03 ஆகஸ்ட் 2024

தாஜ்

 

     தாஜ் மகால்.

     ஆக்ராவில், தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்காக, ஷாஜகான் கட்டி எழுப்பிய, இன்று உலக அதிசயங்களுள் ஒன்றாய் திகழும் தாஜ்மகாலை நாம் அறிவோம்.

     ஆனால், மகாராஷ்டிராவிலும் ஒரு தாஜ்மகால் இருப்பதை அறிவீர்களா?

  தாஜ்மகாலைக் கட்டி எழுப்பிய ஷாஜகானின் மகன்தான் ஔரங்கசீப்.

     இவர்தான், முகலாய மன்னர்களுள் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 49 ஆண்டுகள், தன் வாழ்வின் இறுதி நாள் வரை ஆட்சி செய்திருக்கிறார்.

     இவரது மனைவி தில்ராஸ் பானு பேகம்.

     ஔரங்கசீப் தில்ராஸ் பானுபேகம் தம்பதியினரின் மகன் ஆசம் ஷாவால்.

     இந்த ஆசம் ஷாவால், தன் தாய் இறந்த பொழுது, தன் அன்பு அன்னைக்காக ஒரு தாஜ்மகாலை எழுப்பி இருக்கிறார்.

     ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலோ, தன் அன்பு மனைவிக்காக.

     ஆனால், இந்த ஆசம் ஷாவால் கட்டிய தாஜ்மகாலோ, தன் அன்பு அன்னைக்காக.

     1660 களில் வான் நோக்கி எழுந்த இந்த தாஜ்மகால் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

     கட்டிடக் கலைஞர் அதா உல்லா, பொறியாளர் ஹன்ஸ்பத் ராய் இருவரின் வடிவமைப்பில் எழுந்த தாஜ்மகால் இது.

     இந்த அதா உல்லா யார் தெரியுமா?

     இவர், ஷாஜகான் தன் மனைவி முக்தாஜ் அவர்களுக்காக, எழுப்பிய, ஆக்ரா தாஜ்மகாலின் வடிவமைப்பாளரான, உஸ்தாத் அஹ்மத் லஹெரி அவர்களின் மகனாவார்.

     1660 களில் இந்த தாஜ்மகாலைக் கட்டியே தீரவேண்டும் என, தன் மகன் உறுதியாய் நின்றபொழுது, இந்த தாஜ்மகாலின் கட்டுமானச் செலவினங்களுக்காக, ஔரங்கசீப், தன் மகனிடம் ரூபாய் ஏழு இலட்சங்களைக் கொடுத்திருக்கிறார்.

     ஆனால், ஆசம் ஷாவால் 6,68,203 ரூபாய் மற்றும் 7 அணா செலவில், இந்த தாஜ்மகால் பணிகளை முழுமையாய் முடித்திருக்கிறார்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா.

     இன்று இந்தத் தொகையினைக் கொண்டு, நம்மால், ஒரு சிறிய அளவிலான வீட்டைக்கூடக் கட்ட இயலாது.

---

     கடந்த 11.6.2024 திங்கட்கிழமை, மாலை, மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் அமைந்திருக்கும்.

பிபி கா மக்பரா

பெண்ணின் கல்லறை

என்று அழைக்கப்படும், தக்காணத்தின் தாஜ்மகால் முன்பு நின்று கொண்டிருக்கிறோம்.

    





நான், என் வாழ்க்கை இணையர் பிரேமா, எங்கள் இரண்டாம் மகன், அன்பு மருமகன் திரு மு.அஸ்வின் குமார், எங்கள் அன்பு மகள் திருமதி சுவாதி அஸ்வின்குமார், எங்கள் அன்பு சம்பந்திகள் திரு இரா.முருகானந்தம், திருமதி சசிகலா முருகானந்தம் என அறுவர் நின்று கொண்டிருக்கிறோம்.

     கடந்த மாதம், திருமண வாழ்வில் நுழைந்த, எங்கள் அன்பு மகளை குடியமர்த்துவதற்காக, மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத் வந்தோம்.

     ஔரங்காபாத்தைச் சுற்றி எண்ணிலடங்கா வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்.

     மகிழ்ந்து போனேன்.

     அஜந்தா, எல்லோரா, சீரடி,  என ஒவ்வொன்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்.

முதன் முதலாக,

தக்காணத்தின் தாஜ்

பிபி கா மக்பரா

மினி தாஜ்மகால்.

     பார்த்தவுடன், கண்களையும், மனதையும் கொள்ளை கொள்ளும் பேரழகுடன், கம்பீரமாய், நிமிர்ந்து நிற்கிறது, இந்த தக்காணத் தாஜ்மகால்.

     ஆக்ரா தாஜ்மகாலைக் கட்டுவதற்கானப் பணி தொடங்கப் பெற்ற ஆண்டு 1631.

     பணி நிறைவுற்றதோ 1654 ஆம் ஆண்டில்தான்.

     23 ஆண்டுகள்.

     ஔரங்காபாத் தாஜ்மகால் பணியோ, 1651 முதல் 1661 வரையிலான பத்து ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளது.

     உண்மையில் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்கு இந்த சமாதியின் மூலம் அஞ்சலி செலுத்த விரும்பினார்.

     அன்பின் மிக அழகான சான்றை உருவாக்க, மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு தாஜ்மகாலை உருவாக்கினார்.

     ஆனால், ஔரங்காபாத் தாஜ்மகால் கட்டுமானத்திற்குக் காரணம் காதல் அல்ல, இலட்சியம்.

     இந்த தாஜ்மகாலின் பணி தொடங்கியபோது, ஔரங்கசீப், தக்காணத்தின் ஆளுநராக இருந்தார். ஔரங்கசீப் தனது இரு சகோதரர்களையும் மீறி பேரரசராக வேண்டும் என்ற இலட்சியத்தினை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழியாக இந்த தாஜ்மகாலை எழுப்பினார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

     ஆக்ரா தாஜ்மகால் முழுவதும் பளிங்குக் கற்களால் ஆனது.

     ஔரங்காபாத் தாஜ்மகாலோ, பளிங்கு மற்றும் பிளாஸ்டர் ஆகியவற்றால் கலந்து கட்டப் பெற்றது.

     அக்ரா தாஜ்மகால், இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். எனவே பல மறுசீரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, தோட்டங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

     ஔரங்காபாத் தாஜ்மகாலை, ஆக்ராவுடன் ஒப்பிடுவதால், இதன் மதிப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்கு இதுபோன்று ஒரு தாஜ்மகால், ஔரங்காபாத்தில் இருப்பதே தெரியாது. நிலையான மறுசீரமைப்பு திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், போதிய பராமரிப்பின்றி இருக்கிறது.

     ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலோடு ஒப்பிடும்போது, ஔரங்காபாத் தாஜ்மகாலின் பொலிவு சற்றுக் குறைவுதான் என்றபோதும், ஔரங்காபாத் தாஜ்மகாலும், பிரமிப்பை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

     பரந்து விரிந்த கட்டிடம்.

     நாற்புறமும் வான் நோக்கி நிற்கும் ஸ்தூபிகள்.

     வியப்பு நீங்காமல் நாற்புறமும் சுற்றி சுற்றி வந்தோம்.

    


மையக் கட்டிடத்தில் நுழைந்து பார்த்தால், அதன் கீழ் தளத்தில் ஔரங்கசீப் அவர்களின் மனைவி தில்ராஸ் பானுபேகம் மீளாத் துயில் கொள்ளும் இடம்.

     நேரம் போவது தெரியாமல் நின்று கொண்டிருந்தோம்.

     அன்று இரவு எங்கள் மகளின் ஔரங்காபாத் இல்லத்திற்குத் திரும்பிய பிறகும், மனதில் ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.

      ஔரங்கசீப் தில்ராஸ் பேகம் தம்பதியினரின் மகன் ஆசம் ஷாவால், தன் அன்னைக்காக ஒரு தாஜ்மகாலை எழுப்பி இருந்தால், தன் தந்தைக்காகவும் ஒரு தாஜ்மகாலை எழுப்பி இருப்பார் அல்லவா?

     கேள்வி மனதில் ஓடியது.

     இந்த கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்தபோது, வியந்து போனேன்.

---

     தன் மகன் ஆசம் ஷாவால், தன் அன்னைக்காக எழுப்பிய தாஜ்மகாலைக் கண்டு மகிழ்ந்த போதிலும், தன் மகனை அழைத்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார் ஔரங்கசீப்.

     உன் அன்னைக்காக, ஒரு சிறிய தாஜ்மகாலையே உருவாக்கிய நீ, என் மறைவிற்குப் பின், எனக்கும் ஒரு பெரும் தாஜ்மகாலை எழுப்ப முற்படுவாய் என்பதை நான் அறிவேன்.

     ஆனால் என் விருப்பம் அதுவல்ல.

     என் நினைவிடம், மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும்.

     ஓர் ஏழை, தன் தகப்பனை புதைத்த இடம் போலவே, என் நினைவிடம் அமைய வேண்டும்.

     தந்தையின் விரும்பம் நிறைவேறியது.

     மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திற்கு அருகில், தொளலதாபாத்தில் இருந்து, சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது குல்தாபாத்.

    இந்த குல்தாபாத்தில் இருக்கிறது ஔரங்கசீப்பின் நினைவிடம்.

     குல்தாபாத்தில் அமைந்திருககும் ஔரங்கசீப்பின் நினைவிடத்தைக் காண, கடந்த 23.6.2024 ஞாயிற்றுக் கிழமை காலை, எங்கள் மகளின் ஔரங்காபாத் இல்லத்தில் இருந்து, நான், என் வாழ்க்கை இணையர் பிரேமா, எங்கள் அன்பு மகள் திருமதி சுவாதி அஸ்வின்குமார் மூவரும் மகிழ்வுந்தில் புறப்பட்டோம்.

     குல்தாபாத்.

     அகலம் குறுகிற சாலையில் பயணித்தோம்.

     சாலையின் ஒரு திருப்பத்தில், ஒரு மசூதியில், 10 அடி நீளமும், 10 அடி அகலமும் உள்ள ஓர் அறையில், தரையோடு, தரையாய், ஔரங்கசீப் துயில் கொள்ளும் இடம்.

     மேற்கூரைகூட இல்லாமல், எளிமையின் உச்சமாய் ஔரங்கசீப்பின் நினைவிடம்.

  





      49 ஆண்டுகள் அரசாண்டப் பேரரசர்.

    அள்ள அள்ளக் குறையாத செல்வத்திற்குச் சொந்தக்காரர்.

     இருப்பினும்,

     வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் உறைந்தும், இயற்கையோடு இயற்கையாய் இயைந்திருக்கிறது, பேரரசர் ஔரங்கசீப் மீளா துயில் கொள்ளும் இடம்.






20 கருத்துகள்:

  1. வந்ததைப் போன்றே திரும்புதல்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான புதிய விடயம் அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இந்தத் தாஜ்மகால் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வேல்முருகன்04 ஆகஸ்ட், 2024

    வரலாற்று தகவல்கள் தங்கள் பாணியில். அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான விபரங்களுடன் புகைபப்டங்கள் அனைத்தும் அழகு!!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா05 ஆகஸ்ட், 2024

    வணக்கம் நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு தாங்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் என்ன சிறப்பு என்று அறிந்து அதை தங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் தெரியப்படுத்துவதில் நீங்கள் பெரிய ஒரு சிற்பி எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் சிறப்புகளை பொக்கிஷமாக எங்களுக்கு அளித்து வருகிறீர்கள் அதை நாங்கள் தெரிந்து கொள்கிறோம் எங்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டுதலும் பல ஊர்களில் சிறப்புகளையும் தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தங்களின் பெயரினைக் குறிப்பிட்டால் மிகவும் மகிழ்வேன் நண்பரே

      நீக்கு
  7. செல்லும் இடமெல்லாம் செய்திகளைச் சேகரித்து வருகிறீர்கள்! தருகிறீர்கள் !மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான புதிய விடயம் அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  9. மிக சிறப்பான பதிவு. காணொளி.
    நாங்களும் கண்டு களித்தோம்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான தகவல். அன்னைக்கு ஒரு அற்புத நினைவில்லம். தந்தையின் விருப்பப்படி எளிமையான நினைவு இல்லம். தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கரந்தையாரே...

    ஒரு இடத்தில் (ஐந்தாவது படத்தின் கீழே) மகளின் பெயர் சுவாமி என்று வந்திருக்கிறது - சரி பார்க்கவும்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு