள்நாளும்
          அங்கம்  தழைக்க அமைந்து
-          கரந்தைக் கவியரசு

    
      தமிழர்கள் அனைவரும் போற்றி வணங்கத் தக்க, தமிழ் வழிபாட்டுத் தலமாகவே விளங்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், ஓர் அங்கமாய்த் திகழும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், கடந்த இருபது ஆண்டுகளாக, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான்.

    நான் இப் பள்ளியின் ஆசிரியர் மட்டுமல்ல, இப் பள்ளியின் முன்னாள் மாணவன். என் வாழ்வின் முப்பதாண்டுகளை, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே கழித்திருக்கின்றேன். இனியும் சுவாசம் என்று ஒன்றிருக்கும் வரையில், நேசமாய் என்றென்றும் என் பணியினைச் செவ்வனே தொடர்வேன்.

செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன்
     1925 ஆம் ஆண்டு, சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்று, இன்று வரை, தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரும், தமிழ்ப் பொழில என்னும் தமிழாராய்ச்சித் திங்களிதழின், அச்சுப் பணியினை மட்டுமன்றி, தமிழ்ப் பொழில பதிப்பாசிரியர் குழுவில் ஓர் இடத்தினையும், இன்றைய சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள், எனக்கு வழங்கினார்.
        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சில கட்டுரைகளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்டபோது, அக்கட்டுரைகளை தனியொரு நூல் வடிவில், வெளியிட்டு மகிழ்ந்ததும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிரி திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான, செய்திகளைத் திரட்டி வாருஙகள் என்று கூறி, செலவிற்குப் பணம் கொடுத்து, என்னையும், எனது நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களையும், சென்னை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பியவரும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைத் தொகுத்து எழுதுங்கள் என, என்னை உற்சாகப் படுத்தியவரும், ஊக்கப் படுத்தியவரும் சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினை எழுதுவது என்பது சாத்தியமா? ஒரு தமிழ் மாமலையின் வரலாற்றினை, ஒரு சிறு மடு, ஏட்டில் எழுத முயலலாமா? மெத்தத் தமிழ் கற்ற, தமிழ்ச் சான்றோர்களால் போற்றி வளர்க்கப் பெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றை வரைய, ஒரு கணக்காசிரியன் பேராசைப் படலாமா? என்று எண்ணி எண்ணித் தயங்கியே, ஆண்டுகள் இரண்டினைக் கழித்தேன்.

      நான் பயின்ற சங்கம், என்னை வளர்த்த சங்கம், எனக்கு வாழ்வளித்த சங்கம். இத்தகு சங்கத்திற்கு, இதுநாள் வரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னால் என்ன செய்ய இயலும்? எண்ணிப் பார்த்தேன். சங்கம் பற்றி எழுதுவதை விட, சங்கத்தின் புகழினைப் பறைசாற்றுவதை விட, வேறு என்ன, என்னால் செய்ய இயலும்?

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் வரலாற்றினை, தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்த சங்கத்தின் வீர மிகு வரலாற்றினை, அன்னைத் தமிழைக் காக்க மொழிப் போராட்டத்தினை முதன் முதலில் தொடங்கிய, சங்கத்தின் தீரமிகு வரலற்றினை, தமிழ் மொழியைச் செம்மொழிச் சிம்மாசனத்தில் அமர வைத்திட்ட, சங்கத்தின் செம்மொழி வெற்றி வரலாற்றினை, என்னால் இயன்றவரை ஏட்டில் எழுத முற்படுகின்றேன்.

நண்பர் திரு வெ.சரவணன்
      பிழையிருப்பின், கனிவோடு கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன். செய்திகள் ஏதேனும் விடுபட்டிருப்பின், எடுத்துக் கூறுங்கள், சேர்த்துக் கொள்கிறேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் இத்தொடருக்கு வித்திட்ட, சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களுக்கும், அருமை நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுக்கும், எந்நாளும், என் நெஞ்சில், நன்றியுணர்வு, நீங்காது நிலைத்திருக்கும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றிய, தொடக்க காலச் செய்திகளை, வாரி வழங்கிய,

      கரந்தைத் தமிழ்ச் சங்க பெத்தாச்சி புகழ் நிலையம்
      தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம்
      சென்னை, ஆவணக் காப்பகம்
      சென்னை, கன்னிமாரா நூல் நிலையம்
      சென்னை, மறைமலை அடிகள் நூலகம்
      சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
      சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம்

முதலிய நூலகங்களுக்கும், அவற்றின் நூலகர்களுக்கும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

     எனது நான்காண்டு கால தொடர் முயற்சிக்குப் பின், இதோ, சங்க வரலாற்றின் முதல் அத்தியாயம், தங்களின் கனிவான பார்வைக்குப் படைக்கப் படுகிறது.

     தமிழர்களின் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், சீர்மிகு வரலாறு, இதோ கதிரொளி பட்ட, தமிழ்த் தாமரையாய் மலர்கின்றது.

     மீண்டும் சொல்கிறேன், தமிழ்ச் சிங்கத்தின் சிற்றமிகு கர்ஜனையினை, மொழிபெயர்க்க முயற்பட்ட, சின்னஞ்சிறு முயலின் முயற்சி இது. பொறுத்தருள்வீர்.

     தங்குபுகழ்  செந்தமிழ்க்கோர்  அன்பராகில் அவர்கண்டீர்
     யாம் வணங்குங்  கடவுளாரே

என வாழ்ந்து காட்டிய, சங்கத்தின் முதற்றலைவர், செந்தமிழ்ப் புரவலர், ராவ் சாகிப், தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் அவர்களின் மலர் பாதம் பணிந்து, வணங்கி, என் பணியினைத் தொடர்கின்றேன்.

வாருங்கள் கரந்தைக்கு. சேர்ந்து பயணிப்போம்.


     தமிழ்ச் சங்கங்கள்

           சிங்கத்திற்  சீர்த்தது  வல்  நாரசிங்கம்,  திகழ்மதமா
           தங்கத்திற்  சீர்த்தது  ஐராவதமா  தங்கம்,  விண்சேர்
           சங்கத்திற்  சீர்த்தது  இராசாளி  யப்பெயர்க்  காவலனாற்
           சங்கத்திற்  சீர்த்தது  தஞ்சைக்  கரந்தைத்  தமிழ்ச்சங்கமே


     கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் தொன்மையினைச் சான்றோர் பறைசாற்றுவர். உலகின் முதன் மொழியாகத் தோன்றிய தமிழ் மொழியினைக் காக்கவும், வளர்க்கவும், போற்றவும் தோன்றிய அமைப்புகளே தமிழ்ச் சங்கங்களாகும்.

     தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே, தமிழ்ச் சங்கங்களும் தோன்றி, தமிழ்ப் பணியாற்றி வந்துள்ளன.ஆனால் முதல், இடை, கடை என மூன்று சங்கங்களே தமிழ் வளர்த்ததாக, ஒரு மாயை இன்றைய தமிழுலவில் நிலவி வருகின்றது. உண்மையில் முச் சங்கங்களுக்கு  முந்தியும், பிந்தியும் தமிழ் நாட்டில், தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்துள்ளன.

     கி.மு. 30,000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, தமிழ் வளர்த்து, பின்னர் இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

     அவையாவன,

பகுறுளியாற்றுத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம்  பகுறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரை
காலம் கி.மு.30,000 முதல் கி.மு.16,500 வரை

மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் - குமரிக் கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின்
மகேந்திர மலை
காலம் கி.மு. 16,000 முதல் கி.மு. 14,550 வரை
 
பொதிய மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் -  பொதிய மலை, பாவநாசம்
காலம் - கி.மு. 16,000 முதல்

மணிமலைத் தமிழ்ச் சங்கம்
இடம்- மணிமலை,இது மேருமலைத் தொடரின் 49
கொடு முடிகளில் ஒன்று, ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்கும் தெற்கில் இருந்தது
காலம் கி.மு.14,550 முதல் கி.மு.14,490 வரை

குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்
இடம் - திருச்செந்தூர், இந்நகருக்கு திருச் சீரலைவாய்
என்றும் அலை நகர் என்றும் பெயருண்டு
காலம் - கி.மு.14,058 முதல் கி.மு.14,004 வரை

தலைச் சங்கம்
இடம் - குமரி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு.14,004 முதல் கி.மு. 9,564 வரை

முது குடுமித் தமிழ்ச் சங்கம்
இடம் - கொற்கை
காலம் - கி.மு.7,500 முதல் கி.மு. 6,900 வரை

இடைச் சங்கம்
இடம் - தாம்பிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாட புரம் 
காலம் - கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை

திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றம் பக்கம் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு. 1,915 முதல் கி.மு. 1,715 வரை

கடைச் சங்கம்
இடம் - நான்மாடக் கூடல், மதுரை ஆலவாய் எனப்படும் உத்தர மதுரை
காலம் - கி.மு. 1,715 முதல் கி.பி.235 வரை

வச்சிர நந்தி தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றத்து தென் மதுரை
காலம் - கி.பி. 470 முதல் கி.டிப.520 வரை

      கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண மதத் தலைவரால், சமண மததை வளர்க்கும் பொருட்டு, ஒரு தமிழ்ச் சங்கம் திருப்பரங்குன்றத்துத் தென் மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச் சங்கம் கி.பி.520 வரை செயலாற்றியது.

     வச்சிர நந்தித் தமிழ்ச் சங்கத்திற்குப் பின் தமிழ் மொழியில், வட மொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. தனித் தமிழின் வளர்ச்சி குன்றியது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும். புதிது புதிதாக வட மொழிப் புராணங்கள் தோன்றத் தொடங்கின.

      கி.பி. 520 இல் தொடங்கி, அடுத்த 1381 ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது.

                                              
.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமோ.
----------


இத்தொடருக்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தந்த நண்பர்,

திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை காமராஜ்
அவர்களுக்கு மனமார்ந்த
நன்றியினைத்
தெரிவித்து மகிழ்கின்றேன்

24 கருத்துகள்:

  1. Gud morning sir .Introduction is very nice.I was learned how many Tamil sangam in tamilnadu.thanks sir.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா23 மார்ச், 2013

    நீங்கள் அகம்படியரா? தமிழை வளர்க்கும் சங்கத்தில் சாதி பார்க்கும் இழிநிலை ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ல நண்பரே அல்ல. மேலும் சாதி இரண்டொழிய வேறில்லை என்பதை மனதார நம்புகின்றவன் நான். தங்களின் வருகைக்கு நன்றி. தாங்கள் தொடர்ந்து வருகை தர அன்போடு வேண்டுகிறேன்.

      நீக்கு
  3. தொடருக்கான முகப்பு ஓவியம் அழகு! இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், தெரிந்து கொண்டேன். அரிய தகவல்கள் தொடர்க! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மட்டில்லா மகிழ்வினை அளிக்கின்றது, தொடர்ந்து வருகை தர அன்போடு வேண்டுகின்றேன். நன்றி

      நீக்கு

  4. படிக்கத் துவங்கி விட்டேன். தமிழ்ச் சங்கங்களின் வரலாறு நன்று. ஆனால் அவற்றின் காலங்கள்.......? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. கோவையினைச் சார்ந்த திருமந்திரமணி, துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் அவர்கள் 1949 ஆம் ஆண்டிலேயே, காலவரையறையுடன் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்னும் பெயரில் தனியொரு நூலினை வெளியிட்டுள்ளார். அந்நூலின் மறு பதிப்பு 2004 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் கி.மு.30,000 ஆண்டிலிருந்து நடை பெற்ற தமிழ்ச் சங்கங்கள் ,அரசர்களின் பெயர்கள், தமிழ்ச் சங்கத்தில் இருந்த புலவர்களின் பெயர்கள், இயற்றப்பெற்ற நூல்கள், பல்வேறு பாடல்களைச் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.
      வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
      பகுருளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
      குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
      வடதிரைக் கங்கையும் இமயமும் கொண்டு
      தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
      போன்ற சிலப்பதிகார பாடல் வரிகள் மற்றும் பல சங்க இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
      நான் இந்நூலில் இருந்து, சங்கங்களின் பெயர்களையும், காலங்களையும், இடங்களையும் மற்றும் எடுத்துக் கூறியுள்ளேன் அய்யா. தொடர் வருகை தர அன்போடு வேண்டுகின்றேன். நன்றி

      நீக்கு
  5. சிறப்பான ஆரம்பம் ஐயா...

    மனதில் ஆரம்பத்தில் தோன்றும் சிறிய தடுமாற்றத்தை தவிர்த்து, முதலில் அனைவரையும் குறிப்பிட்டு ஆரம்பித்தது அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நிறைய அறிந்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு வேண்டுகின்றேன்

      நீக்கு

  6. வணக்கம்!

    இன்பத் தமிழின் செல்வரென
    இயங்கும் இனியா் இராமநாதா்!
    துன்பம் நீங்கும் அரும்பணியைத்
    தொடா்ந்தே ஆற்றக் கண்கின்றேன்!
    அன்பா் நணபா் சரவணனின்
    அகத்தை வண்ணப் படம்காட்டும்!
    என்றும் கரந்தைச் செயகுமார்
    எழுதும் எழுத்துத் தமிழ்இல்லம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும், இத் தொடருக்குப் பெரிதும் ஊக்கமளிக்கின்றனஅய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன். நன்றி

      நீக்கு
  7. ஒரு அரிய, அருமையான பணியைத் துவங்கிள்ளீர்கள். வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் இடம்பெறுவது நிச்சயம். பல்லாயிரம் ஆண்டுக்குப் பிந்தைய வரலாற்றை அறிய எங்களை அழைத்துச் செல்கிறீர்கள். நாங்களும் உங்களைத் தொடர்கிறோம், பல புதியனவற்றை அறியும் ஆவலோடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா.ஒவ்வொரு பதிவின் போதும் தங்களை நினைத்துப் பார்க்கின்றேன். தாங்கள் காட்டிய பாதையில் என் பயணம். நன்றி

      நீக்கு
  8. கணித மேதை ராமானுஜத்தின் தொடரைப் போல இத தொடரும் வெற்றி அடையும்.தமிழ் வளர்த்த சங்கமான கரந்தை தமிழ் சங்கம் பற்றி இதுவரை அறியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அதன் வரலாற்றையும் பணிகளையும் எடுத்துரைக்க முன் வந்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் பணிசிறக்கட்டும். இத்தொடர் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.தமிழ் வளர்த்த நல்லோரை பதிவுலகம் அறிந்து கொள்ள உங்கள் படைப்பு உதவட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. இன்று ஔவை நடராசன் அவர்களை அறியாதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள், அவரின் தந்தையார் சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை அவர்கள், தமிழ் கற்ற இடம் கரந்தை, அவர் ஆசிரியராய் தன் பணியினைத் துவக்கிய இடம் கரந்தை.
      இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் பிரபஞ்சன் போன்றவர்கள் எல்லாம் கரந்தையின் முன்னாள் மாணவர்கள் அய்யா.
      நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றேன்

      நீக்கு
  9. அன்புள்ள ஜெயக்குமார்...

    வணக்கம். தங்களின் இராமானுஜம் தொடரை முழுக்க வாசிததுவிட்டேன். அரிய பதிவுகளின் மணிமகுடம அது. ஒரு கணிதமேதைக்குத் தாங்கள் அளித்திருக்கும் மிகப்பெரிய கௌரவம் அது. நமககுப் படித்தோரையும் நம்மைப் பாதித்தோரையும் நம்முடைய எழுத்துக்களில் பதிவுரு செய்கிறபோது நாம் வாழ்ந்ததன் பொருள் நிறைவு பெறுகிறது. வாழ்த்துக்கள்.

    தமிழ்ச்சங்கம் குறித்து எழுதத் தொடங்கியிருக்கும் இந்தப் பதிவு நிச்சயம் தமிழுலகை அசைக்கப்போகிறது என்பதை என்னுடைய மனது சொல்லிக்கொண்டேயிருக்கிறது. எனவே வெகு கவனமாகவும் காலங்கள் குறித்த தெளிவுடனும் நிகழ்வுகளைச் சரியான வரிசைப்படியும் அமைத்துக்கொண்டு எழுதுங்கள். உங்களால் அது முடியும். தவிரவும் தமிழ்ச் சங்கத்தில் படித்த எல்லோருக்கும் இந்தப் பேறும் கொடுப்பினையும் வாயப்பதிலலை. உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நானும் தமிழ்ச் சங்கத்தில்தான் படித்தேன். பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு இந்த அரிய வாய்ப்பை நல்கியிருக்கும் செந்தமிழ் வேளிர் ஐயா இராமநாதன் அவர்களை தமிழூலகம் என்றைக்கும் மறவாது. அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் குறிப்பிடவிரும்புகிறேன்.

    நான் படிக்கிற காலத்து அது புலவர் கல்லுர்ரியாக இருந்தது. அப்போதெல்லாம் அறிவியலில் உயர்கல்வி படிப்பது என்பது குதிரைக் கொம்பாகவும் அரிதாகவும் இருந்த சூழல் அது. செயலாளராகப் பொறுப்பேற்றவுடன் ஐயா இராமநாதன் அவர்களின் பணி மிகப்பெரும் பணி. அதில துளியும் ஐயமிலலை. இன்றைக்கு எல்கேஜி படிக்க உள் நுழைந்தால் முனைவர் பட்டத்துடன் வெளியே வரலாம். எந்தவிதச் செலவுமின்றி வீட்டுக்கு அருகிலேயே இப்படியொரு புலவர் கல்லுர்ரியை இந்தளவுக்கு வெகு உயரமான இடத்திற்கு உயர்த்தி வைத்திருக்கும் செம்மொழி வேளிர் ஐயா அவர்களின் இணையற்ற தொண்டு தமிழச்சங்கம் உள்ளளவும் நின்று பேசும். தமிழ்ச் சங்கத்தின் பழைய மாணவன் என்ற நிலையில் என்போன்றோரின் சார்பாக செம்மொழிவேளிர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    இன்னொரு கருத்து உங்களின் பக்கங்களை வடிவமைக்கும்போது கரந்தை ஜெயக்குமார் பக்கங்கள் என்பதை எப்போதும் மாறற்க்கூடாது. இப்போது உங்கள் பக்கம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் என்பதுபோல பொருள் தொனிக்கிறது. உங்கள் பக்கங்களை நிலைப்படுததுங்கள். உங்களின் வரலாற்றுத் தொடர் தமிழுக்கு அணிசேர்க்கும் மிகப்பெரிய பங்களிப்பு. இது நிறைவு பெற்று ஒரு பெரிய நுர்லாக வெளிவரவேண்டும். தமிழன்னைக்கு ஒரு கணித ஆசிரியரின் பங்களிப்பு தனித்துவமானது சிறப்பானது என்று எதிர்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் உங்கள் பெயர் பதிவாகட்டும்.

    நெஞ்சம் நிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொடர்ந்து வாசிப்பேன்.

    தொடக்கமே பலரும் அறியாத பல சங்கங்களின் வரலாற்றில் இருந்து தொடங்கியுள்ளீர்கள்.

    பெரும்பான்மை இடங்களில் நான்... செய்திருக்கிறேன்.. சொல்லியிருக்கிறேன்.. என்கிற நிலை வராமல் உரைநடை போக்கிலேயே செல்லுங்கள். இது என்னுடைய கருத்துதான். தவறாக எண்ணவேண்டாம்.

    நன்றி. வாழ்த்துக்கள் மறுபடியும. அடுத்தபதிவில் சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பெருமதிப்பிற்குரியீர், வணக்கம்.
    தங்களின் நீண்ட நெடிய கருத்துரைக்கு எனது நன்றியினை முதற்கண் தெரிவித்து மகிழ்கின்றேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி எழுதுவது என்பது கிடைத்தற்கு அரிய பெரும் பேருதான். அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கின்றது.முடிந்த வரை அப்பொறுப்பினை நன் முறையில் நிறைவேற்றுவேன். கரந்தைத் தமிழ்ச் சங்க வரலாற்றின் ஒவ்வொரு பதிவின் போதும், தங்கனின் கருத்துக்களை மனதில் கொள்வேன் என்பது உறுதி. இப் பதிவின் எவ்விடத்திலும் நான்,... செய்திருக்கின்றேன் என்பது போன்ற வரிகள் நிச்சயமாக இடம் பெறாது என்பது உறுதி. முன்னுரையில் மட்டும் என்னைப் பற்றிய அறிமுகத்திற்காக சில செய்திகளை கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. சங்கத்தின் வரலாறு அதன் போக்கிலேயே தொடரும்.
    தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றேன், சங்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தாங்கள். இத் தொடரில் எங்கேனும் சிறு தவறேனும் இருக்குமானால், கருணை கூர்ந்து சுட்டிக் காட்ட வேண்டுகின்றேன், தவறுகளைச் சரி செய்யக் காத்திருக்கின்றேன். நன்றி
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள ஜெயக்குமார்...

    நான் சொல்ல வந்தது வேறு. தங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைச் சுடட வரவில்லை. பொதுவாக இதுபோன்ற தொடர்க்கட்டுரையாக்கத்தில் பொதுநிலை விவரிப்பு என்பதைவிட தனிநிலை விவரிப்பு என்பது வந்துவிடும். அந்தத் தவற்றை நானும் செய்திருக்கிறேன். முந்தைய ராமானுஜத் தொடரில் படித்த நினைவு. ஏனென்றால் தனிநிலை விவரிப்பு வரும்போது ஒரு புத்தகம் அடைய வேண்டிய உயரத்தை எட்டும்போது மிகச்சிறு தடையாக அது அமைந்துவிடும் என்பதுதான். தவிர உங்களைப் பற்றிச் சுட்டவில்லை. தவறாகப் பொருள் கொண்டவிடவேண்டாம். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமதிப்பிற்குறியீர், வணக்கம்,
      தங்களின் கருத்தைத் தவறாக புரிந்து கொண்டமைக்கு மன்னிக்கவும். ஒவ்வொரு பதிவின் போதும், தங்கனின் கருத்துக்களை மனதில் கொள்வேன், நன்றி
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  12. // இன்னொரு கருத்து உங்களின் பக்கங்களை வடிவமைக்கும்போது கரந்தை ஜெயக்குமார் பக்கங்கள் என்பதை எப்போதும் மாறற்க்கூடாது. இப்போது உங்கள் பக்கம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் என்பதுபோல பொருள் தொனிக்கிறது. உங்கள் பக்கங்களை நிலைப்படுததுங்கள். //

    மேலே சொன்ன வலைப்பதிவர் ஹரணி அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் மீது தாங்கள் கொண்ட பக்தியின் காரணமாக வலைப்பக்கத்தின் முகப்பை இவ்வாறு மாற்றி விட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

    தாங்கள் எழுதிய கணித மேதை ராமானுஜம் தொடரில் படிக்காமல் விட்டுப்போன பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஜெயக்குமார் - தமிழ்ச் சங்க வரலாற்றினை அழகாகத் தொகுத்து பதிவிட்டமை நன்று - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்களைப் பற்றி எழுதியதும் நன்று. நீண்ட உரைகள் பதியும் போது ஓரிரு தட்டச்சுப் பிழைகள் தவிர்க்க இயலாது - இருப்பினும் தவிர்க்க முயலவும். பொறுமையுடன் படித்தேன் - அனைத்துப் பகுதிகளையும் படிக்க முயல்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. பிழையானது:

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி

    சரியானது:
    "கல் தோன்றா மன் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி" என்றுதான் இருக்க வேண்டும்...

    தயவு செய்து பிழை திருத்தம் செய்து பதிவு செய்யவும்....

    அதுபோக இன்னும் ஏகப்பட்ட தமிழ் வார்த்தைகளை பிழையோடு பதிவு செய்து பிரசுரம் செய்துள்ளீர்கள்....

    இனிமேல் தமிழை பிழை இல்லாமல் பிரசுரம் செய்து தமிழுக்கு தொண்டு செய்யுங்கள்.... தோழரே...

    நன்றி

    இவன்
    தமிழர் தோழன்

    பதிலளிநீக்கு
  15. தங்களின் கரந்தை தமிழ்ச் சங்க வரலாற்றினை தொகுக்கும் பணி,தமிழுக்கு செய்யும் தொண்டு என்றே நினைக்கிறேன் !
    த ம +1

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு