15 நவம்பர் 2013

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர்., நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

      நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

      களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

      கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.


     அதுமட்டுமல்ல, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

       மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)

      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

      இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டு




கண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்




கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
---------------------------------

ஆர்வத்தினால், பதிவு சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருள வேண்டுகிறேன்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
---------------

73 கருத்துகள்:

  1. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே,

    நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. நினைக்க நினைக்கப் பெருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அளப்பெரிய சேவைக்குப் பாராட்டுக்கள்

      நீக்கு
    2. நினைக்க நினைக்க பெருமைக்கு உரிய கண்டுபிடிப்புதான் . நன்றி சகோதரியாரே

      நீக்கு
  3. மிக நீண்ண்ண்ண்ட அருமையான தகவல்கள் + படங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அற்புதம் அய்யா. பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் அளப்பரிய பணிக்கு ஈடுஇணையேது. அவரின் பணிக்கு அவரது பாதம் தொட்டு சிரம் தாழ்த்திய வணக்கங்கள். சரித்திரத்தில் இடம் பெற்ற இவரது கண்டுபிடிப்பு காலத்திற்கும் போற்றி பாதுகாக்க வேண்டியது. அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ எனது வேண்டுதல்களும். பதினேழு ஆண்டுகள் பயணத்தின் தேடல் உண்மையில் அவர் மனிதருள் மாணிக்கம்.. மிக அற்புதமாக பகிர்வைப் பகிர்ந்துள்ளீர்கள். முத்தாய்ப்பு வைத்தார் போல் பாரதி கவிதை அமைந்தது சிறப்பு. இப்பதிவிற்காக நீங்கள் உழைத்த உழைப்பும் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரா சி.கோ அவர்களின் பணி ஈடு இணை இல்லாததுதான் நண்பரே . நன்றி

      நீக்கு
  5. தங்கள் ஒவ்வொரு பதிவும் முத்துக்கள். பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் பயணம் பிரமிப்பூட்டுகிறது. கண்ணகி சிலை பற்றிய அரிய செய்திகளை வழங்கியதற்கு பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியை வழங்குகிறது ஐயா . நன்றி

      நீக்கு
  6. உழைப்பு வீண்போகவில்லை .உலகிற்கு கண்ணகி பற்றிய வரலாற்று உண்மை வெளிவந்துள்ளது
    பாராட்டுக்கள் .பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் வரலாறு மற்ற ஆய்வாளர்களுக்கு புத்துணர்வு தரும் .தகவல்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி.கோ அவர்களின் ஆய்வியல் வரலாறு, மற்ற ஆய்வாளர்களுக்கு ஒரு பாடம் ஐயா. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  7. நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது .
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பூம்புகார் தொடங்கி கண்ணகி கோயில் வரை பேராசிரியர் சி கோவிந்தராசன் அவர்கள் செய்த நீண்ட நெடிய பயணமும் ஆராய்ச்சியும் பிரமிப்பான விஷயம்தான். அவரைப் பற்றியும் அவர் தந்த ஆராய்ச்சி முடிவுகளைப் பர்றியும் உங்கள் பதிவின் வழியே வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி!

    // நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம். //

    பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் வாழிய பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
      பேராசிரியர் சி.கோ பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் ஐயா

      நீக்கு
  9. அன்பின் ஜெயக்குமார் -அருமையான கட்டுரை -பதிவுநன்று-அரிய பழைய காணக் கிடைக்காத படங்களைத் தேடிப் பிடித்து இங்குபகிர்ந்தமைநன்று -

    பேராசிரியர் சி.கோவிந்த ராசனார் பற்றிய தகவல்களும் அவருடைய நீண்ட நெடிய பயணமும் இங்கு பதிவாக்கப் பட்டிருப்பது நன்று நன்று. தகவல்களும் நிகழ்வுகளும் ஆவணப் படுத்தப்பட்டிருப்பது ஒரு நற்செயல். 94 வயதான சி.கோவிந்தராசனார் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவரின் ஆரவத்தினையும்- கடும் உழைப்பினையும்பாராட்ட வேண்டும். நல்லதொரு பதிவு- நல்வாழ்த்துகள் - நட்புடன்சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. பேரா சி.கோ நூறாண்டுவாழ வாழ்த்துவோம் ஐயா. நன்றி

      நீக்கு
  10. இத்தகைய பதிவினைப் படிக்க - முன்னைத் தவம் செய்திருக்க வேண்டும். பெரியவர் சி.கோவிந்தராசனார் அவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ -
    அன்னைத் தமிழும் , அருந்தவச்செல்வி கண்ணகி அம்மையும் நல்லாசி வழங்குவார்களாக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னைத் தமிழும் , அருந்தவச்செல்வி கண்ணகி அம்மையும் நல்லாசி வழங்குவார்கள் ஐயா. நன்றி

      நீக்கு
  11. பெயரில்லா16 நவம்பர், 2013

    வணக்கம்
    ஐயா
    தங்களின் இந்த பதிவின் மூலம் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் பற்றிய வாழ்கை வரலாறு அறியக்கிடைத்துள்ளது அவரின் தாயகம் இலங்கை என்பதில் பெருமையாக உள்ளது...அறியாத பல விடயங்கள் அறியக்கிடைத்துள்ளது... அவர் நல்ல திடஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்திப்போம் வாழ்த்துக்கள் ஐயா
    தகவல் தேடல் நன்று.......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. பேராசிரியர் சி.கோவிந்த ராசனார் அவர்களின் கண்ணகிப் பற்றிய ஆய்வு பாராட்டத்தக்கது.தமிழராய் இன்னும் அடிசுவட்டை பற்றியே நடந்துவருகிறோம் என்பதை பேராசிரியர் உணர்த்தியுள்ளார்.
    அய்யாவைப் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள அனைத்துத் தகவலையும் வழங்கிய தங்களுக்கு நன்றின்ங்க ஜெயகுமார்.

    பதிலளிநீக்கு
  13. பேராசிரியர் சி.கோவிந்தராசனார் பற்றிய அற்புத தகவல்களுக்கு நன்றி அய்யா... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  14. மெய் சிலையாகி இதயம் நின்று நின்று துடிப்பதை உங்கள் இந்தப் பதிவின் மூலம் உணர்ந்தேன். எவ்வளவு அருமையான தகவல்!! பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆற்றியது மிகப்பெரிய பணி, பல தொழில்நுட்ப வளர்ச்சிகளும் போக்குவரத்தும் இருந்தாலும் இன்று எத்தனைப் பேர் இதைபோலச் செய்வர்! அப்பாதையிலே சென்று அனுபவிக்க ஆவல் தோன்றுகிறது. அப்படி அழகாகத் தொகுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றிங்க. பல முறை படித்து அறிய வேண்டும் இப்பதிவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  15. மிகவும் அரியதான தகவல்கள்.மெய் சிலிர்த்தது.எத்தகைய முயற்சி.பேராசிரியரை அறிந்தகொள்ள உதவியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே. தங்களின் நூல் வெளியீடு பற்றி அறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சகோதரியாரே

      நீக்கு
  16. எழுத்தாளர் எஸ்.ரா இதேமாதிரி ஒரு பயணம் செய்து அதை ஒரு தீபாவளி மலரில் பதிவிட்டிருந்தார்.

    எந்த இடத்திலும் இதுமாதிரி ஒரு முன்னோடி இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் அவர் சொல்லவில்லை ஒருவேளை அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

    ரொம்ப விரிவான, அற்புதமான பதிப்பு, தமிழ் பற்றுள்ள ஆசிரியர்கள் கட்டாயம் பிரிண்ட் எடுத்து பயன்படுத்துவார்கள் வகுப்பில் ...
    படங்கள் ரொம்ப அருமை...
    இன்னும் ஒரு ஆயிரம் வார்த்தைகள் என் விரல்களில் வர மறுக்கின்றன ... ரொம்ப நல்ல பணி அய்யா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  17. திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அற்புதமான பதிவு. சிலப்பதிகாரப்பாதை வழி நடந்து கண்ணகி சிலை மற்ற ஆதாரங்களைக் கண்ட, தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய மாமனிதர்
    பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது உழைப்பு பற்றிய பதிவு. மாமனிதர்
    பேராசிரியர் சி.கோவிந்தராசனார் நீடுழி வாழ்க, அவர்தம் குடும்பத்தினரும் அவர்களும் நீடுழி வாழ்க.
    இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேடுகிறேன்.
    வாழ்த்துகள் & நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பில் மெய்மறந்து நிற்கின்றேன் ஐயா. தங்களின் முகநூலில் என் பதிவுகளை பகிர்வது மிக்க மகிழ்வினை அளிக்கின்றது ஐயா. மிக்க நன்றி

      நீக்கு
  18. நீண்ட பதிவாயினும் நிறைவான அரிய தகவல்களை அள்ளித்தந்த பதிவு! கண்ணகியின் சிலை கண்டு மகிழ்ந்தேன்! பேராசிரியர் கோவிந்தராசனாரின் பணி மகத்தானது! வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  19. அடேங்கப்பா .படிக்கும் போதே பிரமிப்பாய் இருக்கிறது பேராசிரியர் கோவிந்தராசனார் ஆராய்ச்சி வணக்கத்திற்கு உரியது !
    முழுக்காளி என்ற வார்த்தையை ஜோக்காளி இவன் ரசித்தேன் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுக்காளி என்னவொரு காரணப் பெயர் பார்த்தீர்களா,இதுபோன்ற எண்ணற்ற சொற்கள் தமிழில் இருந்தும் மறந்துவிட்டோம். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  20. எத்தனை உயரிய அர்ப்பணிப்புடன் கூடிய பணி
    பேராசிரியரின் பணி
    .நினைக்கவே மலைப்பாக இருக்கிறது

    வரைபடங்களுடன் சிலப்பதிகார ஆதாரங்களுடன்
    தாங்கள் அதைச் சொல்லிச் சென்றவிதம்
    உண்மையில் பிரமிப்பூட்டியது

    புலவர் பெருமகனார் அவர்கள் நீண்ட
    ஆரோக்கியத்தோடு நூறாண்டு கடந்து வாழ
    அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி ஐயா.
      அன்னை மீனாட்சி இது போன்ற நல்லோர்களைக் காக்கட்டும்

      நீக்கு
  21. தமிழர்கள் அனைவரும் கரம் கூப்பித் தொழவேண்டிய அற்புதப் பணியைப் பேராசிரியர் கோவிந்தராசனார் செய்திருக்கிறார். கீழே படங்களில் இந்திய அரசின் மூலம் அவருக்குச் செய்யவேண்டிய மரியாதைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிவதில் நிறைவாயிருக்கிறது. இருந்தும் இந்தப் பெருமகனாரை எல்லாரும் அறியும் அளவில் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான். அதற்கு உங்களால் ஆன காரியத்தைச் செவ்வனே செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ஆமாம், தமது பயணம் பற்றி அவரே ஏதும் புத்தகம் எழுதியிருக்கிறாரா? அப்படி இல்லையெனில் அவரைச் சொல்லச் சொல்லி நீங்களே ஒரு பெரிய நூலைத் தொகுக்கலாம். இன்றைய நிலையில் நிறைய பதிப்பகத்தினர் இத்தகு நூலை வெளியிட முன்வருவார்கள். ஏன், விகடன் பிரசுரத்திலேயேகூட நீங்கள் முன்கூட்டியே பேசிக்கொண்டு பணியைத் தொடங்கலாம்.
    மேலே நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதுபோல் எஸ்.ராமகிருஷ்ணன் விகடன் மலர் ஒன்றில் இத்தகு பயணம் மேற்கொண்டு பல புதிய விஷயங்களைத் தாமே கண்டுபிடித்து உலகுக்கு அளிப்பது போன்ற பாவனையில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். அவர் மறந்தும்கூட பேராசிரியர் கோவிந்தராசனாரைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
      கண்ணகியார் அடிச்சுவட்டில் புகார் முதல் வஞ்சி வரை
      என்னும் பெயரில் இந்த ஆய்வுப் பயண நூலானது, 1991 ஆம் ஆண்டு மதுரை காமராசல் பல்கலைக் கழகத்தால் ,தனியொரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது ஐயா. ஆனால் மறுபதிப்பு வெளியிடப்பெற்றதாக தெரியவில்லை.

      நீக்கு
  22. மிக பிரமாண்டாமனாதாய் ஒரு பதிவு. மயிர்கூச்சொரியும் நாவல் போன்று இருந்தது உங்களது பதிவு. பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் பணி போற்றுதலுக்குரியது. அவரை நினைத்து பெருமை கொள்கிறது மனது.தமிழர் இருக்கும் வரையில் அவரது பெருமை பேசப்படும் என்பது உறுதி!

    பதிவிட்டமைக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  23. பெருமையான விஷயம்...
    பெருமைப்படத்தக்க மனிதர்,
    அருமையான பகிர்வு....
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  24. கண்ணகி கோவிலை சிரமப்பட்டு கண்டுபிடித்து வெளியுலகுக்கு கொண்டு வந்த, பேராசிரியர் கோவிந்தராசனார் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். அவர் இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துவோம்! இதுவரை என்னைப்போன்ற சிலருக்குத் தெரியாத இந்த அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ஒரு ஐயம். கடற்கரை அருகே உள்ள ஊரை பட்டினம் என்றுதான் அழைப்பார்கள் என்றும் கடற்கரை அருகே இல்லாத ஊரை பட்டணம் என்றும் அழைப்பார்கள் என்றும் படித்ததாக நினைவு. எனவே பூம்புகாரை காவிரிப்பூம்பட்டினம் என்று அழைப்பதா அல்லது காவிரிப்பூம்பட்டணம் என்பதை விளக்கவும்.

    மேலும் 17-05-1971 அன்று பேராசிரியர் கோவிந்தராசனாரை அழைத்துப் பேசிய அன்றைய முதல்வரின் பெயரையும் தெரிவித்திருக்கலாம். ஏனெனில் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் அவர் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
      ஐயா நான் ஒரு கணித ஆசிரியர், ஏதோ ஆர்வத்தினாலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றுவதனால், தெரிந்து கொண்ட செய்திகளையும், வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.அவ்வளவுதான்.
      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நூலில், காவிரி பூம்பட்டினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
      பேராசிரியரின் கண்டுபிடிப்பினை உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரிய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் ஐயா. குறிப்பிட மறந்து விட்டேன். மன்னிக்கவும்

      நீக்கு
  25. நெஞ்சை நெகிழவைத்த பதிவு. பெரியவர் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். (இன்னும் இது மாதிரி உருக்கமான பதிவுகள் எத்தனை இடப் போகிறீர்கள்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  26. தமிழுக்கு மிக அருமையான முறையில் தொண்டு செய்து வரும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளில்லை. காலத்தால் மறந்து போன, தமிழை மட்டுமே உயிர் மூச்சாக நினைத்து புகழ், செல்வம் என்று எதையுமே கண்டிராத தம்ழ் அறிஞர்களைத் தேடிக்கண்டு பிடித்து, அவர்களின் உழைப்பையும் சிறப்பையும் தமிழ்த்தொண்டினைப்பற்றியும் வெளி உலகிற்கு தொடர்ந்து விபரங்கள் அளித்து வரும் உங்களுக்ப்கு பின்னே இருக்கும் உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் தம்ழ்ப்பற்றுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!

    இந்தப்பதிவும் அது போலவே வரைபடங்கள், புகைப்படங்கள் மூலம் அசத்துகிறது. மனதில் அடந்தாத ஆர்வமும் நிறைந்த அறிவுத்தெளிவும் இருந்தால் எத்தகைய துன்பங்களையும் பொறுத்துக்கொன்டு சாதனைகள் படைக்க முடியும் என்பதை நமக்கு திரு.கோவிந்தராசனார் சாதித்துக்காட்டியிருக்கிறார். அவரது தமிழ்த்தொண்டிற்கு நாம் தலை வணங்கி வாழ்த்துவோம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயன்றால் முடியாதது இல்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  27. iஇந்த பதிவு பல அறியாத செய்திகளைத் தெரிவிக்கிறது.உங்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டது தெரிகிறது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. ஐயாவிடம் நான் என் ஆய்வு பற்றிப் பேசியுள்ளேன். எனது ஆய்வுக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர். அவர்களைப் போல் உழைப்பது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாகும். அவ்வளவு சிரமமான செயல். அவரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. என் ஆய்வை மேற்கோளிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. பேராசியிர் சி.கோவிந்தராசனார் அவர்களைப் போலவே, கள ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டுவருபர் தாங்கள் மட்டும்தான் ஐயா. எனவே தங்களைக் குறிப்பிட்டு மகிழ்ந்தேன். நன்றி

      நீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு, பேராசிரியர் திருமிகுசி.கோவிந்தராசனார் அவர்களின் நெடும்பயணம் பற்றிய தங்களின் பதிவு மிக மிக உன்னதமான விறுவிறுப்பான ஒரு அனுபவமாக எங்களுக்கு அமைந்தது என்றால் அது மிகையாகாது. பேராசிரியர் அவர்களின் கடுமையான உழைப்பும் அந்த உழைப்பினை தாங்கள் எடுத்துரைத்த விதமும் மிக அற்புதம். தங்களின் தமிழ்த் தொண்டு தொடரட்டும். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  30. அப்பப்பா எத்தனை விடாமுயற்சி - 17 வருடங்கள் முயன்று பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு மக்களுக்கும் தெரியப் படுத்தி இருக்கும் பேராசியர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.....

    தொடரட்டும் அருமையான பகிர்வுகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : கடந்து சென்ற காலங்கள்

    பதிலளிநீக்கு
  32. நண்பரே.. பதிவு அருமை!

    கண்ணகிக் கோட்டத்தை பேராசிரியர், கண்டுபிடிப்பதற்கு முன்னால், அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனரா? அல்லது, பேராசிரியரின் கண்டுபிடிப்பிற்கு பிறகே, அப்பகுதி மக்கள் அதை வழிபடத் தொடங்கினரா? ஒரு சிறு விளக்கம் தர இயலுமா?

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் அய்யா, அருமையான தகவல்... பேராசிரியர் எழுதிய கண்ணகியின் அடிச்சுவட்டில் புத்தகம் எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  34. மீள் பகிர்தல் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பரே. நன்றி.

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா28 அக்டோபர், 2022

    அந்த கண்ணகி சிலை எங்கு போய் மறைந்தது..‌‌அதன் ஒரு படம் கூடவா இல்லை..

    பதிலளிநீக்கு
  36. இரா.சந்திரசேகரன்.16 செப்டம்பர், 2023

    மிக அருமையான பதிவு. பேராசிரியரின் விடாமுயற்சி வியப்பை தருகிறது. தமிழுக்கும் இளங்கோவடிகளுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு